Pages

Monday 15 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-10







(12) (iv)பெற்றோரும் மற்றோரும் வாழ்த்துதல்;

நீடு வாழ்க! நிறைக நலங்கள்! என்று மும்முறை வாழ்த்துக

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

                                                         ---ஆண்டாள் திருப்பாவை


பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

http://temple.dinamalar.com/Slogandetails.aspx?id=164 

(13) மணமக்கள் வழிபாடற்றல்;
(i) முன்னவனார்;

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 

                                              ----பத்தாம் திருமுறை

பொழிப்புரை;ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன். 
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
                                                             ---பதினோராம் திருமுறை--நம்பியாண்டார் நம்பி
பொருள்: யானை முகம் கொண்ட விநாயகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வ ளம் உண்டாகும். செய்யும் செயல் இனிதே நிறைவேறும். நாவில் நல்ல சொற்கள் பிறக்கும். செல்வாக்கும் உயரும். ஆக்கம் உண்டாகும். அதனால் வானுலக தேவர்களும் ஆனை முகப்பெருமானை அன்பு கொண்டு கரம் குவித்து வணங்கி மகிழ்வர்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
                                                       ---பதினோராம் திருமுறை


பொருள்: விநாயகப்பெருமானே நமக்குத் துன்பம் தரும் தீவினைகளை அடியோடு நீக்குபவர்( வேரோடு அகற்றும் அருள் கொண்டவர்) யானைமுகப் பெருமானாகிய அவரருளால் நம் மனத்தில் எண்ணும் ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும். அவரே இம் மண்ணுயிர்களுக்கும், விண்ணுலக தேவர்களுக்கும் தலைவராக வீற்றிருக்கின்றார். அதனால் மிகுந்த விருப்பத்துடன் அவர் திருப்பாதங்களைப் பணிந்து வழிபடுவோம்.


(ii) இறைவன்,  இறைவி

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. 

                                       ----முதல் திருமுறை-சம்பந்தர் 


பொழிப்புரை;நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.



''என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;
என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்) உளன்;
என்உளே உயிர்ப்புஆய்ப் புறம் போந்து புக்கு
என்உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.``
                                                         --ஐந்தாம் திருமுறை--அப்பர்

பொழிப்புரை; என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை ; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான் ; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன்.



பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
    கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
    பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே
                                                  ---ஏழாம்  திருமுறை- சுந்தரர்



பொழிப்புரை;பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலை வனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னை யன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ? 


வானாகி மண்ணாகி வளியாகி
    ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
    இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
    கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
    வாழ்த்துவனே.

                                              ----எட்டாம் திருமுறை- திருச்சதகம்- திருவாசகம்
பொழிப்புரை;ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்? 
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே.
                                          ---ஒன்பதாம் திருமுறை-திருவிசையப்பா
பொழிப்புரை;இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திருஉள்ளம்பற்றிச் செயற்படுவாயாக.
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
    எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
    மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
    மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
    பல்லாண்டு கூறுதுமே.
                                                                    ---ஒன்பதாம் திருமுறை-திருப்பல்லாண்டு
பொழிப்புரை; வேய்ங்குழல்இசை, யாழின்இசை, கூத்தாடுதலின் ஓசை, துதித்தலின் ஓசை என்பன கூட்டமாகப்பெருகித் திருவிழா நாளில் நிகழ்த்தப்படும் ஓசையோடுகூடி வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில் இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.  
                                              --பத்தாம் திருமுறை-திருமந்திரம்

பொழிப்புரை; மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.
 --அற்புத திருவந்தாதி-- காரைக்கால் அம்மையார்

விளக்கம்:

எனக்கு இனிய எம்பிரானை! ஈசனை யான் என்றும் மனத்தினுள் இனிய பெருஞ்செல்வமாகக் கொண்டேன். என் உயிர்ப்பிரானனாகவும் கொண்டேன்; அதனால் மாறாத இன்பம் கொண்டேன். இனி எனக்குக் கிடைத்தற்கரிய பொருள் ஒன்றேனும் உண்டோ? இல்லை.



உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். 
                                              ----பன்னிரன்டாம் திருமுறை-சேக்கிழார் 
பொழிப்புரை; எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.


தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனை – திருமாதுவாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய் -
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள்தாம்
ஈட்டம் கண்டிடக்கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே!

                                                                      ----குலசேகராழ்வார்- பெருமாள் திருமொழி


( பொருள்; நம்முடைய முயற்சியினால் தேடி அடைவதற்கு மிகவும் அருமையானவனும், தன்னை அடைந்தவர்களக்கு மிகுந்த பலனைக் கொடுப்பவனும், தேன் போன்று இனிமையும் குணமும் உள்ளவனும், திருவரங்கத்தில் வாசம் செய்பவனும், பெரியபிராட்டியார் பிரியாமல் இருப்பதற்கு உகந்ததாய், எப்போதும் வாடாத மணம் பொருந்திய மாலையினைக் கொண்டுள்ள திருமார்பினையுடைய பெரியபெருமாளை – பல்லாண்டு பாடி, அவன் மிகுதியான அன்பு கொண்ட மனதினையுடையவராய், அதனால் ஆடுவதில் ஈடுபட்டு, அந்த ஆட்டத்தினால் சோர்வு ஏற்பட்டு, அதனை நீக்குவதற்காக அவனை, அவன் நாமங்களைச் சொல்லி அழைத்து மெய்மறந்து நிற்கும் அவனுடைய உண்மையான அடியார்கள் கூட்டத்தினைக் காணும் வாய்ப்பு கிட்டினால், நமது கண்கள் அடைந்த பேறு அதுவே ஆகும்.)

“பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!”
                                                              ----தொண்டரடிப் பொடியாழ்வார்-திருமாலை


திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்
தீவினைகள் போய் அகல, அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்ஏழ் உலகத்தவர் பணிய லானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம், பெரும்புகழ்வேதியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள் மிகுகைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள் தொறும் திகழ 
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!
                                             ---திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி

நந்தா விளக்கே! அளத்தற்கரியாய்!
நா நாராயணனே! கருமுகில் போல்
எந்தாய்! எமக்கே யருளாய் என நின்று
இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தா ரம் தேனிசைபாட மாடே களிவண்டு
மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணிமாடக் கோயில்
வணங்கு என் மட செஞ்சே
        
                                                ---- திருமங்கையாழ்வார் -- பெரிய திருமொழி 


(ii) மங்கல நாண்;

''வேதரஞ்சகன், மால், புரந்தரன், வேகசண்ட குபேரனோடு
ஆதி எண்திசை பாலர் பொன்றவும், ஆதி அந்தம் இலாததோர்
நாதர் பொன்றிலர்; ஏது! உன் மங்கல நாண் உறும் திறம்!
                                                                                                                         ஆதலால்!
நீ தழைத்தது யோகம்! அம்பிகை! நீலி' என்பது பாவமே!

                                                                                                    ----ஆனந்தலகரி 

அறிவுரை

மணம்க்களிருவருக்கும் பெரியார் கூறும் முதல் அறிவுரை அவர்களிருவரும் உற்ற நண்பர்களாக அஃதாவது

