Pages

Showing posts with label பேச்சு. Show all posts
Showing posts with label பேச்சு. Show all posts

Saturday, 30 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -19


  





பேசும் கலை வளர்ப்போம் -19

    இப்போது வயது நாற்பத்தி ஆறு.தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் நன்கு முதிர்ச்சி பெற்ற கருத்துக்களை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்த, ஆனால் யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கறுப்புச்சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையிலே சொற்பொழிவக்கான குறிப்புகள். அருகேயுள்ள மேஜையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். 'இங்கேதான் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது, மிக மிக முக்கியமானது'' என்ற சொற்றொடர் அடிக்கடி பேச்சிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார் யார் இவர்?

     வேறு யாருமல்ல; தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தவர் இன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்-விடுதலை நாளிதழின் ஆசிரியர் - வீரமணி அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்.

     பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணிபுரிந்து கொண்டு-பள்ளியிலும் பயின்று-கல்லூரியிலும் பட்டம்பெற்று- திராவிடர் கழகத்தின் ஓய்வறியாத் தொண்டராகவும் விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப பருவத்திலே மேடையிலே பேசுகிற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்.

    பெரியாரின் தலைமையை ஏற்றுக்கொண்டோம் என்பது மட்டுமல்லாமல்-அவருடனேயே இருந்து-அவருடனேயே சுற்றுப் பயண நிகழ்ச்சிகளுக்குச் சென்று - அவரது குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு ஏடுகளின் அலுவலகங்களில் பணிபுரிந்து-அவரது கொள்கைகளை எழுத்து வாயிலாகவும், பேச்சின் மூலமும் மக்களிடம் பரப்பிய பல தலைவர்கள் உண்டு.

     அவர்கள், கால வேறுபாட்டால் பல இயக்கங்களுக்குச் சென்றிருகக்கூடும். ஆனாலும் அவர்கள் தலைவர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளராக மதிக்கப்பட்டதற்கும்-மதிக்கப்படுவதற்கும்- பெரியாரிடம் பெற்ற பயிற்சியே காரணம் என்பதை அவர்களும் மறந்ததில்லை! மறைத்ததுமில்லை!

     அதைப்போலவே பெரியாரைத் தலைவராக கொண்ட பேரறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அவருடன் உரையாடி - அவருடன் நீண்ட சுற்றுப் பயணங்களில் கலந்துகொண்டு-அவரைப் பிரியாமல் இருந்தே பயிற்சி பெற்றுப் பல்வேறு ஆற்றல் பெற்றவர்களும் உண்டு!

    பெரியார் - அண்ணா-இருவரிடமும் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பு பெற்று அவர்கள் வகுத்த இலட்சியங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களும் உண்டு! அவர்கள், தாங்கள் பெற்ற அந்த பெரும் பேற்றுக்காக பெருமைப்படக்கூடியவர்கள்! அந்தக் குழுவினரில் எனக்கும் ஒரு இடம் இருந்தது என்று என்னைப்போலி எண்ணி மகிழக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

   மிக இளம் வயதிலேயே சிறுவர் சிறுமியர் மேடைகளில் பேசுவது இன்றைக்கு எல்லாக் கட்சிக்கூட்டங்களிலும்; ஏன், சமயநெறிகூட்டங்களில் கூடக்காணுகிற நிகழ்ச்சியாகிவிட்டது.

     ஆனால், பல சிறுவர், சிறுமியர்-ஏதோ தாங்கள் பெற்றோர் ஆசைக்காக-உற்றார் உறவினர் விருப்பத்திற்காக-அல்லது அந்தச்சிறுவர்களே அதை ஒரு 'மேனியா'வாக எடுத்துக்கொண்டு மேடைகளில் யாரையோ தாக்கியோ,புகழ்ந்தோ பேசிவிட்டு கைத்தட்டலைப்பெற்றுவிட எண்ணுகிறார்களேதவிர, தங்களுஉடைய கல்விப் பயிற்சியை வளர்த்துக்கொள்ளவும், தெளிவாகத்தெரிந்து கொள்ளவும் முனைந்திட வேண்டுமென்று அவாக்கொண்டிருப்பவர்களாகத் தெரியவில்லை.

     அத்தகைய சிறுவர்கள், அல்லது சிறுமியர்-நண்பர் வீரமணி எப்படித் தனது இளம் வயதில் இடைவிடாது உழைத்து-கல்வியில் அக்கறை காட்டி - தலைவரிடம் விசுவாசமாக இருந்து-அதே போலக் கொள்கையிலும் உறுதியாக விளங்கிடுகிறார் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்திடவேண்டும்.

     பெரியாரின் அண்ணன் மகனார் தோழர் ஈ.வெ.கி. சம்பத், இளம்வயதிலேயே அண்ணாவுடன் நெருங்கிப் பழகி-'சொல்லின் செல்வர்'என்ற சிறப்புபெறுகிற அளவுக்குப் பேச்சாளராக விளங்கினார். கொள்கையில் நிலைத்த நெஞ்சமில்லாத காரணத்தால் அவரது அரிய ஆற்றலைத் தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இயற்கை, அவரை முழு வாழ்வு வாழ விடாமல் நம்மிடமிருந்து பறித்துகொண்டுவிட்டது. திராவிடர் இயக்கம், தமிழ் தேசியக்கட்சி, காங்கிரஸ் என்று கட்சி மாற்றங்கள் அவருக்கு ஏற்பட்ட போதிலும் வீறுகொண்ட விரிவுரையாளராகத் திகழ்ந்தார்.

   அவரை எதிர்த்து தி.மு. கழகச் சார்பில் 1962-ல் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாஞ்சிலார் என்னும் நாஞ்சில் கி. மனோகரன் அவர்கள், அவருக்கு ஈடுகொடுக்கும் சொல்வல்லாராகத் திகழ்ந்தவர்- இப்போது மினவெட்டுப் போன்ற மிடுக்கான பேச்சுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிற அவர், தனது இளம்பிராயத்திலேயே மேடைகளில் முழங்கிடத் தொடங்கியவர்தான்!

     மிக இளம் பருவம் எனக் கூற முடியாவிட்டாலும் கட்டிளம் காளையாக மேடையேறிக் கனல் தெறிக்கும் சொற்களால் மக்களைக் கவர்ந்து கடினமான விஷயங்களையும் பெர்யார் பாணியில் மிக விரிவாக எடுத்துரைத்து 'வாலிப் பெரியார்' என்றே அழைக்கப்பட்ட வசீகரமிகு பேச்சழகர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள், மறைந்துவிட்டார் எனினும் அவரது எழுத்து, பேச்சு ஆகிய தொண்டுகளை மறந்திட இயலுமோ!

    பெரியார், அண்ணா இருவரின் அணுக்கத் தொண்டராகவும், எனக்கு உறுதுணையாகவும், இருந்த என.வி. நடராசனார் கொள்கைப்பிடிப்புடன் அழுத்தம் திருத்தமாக அனல்பொழியுமாறு ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசி, மக்களின் அன்பைப் பெற்றவரன்றோ!

    'பேசும் கலை வளர்ப்போம்' என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக, எளிய நடையில் பல இனிய நிகழ்ச்சிகளையும்-இதயத்தை தொடும் நிகழ்ச்சிகளையும் - பல்வேறு துறைகளிலும் இயக்கத்திலும் உள்ள திறமை வாய்ந்த பேச்சாளர்களைப் பற்றியும் எப்படிப்பேச வேண்டும், பேசக்கூடாது என்பன போன்ற கருத்துக்களையும்- என்னால் இயன்ற அளவு எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

     பேசும் கலையில் சிறந்து விளங்கிட விழைந்திடுவோர்க்கு இந்தக் கட்டுரைத் தொடரும் ஓரளவு பயன்படுமேயானால், நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.

- கலைஞர் மு. கருணாநிதி

----முற்றும்----

பேசும் கலை வளர்ப்போம் தொடர் இத்துடன் முற்றுபெற்றது. பேசும் கலையில் பயிற்சி பெறுவதற்கு இத்தொடர் பயன்படுமேயானால் அதுவே இப்பதிவின் வெற்றியாகும். மீண்டும் வேறொரு பேச்சாளரின் தொடரோடு சந்திக்கிறேன். ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது;
நன்றி
வணக்கம்.
நம்பி.

Friday, 29 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 18










     பேசும் கலை வளர்ப்போம் -18

(Mannerism)  மேனரிசம் எனப்படும் தனிப் பாங்கு அல்லது தனிப்பாணி, பேச்சாளர்களையும் ஆக்ரமித்துக் கொள்வதுண்டு. பேசும்போது அவர்களையறியாமலேயே தனிப்பாங்கான அங்கச் செய்கைகள்-தவிர்க்கவொண்ணாத பழக்கவழக்கங்கள் தொடங்கி; பின்னர் அவைகளேஅந்தப் பேச்சாளர்களுக்குரிய தனித்த தன்மைகளாக ஆகிவிடுகின்றன.

     சிலர் மேடையில் நின்று ஆடாமல் அசையாமல் அருவிபோல் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

    அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, வலப்புறமும் இடப்புறமுமாக உடலைத் திருப்புவார். கைகள் லேசாக உயரும், தாழும்! பொடிபோடும் வழக்கம் அவருக்கு உண்டு. சட்டையின் பக்கவாட்டுப் பையில் ஒருகை நுழைந்திருக்கும். அவரது பேச்சின் சுவையில் திளைத்த மக்கள் கையொலி செய்து ஆரவாரம் புரியும்போது, சட்டைப்பையிலுள்ள பொடி டப்பாவிலிருக்கும் பொடியை யாருக்கும் தெரியாமல் மூக்கில் திணித்துக் கொண்டு மேல்துண்டினால் ஏதோ வியர்வை துடைப்பது போலத் துடைத்துக் கொண்டே தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பார்.

