Pages

Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Wednesday, 3 February 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -3







லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள்



இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.


கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு ''நந்தனார்'' திரைக்கு வந்தது. ''நந்தனார்'' வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.


காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி,         '' என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே'' என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.


1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஔவையார்’. அந்த நாட்களில் “ஔவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஔவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஔவையாராக நடித்த அவரைத்தான் “ஔவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.


ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஔவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஔவையாராகத் தோன்றினாலே போதும்  நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.
 கே.பி.எஸ் படத்தில் நடிக்க வருடம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின்  மதிப்பு எவ்வளவு என்பதை  வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுக்க பணம் 86, 496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஔவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. ''''படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்'' என்று '''' இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்'' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் '''' இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.


ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.


தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். ''''ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்'''' என்றார்.



பேராசை பிடித்த ஹீரோயின் ''''ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?'''' என்று கேள்வி கேட்டார்.


உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.


வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.




''ஔவையார் படத்தைப் பார்த்த டி.கே, சண்முகம் ''நீங்கள் நடிக்கவில்லை, ஔவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்'' என்று கே.பி.எஸ் ஐ புகழ்ந்தார்.

''ஔவையார் திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த படம் கலைஞர் கதை வசனத்தில் உருவனா  ''பூம்புகார்'' என்ற படம். இந்த படம் எடுக்க முடிவு ஆனவுடன் அதில் வரும் கவுந்தியடிகளாக கே.பி.எஸ்  நடத்தால் தான் நன்றாக வரும் என்று அவரை ஒப்பந்தம் செய்ய முடிவெடுதத கலைஞர்., எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவித்தார் சுந்தராம்பாள்.


''''கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்'''' என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.


கலைஞரும் விடவில்லை. ''''நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.


''''சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்'' என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, ''''முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.


அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. ''''முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்'' என்று.


தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.


''''கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்'''' என்று ''''பூம்புகார்'''' படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது ''''வியப்பளிக்கும் ஆளுமைகள்'''' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.


“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று ''''திருவிளையாடல்'''', ''''துணைவன்''' ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, ''உயிர் மேல் ஆசை'', ''சக்திலீலை'', ''காரைக்கால் அம்மையார்’, ''திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.


கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த ''ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.


அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை ''ஏண்டாப்பா'' என்றும், கலைஞர் கருணாநிதியை  ''மகனே'' என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை   ''அண்ணா'' என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். இயற்கை எய்தினார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தந்துதவினார்.


கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.




கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்




''''கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட


கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ''''
 
இசையால் தமிழுலகத்தை ஈர்த்த பெண் கலைஞர் எவ்வளவு கொடுமையில் வாழ்ந்தார் என்பதை அறியமுடிகின்றது. அத்தனைக் கொடுமையிலும் இசைப்பணியை பல்வேறு போராட்டுங்களுக்கு இடையும் தொடர்ந்தார். வாழ்க அவர் புகழ்.


------ முற்றும்-----



Tuesday, 2 February 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -2








கோவைக்கும், கொடுமுடிக்குமாக ஓடுகிற ரயிலில், தன் வெண்கலக் குரலில் தேசபக்திப் பாடல்களைப் பாடியபடி, கேட்பவர்கள் மனமுவந்து தரும் காசுகளை வாங்கி, தன் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, வாழ்வு நடத்திக் கொண்டிருந்தவர் தான் கே.பி.சுந்தராம்பாள்.

தன் கம்பீரமான குரலில், உச்ச ஸ்தாயியில் பாடுவதையே தனக்கென ஒரு பாணியாய் கொண்டு, இசை உலகில் ஒரு தலையாய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, கோவையில் தன் நாடகம் ஒன்றை முடித்துக் கொண்டு, செங்கோட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்த ரயிலில், ரயில் ஓட்டத்தில் ஏற்படுகிற ஓங்காரக் கூச்சலுக்கிடையே, அதையும் மீறி நாதம் ஒன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டு, "யார் பாடுவது, எங்கிருந்து இந்த இனிய நாதம் வருகிறது?' என்று தன்னிலையையும் மீறிய ஆவலில், தானிருக்கும் இடத்திற்கு அருகில் வரட்டும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்.

ஒவ்வொரு பெட்டியாக பாடிக் கொண்டே வந்த சுந்தராம் பாள், கிட்டப்பா இருந்த பெட்டிக்கும் வந்தார். யாரையும் லட்சியம் செய்யாமல், மடை திறந்த வெள்ளம் போல ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு, எதிரே பிரபலமான இசைக்கலைஞர் கிட்டப்பா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்து, அவரறியாமலேயே நின்றது.

அவரிடம் கிட்டப்பா, "ஏம்மா, நீ பாட்டுக்கு பாடு, ஏன் நிறுத்திட்டே?' என சொல்ல, சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் பாடலைத் தொடர்ந் தார். பாடல் முடியவும், கிட்டப்பாவின் முன் கூனிக்குறுகி நின்றார்.

பிறகு, "என் வயிற்றுப் பிழைப்புக்கு, எனக்குத் தெரிந்த எதையோ பாடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.


"நீ, முறையாக இசை பயின்றவர்களை விடவும், மிகவும் நேர்த்தியாகப் பாடுகிறாய். இசைவாணர்களின் எல்லாவித திறனும், பாணியும், நுணுக்கங்களும் உன் பாடலில் தானாக வருகிறது.

"நீ சாதாரணமாகப் பாடுவதாக எண்ணாதே... நான் தான் சிறப்பாக உச்ச ஸ்தாயியில் பாடுவதாக இதுவரையும் எண்ணியிருந்தேன். இன்று தான் என்னையும் வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு பாடகி இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன்...' என்றார் கிட்டப்பா.

என்ன சொல்வது என்று தெரியாமல், திகைப்புடன் நின்றார் சுந்தராம்பாள்.

"வாம்மா, இப்படி உட்கார்...' என்று இடம் தந்தார். முதலில் அவர் முன், அருகில் அமர தயங்கி, பிறகு, அவரது கண்டிப்புக்கு இணங்கி, அவருக்கு மதிப்பளிக்கும் வகையில், பணிவுடன் அமர்ந்தார்.


தான் அன்றாடம் பாடிக் கொண்டிருந்த அத்தனை பாடல்களையும், முன்னே பாடியதை விட உணர்ச்சி ததும்பும்படியாக, கிட்டப்பா கேட்க, கேட்க பாடிக் காட்டினார்.

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் எஸ்.ஜி.கிட்டப்பாவே, அந்தப் பெண்ணைப் பாடச் சொல்லி, அருகில் அமர வைத்துக் கேட்டு ரசிப்பதை பார்த்தும், கேட்டும் அதிசயித்துப் போயினர்.