உயிருக்குயிரான நண்பர்களாகத் தங்களை நினைத்து அவ்வாறே நடைமுறையிலும் நடந்து கொள்ளவேண்டும் என்பதாகும். இஃது அவ்விருவருக்கும் சம்மாகப் பொருந்தக் கூடியதாகும். காந்தத்திற்கு ஈர்க்கும் தன்மை இருப்பது போல் அக்காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்புக்கு தன்மையும் இருக்கிறது. அதனால் தான் காந்தத்தால் இரும்பை இழுக்க முடிகிறது. அவ்வாறே ஆணுக்குப் பெண்ணை அடக்கியாளும் குணம் இருப்பது போன்றே பெண்ணுக்கு அடங்கிப் போகும் குணமும் உள்ளது. அதனாற்றான் ஆணால் பெண்ணை அடக்கியாள முடிகிறது. ஆண்டான் அடிமை முறை உள்ள எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஆகவே, ஆண்தான் எசமானன் என்னும் எண்ணத்தையும் பெண்தான கணவனின் அடிமை அடுப்பூத வந்தவள் என்பது போன்ற எண்ணங்களையும் கைவிட்டுத் தாம் இருவரும் பல வகையாலும் ஒத்த நண்பர்கள்-உற்ற உயிர்த்தோழர்கள்-என்னும் எண்ணத்துடன் வாழவேண்டும் என்பதே அய்யாவின் விருப்பமாகும்.

இரண்டாவதாக அம்மணமக்களுக்கு மற்றொரு மேல் நிலையைக் காட்டி அவ்வாறு வாழவேண்டும் என்று பெரியார் அறிவுரை வழங்குகிறார். நண்பர்கள் தோழர்கள் என்பதைவிடக் கூட்டாளிகள், பங்காளிகள் என்றால் அவை மேன்மையுடையனவா யமையும் எவ்வாறென்றால் நண்பர் என்பதைவிடக் கூட்டாளி என்பதில் உரிமைப் பலம் சற்றுக் கூடுதலாக உள்ளது. இருவுரும் முதல் போட்டுச் செய்யும் வாணிபத்தில் இருவருக்கும் சம உரிமை இருப்பது போலக் கணவனும் மனைவியுமாக வாழத் தொடங்கும் மணமக்கள் இருவருக்கும் அதில் சம உரிமையுண்டு என்பது பொருளாகிறது. ஆகவே, பெரியார் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்கள் கூட்டாளிகள் என்று உணரந்து நடந்து கொள்ள வேண்டுமென்கிறார்.

மூன்றாவதாக நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் வாழும் வாழ்வில் பெண்ணைக் கூலியில்லா வேலைக்காரியாக நடத்த உரிமை வழங்கும் தாலி இருக்க இடம் தரலாமா? கூடாதே. ஆணுக்குப் பெண்ணிடம் உள்ள உரிமையின் அடையாளமே தாலி. வேறு காரணம் எதனாலாவது தாலி வேண்டுமென்றால் அது ஆணுக்கும் வேண்டியதாகத் தானே இருக்க வேண்டும். தாலி கட்டினால் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இருவருக்குமே அது வேண்டாப் பொருளே.

மணமக்களுக்கு நான்காவதாகப் பெரியார் கூறும் அறிவுரை தனிச் சிறப்புடையதாகும். எதிரும் புதிருமடி நீயும் நானுமடி என்பது போல் இருந்துவிடாமல் இருவரும் மற்றவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார் பெரியார். தமக்கென மட்டும் வாழும் வாழ்வை எல்லா மக்களும் மேற்கொண்டிருப்பராயின் உலகம் முன்னேறாது என்பதோடு அது நிலைத்திருப்புதும் அரிதேயாகும். மக்களில் சிலரேனும் தமக்கென மட்டும் வாழாது பிறர்க்கென வாழும் பெருவாழ்வை உடையவர்களாக இருப்பதாற்றான் இந்த உலகமே இருக்கிறது. .பிறர் பற்பலருடைய உதவிகளைப் பெற்று வாழும் போது நாமும் பிறர் பற்பலருக்கும் உதவுவோராக இருக்க வேண்டுவது நம் கடமையன்றோ.