     தந்தை பெரியார் அவர்கள், வயது முதிர்ந்த காலத்தில் உட்கார்ந்து கொண்டேதான் பேசுவார்! அவர் நின்று கொண்டு பேசிய காலத்தில் அவருடன் கூட்டங்களுக்குச் சென்றவர்களில் நானும் ஒருவன். சந்தன வண்ணம் அல்லது காப்பிகலர், சில நேரங்களில் வெண்மையும் மஞ்சளும் கலந்தது-இப்படிப்பட்ட சால்வையால் உடலைப் போர்த்தியிருப்பார். பேசும்போது அந்தச் சால்வையை இழுத்து இழுத்துப் போர்த்திக் கொள்வார்.

     நெடிய உருவமும் நிமிர்ந்த நோக்கும் கொண்ட தளபதி அழகிரிசாமி, போர்க்களத்தில் எதிரியின் மீது ஓங்கப்படும் வாளினைப் போலத் தன் கையை வீசி வீசிப் பேசுவதும், அதற்கேற்ப சொற்கள் விழுவதும் மக்களை உணர்ச்சியில் மிதக்க வைக்கும்.

     சற்றுப் பெருத்த மேனியும், பெரிய மீசையும், உரத்த குரலும் கொண்ட ஜீவா அவர்கள் பேசும்போது மேடை அதிரும். அங்க நெளிவுகளில் மிகுந்த வேகம் இருக்கும். உடலை அதிகமாக ஆட்டிக் கொண்டு பேசும்போதுதான் அவருக்கு வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்து விழும்.

    அடிக்கடி கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொள்வதும், கொத்து மீசையை ஒதுக்கிவிட்டுக் கொள்வதும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் பேச்சு சூடு பிடித்துவிட்டது என்பதைக் காட்டும் அடையாளங்களாகும்.

    அருள்பாலிப்பதைப் போல கையை மக்கள் பக்கம் அடிக்கடி காட்டிகொண்டே, வாதத்தை வரிசைப் படுத்தி அடுக்கிக் காட்டும் திறமையை ராஜாஜி பெற்றிருந்தார்.

     குதிகாலை உயர்த்தி, தோள்களைக் குலுக்கிக் கொண்டு கடல்மடைத் திறந்தாற்போல் பேசிக்கொண்டிருக்கும்போதே சில சொற்களைத் திடீரெனச் சன்னக்குரலில் இழுத்துப் பேசி மக்களின் வரவேற்பைப் பெறுவது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் தனிப் பாணியாகும்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்றவுடன் தலையை நிமிர்த்தியவாறு-ஒருமுறைக் கூடத் தாழ்த்தாமல்- வானநோக்கிக் கைகளை உயர்த்தியவாறு சொல்மாரிபொழிவது பேராசிரியர் அன்பழகன் அவர்களிடம் காணக்கூடிய தனிப்பாங்கு எனலாம்.

     இப்படி ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏற்பட்டுவிட்ட செயற்கைப் பாணிகளை அவர்களே முயன்றாலும் விடமுடியாத நிலை!

    நாம் பேசும்போது ஏதாவது ஒரு அங்கச் செய்கை அல்லது அங்கசேட்டை இருக்கவேண்டுமென்று அப்படியொரு பயிற்சியை எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. சிலருக்கு அங்கச் சேட்டைகள், அவர்களது பேச்சையே மக்கள் கவனிக்காத அளவுக்கு இடையூறாக அமைந்து விடுவதும் உண்டு.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று தலையைச் சொரிந்துகொண்டே பேசுவார்கள். கழுத்திலோ, இடுப்பிலோ விரல்களை வைத்து அழுக்கைத் திரட்டிக் கொண்டே பேசுவார்கள். திரட்டிய அழுக்கை, உருண்டையாக உருட்டி மூக்கிலை முகர்ந்து பிறகு கீழே போடுவார்கள். இத்தனையும் பேசிக் கொண்டிருக்கும்போதே நடக்கும்.

     இதுபோன்ற பாணிகளையோ, அங்கச்செய்கைகளையோ பேச்சாளர்கள், மறந்தும் கற்றுக்கொண்டுவிடக்கூடாது.

    கூடுமானவரையில் மேடையில் அதிக ஆட்டமின்றி அங்கச் சேட்டைகளை மட்டுப்படுத்திக்கொண்டு பேசுவதே நலம்.

    வார்த்தைகளைக் குதப்புவது-- கடித்துத் துப்புவது--  இவை, கேட்போர் செவிகளில் நாராசமாக விழும்.

    'போராட்டக்காரர்களைப் போலீசார் அடித்து விரட்டினார்கள்' என்பதைச் சில பேச்சாளர்கள் அழுத்தம் திருத்தமாகவும், ஆத்திர உணர்வோடும் சொல்வதாக எண்ணிக் கொண்டு-''போராட்டக்காரர்களைப் போலீசார் அட்டித்து விரட்டினார்கள்'' என்று வார்த்தைகளைக் கடித்து உதறுவார்கள். அந்தப் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருக்காது.

    வேற்றுமொழிச் சொற்களையும் வேதபுராணங்களையும் பயன்படுத்தி உபன்யாசங்கள் செய்து வந்த மடாதிபதிகளின் மத்தியிலே நல்ல தமிழிலும், நயம்பட இலக்கியங்களிலும் மேற்கோள் காட்டி- காலத்திற்கும் சமயத்திற்கும் ஏற்ப மேடைப் பேச்சில் திறமை காட்டியவர்களில் குன்றக்குடி அடிகளார் ஒருவர்.

    தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கெனவும் இலக்கிய மறுமலர்ச்சிக்கெனவும் தமிழர் உரிமைக்கெனவும் சமய நெறிகளைப் பரப்பிடவும், மேடை முழக்கம் செய்தபோது சில முக்கியமான சொற்களை மூன்றுமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

   தமிழர் நெறி பரப்பிடும் தொண்டிலும் இந்தி ஆதிக்க எதிர்ப்பிலும் ஈடுபட்ட மறைமலை அடிகளார், தனது சொற்பொழிவில் தனித்தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவார்.

     அடலேறுத் தோற்றங்க்கொண்டவரும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் அயராது ஈடுபட்டவருமான நாவலர் சோமசுந்தர பாரதியாரின் சொற்பொழிவில் அடிக்கடி ''அட சனியனே'' என்று கடிந்துகொள்ளும் வார்த்தை வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

    எத்தனையோ-எண்ணற்ற கூட்டங்களில் சொற்பெருக்காற்றியிருந்தும்கூட இன்னமும் கையில் சிறு குறிப்புகளை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொண்டு அவற்றின் துணையோடு -மக்களைக் கவருகின்ற பேச்சாளராக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விளங்குகிறார்.

   பார்வைக்குப் பரமசாது போலத் தோற்றமளித்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், சீற்றங்கொண்டு பேசத் தொடங்கினால் சிம்ம கர்ச்சனையாகத்தானிருக்கும்.

     சிறுசிறு குட்டிக்கதைகளைச் சொல்லியே மக்களைச் சிரிக்க வைப்பார் சின்ன அண்ணாமலை.

     நல்ல எழுத்தாளராக இருந்து மறைந்த தமிழ்வாணனும் கூட்டத்தினரைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை படைத்தவர்.

     அடிக்கடி கூட்டங்களில் பேசுகிற பழக்கமில்லாவிட்டாலும் எழுத்தாளர் ஜெயகாந்தனைப் போன்ற சிலர், தங்கள் பேச்சில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் குழுமியிருப்போரிடையே ஒரு கலகலப்பை ஏற்படுத்திவிடுவர். தேர்ந்தெடுத்த, தெளிந்த சொற்களைக் கொண்டு கருத்துக்களை வழ்ங்கிய காயிதே மில்லத் அவர்களும், அவருடன் நெருங்கியிருந்து பயின்று தேனினுமினிய உரையாற்றும் அபதுல் சமது அவர்களும் சொற்பொழிவு மேடையில் புகழ்மிக்க இடத்தைப் பெற்றவர்கள்.

     இப்படிப் பல துறையைச் சேர்ந்தவர்களும் எப்படிப் பேசினார்கள்-எப்படிப் பேசுகிறார்கள்-என்பதைப் பேச்சாளர்களாக ஒளிவிட வேண்டுமென்று விரும்புகிறவர்கள், உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

- கலைஞர் மு. கருணாநிதி

......இன்னும் வரும்.....19

Thursday, 28 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 17








  பேசும் கலை வளர்ப்போம் -17

   மேடையில் நின்று பேசும்போது அந்தக்கூட்டத்தில் குழுமியிருப்போரில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதத்திற்குமேல் தன்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொற்பொழிவாளர் மறந்துவிடக்கூடாது.

    பேசுவதற்கு அழைக்கப்பட்டவுடன் ஒலிபெருக்கியின் முன்னால் வந்து நின்றுகொண்டு வேட்டியைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் சிலர்.

    வாயில் அதுவரையில் குழப்பிக் கொண்டிருந்த வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்புவார்கள் சிலர்.

   இருமிக் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்காமலே நிற்பார்கள் சிலர். ஒலிப்பெருக்கி அமைப்பாளரிடம்  அந்தக் கருவியைச் சரியாக வைக்குமாறு கூறிக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவார்கள் சிலர் அந்தச் சொற்கள் ஒலிபெருக்கி வழியாகக் கூட்டத்தினர் காதுகளிலே விழுந்து-கூட்டத்தினர் பேச்சாளர் மீது ஒருவிதமான அதிருப்தியை உருவாக்கிக் கொள்ள வழிவகுப்பதும் உண்டு!

    சில பேச்சாளர்கள், மாலைக்காகக் காத்துக் கொண்டிருந்து, மாலை கழுத்தில் போடப்படுகிற நேரத்திலே புகைப்படக்காரர் படம் எடுக்கிறாரா என்பதிலே ஆர்வங்காட்டி, எடுத்த எடுப்பிலேயே ம்க்களின் கேலிக்குரியவராக ஆகிவிடுவார்கள்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று கொண்டிருக்கும் பேச்சாளர் தனது பேச்சை முடிக்கும் வரையில் அந்த மேடைக்குரிய மரியாதையையும்-பேச்சுக் கலைக்குரிய மதிப்பையும் பாதுகாக்கவும், போற்றிடவும் கடமைப்பட்டவராவார்.

    பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் யாராவது ஓரிரு சிறுவர்கள், சிறுமியர்கள் எழுந்து செல்வதற்கு முயன்றிடக்கூடும். பேசுகிறவர், அதைக் கவனிக்காதது போலப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ''ஏய்! யாரது உட்காரு! இந்தாப்பா! அந்த சனியன்களை விரட்டு!'' இப்படி ஏதாவது ஆத்திரத்தில் கூறிவிட்டால்-அந்தப் பேச்சாளரின் தரம் மிகவும் தாழ்ந்துவிடும்.

    நான் மேடையேறி பேசிய தொடக்கக் காலத்தில்  ஆதிதிராவிடர் காலனிகளில் நிறையக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.ஒருமுறை இரவு பத்து மணிக்கு ஒரு காலனியில் நானும் ஷம்சுதீன் என்ற நண்பர் ஒருவரும் பேசுவதற்காகச் சென்றிருந்தோம். இருநூறு பேர் அளவுக்குக் கூடியிருந்தனர். ஷம்சுதீன் என்னைவிட மூத்தவர்! என்னைவிட அரசியல் அனுபவம் கொண்டவருங்கூட! திருவாரூர் நாலுகால் மண்டபத்திற்கருகில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில்தான் அந்தக் கூட்டம்! ஷம்சுதீன் பேசத் தொடங்கினார். கூட்டத்தில் எதிரே ஒரு வயதானவர் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார். பேச்சுக்களை சுவைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

     ஆனால், அந்தப் பெரியவருக்கு இருமல் தொல்லை! அடிக்கடி இருமிக் கொண்டிருந்தார். .அவர் இருமுவதால் தனது பேச்சுக்கு இடையூறு ஏற்படுவதை ஷம்சுதீன் அவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. இரண்டு மூன்றுமுறை அந்தப்பெரியவரைப் பார்த்து 'சூ! சும்மா கிட!' என்று அவர் சீறினார். பாவம்,அந்தப் பெரியவரால் இருமலை நிறுத்தவும் முடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியேறவும் இல்லை.

    மீண்டும் ஒருமுறை அந்தக் கிழவர் இருமியதுதான் தாமதம்; ஷம்சுதீன் திடீரென மேஜை மீது இருந்த சூடான தேநீரை எடுத்து அந்தக் கிழவரின் தலையில் கொட்டிவிட்டார்.

     அந்த நிகழ்ச்சி, கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே-நானும் மற்ற நண்பர்களும் அனைவரையும் அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

   பேச்சாளர்கள், எத்தகைய இடையூறுகளுக்கிடையிலேயும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்கள் எடுத்துச் சொல்லவேண்டிய கருத்துக்களிலேயே நாட்டம் செலுத்திட வேண்டும். அதே சமயத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறவர்க்ளும், மேடையிலும், மேடையைச் சுற்றிலும் தொண்டர்கள் வாயிலாக ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான முன்னேற்பாடுகளைக் கவனித்திட வேடண்டும்.

    மக்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிற பேச்சாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பேச்சாளர்கள் தங்கள் பேச்சை நீட்டிக் கொண்டே போனால் மக்கள் பொறுமையிழந்து விடுவார்.

     மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்கள், பதவிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு தென்னாற்காடு மாவட்டத்தில் தேவபாண்டலம் என்னும் ஊரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார். எங்களுடன் இன்னொரு பேச்சாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் பேச்சாளர் இயக்கத்தில் நீண்ட காலத் தொடர்புடையவர். நாங்கள் மரியாதை செலுத்தக்கூடிய இடத்திலே இருந்தவர். ஆனால் பேச்சின் மூலம் மக்களை ஈர்க்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் அல்லர்!.

    பெருங்கூட்டம் வெள்ளமெனத் திரண்டிருந்தது. ஊரே விழாக்காலம் கொண்டிருந்தது, திரு. கோவிந்தசாமி அவர்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் பேசி முடித்தார்.அடுத்து, நான் முதலில் குறிப்பிட்டவர் பேச எழுந்தார். பேசினார்-பேசினார்-பேசிக்கொண்டே இருந்தார்.

   கூட்டத்தினர் பொறுமையிழந்துவிட்டனர். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு அளிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது.போலும்!

     கூட்டத்தின் நடுப்பகுதியில் இருந்து முண்டாசு கட்டிய ஒருவர் எழுந்தார். கைகளைக் கூப்பியவாறு மேடையை நோக்கி உரத்த கூரலில் பேசினார்.

    ''அய்யா! பெரியவங்களே! நாங்க பதினெட்டு மைலிலேயிருந்து அவரு பேச்சைக் கேக்கறதுக்காக வந்திருக்கிறோம். கொஞ்சம் நீங்க உக்காருரீங்களா?'

     அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கூட்டத்தினர் அந்த முண்டாசுக்காரரின் கோரிக்கையை வரவேற்றுக் கையொலி செய்தனர். பேசிக் கொண்டிருந்தவருக்கு கோபம் வந்துவிட்டது.

    'அப்படியாடா அப்பா! இதோ உட்காருகிறேன்!'என்று சட்டென நாற்காலியில் அமர்ந்து விட்டார். அத்துடன் விடவில்லை. அவர் என்னை நோக்கி, 'கருணாநிதி! நீ இந்தக் கூட்டத்திலே பேசக்கூடாது! ஒரே வரியிலே முடிச்சிடு. அப்பத்தான் இந்தப் பசங்களுக்கு புத்திவரும்' என்று வற்புறுத்திச் சொன்னார்.

   நான் பேச எழுந்தேன். என்னுடைய தொடக்க உரையில் சுமார் பதினைந்து நிமிடம் அவருடைய பெருமைகளைப் பற்றியே பேசினேன். யாருடைய பெருமைகளை? அந்த முண்டாசுக்காரரால் உட்கார வைக்கப்பட்ட பேச்சாளரின் பெருமைகளை! இவரைப் போன்றவர்கள் பேச்சாளரின் ஆற்றிய பணிகளால்தான் நாங்கள் எல்லாம் இன்றைக்கு அறிமுகமாகியிருக்கிறோம். என்று உருக்கமாக உரை நிகழ்த்தினேன். அவர் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் ஒளிவிட்டதைக் கண்ட பிறகே, அவரைவிட்டுவிட்டு அரசியல் கருத்துக்களைப் பேச ஆரம்பித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் பேசிமுடித்தேன்.

     ஒருவரிக்கு மேல் பேசக்கூடாது என்று ஆணையிட்டவரே. 'இன்று உன் பேச்சு பிரமாதம்' என்று என்னைப் பாராட்டினார்.

  எனவே, தம்முடன் ஒரே மேடையில் பேச வருகின்ற தம்முடைய சகாக்களின் மனமும் நோகாமல்-அவர்களையும் அரவணைத்துக் கொண்டு-சொற்பொழிவை அமைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஓரளவு வளர்ந்துவிட்ட பேச்சாளர்களுக்குக் கட்டாயம் இருந்திட வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


.....இன்னும் வரும்.....18

Wednesday, 27 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 16







  பேசும் கலை வளர்ப்போம் -16

எத்தனை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டினாலும், எப்படியெல்லாம் பல பேச்சாளர்கள் புகழ்க் கொடி நாட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தாலும்- பேச்சாளர்களாக வளருகிறவர்கள். அவரவர்களுக்கென ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டே வளருகின்றனர்.

     அவரக்ளுடைய மேடைப் பேச்சின் வெற்றிக்கு ஓரளவு பயன்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது!

     இந்தச் சிறிய தொடர் கட்டுரையை எழுதத் தொடங்கியவுடனேயே, ஆர்வமிகுதியால் அருமை நண்பர் கணியூர் பரூக் என்பார் பேச்சுக்கலை குறித்துப் பல்வேறு வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதி எனக்கு அனுப்பி வைத்தார்.

     அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    ' நீங்கள் கூட்டத்தில் எதைப் பேசவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே எழுதி ஆஸ்திரேலியாவுக்கு உங்கள் சொந்தச் செலவில் தந்தி கொடுப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள். சொல் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பதாக இருந்தால், அவசியமில்லாத சொற்களை நீக்கி விடுவீர்கள் இல்லையா? மீதியுள்ள அவசியமான சொற்களே நீங்கள் பேசத் தகுதி பெற்ற சொற்கள்.'--------------''ஸ்மீட்''


     'ஆழ்ந்த கருத்து வளம் இல்லாதவர்களே பேச்சை வீணாக வளர்த்திக்கொண்டே போவர்'-----------''மாண்டஸ்கியூ''


     'பேச்சுக் கலையில் நோக்கம் உண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல-மக்களை இணங்க வைப்பதும் முக்கிய நோக்கமாகும்'-----------''மெக்காலே''


     'மேடைப் பேச்சில் எதிரிகளை இழித்துக் கேவலமாகவும் தரக் குறைவகாவும் புகார் கூறிப் பேசாதே! சிறிய விஷயத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்காதே.'------------''டிஸ்ரேலி''


     'கோழிமுட்டையின் மீது சதா அடைகாத்துக் கொண்டிருப்பதுபோல, நீ பேச எடுத்துக் கொண்ட விஷயத்தைப்பற்றி சதா சிந்தித்துக்கொண்டேயிருந்தால், கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவதுபோல, புதிய கருத்துக்கள் துள்ளிவரும்.''----------------''பிரெளன்''


     மெருகோடும் கச்சிதமாகவும் பேசவேண்டுமென்று விரும்புகிறவர்கள், சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்கவேண்டும். நூல்களையும் உயர்ந்தோர் கருத்துக்களையும் நிறையப் படிக்க் வேண்டும். முடியாவிட்டால் மேடையில் பேசாதிருப்பது நலம்.'-----------''செஸ்டர்பீல்டு''


     'அருமையாகப் பேசும் சொலல் வல்லோன் உண்மையைப் பேசாவிட்டால் அவனைக் காட்டிலும் மோசமான மனிதன் இருக்க முடியாது'.-------''கார்லைல்''


     'புலியின் சீற்றத்தையும் புஜபலமிக்க வீரனின் சினத்தையும் தணிக்கக்கூடிய சிறப்பியல்பும் பேச்சுக் கலைக்கு இருக்கவேண்டும்.'------''ஷெல்லி''


     'உணர்ச்சி பாவமே சொற்சுவைக்கு ஆதாரம், எதுவும் தெரியாதவனின் கண்களைக் காட்டிலும், காதுகள் மிகவும் கூர்மையானவை!'------''ஷேக்ஸ்பியர்''


     நாவண்மையின் சிறப்பு குறித்து நண்பர் ஏ. சுவாமிநாதன் என்பவர் சில பொன்மொழிகளைத் தொகுத்து அனுப்பியுள்ளார். அவை வருமாறு;


     'நாவானது மூன்று அங்குல நீளமுடையது, எனினும் ஆறு அடி உயர மனிதனையும் கொல்லக் கூடியது'.-------ஜப்பானியப் பழமொழி


     'பெண்ணின் வாள், அவளுடைய நாவே, அதைத் துருப்பிடிக்கும்படி அவள் விடுவதில்லை.'----------சீனப் பழமொழி


     'உன் நாவைக் காப்பாற்று! உன் நண்பணைக் காப்பாற்றுவாய்'----இந்தியப் பொன்மொழி


     'மனிதன் தன் நாவினால் பிடிபடுகிறான்.'-----ருசியப் பொன்மொழி


     'நாவில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்குகிறது.'------------அல்பேனியப் பொன்மொழி


     அறிஞர் பெருமக்களின் கருத்துகள், பல்வேறு நாட்டுப் பொன்மொழிகள்- நாவன்மையின் பெருமையையும் அதனை எவ்வளவு முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்பதையும் வலியுறுத்தி கூறியிருக்கின்றன.