கிட்டப்பா, சுந்தராம்பாளை ஒரு அர்த்தமுடன் பார்த்தார்; பேசினார். தன்னுடனேயே செங் கோட்டைக்கு அழைத்துச் சென்று விட்டார். கிடப்பாவின் மதிப்புக்குரியவராக மட்டுமல்ல, மன துக்கு பிடித்தவராகவும், மனைவியாகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்.

கேட்பவர்களை தேனுண்ட வண்டாக மயங்க வைத்த இரு குரல்களும், தாம்பத்திய வாழ்க்கைக்கு வழிவகுத்து ஒளியேற்றி வைத்தன. கச்சேரிகள், மேடை நாடகங்கள் என, அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்தது. தமிழகமே அவர்களின் சேர்க்கைக்கு எல்லா வகையிலும் பாராட்டையே தந்தது. ( நன்றி தினமலர்)


இருப்பினும் கிட்டப்பா கே.பி.எஸ் தம்பதியர்களின் வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்பதே வரலாற்றியலாளர்களின் கூற்று. இது கிட்டப்பாவை விட்டு பிரிந்த நாட்களில் கேபிஎஸ் எழுதிய கடிதங்களில் வாயிலாக தெரிகின்றது என்று சித்ரா லட்சுமணன் தெரிவிக்கின்றார்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது. கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.


1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.

சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்


கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.


சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.


கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.


“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.


“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது'''' என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.


இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.


கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,
தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,

சுந்தரம்.


சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.


1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே உயிரோடிருந்தது.  குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.


சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.


தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு ஷேமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.


மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு

சுந்தரம்.


“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.


இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பா மறைந்த செய்தி காங்கிரஸ் கூட்டத்தில் பாடிக்கொண்டிருந்த கே.பி. சுந்தராம்பாளுக்கு இடையில் தெரிவிக்கப்பட்டது. பாடுவதை நிறுத்தி மேடையிலிருந்து இறங்கி துக்கத்தில் கலந்து  கொண்டார்.
கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

அதன் பின் பாடுவதையும், நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். அந்த இளம் கைம்பெண். கொடுமையிலும் கொடுமை கண்டார் கொடுமுடி கோகிலம்.

பேசும் படம் வருவதற்கு முன்னரேயே கிட்டப்பா மறைந்தார். 

தொடரும்....3

Monday, 1 February 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -1















நாடகம், இசை திரைப்படம் ஆகிய மூன்று துறைகளிலும் சாதனை படைத்த கே.பி. சுந்தரம்பாள் குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியவர். அவருடைய நிஜவாழ்க்கை, சினிமாக் கதைகளையும் மிஞ்சக் கூடியதாகும்.

கோவை மாவட்டம் கரூரை அடுத்த கொடுமுடியில் பாலாம்பாள் என்கிற கொங்கு கவுண்டர் இன ஒரு ஏழைப் பெண்மணிக்கு 1908_ம் ஆண்டு அக்டோபர் 11_ந்தேதி சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்று ஒரு தம்பி, சுப்பம்மாள் என்று ஒரு தங்கை. சிறுமியாக இருக்கும் பொழுதே தந்தையை இழந்தவர். (கொடுமுடி மும்மூர்த்திகள் குடிகொண்டிருக்கும் தெய்வீக தளம்.

குடும்பத் தலைவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. அம்மா பாலம்பாளின் தம்பி அதாவது தாய் மாமா மலைக்கொழுந்தன் ஆதரவில் வளர்ந்தனர். இருப்பினும், சுந்தராம்பாளின் தாயார் பாலம்பாள், குழந்தைகளை வளர்க்க வீட்டு வேலைகள் செய்ய நேரிட்டது. வறுமை அளவு கடந்து போனதால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள பாலம்பாள் முயற்சி செய்தார்.

இதுபற்றி, பிற்காலத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில சுந்தராம்பாளே குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- .

வறுமையின் காரணமாக எங்களை இழுத்துக்கொண்டு போய் நல்லதங்காள் மாதிரி காவிரியில் தள்ள முயன்றார் அம்மா. நான், தம்பி, தங்கை எல்லோரும் ஓவென்று அழுதோம். வீட்டு வேலை செய்து காப்பாற்றுவதாக அம்மாவிடம் சொல்லி காலைக் கட்டிக்கொண்டு அழுதேன். அம்மாவோ எங்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு அழுதார்.

பிழைக்க வேண்டி, கரூருக்கு ரெயிலில் பயணமானோம். அம்மா கண்களில் நீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. அவரைப் பார்த்து நாங்களும் அழுதோம். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் மெல்ல எங்களை அணுகி, "நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்? உங்களைப் பார்த்துக் குழந்தைகளும் அழுகின்றனவே!" என்றார்.

அம்மா விஷயத்தைச் சொன்னார். அவரும் பரிதாபப்பட்டுப் போனார். "என் தங்கை விதவையாக வந்து என்னுடன் வசிக்கிறாள். உங்களை உடன் பிறவாத பொறப்பாக நினைத்துக் கொள்கிறேன். எனக்கும் பிள்ளைகள் கிடையாது. இந்தக் குழந்தைகளை வளர்த்து விட்டுப் போகிறேன்" என்று தன் வீட்டுக்கு அழைத்தார். அம்மாவுக்கு முதலில் பயம். பின்னர் ஒத்துக்கொண்டார்.

அந்தப் பெரியவரின் பெயர் மணவாள நாயுடு. "மாமா" என்று அழைக்க ஆரம்பித்தோம். மாமா கரூர் முனிசிபாலிடியில் படிக்கற்களுக்கு முத்திரை வைக்கும் உத்தியோகம் செய்து வந்தார்.

இரவு வேளையில் நான் வாசலில் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டு வெகுநேரம் ராகம் போட்டு ஏதாவது பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பேன். விடியற்காலையில் இரண்டு காவல்காரர்கள் வந்து என்னை அழைத்தார்கள். அம்மா பயந்து கொண்டே அனுப்பி வைத்தார். "நடு ராத்திரியில் பாடியது யார்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

நான்தான்" என்றேன். அவர் நம்பவில்லை.

எங்கள் கதையைக் கேட்டார். சொன்னேன். அவர் மூலம் வேலு நாயரிடம் அனுப்பி வைக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமானேன். அவரிடம் சேர்ந்து நான் நடித்த முதல் நாடகம் நல்லதங்காள். அப்போது எனக்கு வயது ஏழு.

காவிரியாற்றில் அம்மா தள்ள நினைத்தபோது, எப்படி அழுது கதறினேனோ அதுவே கதாபாத்திரமாகக் கிடைத்தது. நடித்தேன், உணர்ச்சிகரமாக.