‘’ஊடலில் தோற்றவர் ’’வென்றார்’’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். காதல் வாழ்வில் விட்டுக்கொடுத்துத் தோற்றலில் உள்ள சுவையையும், பயனையும் உணர்ந்து கொண்ட கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் ஒருவருக்காக மற்றொருவர் தோல்வியை ஏற்பதிலும் போட்டி போட்டுக்கொண்டு முந்துவர். அகவாழ்வில் முழுச்சுகம் காணும் வல்லநர் அனைவரும் அறிந்த உண்மைதான் இது. அதனாற்றான் பெரியார் மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டுமென்கிறார். இது ஐந்தாம் அறிவுரையாகும்.

ஆறாவதாக மணமக்கள் மகப்பேற்றில் அவசரப்படவேண்டா என்கிறார் பெரியார். குழந்தைகள் பெறவேண்டா என்று கூட இங்குப் பெரியார் கூறவில்லை. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அவசரப்படவேண்டா என்றுதான் கூறுகிறார். எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்துக் குழந்தைப்பேற்றைத் தள்ளிப் போடுவதே மேலானது. அதற்குப் பற்பல காரங்கள் உள்ளன. குழந்தைகளைப் பெறவும் பின் அவற்றைத் தக்கபடி வளர்க்கவும் தேவையான உடல் நலமும், உள்ளப் பக்குவமும், அறிவு முதிர்ச்சியும் ஏற்பட்ட பிறகு மகப்பேறு நிகழ்வதே சிறந்ததாக இருக்க முடியும். இன்ப வாழ்வுக்காக என்று வாழ்க்கைத் துணையைத் தேடியவர்கள் உடனே குழந்தைச் சுமையைத் தாங்க நேர்வது தகாதே. குழந்தை வேண்டும் என்று உண்மையிலேயே தேவைப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்வதே பொருத்தமாகும். அதற்கும் ஓர் அளவிருப்பதை இன்று அறியாதவர் யாரும் இருக்க முடியாது. மேலும் மக்கட் பேறே நாணயமும் நேர்மையும் உள்ள நல் வாழ்வுக்குத் துணை செய்யும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஏழாவதாக மணமக்கள் தமக்குள் அன்பும் பண்பும் உடையவர்களாய் வாழ்ந்தால் மட்டும் போதாது. ஏனெனில், அவர்கள் வாழ்வு அவர்களிருவருடன் மட்டுமே நிகழ்வதில்லையே. பெற்றோர், உற்றோர், உறவினர், அன்பர், நண்பர், அயலார், ஊரார், நாட்டார், உலகத்தார் என அனைவரோடும் தொடர்பு கொண்டு வாழ்வதே வாழ்க்கையாதிலின் அவர்கள் மற்றவர்களோடும் அன்பும் பிற நற்பண்பும் உடையோராக இருப்பது அறிவுடைமையும், பயன் உடைமையுமான நற்செயாலகும். மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் கெடுதல் செய்யாமலாவது இருக்கவேண்டுபென்கிறார் பெரியார்.

சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதிலும் தாம் பகுத்தறிவு வாழ்க்கை வாழ்வதிலிருந்து நழுவியோ சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதை எட்டாம் அறிவுரையாகக் கொள்ளலாம். கோயில், சடங்குகள், தீபாவளி போன்ற பண்டிகைகள் போன்ற பகுத்தறிவு நெறிக்கு மாறான எத்தொடர்பும் ஏற்பட்டு விடாமல் பர்ர்த்துக் கொள்ள வேண்டும்.

‘ஈயென இரத்தல் இழிந்தன்று’’ என்று புறநானூறு கூறும் தமிழர் கோட்பாட்டைப் பெரியார் ஒன்பதாம் அறிவுரையாக மணமக்களுக்கு வழங்குகிறார். தம் வாழ்வில் இடர், நெருக்கடி போன்றவை ஏற்படும் காலங்களிலும் பிறர் உதவியை நாடாமல் வாழவேண்டும். பிறரிடம் கையேந்துவதை வெறுக்கவேண்டும். பிறருக்கு உதவ முயலலாமே தவிரப் பிறரிடம் உதவியை நாடுவதைத் தம் மரியாதைக் குறைவாகக் கொள்ளவேண்டும்.. இல்லாத இறைவனிடம் கையேந்தும் பழக்கமே பிறரிடம் இரந்து பின்னிற்கும் இழிந்த பழக்கத்துக்கு மனிதனை அழைத்துச் செல்கிறது, அல்லது இது அதற்கு இட்டுச் சென்றது என்றாலும் சரியே.