''''சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
கொல்லுஞ் செயல் இன்மை அறிந்து''''


வேறொரு சொல்லால் நமது சொல்லை வெல்ல முடியாது என்பதை அறிந்து- அப்படி ஆய்ந்து அறிந்து தேர்ந்த சொல்லைக் கொண்டுதான் நமது கருத்தை விரித்துரைக்க வேண்டுமென்று வள்ளுவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.


அதனால்தான் ''''நாவலம் என்னும் நலனுடைமை'''' என்று போற்றுகிறார்; நாவன்மையெனப்படும் நலம் ஒருவகைச் சொல்லாகும் என்று புகழ்கிறார்.


- கலைஞர் மு. கருணாநிதி


.......இன்னும் வரும்....17



Tuesday, 26 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -15


     

பேசும் கலை வளர்ப்போம் -15

இரவு பொதுக் கூட்டத்திலே ஆயிரக்கணக்கான மக்களிடையே முழக்கம். காலையில் ரயிலடிக்கோ அல்லது பேருந்து நிலைத்துக்கோ அந்தப் பேச்சாளர் வழியனுப்பி வைக்கப்பட அழைத்துச் செல்லப்படுவார். அவர் விரல்களின் இடுக்கில் சிகரெட்! வாய் வழி மூக்கு வழியே புகை மண்டலம்! முதல்நாள் பொதுக்கூட்டத்தில் பார்த்துக் களித்துப் பாராட்டியவர்களில் ஒருசிலர் அந்த இடங்களில் இருந்து பேச்சாளரைக் காண நேர்ந்தால் அவர் மீதுள்ள மரியாதையும் மதிப்பும் சிறிது குறைய்த்தான் செய்யும்.

     நாலு பேருக்கு மத்தியில் சிகரெட் விஷயத்தில் கூட எவ்வளவு கட்டுப்பாடு வேண்டும் என்று கூறுகிறபோது-மற்ற விஷயங்களைப்பற்றி விவரிக்கத் தேவையில்லை.

     இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமென நம்புகிறேன். தான் ஈடுபாடு கொண்டுள்ள இயக்கத்திற்காக-தான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காக சில பழக்கவழக்கங்களைத் தியாகம் செய்ய வேண்டியதுதான் என்ற முனைப்பும் உறுதியும் அந்த இயக்கத்தின் பேச்சாளர்களுக்கு மிகமிகத் தேவை.

     எந்த ஒரு கட்சியிலும், அல்லது பெருங்குழுவிலும் பேச்சாளர்களுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. தொண்டர்குழாம் அவர்களைச் சுற்றியிருக்கும். அந்தத் தொண்டர்கள் அமைத்துத் தருகிற மேடையிலேதான் நாம் பேச்சாளராக  ஒளிவிடுகிறோம் என்ற உணர்வு பேச்சாளர்களுக்கு இருந்திடவேண்டும்.

    பேச்சாளர்கள், ஒரு இயக்கத்தின் அல்லது பெருங்குழுவின் எஜமானர்களாகத் தங்களை எண்ணிக்கொண்டு வேலைக்காரர்களைப் போலக் கருதி நடத்தக்கூடாது. தோழமை உணர்ச்சி பெருக்கெடுத்திடல் வேண்டும்.

     தொண்டன் உண்டியல் குலுக்கி, ஒரு காசு இரு காசு என சேர்த்து பேச்சாளருக்கு வழிச் செலவுக்குப் பணம் அனுப்பி, விளம்பரச் சுவரொட்டியடித்து இரவு பகல் கண் விழித்து அவன் கையாலேயே பசை தடவி அவைகளை ஒட்டி, கம்பங்களிலும் மரங்களிலும் ஆபத்தை மறந்து ஏறித் தோரணங்கட்டி, மேடைபோட்டு, ஒலிபெருக்கி அமைத்து இறுதியாகப் பேச்சாளர் வரவில்லை என்ற செய்தி கேட்டால் எப்படிச்சோர்ந்து போவான் என்பது, தொண்டர்களாக இருந்து இயக்கம் வளர உழைத்தவர்களுக்கும்-உழைப்பவர்களுக்கும்தான் தெரியும். அத்தகைய ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு தருவது கூடாது. 

தவிர்க்கமுடாயாத-எதிர்பாராத-நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.

    என் தந்தை இறந்து எரியூட்டல் நடந்த அன்று மாலை தஞ்சை மாவட்டத்தில் திருவாஞ்சியம் என்னும் ஊரில் ஒத்துக்கொண்டிருந்த கூட்டத்திற்குத் தவறாமல் சென்று வந்தேன்.

     முதல் மனைவி பத்மா, மரணப்படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண் மூடிக் கிடந்தபோது, ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்திற்குச் சென்றுவிட்டு இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன்; அவள் என்னைப் பிரிந்து நீங்காத்துயில் கொண்டுவிட்டாள் என்ற செய்தியைக் கேட்க!

     இப்படிப் பல நிகழ்ச்சிகள் என் பொது வாழ்க்கையில்!

     பெரியாரிடம் கற்ற பாடங்களில் இந்தக் கடமை தவறா பயிற்சியும் ஒன்று!

     கடுகுபோல் ஒரு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து நிகழ்ச்சகளை ரத்து செய்துவிடுகிற பேச்சாளர்களை இன்று காணும்போது, என்னைப் பற்றிச் சில குறிப்புகளைச் சொல்ல நேர்ந்தது.

    பேச்சாளர்களைக் கூட்டத்திற்கு அழைக்கிறவர்கள் சிலரும், கூட்டம் முடிந்தபிறகு அவர்களைத் திண்டாடித் தெருவிலே நிற்குமாறு விட்டுச் செல்லுகிற நிகழ்ச்சிகளும் இல்லாமல் இல்லை.

    எல்லாக் கட்சிகளிலுமே ஊடுருவியுள்ள இந்தக் குறைபாடுகளைப் பேச்சாளர்களும் கூட்ட அமைப்பாளர்களும் நீக்கிக் கொள்ளவேடண்டும்.

    மேலவைத் தலைவராக விளங்கிய அண்ணன் சி.பி.சிற்றரசு, சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி, தன்மான இயக்கத் தளகர்த்தர் அண்ணன் அழகிரிசாமி ஆகியோர்-கூட்டத்தில் தங்கள் பேச்சை முடிக்கும்போது; மேடையில் இருக்கும் கட்சியின் செயலாளரது கைகளைக் கெட்டியாகப் பிடித்தவாறே-மக்களைப் பார்த்து-'இவ்வளவு நேரம் சொன்னவற்றை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! என்று கேட்டுக் கொண்டே மேடையிலிருந்து இறங்குவோம் என்று அவர்களே பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். இல்லாவிட்டால் திரும்பி ஊருக்குச் செல்ல வழிச் செலவுப் பணத்திற்கு என்ன செய்வது? யாரைத் தேடுவது? அதனால்தான் செயலாளர் கைகளை அன்போடும் பாசத்தோடும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேச்சை முடிப்பார்களாம்.!

    ;இதோ இந்தத் தம்பியிருக்காரே; உங்க ஊர் செயலாளர்-தங்கக் கம்பி! நல்ல உழைப்பாளி. இவருடன் நீங்கள் ஒத்துழைத்து இந்த ஊரை நமது கட்சிக் கோட்டையாக்க வேண்டும்.

    இவ்வாறு செயலாளரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுபோல, ஆளை விடாமல் கூட்டம் முடிந்ததும் வழிச் செலவுக்கு வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிட எத்தகைய தந்திரம் கையாள வேண்டியிருந்திருக்கிறது! அதுவும் அந்தக் கால்த்தில் பெரும் புகழ் பெற்ற அந்தப் பேச்சாளர்களுக்கே சில இடங்களில் அப்படிப்பட்ட ஒரு நிலை!

- கலைஞர் மு. கருணாநிதி


.....இன்னும் வரும்.....16

Monday, 25 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -14



 

பேசும் கலை வளர்ப்போம் -14


   இலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை எல்லையற்றும் இருக்கின்ற காலகட்டத்திலே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அரசியல் பேச்சாளர்களில் ஒரு சிலரே இலக்கியப் பேச்சாளர்களாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.

     இதிகாசங்களையும் புராணங்களையும் இன்றுள்ள உலகியலுக்கும் பொருந்தும் வண்ணம் இடையிடையே இலக்கிய அரசியல் சுவை கலந்து வழங்குகின்ற கதாகாலட்சேபப் பண்டிதர்களும்கூட இருக்கிறார்கள்.

     ஆடாமல் அசையாமல் அங்கம் சற்றுக் குலுங்கிட லாவகமாக நாலாப்புறமும் திரும்பியவாறு கடல் மடைதிறந்தாற்போலத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு புராணக் கதைகளைப் பல மணி நேரம் சலிப்புத் தட்டாமல் மன்றங்களில் கூறுகிற ஆற்றல் வாய்ந்தவர்களில் கிருபானந்தவாரியார் ஒருவர்.

    அங்க அசைவுகளும் முகபாவ மாற்றங்களும், வார்த்தைகளிலும் குரலிலும் திடீர் ஏற்ற இறக்கங்களும் இருக்குமெனினும் கவர்ச்சியாக இதிகாசக் கதைகளையும் இலக்கியங்களையும் நீண்ட நேரம் எடுத்துரைக்கக் கூடியவர்களில் ஒருவராகப் புலவர் கீரன் விளங்குகிறார்.

     புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்துப் பற்றிய சிறப்புக் கூறுகளைப் பல நாட்கள் தொடர்ந்து உரையாற்றித் தமிழ் கற்றோர் நெஞ்சங்களில் நண்பர் சிலம்பொலி செல்லப்பன் இனிப்பு பெருக்கெடுக்கச் செய்தார்.

     சிலப்பதிகாரத்தைப் பல நாட்கள் மன்றத்தினர் களித்திடுமளவுக்கு விமர்சித்து வெற்றி கண்டார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

     கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அண்ண்ன் ஜீவானந்தம்; எரிமலை போன்ற அரசியல் பேச்சாளர் என்பது மட்டுமல்ல- கம்பனின் கவிநயம் பற்றிச்சில மணிநேரம் சுவைப்படச் சொற்பெருக்காற்றக்கூடியவராகவும் இருந்தார்.

     கம்பராமாயணம் பற்றி எழுந்த சர்ச்சையில் பெரும் புலவர்களான நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும்-சேதுப்பிள்ளையுடனும் சொற்போர் நிகழ்த்தியபோது அறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் புலமை எப்படி ஒளிவிட்டது என்பதை நாடறியும்.

     அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. ஆனால், அவர்களில் இலக்கியமுணர்ந்தோர் எண்ணிக்கை, மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. வரலாறுகளையாவது ஆழமாகப் படித்திருக்கிறார்களா? அந்தத் தொகையினரும் குறைவே! பல பேச்சாளர்கள் மாற்றுக் கட்சியினரைத் தரக் குறைவாகத் திட்டிப் பேசவே மட்டும் தங்களைப் பாழாக்கிக் கொண்டு மேடையேறிவிடுகின்றனர்.

     கடுமையாக-காரசாரமாகப் பேசுவது என்பது வேறு! தரக்குறைவாக-ஆபாசமாக-அருவருக்கத்தக்க முறையில் பேசுவது என்பது வேறு!

     கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒரு பேச்சாளருக்கு ஏற்படக்கூடும். மாற்றுக்கட்சி மேடையில் பேசிய ஒருவர் ஏதாவது அவதூறு ஒன்றைப் பரப்பிவிட்டு அதை நிருபிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல்; அப்படிப் பிறர் மீது வேண்டுமென்ற திட்டமிட்டுப் புழுதிவாரித் தூற்றுவதையே தனது தொழிலாக் கொண்டிருக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பேச்சாளர் அல்லது அந்தப் பேச்சாளர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மேடையில் அதற்குப் பதில் அளிக்கும்போது கடுமையான கண்டனம் தவிர்க்க முடியாததாகிவிடக்கூடும்.

     ஒருமணி நேரப் பேச்சில் அப்படிக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பது ஓரிரு வினாடிகளே இருக்கவேண்டுமே தவிர, முழுப் பேச்சும் கடுஞ்சொற்களின் கோர்வை ஆகிவிடுமேயானால் ஒருக்கணம் மின்வெட்டுப்போலப் பளிச்சிட்டுத்ததெறித்த அந்தக் கடுஞ்சொல்லுக்குரிய மதிப்பு இல்லாமல் போய்விடக்கூடும்.    

     அரசியல் மேடைகளில் கடுஞ்சொற்கள் இருதரப்பிலிருந்தும் கனணகளாகக் கிளம்பலாம். அதற்காகப்பேச்சு முழுமையுமே கடுஞ்சொற் களஞ்சியமாகவும்-ஆபாசக் குட்டையாகவும் அமைந்திடுமேயானால்; விரைவில் அந்தப் பேச்சாளர்களும் இருக்குமிடந் தெரியாமல் போய்விடுவர்; அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் சிறப்பு குன்றிச் செயலிழந்து நின்றுவிடும்.

    மேடையில் மக்களின் பிரச்சனைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எடுத்து வைக்க வேண்டும். அவ்வப்போது எழுகின்ற விவாதத்திற்குரிய விஷயங்களை அவரவர் கட்சிக் கண்ணோட்டத்திற்கேற்ப மக்களிடம் விளக்கிட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிக்கொள்கைகளுக்கும் தனது கட்சிக் கொள்கைகளுக்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும், உடன்பாடுகள் பற்றியும் வாதங்களை அடுக்கிடவேண்டும். நாட்டில் பற்றி எரிகிற ஒரு முக்கியமான பிரச்சனையை தனது கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதைத் தெளிவாக மக்களிடம் கூறவேண்டும்.

     இவ்வளவையும் விட்டுவிட்டு, மேடையில் ஏறியதும் தனது கட்சித் தலைவனுக்கு ஒரு பகுதி நேரம் பாராட்டு-மறுபகுதி நேரம் மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு ஆபாச அர்ச்சனை-என்ற நிலையில் பேச்சாளர் தனது சொற்பொழிவை அமைத்துக்கொண்டால்; கூட்டத்தில் மேடைக்கருகே இருக்கிற தனது கட்சிக்காரர்களின் கைத்தட்டலை மட்டுமே பெறமுடியும். பொதுவான மக்களின் பாராட்டு அந்தப பேச்சுக்குக் கிடைக்காது.

    'வசவு' ஒன்றையே தனது பேச்சுப் பாணியாக ஆக்கிக் கொண்டவர்களில் பல பேர், அடிக்கடி அரசியல் கட்சிகள் பலவற்றுக்குத் தாவுகிறவர்களாகவும் இருந்திடக் காண்கிறோம். கொள்கை, இலட்சியம். எந்த அடிப்படையும் இல்லாத சந்தர்ப்பவாதிகள் அவர்கள்! பேச்சால் மட்டுமே பிழைப்பு நட்த்துகிறவர்கள். அவர்கள் கட்சி மேடையானாலும்-அல்லது எந்தப் பொது நிகழ்ச்சியானாலும்-சுற்றுச் சூழல் பற்றிக் கவலை கொள்ளாமல், தரக்குறைவான, ஆபாசமான, மிகத் தீவிரவாதிகளைப் போலக் கடுமையான வார்த்தைகளை வாரியிறைப்பர்.

     சில நாட்கள் கழித்துப் பார்த்தால், அதே பேச்சாளர் வேறு மேடையில்-வேறு கட்சியில்! அதன்பிறகு சில வாரங்கள் சென்றுபார்த்தால், அதே பேச்சாளர், இன்னொரு கட்சியில்-இன்னொரு மேடையில்! இப்படியே அவர்கள் பல கட்சிகளுக்குப் பாய்ந்து மக்களின் மதிப்பீட்டில் மிகக் கேவலமாகத் தேய்ந்து போய்விடுகிறார்கள்.

     நடைமுறைகள்-கொள்கை மாறுபாடுகள்-இவை காரணமாகக் கட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும்; எங்கே சென்றால் வசதியும் பிழைப்பும் தொய்வின்றிக் கிடைக்கும் என்று திட்டமிட்டுச் செயல்படுவதற்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள மக்கள்; அத்தகைய பேச்சாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத்தான் தருகிறார்கள்.

     நல்ல கெட்டியான அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகையைப் போலவே, அழுத்தமான குறிக்கோளுடன் பேச்சாளர்களும் தங்கள் பொதுவாழ்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.


     எந்த ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும்-அவர் தனது பேச்சின் வாயிலாகத் தனது கட்சிக்கு வலிவு தேட முனைவது போலவே  தனது செயல்முறைகள் வாயிலாகவும் வலிவு தேடவேண்டும்.

     நான் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி! திருவாரூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உருக்கமும் உணர்ச்சியும் பொங்கிட ஒரு பெரியவர் முழங்கினர். மக்கள் எழுச்சியுடன் அவர் பேச்சைக் கேட்டனர். மறுநாள் அதிகாலையில் நான் நண்பர்களுடன் திருவாரூர் ஓடம் போக்கி ஆற்று மணலில் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே மணலில் ஒரு மனித உருவம் ஆடை குலைந்த நிலையில் படுத்திருந்தது. அருகே சென்று பார்த்தோம். முதல் நாள் இரவு முழங்கிய அதே மனிதர் தான். நன்றாக குடித்துவிட்டு ஆற்று மணலில் உருண்டு கிடக்கிறார். அந்தக் காட்சியைப் பார்க்கிறவர்கள் அவரை மட்டுமல்ல; அவர் எந்தக் கட்சிக்காகப்பேச வந்தாரோ-அந்தக் கட்சியையும் கடுகளாவாவது மதிர்ப்பார்களா?

- கலைஞர் மு. கருணாநிதி


....இன்னும் வரும்...15

   

Sunday, 24 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 13









 பேசும் கலை வளர்ப்போம்- 13


    தனக்கு என்ன விஷயங்கள் எல்லாம் தெரியும் என்பதை மேடையில் வீற்றிருக்கும் மற்ற பேச்சாளர்களுக்கு அல்லது தலைவர்களுக்கு உணர்த்துகிற பேச்சாக மட்டும் அமையாமல், எதிரே வீற்றிருக்கிற நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பயன்படுகிற பேச்சாக அமையவேண்டுமென்பதில் ஒருபேச்சாளருக்கு மிகுந்த கவனம் தேவை. தனக்கும் அல்லது தன்னைப்போல் நிறைய நூல்களைப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய செய்திகளையோ, குறிப்புகளையோ-மக்களுக்கும் தெரியவைக்க வேண்டுமென்றால் அதற்கேற்றவாறு இடமும்-இடத்திற்கு ஏற்றவாறு எடுத்துக் கொண்ட பொருளும் இருந்திடவேண்டும்.

     மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்திப் பேச வேண்டிய கூட்டம் என்று வைத்துக் கொள்வோம். அரசியல் சட்டப்படி எத்தனை அதிகாரங்கள் மத்திய அரசுப்பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் மாநில அரசுப் பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் பொதுப் பட்டியலில்-என்ற விவரங்களையும்; அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி மத்திய அரசு, ஒரு மாநில ஆட்சியைக் கலைக்க முடியும் என்பதையும்-அரசியல் சட்டம் தொகுத்த அறிஞர்களில் ஒருவரான அம்பேத்கார் அவர்களே வேண்டுமெனக் கருத்தறிவித்ததையும்-மாநில சுயாட்சி பற்றி இராசமன்னர் குழுவினர் ஆராய்ந்து அளித்த அறிக்கையினையும்-அதைத் தி.மு.க. ஆட்சிக்க காலத்தில் பரிசீலித்து சட்டமன்றத்திலேயே மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றியதையும்-மாநிலங்கள் சுயாட்சித் தனமையுடன் திகழவேண்டுமென்று பண்டித நேரு அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டதையும்-ஆதாரங்களுடன்-தேதிகளுடன் எடுத்துச் சொல்ல விரும்புகிற ஒரு பேச்சாளர்; அவர் சென்னையில் ஒரு மேடையில் நின்று பேசுகிறார் என்றாலும் கூட-சென்னையில் எந்தப் பகுதி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்.

     மாநில சுயாட்சி பற்றி மைலாப்பூர் மாங்கொல்லையிலோ-அண்ணாநகர் சாந்தி காலனியிலோ-அடுக்கிக் காட்டுகிற ஆதாரங்களை புரசை வெள்ளாளர் தெருவிலே வாரி வழங்குகிற புள்ளி விவரங்களை-சென்னையில் எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத்துவது என்பது இயலாது.

     மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெறவேண்டுமென்பதற்கு அந்தப் பகுதி மக்களுக்கு எதைச் சொன்னால் மனதில் பதியுமோ; 'ஆமாம்-நியாயந்தானே!' என்று சொல்லத் தோன்றுமோ அதைச் சொல்லவேண்டும்.

     தனக்குத் தெரிந்ததைப் பேசவேண்டும்; தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசிவிடக் கூடாது.

     சில பேச்சாளர்கள் தங்களுக்குத் தெரியாததைப் பேசத்தொடங்கி இடறி விழுவார்கள். அதாவது பணத்தாலோ-அல்லது பதவியாலோ செருக்குற்றிருப்பவர்கள், தப்பித் தவறிப் பேச்சாளராகவும் இருந்தால் அதனால் விளையக் கூடிய வேதனை இது! 

     ஒருவர், ஒரு முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருப்பவர், முக்கியமானவர்கள் நிரம்பிய ஒரு அவையில் பேசினார். தமிழகத்தில் வெள்ளம், புயல் ஏற்பட்டு பல பகுதிகள் சேதமுற்றது பற்றி விவாதம் நடந்தது. அந்த முக்கியாமானவர் பேசும்போது சொன்னார், 'என்னுடைய சிறு வயதில் சென்னையில் பெரு வெள்ளத்தை நேரில் பார்த்தேன்' என்று அத்துடன் நிறுத்தவில்லை. 'எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்.அப்போதுதான் சென்னயில் எம்டன் குண்டு விழுந்த நேரம். பெரிய மழை பெய்து ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொண்டு சென்னை நகரமே மூழ்கிவிடும் போலிருந்தது' என்று விவரித்தார். ஒரு பெரியவர் குறுக்கிட்டு, 'எம்டன் குண்டு விழுந்தது 1914-ஆம் ஆண்டில் அல்லவா?' என்றார்!'உங்களுக்குத் தெரியாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஏழு வயதுச் சிறுவன்' என்றார் திட்டவட்டமாக அந்த முக்கியமானவர்!

     பெரும் பதவியில் இருப்பவராயிற்றே; அதனால் குறுக்கிட்ட பெரியவர் அடங்கிவிட்டார்.

    உண்மை என்ன தெரியுமோ? எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர்! ஜெர்மானியக் கப்பல்! முதல் உலக யுத்தத்தின்போது 1914-ல் சென்னையில் அந்தக் கப்பலில் இருந்து குண்டு வீசப்பட்டது. அந்த நிகழ்ச்சியைக் கல்வெட்டில் குறித்து இன்னமும் சென்னை உயர்நீதிமன்றச் சுற்றடைப்புக்குள் வைத்திருக்கிறார்கள். அந்தக் கூண்டு விழுந்தபோது தனக்கு ஏழு வயது என்று கூறியவர்; பிறந்த ஆண்டு 1917 ஆகும்.

    பதவியிலிருப்பவர் உளறியதாயிற்றே! என்ன செய்யமுடியும்-எப்படியோ தந்திரமாக அந்தப் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு செய்துவிட்டார்கள்.

     என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மருத்துவக் கல்லூரி 'மாணவர் பேரவை'க்கு அழைப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு சென்று இலக்கியமோ-நாட்டு நிலையோ-இப்படி ஏதாவது பொதுவான பொருள்கள் பற்றிப் பேசினால்தான் வரவேற்பு இருக்க முடியும். எல்லாம் தெரிந்தவன் என்று என்னைக் காட்டிக் கொள்ள முனைந்து; இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை எப்படிச் செய்ய வேண்டும்-விபத்தில் தலையில் காயமுற்று மயங்கிய நிலையில் இருப்பவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்- என்றெல்லாம் என்க்குத் தெரியாத விஷயங்களில் அதிமேதாவி போலத் தலையிட்டு உரையாற்றினால்; விளைவு எப்படியிருக்கும்?

     இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது தமிழ் நாட்டில் அரைகுறையாக மதுவிலக்குக் கொள்கை அமுலாகிக் கொண்டிருக்கிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு எல்லோருக்கும் 'மது பர்மிட்'தரப்படுகிறது. இச்சமயத்தில்தான், காஞ்சிபுரம் அரசினர் விழா ஒன்றில் ந்மது முதலமைச்சர் எம.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஒரு செய்தியை வெளியிடுகிறார்.

     'இரண்டு நாளைக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு தொலைபேசிச்செய்தி வந்தது. ஒருவன் குடித்துவிட்ட காரணத்தால் கைதாகியிருக்கிறான்.அவனை ஜாமீனில் எடுக்க ஒருவர் வந்திருப்பதாகச்சொன்னார்கள். குடித்தவனை ஜாமீனில் எடுக்க வந்தால் அவனையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டேன். அதுதான் இந்த ராமச்சந்திரன்.'

     செய்தியே பொய்யாக இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு முதலமைச்சருக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வரமுடியாது. அப்படியே ;போன்' வந்தாலும் ஜாமீன் எடுக்க வந்த காரணத்திற்காக கைது செய்யமுடியாது! சட்டமும் தெரியாமல் மக்களைக் கவர்ந்திட பேசப்பட்ட தவறான பேச்சாகும் அது!

     தெளிவாகத் தனக்குத் தெரியாத எதையும் பேசுவதால் இத்தகைய சங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.


- கலைஞர் மு. கருணாநிதி


-....இன்னும் வரும்....14

Saturday, 23 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 12






பேசும் கலை வளர்ப்போம்- 12



     மக்களுக்குத் தெரியவேண்டியதைப் பேசுதல்.
     மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்.
     தனக்குத் தெரிந்ததைப் பேசுதல்.
     தனக்குத் தெரியாததைப் பேசுதல்.

     இப்படிச் சிலவகைகாளாகப் பேச்சுக்களைப் பிரித்துக் கொள்ளலாம். வரலாற்றுச் சொற்பொழிவு, விஞ்ஞானச் சொற்பொழிவு, இலக்கிய சொற்பொழிவு, பொருளாதாரச் சொற்பொழிவு, இவ்வாறு தனித் தனியான சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலும் கருத்தரங்குகளிலேயே எடுபடும். அதற்கு ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான நூலறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் அரங்கின்றி வட்டாடுவதுபோல ஆகிவிடுமென வள்ளுவர் கூறியது பொருத்தமாகிவிடும். நிரம்பிய நூலின்றி அவைக்களம் புகுதல் கூடாது என்று திருக்குறள் திட்டவட்டமாகக் கூறுகிறது.

     கருத்தரங்குகளில் மட்டுமே கூறவேண்டிய கருத்துக்களை, அந்த அரங்குகளை விட்டுப் பாமர மக்களிடமும் மெல்ல மெல்லக் கொண்டு செல்லவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்திவிட்டு, அதனைத்தான் பேச எடுத்துக் கொண்ட பொருளுக்குத் துணையாக இணைப்பது, பாலில் தேன் கலப்பதுபோல இருக்கவேண்டும்.

     ''ஏழை எளியோர், தொழிலாளர் ஆகிய இயலாதோர் வர்க்கத்தைக் கசக்கிப் பிழிந்த ஜார் மன்னனின் கதி என்னவாயிற்று? சோவியத் மண்ணில் பாட்டாளிக் கொடியைப் பறக்கவிட்ட லெனின், அதற்கென எவ்வளவு போராடினான்? உலகப் பெரும் போரில் இட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் தாக்குதலில் இருந்து இங்கிலாந்தைக் காத்திட்ட சர்ச்சில், அடுத்து வந்த தேர்தலில் பிரதமராக முடியாமல் அவரது கட்சி தோற்கடிக்கப்பட்டது.-''

     இப்படி சொற்பொழிவுக்குத் தக்கவாறு பொருத்தமான இடங்களில் தயிர்சோற்றுக்கு ஊறுகாய்போல வரலாற்றுக் குறிப்புக்களைப் பயன்படுத்தலாம். பொதுக் கூட்டப்பேச்சு முழுதும் வரலாற்றுக் குறிப்புக்களாகவே இருந்தால் மக்களைக் கவர்ந்து பாராட்டுப் பெறமுடியாது.

     அதியமான், நூறாண்டு வாழ்வளிக்கக் கூடிய நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற இலக்கியச் செய்தியைக்கூறுவதின் மூலம், அந்த மன்னன் தமிழின்பால் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி அந்த தாய்த் தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் நமது கடமையன்றோ என்பதை நெஞ்சில் பதிய வைக்கலாம்.

     சந்திரமண்டலத்தில் மனிதன் காலடிவைத்துத் திரும்பி வருகிற விஞ்ஞான உலகில் வாழுகிற நாம்; இன்னமும் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தைச்சுற்றுகிறோம். இது அறியாமையல்லவோ? எனக் கேட்பதற்கு விஞ்ஞானப் புதுமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

     பொருளாதாரம் பேசுகிறேன் என்று காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (கேபிடல்) என்ற நூலைப் பக்கம் பக்கமாகப் பொதுமக்கள் முன்னால் விவரித்துக் கொண்டிருந்தால்; இறுதியில் மேடையில் ஒலிபெருக்கியாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். மார்க்ஸ் பிரித்துக் காட்டியுள்ள வர்க்க பேதங்களை உணர்த்தி, தொழிலாளர் வர்க்கம் உலகாளவேண்டுமென்ற உணர்ச்சியை உருவாக்க மட்டுமே பொதுக்கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினையை விளக்க வேண்டும்.

    'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான். அவன் காணத்தகுந்தது வறுமையா? பூணத்தகுந்தது பொறுமையா'?-புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடலில் எவ்வளவு பெரிய கேள்வி எழுகிறது'! 'காலுக்குச் செருப்புமில்லை-கால் வயிற்றுக் கூழுமில்லை; வீணுக்குழைத்தோமடா என் தோழா!' என்ற ஜீவாவின் பாட்டில் எத்துணை உருக்கமும் உணர்ச்சியும் பீறிட்டெழுகிறது!

    தொடர்புடைய ஒரு பேச்சில் இடையிடையே இது போன்றவைகளைக் கையாள்வதின் வாயிலாக மக்களைப் பேச்சாளர், தமது பக்கம் இழுத்துத் தனது கொள்கைகளை அவர்கள் இதயத்தில் ஏற்றிட முடியும். மக்களுக்குத் தெரிய வேண்டியவைகளை இந்த முறையில் அளவோடு பேசவேண்டும்.

     அடுத்தது, மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்!
     நீண்டகாலமாக ஒரு ஊரில் பள்ளிக் கூடமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆற்றைக் கடக்க மக்கள் ஒரு பால வசதியின்றிக் கஷ்டப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.,உணவு தானிய உற்பத்தியாளர்களான உழவர் பெருங்குடியினர் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியான விலையின்றித் துயருறுவதாக வைத்துக் கொள்வோம்.

     இவை போன்ற, மக்களுக்குத் தெரிந்திருக்கிற-மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கிற பிரச்சனைகள் எவையென்பதை அந்த ஊர்க கூட்டத்திற்குச் சென்றவுடன் கூட்ட அமைப்பாளர்களிடம் கேட்டுத் தெரித்து கொண்டு பேச்சினிடையே அவைகளையும் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினால் பேச்சாளருடன் கூட்டத்தில் குழுமியுள்ள அந்தப் பகுதி மக்களும் ஒன்றிவிடுவார்கள்.

    அதைப் போலவே அந்தப்பகுதியில் நீண்ட காலமாக இருந்த தேவைகள் நிறைவு செய்யப்பட்டிருக்குமானால் அவற்றையும்  குறிப்பிடும்போது, பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொண்டு பேச்சாளரின் கருத்துக்களோடு தங்களையும்  இணைத்துக் கொண்டு ரசிப்பார்கள்.

     சில பேச்சாளர்கள், தமக்குத் தெரிந்ததையெல்லாம் கூட்டத்தில் பேச விரும்புவார்கள். மக்களுக்குத் தெரியாததாக இருந்தால் அப்படித் தமக்குத் தெரிந்ததைப் பேசுவதில் தவறில்லை! தெரியாததற்கும் , என்னதான் பேசினாலும் புரியாததற்கும் மிகப் பெரும் வேறுபாடு உண்டு!

     ஒரு குக்கிராமத்துக்குப் பொதுக்கூட்டம், மேடையில் ஒரு பட்டதாரி பேசுகிறார். தலைமை ஏற்றிருப்பவர் ஒரு பட்டதாரி . அடுத்துப் பேச இருப்பவர் ஒரு பட்டதாரி. எதிரே குக்கிராமத்துக்கு மக்கள்.

    'பெரியோர்களே! ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் குத்தியபோது; நீயுமா புரூட்டஸ் என்றான் சீசர்! கிரேக்கத்து நீதிமன்றம் சாக்ரடீசுக்கு விஷக் கோப்பையைப் பரிசாகக் கொடுத்தது! ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இங்கிலாந்தில் மாதக் கணக்கில்-ஆண்டுக் கணக்கில் நடைபெறுகின்றன. ஆபிரகாம் லிங்கன் ஒரு தியேட்டரில்தான் சுடப்பட்டார்.'

     இப்படிப் பேசினால், அது மேடையில் உள்ள மற்ற பட்டதாரி  பேச்சாளர்களுக்குத்தான் புரியும்! எதிரேயுள்ள மக்களுக்கு சீசர், புரூட்டஸ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களே புரியாது.!

- கலைஞர் மு. கருணாநிதி 

இன்னும் வரும் -13



Friday, 22 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -11





  பேசும் கலை வளர்ப்போம்-11
 
  "சொல்லும் கருத்துக்கள் தெளிவாக அழகான சொற்களில் தர்க்கமுறைக்கு மாறுபடாது அனுபவத்துடன் எடுத்துக்காட்டுகளோடு கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு, உணர்ச்சி தோன்ற, 'உண்மைதான் சொல்வது' என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்கவேண்டும். இப்படியிருப்பதுதான் சிறந்த பேச்சு. இதுதான் பேச்சின் இலக்கணமுமாகும்'.
    என்று பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் அழகுபடக் குறிப்பிடுவார்.
     'பேச்சு என்பது ஒரு கலை; பேராற்றல் வாய்ந்தது முத்தொழில் புரியும் வல்லமை வாய்ந்தது. பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை. மேடைப் பேச்சு நாட்டை வளப்படுத்தும்; வாக்காளரைப் பண்படுத்தும்; சட்டசபையைச் சீர்செய்யும்; நல்லமைச்சு அமைக்கும்.'
     என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பொழிந்துள்ளார்.
     மேடைப் பேச்சாளர் இவற்றையெல்லாம் காணமுடியும் என்பதற்குப் பதிலாக இவற்றையெல்லாம் காணத்தக்க அளவுக்கு மேடைப் பேச்சு அமையவேண்டும் என்பதைத்தான் திரு.வி.க அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.
     மாலையில் இசை நிகழ்ச்சியென்றால் காலையில் ஒரு முறை இசைவாணன், தன் குழுவினருடன் இல்லத்திலோ, அல்லது தங்கியிருக்கும் விடுதியிலோ எல்லாவற்றையும்  சரிபார்த்துக் கொள்கிறான்.
    இரவு நாடகமெனில் , பல இடங்களில் நடைபெற்றுப் பழகிப்போன காட்சிகள் என்றாலுங்கூட, காலையிலோ மாலையிலோ நடிகர்கள் தங்களது முக்கிய வசனங்களை உரக்க உச்சரித்துப் பார்த்துக் கொள்கிறார்கள்.
     அதைப்போலவே பேச்சாளர்களும் தாங்கள் பேசப் போகும் கருத்துக்களை மேடைக்குப் போவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை வரிசைப்படுத்தி, எண்ணிப் பார்த்து அதன்பிறகு மேடையேறினால், நல்ல சொற்பொழிவாளர் என்ற வெற்றி முகட்டை விரைவில் அடையலாம்.
     பேச்சுத்திறன் ஓரளவு பெற்றவர்கூட அவசரத்திலும், ஆத்திரத்திலும், நிதானமிழந்து பரபரப்புக்கு ஆட்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சொல்லக் கூடாததைச் சொல்லி பின்னர் வருந்துவதுண்டு.
     பல ஆண்டுகளுக்கு முன்பு  நாகர்கோயிலில் தி.மு.கழக மாவட்ட மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை இன்றைய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலாரும் நண்பர் ஜாண் என்பவரும் முன்னின்று நடத்தினார்கள். அந்த மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் பேசினார். அவர் இப்போது கழகத்தில் இல்லை. வேறு கட்சியில் இருப்பதாகக் கேள்வி.
     நாட்டில் ஏற்பட்டிருந்த வறுமை நிலையைக் குறிக்க அவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதுண்டு. ''திண்டுக்கல்லிலேயிருந்த மதிப்பிற்குரிய எட்டு தோழர்கள் கத்தாழைக் கிழங்குகளைச்சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்ற செய்தியை; நான் எழுதியுள்ள இதே வாக்கிய அமைப்பில் பல கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். ஆனால் அன்று நாகர்கோயில் மாநாட்டில் பேசும்போது, 'திண்டுக்கல்லிலேயிருந்த எட்டு தோழர்கள், மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகளைச் சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்று பேசிவிட்டார். மதிப்பிற்குரிய தோழர்களுக்குப் பதிலாக மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகள் என்று 'சொல்' இடம் மாறிவிட்டது! அவசரப்பட்டுப் பேசுவதால் வருகிற வினை!
     அதே மாநாட்டில் இன்னொருவர்! கவித்துவம் கொண்டவர்! அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்த இலக்கியப் பேச்சாளர் ஒருவரைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு, தானே அந்தக் கூட்டத்தில் கேலிக்குரியவரானார்.
    ;அந்தக் கங்கிரஸ் இலக்கியப் பேச்சாளர், சீதையை மணக்க இராமன் அயோத்தியாபுரியில் ஜனகனின் வில்லைமுறித்தான் என்று பேசினார்! பாவம்; அந்த இலக்கியப் புலிக்கு, ஜனகனின் தலைநகரம் அயோத்தியாபுரியா? அஸ்தினாபுரியா? என்று கூடத் தெரியவில்லை!'
     என்று ஏளனம் செய்தார்! மேடையிலிருந்த அண்ணா, நான் பேராசிரியர், நாவலர், சம்பத், நாஞ்சிலார் அனைவரும் சிரித்துவிட்டோம்.அதற்குள் நண்பர் ஆசைத்தம்பி குறுக்கிட்டு, 'யோவ்! ஜனகன் தலைநகரம் மிதிலாபுரி அய்யா!' என்று திருத்தினார். அத்துடன் விட்டாரா அந்தப் பேச்சாளர்? 'மன்னிக்கவும்! நான் இராமாயன ஞாபகத்தில் தவறாகக் கூறிவிட்டேன்' என்று மக்களை நோக்கிச் சொன்னார்! மாநாட்டுப் பந்தல் சிரிப்பொலியால் அதிர்ந்தது!
     நினைவு இழையில் வார்த்தை முத்துக்குளைக் கோப்பதற்கேற்ற நிதானத்தன்மை பேச்சாளர்களுக்கு மிக அவசியம்.
     ஆங்கிலப் பேரறிவாளர் அடிசன் பதினெட்டாம் நூற்றாண்டில் புகழேணியில் இருந்தவர். அவர் ஒருமுறை பேசமுற்பட்டு ' I conceive, conceive, conceive" என்று மூன்றுமுறை மூச்சுத்திணறக் கூறிக்கொண்டே நின்றாராம்! 'கன்சீவ்' என்பதற்கு 'நினைக்கிறேன்' என்றும் பொருள் உண்டு! ' கருவுற்றிருக்கிறேன்' என்றும் பொருள் உண்டு!
     அடிசன் இப்படி திணறிக் கொண்டிருந்தபோது, எதிரேயிருந்த ஒருவர் எழுந்து'அடிசன் மூன்றுமுறை கருவுற்றார்!  ஆனால், குழந்தையைத்தான் பெறவில்லை' என நகைச்சுவை பொங்கிடக் கூறினாராம்.
     ஆங்கில நாட்டுப் பெரும் பேச்சாளரான டிசரலி, முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச அஞ்சி நடுங்கினாராம். ' நான் படைக்குத் தலைமையேற்றுப் போர்க்களம் நோக்கிச்செல்ல அஞ்சிடமாட்டேன்; ஆனால் முதன்முதல் பாராளுமன்றத்தில் பேசத் தொடங்கி நான் பெரிதும் நடுங்கினேன்' என்று கூறினாராம்! அப்படித் தோல்வி மனப்பான்மையுடன் பேச்சாளராகத் தொடங்கி, பின்னர் அவரே மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அச்சத்தை விரட்டி, அதற்குப் பிறகு பெரும் பேச்சாளர் என்ற கீர்த்திக் கொடியை நாட்டினார்.