இவ்வாறு சுந்தராம்பாள் குறிப்பிட்டார்.

வேலு நாயர் நாடகக் கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக (பால பார்ட்) நடிக்கத் தொடங்கிய சுந்தராம்பாள் படிப்படியாக முன்னேறினார். அவர் பாடல்கள், பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது.



குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சீக்கிரமே நடிகையாக மாறினார் (ஸ்திரீபார்ட்) வள்ளித்திருமணம், பவளக்கொடி சாரங்கதாரா நந்தனார்.... நாடகங்கள் கே.பி. சுந்தராம்பாளை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.!


ஆண்வேடம் (ராஜபார்ட்) பூண்டும் நடித்தார். அர்ஜூனனாக தோன்றி கம்பீரம் காட்டினார். உச்ச ஸ்தாயி (ஏழு சுவரங்களின் ஒரு அலகு-unit of sound notes spectrum of sounds) எட்டுக்கட்டையில் பாடும் பெண் கே.பி. சுந்தரம்பாள் மட்டும் தான். நாடகம் பார்க்க உட்கார்ந்திருக்கும் கடைசி ரசிகனுக்கும் இவர் குரல் தெளிவாய் கேட்டது. தமிழ்க் கடவுளாம் முருகனின் மீது தீவிர பற்று கொண்டதால் அதிகமாக நாடக மேடையில் முருகனைப்பற்றித் தான் பாடுவார்.



மெளனப்பட காலம் என்பதால் நாடகங்களுக்கே அதிக வரவேற்பு இருந்தது. அதிலும் கே.பி.எஸ் நடிக்கிறார் என்றால் வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள். பாட்டியின் துணையுடன் சுந்தரம்பாள் நாடகங்களில் நடித்து வந்தார். தமிழகம் மட்டுமில்லாது இவரது புகழ் கடல் கடந்தும் பரவியது.



இலங்கையில் இருந்தும் அழைப்பும் வந்தது. தாய்மாமன் மலைக்கொழுந்தன் துணையுடன் இலங்கைக்கு நாடகத்தில் நடிக்க சென்றபொழுது கிட்டப்பாவின் அறிமுகம் கிடைத்தது.



கே.பி.சுந்தரம்பாள்.... ''ஔவையார்'' இசை உலகமும் இந்த கொடுமுடி கோகிலத்தின் செளந்தர்யக் குரல் என்றும் அழியாத நிலை கொண்டவை....!


என்றும் இளமையாய் இருக்கும் அந்த சுந்தர்வ கானம் கேட்டு மயங்காத மனிதனே இல்லை!


இறைபற்றைப் போலவே! தேசப் பற்றும் கே.பி சுந்தரம்பாளின் ரத்தத்தின் கலந்தவை!
கிட்டப்பா கே.பி.எஸ் இருவரும் கல்ப்புத்திருமணம் புரிந்து ஜோடியாக சேர்ந்து நாடக உலகை திரும்பி பார்க்க வைத்ததால், கிட்டப்பாவின் வரலாற்றை சற்று பார்ப்போம்.....


தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர், எஸ்.ஜி.கிட்டப்பா.


நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சேர்ந்திருந்தது. அங்கு, கங்காதர அய்யர் _ மீனாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1906_ம் ஆண்டு ஆகஸ்டு 26_ந்தேதி கிட்டப்பா பிறந்தார்.


அவருடைய இயற்பெயர் ராமகிருஷ்ணன். எல்லோரும் செல்லமாக "கிட்டப்பா", "கிட்டன்" என்று அழைப்பார்கள். அதில் கிட்டப்பா என்ற பெயர் நிலைத்து விட்டது.


கிட்டப்பாவுடன் பிறந்தவர்கள் 8 சகோதரர்கள். ஒரு சகோதரி. இவர்களில் காசி அய்யர், சுப்பையர், செல்லப்பா ஆகியோர், அந்த நாளில் பிரபலமாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நிரந்தர நடிகர்களாக இருந்தார்கள்.


கிட்டப்பா தன் 6 வயதில் சகோதரர்களின் நாடகத்தைக் காணச் சென்றார். அப்போது அவர் மேடை ஏறி, கணீர் குரலில் பாடினார். தம்பியின் குரல் வளத்தைக் கண்ட சகோதரர்கள் அவரையும் நாடக நடிகராக்கினர்.


இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு நாடகக்குழு, கிட்டப்பாவையும், அவர் சகோதரர்களையும் நாடகங்களில் நடிக்க அழைத்தது. 1916_ம் ஆண்டில் கிட்டப்பா தன் சகோதரர்களுடன் இலங்கை சென்று, நாடகங்களில் நடித்தார். அங்கு கிட்டப்பா பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.

சென்னை திரும்பிய கிட்டப்பா சகோதரர்கள், "வள்ளி திருமணம்" உள்பட பல நாடகங்களை நடத்தினர். கிட்டப்பா புகழ் பரவியது.


அழகும், இனிய குரலும் கொண்ட கிட்டப்பாவுக்குப் பெண் கொடுக்க பலர் முன் வந்தனர். பெற்றோர், கிட்டம்மாள் என்ற பெண்ணைப் பார்த்து முடிவு செய்தனர்.


கிட்டப்பா _ கிட்டம்மாள் திருமணம் 24 ஜுன் 1923_ல் சென்னையில் நடந்தது. அப்போது கிட்டப்பாவுக்கு வயது 18. கிட்டப்பா தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். அவர் நடித்த "தசாவதாரம்" ஒரே ஆண்டில் 200 முறை மேடை ஏறியது.


இந்த சமயத்தில், கே.பி.சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.


"கிட்டப்பாவையும், சுந்தராம்பாளையும் ஜோடியாக நடிக்க வைத்தால் நாடகங்கள் பிரமாதமாக அமையும். வசூலும் அமோகமாக இருக்கும்" என்று, நாடக அமைப்பாளர்கள் நினைத்தனர்.


இலங்கைக்கு வந்து நாடகங்களில் நடிக்கும்படி, கிட்டப்பா சகோதரர்களுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, கிட்டப்பாவும், அவருடைய சகோதரர்களும் 1925 இறுதியில் இலங்கை சென்றனர்.

எஸ்.ஜி.கிட்டப்பாவும், கே.பி.சுந்தராம்பாளும் முதன் முதலாக இலங்கையில் "வள்ளி திருமணம்" நாடகத்தில் ஜோடியாக நடித்தனர். கிட்டப்பா வேலனாகவும், சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடித்தனர். இருவரும் போட்டி போட்டுப் பாடி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர்.


தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும், கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் பல நாடகங்களில் இணைந்து நடித்தனர். அவர்கள் புகழ் திக்கெட்டும் பரவியது.


(குறிப்பு; இவரின் வாழ்க்கை பலவாறு குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் இவரின் வாழ்க்கை தொடர்வண்டியில் (யாசகம்) இரப்பைப்  பெறப் பாடிக்கொண்டிருக்கும் பொழுது பலரால் கண்டுணர்ந்து நாடகத்துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டாதாக கூறப்படுகின்றது. தொடர்வண்டியில் பாடி இரப்பை (யாசகம்) பெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே கிட்டப்பாவின் அறிமுகமும் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடரும்...2 

(ஆதாரத் தகவல்கள், இணையம், மாலை மலர், தினமலர், தமிழ்த் திரையுலக சாதனைப்படங்கள் நூல்...எழுதியவர் பாலபாரதி.......)



Saturday, 30 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -19


  





பேசும் கலை வளர்ப்போம் -19

    இப்போது வயது நாற்பத்தி ஆறு.தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் நன்கு முதிர்ச்சி பெற்ற கருத்துக்களை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்த, ஆனால் யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கறுப்புச்சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையிலே சொற்பொழிவக்கான குறிப்புகள். அருகேயுள்ள மேஜையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். 'இங்கேதான் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது, மிக மிக முக்கியமானது'' என்ற சொற்றொடர் அடிக்கடி பேச்சிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார் யார் இவர்?

     வேறு யாருமல்ல; தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தவர் இன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்-விடுதலை நாளிதழின் ஆசிரியர் - வீரமணி அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்.

     பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணிபுரிந்து கொண்டு-பள்ளியிலும் பயின்று-கல்லூரியிலும் பட்டம்பெற்று- திராவிடர் கழகத்தின் ஓய்வறியாத் தொண்டராகவும் விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப பருவத்திலே மேடையிலே பேசுகிற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்.

    பெரியாரின் தலைமையை ஏற்றுக்கொண்டோம் என்பது மட்டுமல்லாமல்-அவருடனேயே இருந்து-அவருடனேயே சுற்றுப் பயண நிகழ்ச்சிகளுக்குச் சென்று - அவரது குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு ஏடுகளின் அலுவலகங்களில் பணிபுரிந்து-அவரது கொள்கைகளை எழுத்து வாயிலாகவும், பேச்சின் மூலமும் மக்களிடம் பரப்பிய பல தலைவர்கள் உண்டு.

     அவர்கள், கால வேறுபாட்டால் பல இயக்கங்களுக்குச் சென்றிருகக்கூடும். ஆனாலும் அவர்கள் தலைவர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளராக மதிக்கப்பட்டதற்கும்-மதிக்கப்படுவதற்கும்- பெரியாரிடம் பெற்ற பயிற்சியே காரணம் என்பதை அவர்களும் மறந்ததில்லை! மறைத்ததுமில்லை!

     அதைப்போலவே பெரியாரைத் தலைவராக கொண்ட பேரறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அவருடன் உரையாடி - அவருடன் நீண்ட சுற்றுப் பயணங்களில் கலந்துகொண்டு-அவரைப் பிரியாமல் இருந்தே பயிற்சி பெற்றுப் பல்வேறு ஆற்றல் பெற்றவர்களும் உண்டு!

    பெரியார் - அண்ணா-இருவரிடமும் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பு பெற்று அவர்கள் வகுத்த இலட்சியங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களும் உண்டு! அவர்கள், தாங்கள் பெற்ற அந்த பெரும் பேற்றுக்காக பெருமைப்படக்கூடியவர்கள்! அந்தக் குழுவினரில் எனக்கும் ஒரு இடம் இருந்தது என்று என்னைப்போலி எண்ணி மகிழக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

   மிக இளம் வயதிலேயே சிறுவர் சிறுமியர் மேடைகளில் பேசுவது இன்றைக்கு எல்லாக் கட்சிக்கூட்டங்களிலும்; ஏன், சமயநெறிகூட்டங்களில் கூடக்காணுகிற நிகழ்ச்சியாகிவிட்டது.

     ஆனால், பல சிறுவர், சிறுமியர்-ஏதோ தாங்கள் பெற்றோர் ஆசைக்காக-உற்றார் உறவினர் விருப்பத்திற்காக-அல்லது அந்தச்சிறுவர்களே அதை ஒரு 'மேனியா'வாக எடுத்துக்கொண்டு மேடைகளில் யாரையோ தாக்கியோ,புகழ்ந்தோ பேசிவிட்டு கைத்தட்டலைப்பெற்றுவிட எண்ணுகிறார்களேதவிர, தங்களுஉடைய கல்விப் பயிற்சியை வளர்த்துக்கொள்ளவும், தெளிவாகத்தெரிந்து கொள்ளவும் முனைந்திட வேண்டுமென்று அவாக்கொண்டிருப்பவர்களாகத் தெரியவில்லை.

     அத்தகைய சிறுவர்கள், அல்லது சிறுமியர்-நண்பர் வீரமணி எப்படித் தனது இளம் வயதில் இடைவிடாது உழைத்து-கல்வியில் அக்கறை காட்டி - தலைவரிடம் விசுவாசமாக இருந்து-அதே போலக் கொள்கையிலும் உறுதியாக விளங்கிடுகிறார் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்திடவேண்டும்.

     பெரியாரின் அண்ணன் மகனார் தோழர் ஈ.வெ.கி. சம்பத், இளம்வயதிலேயே அண்ணாவுடன் நெருங்கிப் பழகி-'சொல்லின் செல்வர்'என்ற சிறப்புபெறுகிற அளவுக்குப் பேச்சாளராக விளங்கினார். கொள்கையில் நிலைத்த நெஞ்சமில்லாத காரணத்தால் அவரது அரிய ஆற்றலைத் தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இயற்கை, அவரை முழு வாழ்வு வாழ விடாமல் நம்மிடமிருந்து பறித்துகொண்டுவிட்டது. திராவிடர் இயக்கம், தமிழ் தேசியக்கட்சி, காங்கிரஸ் என்று கட்சி மாற்றங்கள் அவருக்கு ஏற்பட்ட போதிலும் வீறுகொண்ட விரிவுரையாளராகத் திகழ்ந்தார்.

   அவரை எதிர்த்து தி.மு. கழகச் சார்பில் 1962-ல் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாஞ்சிலார் என்னும் நாஞ்சில் கி. மனோகரன் அவர்கள், அவருக்கு ஈடுகொடுக்கும் சொல்வல்லாராகத் திகழ்ந்தவர்- இப்போது மினவெட்டுப் போன்ற மிடுக்கான பேச்சுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிற அவர், தனது இளம்பிராயத்திலேயே மேடைகளில் முழங்கிடத் தொடங்கியவர்தான்!

     மிக இளம் பருவம் எனக் கூற முடியாவிட்டாலும் கட்டிளம் காளையாக மேடையேறிக் கனல் தெறிக்கும் சொற்களால் மக்களைக் கவர்ந்து கடினமான விஷயங்களையும் பெர்யார் பாணியில் மிக விரிவாக எடுத்துரைத்து 'வாலிப் பெரியார்' என்றே அழைக்கப்பட்ட வசீகரமிகு பேச்சழகர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள், மறைந்துவிட்டார் எனினும் அவரது எழுத்து, பேச்சு ஆகிய தொண்டுகளை மறந்திட இயலுமோ!

    பெரியார், அண்ணா இருவரின் அணுக்கத் தொண்டராகவும், எனக்கு உறுதுணையாகவும், இருந்த என.வி. நடராசனார் கொள்கைப்பிடிப்புடன் அழுத்தம் திருத்தமாக அனல்பொழியுமாறு ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசி, மக்களின் அன்பைப் பெற்றவரன்றோ!

    'பேசும் கலை வளர்ப்போம்' என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக, எளிய நடையில் பல இனிய நிகழ்ச்சிகளையும்-இதயத்தை தொடும் நிகழ்ச்சிகளையும் - பல்வேறு துறைகளிலும் இயக்கத்திலும் உள்ள திறமை வாய்ந்த பேச்சாளர்களைப் பற்றியும் எப்படிப்பேச வேண்டும், பேசக்கூடாது என்பன போன்ற கருத்துக்களையும்- என்னால் இயன்ற அளவு எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

     பேசும் கலையில் சிறந்து விளங்கிட விழைந்திடுவோர்க்கு இந்தக் கட்டுரைத் தொடரும் ஓரளவு பயன்படுமேயானால், நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.

- கலைஞர் மு. கருணாநிதி

----முற்றும்----

பேசும் கலை வளர்ப்போம் தொடர் இத்துடன் முற்றுபெற்றது. பேசும் கலையில் பயிற்சி பெறுவதற்கு இத்தொடர் பயன்படுமேயானால் அதுவே இப்பதிவின் வெற்றியாகும். மீண்டும் வேறொரு பேச்சாளரின் தொடரோடு சந்திக்கிறேன். ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது;
நன்றி
வணக்கம்.
நம்பி.

Friday, 29 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 18










     பேசும் கலை வளர்ப்போம் -18

(Mannerism)  மேனரிசம் எனப்படும் தனிப் பாங்கு அல்லது தனிப்பாணி, பேச்சாளர்களையும் ஆக்ரமித்துக் கொள்வதுண்டு. பேசும்போது அவர்களையறியாமலேயே தனிப்பாங்கான அங்கச் செய்கைகள்-தவிர்க்கவொண்ணாத பழக்கவழக்கங்கள் தொடங்கி; பின்னர் அவைகளேஅந்தப் பேச்சாளர்களுக்குரிய தனித்த தன்மைகளாக ஆகிவிடுகின்றன.

     சிலர் மேடையில் நின்று ஆடாமல் அசையாமல் அருவிபோல் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

    அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, வலப்புறமும் இடப்புறமுமாக உடலைத் திருப்புவார். கைகள் லேசாக உயரும், தாழும்! பொடிபோடும் வழக்கம் அவருக்கு உண்டு. சட்டையின் பக்கவாட்டுப் பையில் ஒருகை நுழைந்திருக்கும். அவரது பேச்சின் சுவையில் திளைத்த மக்கள் கையொலி செய்து ஆரவாரம் புரியும்போது, சட்டைப்பையிலுள்ள பொடி டப்பாவிலிருக்கும் பொடியை யாருக்கும் தெரியாமல் மூக்கில் திணித்துக் கொண்டு மேல்துண்டினால் ஏதோ வியர்வை துடைப்பது போலத் துடைத்துக் கொண்டே தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பார்.

     தந்தை பெரியார் அவர்கள், வயது முதிர்ந்த காலத்தில் உட்கார்ந்து கொண்டேதான் பேசுவார்! அவர் நின்று கொண்டு பேசிய காலத்தில் அவருடன் கூட்டங்களுக்குச் சென்றவர்களில் நானும் ஒருவன். சந்தன வண்ணம் அல்லது காப்பிகலர், சில நேரங்களில் வெண்மையும் மஞ்சளும் கலந்தது-இப்படிப்பட்ட சால்வையால் உடலைப் போர்த்தியிருப்பார். பேசும்போது அந்தச் சால்வையை இழுத்து இழுத்துப் போர்த்திக் கொள்வார்.

     நெடிய உருவமும் நிமிர்ந்த நோக்கும் கொண்ட தளபதி அழகிரிசாமி, போர்க்களத்தில் எதிரியின் மீது ஓங்கப்படும் வாளினைப் போலத் தன் கையை வீசி வீசிப் பேசுவதும், அதற்கேற்ப சொற்கள் விழுவதும் மக்களை உணர்ச்சியில் மிதக்க வைக்கும்.

     சற்றுப் பெருத்த மேனியும், பெரிய மீசையும், உரத்த குரலும் கொண்ட ஜீவா அவர்கள் பேசும்போது மேடை அதிரும். அங்க நெளிவுகளில் மிகுந்த வேகம் இருக்கும். உடலை அதிகமாக ஆட்டிக் கொண்டு பேசும்போதுதான் அவருக்கு வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்து விழும்.

    அடிக்கடி கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொள்வதும், கொத்து மீசையை ஒதுக்கிவிட்டுக் கொள்வதும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் பேச்சு சூடு பிடித்துவிட்டது என்பதைக் காட்டும் அடையாளங்களாகும்.

    அருள்பாலிப்பதைப் போல கையை மக்கள் பக்கம் அடிக்கடி காட்டிகொண்டே, வாதத்தை வரிசைப் படுத்தி அடுக்கிக் காட்டும் திறமையை ராஜாஜி பெற்றிருந்தார்.

     குதிகாலை உயர்த்தி, தோள்களைக் குலுக்கிக் கொண்டு கடல்மடைத் திறந்தாற்போல் பேசிக்கொண்டிருக்கும்போதே சில சொற்களைத் திடீரெனச் சன்னக்குரலில் இழுத்துப் பேசி மக்களின் வரவேற்பைப் பெறுவது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் தனிப் பாணியாகும்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்றவுடன் தலையை நிமிர்த்தியவாறு-ஒருமுறைக் கூடத் தாழ்த்தாமல்- வானநோக்கிக் கைகளை உயர்த்தியவாறு சொல்மாரிபொழிவது பேராசிரியர் அன்பழகன் அவர்களிடம் காணக்கூடிய தனிப்பாங்கு எனலாம்.

     இப்படி ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏற்பட்டுவிட்ட செயற்கைப் பாணிகளை அவர்களே முயன்றாலும் விடமுடியாத நிலை!

    நாம் பேசும்போது ஏதாவது ஒரு அங்கச் செய்கை அல்லது அங்கசேட்டை இருக்கவேண்டுமென்று அப்படியொரு பயிற்சியை எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. சிலருக்கு அங்கச் சேட்டைகள், அவர்களது பேச்சையே மக்கள் கவனிக்காத அளவுக்கு இடையூறாக அமைந்து விடுவதும் உண்டு.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று தலையைச் சொரிந்துகொண்டே பேசுவார்கள். கழுத்திலோ, இடுப்பிலோ விரல்களை வைத்து அழுக்கைத் திரட்டிக் கொண்டே பேசுவார்கள். திரட்டிய அழுக்கை, உருண்டையாக உருட்டி மூக்கிலை முகர்ந்து பிறகு கீழே போடுவார்கள். இத்தனையும் பேசிக் கொண்டிருக்கும்போதே நடக்கும்.

     இதுபோன்ற பாணிகளையோ, அங்கச்செய்கைகளையோ பேச்சாளர்கள், மறந்தும் கற்றுக்கொண்டுவிடக்கூடாது.

    கூடுமானவரையில் மேடையில் அதிக ஆட்டமின்றி அங்கச் சேட்டைகளை மட்டுப்படுத்திக்கொண்டு பேசுவதே நலம்.

    வார்த்தைகளைக் குதப்புவது-- கடித்துத் துப்புவது--  இவை, கேட்போர் செவிகளில் நாராசமாக விழும்.

    'போராட்டக்காரர்களைப் போலீசார் அடித்து விரட்டினார்கள்' என்பதைச் சில பேச்சாளர்கள் அழுத்தம் திருத்தமாகவும், ஆத்திர உணர்வோடும் சொல்வதாக எண்ணிக் கொண்டு-''போராட்டக்காரர்களைப் போலீசார் அட்டித்து விரட்டினார்கள்'' என்று வார்த்தைகளைக் கடித்து உதறுவார்கள். அந்தப் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருக்காது.

    வேற்றுமொழிச் சொற்களையும் வேதபுராணங்களையும் பயன்படுத்தி உபன்யாசங்கள் செய்து வந்த மடாதிபதிகளின் மத்தியிலே நல்ல தமிழிலும், நயம்பட இலக்கியங்களிலும் மேற்கோள் காட்டி- காலத்திற்கும் சமயத்திற்கும் ஏற்ப மேடைப் பேச்சில் திறமை காட்டியவர்களில் குன்றக்குடி அடிகளார் ஒருவர்.

    தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கெனவும் இலக்கிய மறுமலர்ச்சிக்கெனவும் தமிழர் உரிமைக்கெனவும் சமய நெறிகளைப் பரப்பிடவும், மேடை முழக்கம் செய்தபோது சில முக்கியமான சொற்களை மூன்றுமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

   தமிழர் நெறி பரப்பிடும் தொண்டிலும் இந்தி ஆதிக்க எதிர்ப்பிலும் ஈடுபட்ட மறைமலை அடிகளார், தனது சொற்பொழிவில் தனித்தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவார்.

     அடலேறுத் தோற்றங்க்கொண்டவரும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் அயராது ஈடுபட்டவருமான நாவலர் சோமசுந்தர பாரதியாரின் சொற்பொழிவில் அடிக்கடி ''அட சனியனே'' என்று கடிந்துகொள்ளும் வார்த்தை வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

    எத்தனையோ-எண்ணற்ற கூட்டங்களில் சொற்பெருக்காற்றியிருந்தும்கூட இன்னமும் கையில் சிறு குறிப்புகளை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொண்டு அவற்றின் துணையோடு -மக்களைக் கவருகின்ற பேச்சாளராக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விளங்குகிறார்.

   பார்வைக்குப் பரமசாது போலத் தோற்றமளித்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், சீற்றங்கொண்டு பேசத் தொடங்கினால் சிம்ம கர்ச்சனையாகத்தானிருக்கும்.

     சிறுசிறு குட்டிக்கதைகளைச் சொல்லியே மக்களைச் சிரிக்க வைப்பார் சின்ன அண்ணாமலை.

     நல்ல எழுத்தாளராக இருந்து மறைந்த தமிழ்வாணனும் கூட்டத்தினரைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை படைத்தவர்.

     அடிக்கடி கூட்டங்களில் பேசுகிற பழக்கமில்லாவிட்டாலும் எழுத்தாளர் ஜெயகாந்தனைப் போன்ற சிலர், தங்கள் பேச்சில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் குழுமியிருப்போரிடையே ஒரு கலகலப்பை ஏற்படுத்திவிடுவர். தேர்ந்தெடுத்த, தெளிந்த சொற்களைக் கொண்டு கருத்துக்களை வழ்ங்கிய காயிதே மில்லத் அவர்களும், அவருடன் நெருங்கியிருந்து பயின்று தேனினுமினிய உரையாற்றும் அபதுல் சமது அவர்களும் சொற்பொழிவு மேடையில் புகழ்மிக்க இடத்தைப் பெற்றவர்கள்.

     இப்படிப் பல துறையைச் சேர்ந்தவர்களும் எப்படிப் பேசினார்கள்-எப்படிப் பேசுகிறார்கள்-என்பதைப் பேச்சாளர்களாக ஒளிவிட வேண்டுமென்று விரும்புகிறவர்கள், உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

- கலைஞர் மு. கருணாநிதி

......இன்னும் வரும்.....19

Thursday, 28 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 17








  பேசும் கலை வளர்ப்போம் -17

   மேடையில் நின்று பேசும்போது அந்தக்கூட்டத்தில் குழுமியிருப்போரில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதத்திற்குமேல் தன்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொற்பொழிவாளர் மறந்துவிடக்கூடாது.

    பேசுவதற்கு அழைக்கப்பட்டவுடன் ஒலிபெருக்கியின் முன்னால் வந்து நின்றுகொண்டு வேட்டியைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் சிலர்.

    வாயில் அதுவரையில் குழப்பிக் கொண்டிருந்த வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்புவார்கள் சிலர்.

   இருமிக் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்காமலே நிற்பார்கள் சிலர். ஒலிப்பெருக்கி அமைப்பாளரிடம்  அந்தக் கருவியைச் சரியாக வைக்குமாறு கூறிக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவார்கள் சிலர் அந்தச் சொற்கள் ஒலிபெருக்கி வழியாகக் கூட்டத்தினர் காதுகளிலே விழுந்து-கூட்டத்தினர் பேச்சாளர் மீது ஒருவிதமான அதிருப்தியை உருவாக்கிக் கொள்ள வழிவகுப்பதும் உண்டு!

    சில பேச்சாளர்கள், மாலைக்காகக் காத்துக் கொண்டிருந்து, மாலை கழுத்தில் போடப்படுகிற நேரத்திலே புகைப்படக்காரர் படம் எடுக்கிறாரா என்பதிலே ஆர்வங்காட்டி, எடுத்த எடுப்பிலேயே ம்க்களின் கேலிக்குரியவராக ஆகிவிடுவார்கள்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று கொண்டிருக்கும் பேச்சாளர் தனது பேச்சை முடிக்கும் வரையில் அந்த மேடைக்குரிய மரியாதையையும்-பேச்சுக் கலைக்குரிய மதிப்பையும் பாதுகாக்கவும், போற்றிடவும் கடமைப்பட்டவராவார்.

    பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் யாராவது ஓரிரு சிறுவர்கள், சிறுமியர்கள் எழுந்து செல்வதற்கு முயன்றிடக்கூடும். பேசுகிறவர், அதைக் கவனிக்காதது போலப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ''ஏய்! யாரது உட்காரு! இந்தாப்பா! அந்த சனியன்களை விரட்டு!'' இப்படி ஏதாவது ஆத்திரத்தில் கூறிவிட்டால்-அந்தப் பேச்சாளரின் தரம் மிகவும் தாழ்ந்துவிடும்.

    நான் மேடையேறி பேசிய தொடக்கக் காலத்தில்  ஆதிதிராவிடர் காலனிகளில் நிறையக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.ஒருமுறை இரவு பத்து மணிக்கு ஒரு காலனியில் நானும் ஷம்சுதீன் என்ற நண்பர் ஒருவரும் பேசுவதற்காகச் சென்றிருந்தோம். இருநூறு பேர் அளவுக்குக் கூடியிருந்தனர். ஷம்சுதீன் என்னைவிட மூத்தவர்! என்னைவிட அரசியல் அனுபவம் கொண்டவருங்கூட! திருவாரூர் நாலுகால் மண்டபத்திற்கருகில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில்தான் அந்தக் கூட்டம்! ஷம்சுதீன் பேசத் தொடங்கினார். கூட்டத்தில் எதிரே ஒரு வயதானவர் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார். பேச்சுக்களை சுவைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

     ஆனால், அந்தப் பெரியவருக்கு இருமல் தொல்லை! அடிக்கடி இருமிக் கொண்டிருந்தார். .அவர் இருமுவதால் தனது பேச்சுக்கு இடையூறு ஏற்படுவதை ஷம்சுதீன் அவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. இரண்டு மூன்றுமுறை அந்தப்பெரியவரைப் பார்த்து 'சூ! சும்மா கிட!' என்று அவர் சீறினார். பாவம்,அந்தப் பெரியவரால் இருமலை நிறுத்தவும் முடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியேறவும் இல்லை.

    மீண்டும் ஒருமுறை அந்தக் கிழவர் இருமியதுதான் தாமதம்; ஷம்சுதீன் திடீரென மேஜை மீது இருந்த சூடான தேநீரை எடுத்து அந்தக் கிழவரின் தலையில் கொட்டிவிட்டார்.

     அந்த நிகழ்ச்சி, கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே-நானும் மற்ற நண்பர்களும் அனைவரையும் அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

   பேச்சாளர்கள், எத்தகைய இடையூறுகளுக்கிடையிலேயும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்கள் எடுத்துச் சொல்லவேண்டிய கருத்துக்களிலேயே நாட்டம் செலுத்திட வேண்டும். அதே சமயத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறவர்க்ளும், மேடையிலும், மேடையைச் சுற்றிலும் தொண்டர்கள் வாயிலாக ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான முன்னேற்பாடுகளைக் கவனித்திட வேடண்டும்.

    மக்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிற பேச்சாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பேச்சாளர்கள் தங்கள் பேச்சை நீட்டிக் கொண்டே போனால் மக்கள் பொறுமையிழந்து விடுவார்.

     மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்கள், பதவிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு தென்னாற்காடு மாவட்டத்தில் தேவபாண்டலம் என்னும் ஊரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார். எங்களுடன் இன்னொரு பேச்சாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் பேச்சாளர் இயக்கத்தில் நீண்ட காலத் தொடர்புடையவர். நாங்கள் மரியாதை செலுத்தக்கூடிய இடத்திலே இருந்தவர். ஆனால் பேச்சின் மூலம் மக்களை ஈர்க்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் அல்லர்!.

    பெருங்கூட்டம் வெள்ளமெனத் திரண்டிருந்தது. ஊரே விழாக்காலம் கொண்டிருந்தது, திரு. கோவிந்தசாமி அவர்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் பேசி முடித்தார்.அடுத்து, நான் முதலில் குறிப்பிட்டவர் பேச எழுந்தார். பேசினார்-பேசினார்-பேசிக்கொண்டே இருந்தார்.

   கூட்டத்தினர் பொறுமையிழந்துவிட்டனர். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு அளிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது.போலும்!

     கூட்டத்தின் நடுப்பகுதியில் இருந்து முண்டாசு கட்டிய ஒருவர் எழுந்தார். கைகளைக் கூப்பியவாறு மேடையை நோக்கி உரத்த கூரலில் பேசினார்.

    ''அய்யா! பெரியவங்களே! நாங்க பதினெட்டு மைலிலேயிருந்து அவரு பேச்சைக் கேக்கறதுக்காக வந்திருக்கிறோம். கொஞ்சம் நீங்க உக்காருரீங்களா?'

     அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கூட்டத்தினர் அந்த முண்டாசுக்காரரின் கோரிக்கையை வரவேற்றுக் கையொலி செய்தனர். பேசிக் கொண்டிருந்தவருக்கு கோபம் வந்துவிட்டது.

    'அப்படியாடா அப்பா! இதோ உட்காருகிறேன்!'என்று சட்டென நாற்காலியில் அமர்ந்து விட்டார். அத்துடன் விடவில்லை. அவர் என்னை நோக்கி, 'கருணாநிதி! நீ இந்தக் கூட்டத்திலே பேசக்கூடாது! ஒரே வரியிலே முடிச்சிடு. அப்பத்தான் இந்தப் பசங்களுக்கு புத்திவரும்' என்று வற்புறுத்திச் சொன்னார்.