பத்தாம் அறிவுரையாகச் சிக்கன வாழ்வை மேற்கொள்க என்கிறார் பெரியார். ஊதாரித்தனம், கஞ்சத்தனம் ஆகிய இவையிரண்டுக்கும் மாறுபட்ட சிக்கனமே பெரியார் கடைப்பிடிக்கக் கூறும் வாழ்வியலாகும். பகுத்தறிவு நெறியான் ஒரு கூறாகவே அவர் சிக்கனத்தைக் கொள்கிறார். ஊதாரித் தனமை பகுத்தறிவின்மையேயாகும். மேலும் சிக்கன வாழ்வு ஒழுக்க வாழ்வென்பதும், சிக்கனமின்மை ஒழுக்கக்கேடு என்பதும் அவர் கருத்தாகும். வரவுக்குமேல் செலவிட்டால் பிறர் கையை எதிர் பார்க்க வேண்டியநிலை ஏற்படும். அந்நிலை ஏற்பட்டால் அது ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடச் செய்யும் என்றும் கூறிய அவர் வரவிற்குள் அடங்கும்படிச் செலவிட்டால் அது கவலையற்ற நல்வாழ்வை அளிக்கும் என்றும் கூறுகிறார். ஆகவே, சிக்கனம் கவலையற்ற சீரான வாழ்வைத்தரும் என்பதையும் சிக்கனமின்மை பிறரிடம் கையேந்தும் மானக்கேட்டையும் உண்டாக்கும் என்பதையும் மணமக்களுக்கு உணர்த்தி அவர்தம் அன்றாட நல் வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்.

இச்சிக்கனம் பற்றி மக்கள் நெஞ்சில் உறைத்து நிற்குமாறு அவர் கூறும் மற்றோர் அறிவுரையை இங்கு அவர்தம் வாய்மொழி வடிவிலேயே தர விரும்புகிறோம். இதோ படியுங்கள் அதனை;-

மணக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கேற்ற வகையில் செலவு செய்யவேண்டும்; கடன் வாங்கக் கூடாது. வரவு சிறிதாக இருப்பினும் அதிலும் ஒரு காசாவது மிச்சப் படுத்தனும். என்னைப் பொருத்தவரையில் ஒழுக்கம் என்பது இதுதான் என்பேன். வரவுக்கு அதிகமாகச் செலவு செய்வது விபச்சாரித்தனம் என்பேன்.

வரவுக்கு மேல் செலவு செய்வது எத்தகைய ஒழுக்கக் கேட்டை ஒக்கும் என்பதைப் பெரியார் வாய்மொழி வாயிலாகவே கேட்டவர்கள் சிக்கனம் தவறமாட்டார்கள். பெரியார் நெறியின் சிறப்புக் கூறுகளில் ஒன்றான சிக்கனம் பயன் மிக்கது என்பது மட்டுமேயன்றி எளிதாகப் பின்பற்றக் கூடியதுமாகும். பின்பற்ற முடியாத எதுவும் அவர் நெறியில் இடம் பெறாது. உண்மையை உணர்ந்து அறிவு கைவரப் பெற்றுவிட்டால் பின்பற்றற்கரியது என்று மலைத்துத் திணற வேண்டிய நிலை ஏற்படாது.

ஆகாறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
என்னும் வள்ளுவம் கூறும் கருத்தும் இதுதான்.



 .....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -11

No comments: