Pages

Thursday 11 November, 2010

டுமீல்!..டுமீல்!...டுமீல்!...டுமீல்!...டுமீல்!

''சட்டத்தை கையில் எடுத்து குற்றவாளிகளை போலீஸ் சுட்டுத்தள்ளுவது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் என்ற சமூக ஆர்வலர்களின் குரலில் என்ன நியாயம் இருக்கிறதோ...


''சபாஷ் கோவை போலீஸ்! விரைவு நீதிமன்றம் வெச்சு அதிக பட்ச தண்டனையை மிகச்சீக்கிரம் வாங்கிக்கொடுப்போம்னு சொன்ன வார்த்தையை மிகச்சீக்கிரம் காப்பாத்திட்டாங்க போலீஸின் விரைவு நீதிமன்றம் கொடுத்த என்கவுன்டர் தீர்ப்பு நூற்றுக்கு நூறு சரி’’ என்று கொதிப்பு தணிந்தவர்களாக கோவை மக்கள் பெருமூச்சு விடுவதும் மறுக்க முடியாத உண்மை.

கடந்த சனிக்கிழமை மோகன் (எ) ராஜ் (எ) மோகன கிருஷ்ணனையும் அவனுடைய கொலைகார கூட்டாளி மனோகரனையும் ஆண்மை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கூப்பிட்டு வந்தபோதே, அவர்களைத் தாக்கித் தள்ளும் ஆவேசத்தோடு திரண்டு இருந்தார்கள் மக்கள். ‘’உன்பாடு என்பாடு’ என்றுதான் அவர்களை மீட்டுச்சென்றது போலீஸ். அடையாள அணிவகுப்பின்போது குழந்தைகள் முஸ்கன் மற்றும் ரித்திக் ஆகியோரின் பாட்டி மிகச்சரியாக மோகன கிருஷ்ணனை ‘இவன்தான் வண்டி ஓட்டிவந்தவன்’ என்று அடையாளம் காட்டிவிட, அப்போதே போலீஸ் ஒரு ‘முடிவு’ எடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.


கோர்ட் அனுமதியுடன் விசாரணைக்கு கூட்டி வந்திருந்த குற்றவாளிகளை வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிப்பதாகத்தான் திட்டம் என்ன நடந்ததோ?...’’ குற்றம் நடந்த இடங்களையும் பாதையையும் உறுதிப்படுத்துவதற்காக மோகன கிருஷ்ணனை பொள்ளாச்சி நோக்கி வேனில் கொண்டு சென்றது போலஸ். செவ்வாயன்று அதிகலை சுமார் ஐந்தரை மணி அளவில், ஓடும் வண்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு...முரண்டு பிடித்து...எஸ.ஐ முத்துமாலையின் இடுப்பில் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவரையும் மற்றொரு எஸ்ஐ-யான் ஜோதியையும் சுட்டு, தப்பிச் செல்லப் பார்த்தான் அவன். உடனிருந்த போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டார்கள்’’ என்று என்கவுன்டர்’ பற்றி விவரிக்கப்படுகிறது.

கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் வழியில் உள்வாங்கியிருக்கும் போத்தனூர் குப்பைக் கிடங்கு ஏரியாவில் இதெல்லாம் அரங்கேறியதாகவும் கூறுகிறார்கள். ‘’சுடப்பட்ட ‘சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கையிலும் வயிற்றிலுமாக காயம் பட்டதாகச் சொல்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

செத்தவனின் உடலைப்பார்ப்பதற்காக ஆஸ்பத்திரி மார்ச்சுவரி நோக்கி கூட்டம் திரள ஆரம்பித்தது. ஆர்வத்தோடு சடலத்தை மொபைலில் படம் பிடித்துக்க்கொண்டார்கள் பலர். மேகனகிருஷ்ணனின் வலது கண்ணை துளைத்துக்கொண்டு ஒரு தோட்டாவும், அதற்கு மேல் நெற்றியை பொத்தல் போட்டு மற்றொரு தோட்டாவும் சீறியிருந்தன. கால்களிலும் ரத்த காயத்தை நம்மால் பார்க்க முடிந்தது.

‘மற்றொரு குற்றவாளியான மனோகரன் இன்னொரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் எங்கள் பாதுகாப்பில்தான் இருக்கிறான் என்று கோவை கமிஷனர் சைலேந்திரபாபு தகவல் வெளியிட ‘’அவனையும் விசாரணைக்குத்தானே சிறையிலிருந்து கூட்டிட்டு வந்தாங்க? போலீஸ் துப்பாக்கியை பறிச்சு அவனும் தப்பிக்கப்பார்க்கலையா? என்று பொதுஜனம் பேசிக்கொண்டபோது...இவர்கள் குரலில் ஏக்கம், கோபம், கிண்டல் எல்லாமே சரிவிகிதமாக இருந்தது.

டெயில் பீஸ்;இத்தனைக்கும் நடுவே ‘மோகன்ராஜ் கதை இத்தனை சீக்கிரத்தில் முடிந்து போனதற்குப் பின்னால், வேறு சில பர்சனல் ரகசியங்களும் அமுங்கிப் போனதா?’ என்ற கேள்வியும் காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுப்பாக எழுகிறது.

...எஸ்.சக்தி
....14.11.2010 வரை செய்திக்கான ஜூனியர் விகடன்....