   நான் பேச எழுந்தேன். என்னுடைய தொடக்க உரையில் சுமார் பதினைந்து நிமிடம் அவருடைய பெருமைகளைப் பற்றியே பேசினேன். யாருடைய பெருமைகளை? அந்த முண்டாசுக்காரரால் உட்கார வைக்கப்பட்ட பேச்சாளரின் பெருமைகளை! இவரைப் போன்றவர்கள் பேச்சாளரின் ஆற்றிய பணிகளால்தான் நாங்கள் எல்லாம் இன்றைக்கு அறிமுகமாகியிருக்கிறோம். என்று உருக்கமாக உரை நிகழ்த்தினேன். அவர் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் ஒளிவிட்டதைக் கண்ட பிறகே, அவரைவிட்டுவிட்டு அரசியல் கருத்துக்களைப் பேச ஆரம்பித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் பேசிமுடித்தேன்.

     ஒருவரிக்கு மேல் பேசக்கூடாது என்று ஆணையிட்டவரே. 'இன்று உன் பேச்சு பிரமாதம்' என்று என்னைப் பாராட்டினார்.

  எனவே, தம்முடன் ஒரே மேடையில் பேச வருகின்ற தம்முடைய சகாக்களின் மனமும் நோகாமல்-அவர்களையும் அரவணைத்துக் கொண்டு-சொற்பொழிவை அமைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஓரளவு வளர்ந்துவிட்ட பேச்சாளர்களுக்குக் கட்டாயம் இருந்திட வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


.....இன்னும் வரும்.....18

Wednesday, 27 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 16







  பேசும் கலை வளர்ப்போம் -16

எத்தனை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டினாலும், எப்படியெல்லாம் பல பேச்சாளர்கள் புகழ்க் கொடி நாட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தாலும்- பேச்சாளர்களாக வளருகிறவர்கள். அவரவர்களுக்கென ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டே வளருகின்றனர்.

     அவரக்ளுடைய மேடைப் பேச்சின் வெற்றிக்கு ஓரளவு பயன்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது!

     இந்தச் சிறிய தொடர் கட்டுரையை எழுதத் தொடங்கியவுடனேயே, ஆர்வமிகுதியால் அருமை நண்பர் கணியூர் பரூக் என்பார் பேச்சுக்கலை குறித்துப் பல்வேறு வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதி எனக்கு அனுப்பி வைத்தார்.

     அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    ' நீங்கள் கூட்டத்தில் எதைப் பேசவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே எழுதி ஆஸ்திரேலியாவுக்கு உங்கள் சொந்தச் செலவில் தந்தி கொடுப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள். சொல் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பதாக இருந்தால், அவசியமில்லாத சொற்களை நீக்கி விடுவீர்கள் இல்லையா? மீதியுள்ள அவசியமான சொற்களே நீங்கள் பேசத் தகுதி பெற்ற சொற்கள்.'--------------''ஸ்மீட்''


     'ஆழ்ந்த கருத்து வளம் இல்லாதவர்களே பேச்சை வீணாக வளர்த்திக்கொண்டே போவர்'-----------''மாண்டஸ்கியூ''


     'பேச்சுக் கலையில் நோக்கம் உண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல-மக்களை இணங்க வைப்பதும் முக்கிய நோக்கமாகும்'-----------''மெக்காலே''


     'மேடைப் பேச்சில் எதிரிகளை இழித்துக் கேவலமாகவும் தரக் குறைவகாவும் புகார் கூறிப் பேசாதே! சிறிய விஷயத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்காதே.'------------''டிஸ்ரேலி''


     'கோழிமுட்டையின் மீது சதா அடைகாத்துக் கொண்டிருப்பதுபோல, நீ பேச எடுத்துக் கொண்ட விஷயத்தைப்பற்றி சதா சிந்தித்துக்கொண்டேயிருந்தால், கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவதுபோல, புதிய கருத்துக்கள் துள்ளிவரும்.''----------------''பிரெளன்''


     மெருகோடும் கச்சிதமாகவும் பேசவேண்டுமென்று விரும்புகிறவர்கள், சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்கவேண்டும். நூல்களையும் உயர்ந்தோர் கருத்துக்களையும் நிறையப் படிக்க் வேண்டும். முடியாவிட்டால் மேடையில் பேசாதிருப்பது நலம்.'-----------''செஸ்டர்பீல்டு''


     'அருமையாகப் பேசும் சொலல் வல்லோன் உண்மையைப் பேசாவிட்டால் அவனைக் காட்டிலும் மோசமான மனிதன் இருக்க முடியாது'.-------''கார்லைல்''


     'புலியின் சீற்றத்தையும் புஜபலமிக்க வீரனின் சினத்தையும் தணிக்கக்கூடிய சிறப்பியல்பும் பேச்சுக் கலைக்கு இருக்கவேண்டும்.'------''ஷெல்லி''


     'உணர்ச்சி பாவமே சொற்சுவைக்கு ஆதாரம், எதுவும் தெரியாதவனின் கண்களைக் காட்டிலும், காதுகள் மிகவும் கூர்மையானவை!'------''ஷேக்ஸ்பியர்''


     நாவண்மையின் சிறப்பு குறித்து நண்பர் ஏ. சுவாமிநாதன் என்பவர் சில பொன்மொழிகளைத் தொகுத்து அனுப்பியுள்ளார். அவை வருமாறு;


     'நாவானது மூன்று அங்குல நீளமுடையது, எனினும் ஆறு அடி உயர மனிதனையும் கொல்லக் கூடியது'.-------ஜப்பானியப் பழமொழி


     'பெண்ணின் வாள், அவளுடைய நாவே, அதைத் துருப்பிடிக்கும்படி அவள் விடுவதில்லை.'----------சீனப் பழமொழி


     'உன் நாவைக் காப்பாற்று! உன் நண்பணைக் காப்பாற்றுவாய்'----இந்தியப் பொன்மொழி


     'மனிதன் தன் நாவினால் பிடிபடுகிறான்.'-----ருசியப் பொன்மொழி


     'நாவில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்குகிறது.'------------அல்பேனியப் பொன்மொழி


     அறிஞர் பெருமக்களின் கருத்துகள், பல்வேறு நாட்டுப் பொன்மொழிகள்- நாவன்மையின் பெருமையையும் அதனை எவ்வளவு முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்பதையும் வலியுறுத்தி கூறியிருக்கின்றன.


''''சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
கொல்லுஞ் செயல் இன்மை அறிந்து''''


வேறொரு சொல்லால் நமது சொல்லை வெல்ல முடியாது என்பதை அறிந்து- அப்படி ஆய்ந்து அறிந்து தேர்ந்த சொல்லைக் கொண்டுதான் நமது கருத்தை விரித்துரைக்க வேண்டுமென்று வள்ளுவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.


அதனால்தான் ''''நாவலம் என்னும் நலனுடைமை'''' என்று போற்றுகிறார்; நாவன்மையெனப்படும் நலம் ஒருவகைச் சொல்லாகும் என்று புகழ்கிறார்.


- கலைஞர் மு. கருணாநிதி


.......இன்னும் வரும்....17