-கலைஞர் மு. கருணாநிதி


-,,,இன்னும் வரும்-12

Thursday, 21 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -10

  


பேசும் கலை வளர்ப்போம் -10    

பேசும் பொருளில் கவனம் செலுத்துவதைப்போல- பேசும் பாணியில் கவனம் செலுத்துவதைப் போல, ஒரு பேச்சாளர் உச்சரிக்கும் சொற்களும் பிழையின்றி அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
     ''ல'', ''ள'', இரண்டும் இடையினம்தான் என்பதற்காக ''அவர்கள் என்ன சொன்னார்கள்?'' என்று ஆவேசமாகக் கேட்கும் கட்டத்தில் ''அவர்கல் என்ன சொன்னார்கல்?'' என்று எவ்வளவு ஆவேசமாகக் கேட்டாலும், அது மக்கள் மத்தியில் 'அபஸ்வரமாக' ஒலிக்கும். இப்படி ''லகர'' ''வகர'' த்தை இடம்மாற்றிப் போட்டுப் பேசுகின்ற சொற்பொழிவாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
     '' கன்னனைக் காணச் சென்ற குசேளன், கையில் அவள் கொண்டு சென்றான்.''
     ''ல'' கரத்தை ''ள''கராமாகவும்! ''ள'' கரத்தை ''ல''கரமாகவும் ''ன''கரத்தை ''ண''கரமாகவும் ''ண''கரத்தை ''ன'' கரமாகவும் மாற்றி உச்சரிக்கும் பெரும் பிழையினைத் திருத்திக் கொள்ளப் பேச்சாளர்கள் முன்வரவேண்டும். திக்குவாய் படைத்தவர்கள், தங்களின் அயராத முயற்சியால் நல்ல கருத்துக்களை ஒழுங்குபட எடுத்துச் சொல்லுகிற ஆற்றலைப் பெற்றிருப்பதைக்காண முடிகிறதல்லவா? அதனால் உச்சரிப்புப் பிழைகளைத் திருத்திக் கொள்கிற அளவுக்குப் பேச்சாளர்கள் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டால் வெற்றிகிட்டாமற் போகாது!
     ஒருசில பேச்சாளர்கள் தாங்கள் சொல்ல விரும்புகிற விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதாக எண்ணிக் கொண்டு ஒரு  பெரும் தவறு செய்கிறார்கள்.
     'நமது மொழியைப் பற்றிச்சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால், நமது நாடி நரம்புகளில் எல்லாம் சூடும் சுவையும் ஏறுகிறது.''
     இதில் 'பற்றிச்' என்பதில் ''ச்'' என்ற எழுத்தைத் தேவைக்கு அதிகமாக அழுத்துவார்கள். ''சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால்'' என்று தேவையில்லாமல் ''ச்'' என்ற எழுத்தைப் பேசும்போது பயன்படுத்துவார்கள். ''நாடி நரம்பு'' என்பதை ''நாடி நறம்பு'' என்று பல்லைக் கடித்துக்கொண்டு உச்சரித்து ''நறம்புகளில்'' என்று அழுத்திக் கூறுவார்கள்.இவையனைத்தும் குறையுடைய சொற்பொழிவுகளேயாகும்.
     ஒரு வேடிக்கை நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட விரும்புகிறேன். 1957-ல் குளித்தலைத் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு உறுப்பினராக அமர்ந்திருக்கிற காலம்! சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அவையின் மரபுக்குப் புறம்பான சொற்களைப் பயன்படுத்தினால், அதைச் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல மற்றொரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சனையெழுப்பி சுட்டிக்காட்டலாம். அது ஒழுங்கு பிரச்சனையா-அல்லவா என்பதைச் சபாநாயகர் தீர்மானித்து, மரபுக்கு மாறாகப்பேசிய உறுப்பினருக்கு அறிவுரை கூறுவார். அல்லது அந்தக் கருத்துக்களை சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட உத்தரவிடுவார்.
     1957-காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும்  கடும் மோதல் இருந்த காலம். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தி.மு.கழகத்தைச் சட்டசபையில் மிக வேகமாகக் கண்டித்துப் பேசக்கூடியவர். எனக்கு அவர்மீது மிகுந்த கோபம் உண்டு. தனிப்பட்ட முறையிலே அல்ல! அவர் பேசுகிற முறையிலேதான்! ஒருநாள் அவரைச் சபையில் சிக்க வைக்கவேண்டுமென்று காத்துக் கொண்டேயிருந்தேன். அவர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவருக்கு இந்த லகர-ளகரப் பிரச்சனைதான்.
     ''தி.மு.கழகத்தை எடுத்துக் கொல்லுங்கள்! அவர்கள் பேசுவதை எடுத்துக்கொல்லுங்கள்! உதாரணத்திற்கு திருவல்லுவரை எடுத்துக் கொல்லுங்கள்!''
   இப்படிப் பேசிக்கொண்டேயிருந்தார்! நான் உடனே குறுக்கிட்டு, ''தலைவர் அவர்களே! ஒருபாய்ண்ட் ஆப் ஆர்டர்!'' என்றேன். அப்போது சபாநாயகர் டாக்டர் கிருஷ்ணாராவ்! தங்கமான மனிதர்! மழலைத் தமிழ் பேசக்கூடியவர்! ''என்ன பாய்ண்ட் ஆப் ஆர்டர்?'' என்றார்.
     பேசுகிற உறுப்பினர்..........கொல்லுங்கள்! கொல்லுங்கள்! என்று பலாத்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாரே! அது சரியா?''
     என்று கேட்டுவிட்டு உட்கார்ந்தேன். உடனே சபாநாயகர் கிருஷ்ணாராவ் அந்த உறுப்பினரைப் பார்த்து ''மிஸ்டர்..........அவர்களே! ....பலாத்காரமாகப் பேசாதீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தார்! என் எதிரே அமர்ந்திருந்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த உறுப்பினருக்குத் தாங்கமுடியாத வெட்கம்! எனக்குப் பெரிய வெற்றி என்று எண்ணிக்கொண்டேன்.


   தமிழின் தனிச் சிறப்பு வாய்ந்த ''ழ''கரமும் சில பேச்சாளர்களின் வாயில் சிக்கிப் படாத பாடுபடுகிறது!
     தமிழையே ''தமிஷ்'' என்றுகூட உச்சரிக்கிறார்கள். ''வாழு! வாழவிடு'' என்று சொல்லக் கருதி; ''வாலை! வாலைவிடு! என்று  சொல்லுகிறார்கள்.


    சித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப முயற்சி எடுத்து, அத்தகைய தவறான உச்சரிப்புக்களை நீக்கிக்கொள்ள முடியும். பேச்சாளராகப் பெயர் எடுக்க விரும்புவோர் உச்சரிப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


-இன்னும் வரும்-11

Wednesday, 20 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 9





 பேசும் கலை வளர்ப்போம்-9

     சென்னை புரசைவாக்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டம். நானும் பேராசிரியர் அன்பழகனார் அவர்களும் கலந்துகொண்டோம்.  பேராசிரியர் பேச எழுந்தபோது அவரிடம் ஒரு பெண்மணி கைக்குழந்தையொன்றைத் தந்து , பெயர் சூட்டும்படிக் கேட்டுக்கொண்டார். அது பெண் குழந்தை! பேராசிரியர் அதற்குக் ''கருணாநிதி'' என்று பெயர் சூட்டினார்.  கருணாநிதி என்ற பெயர் எல்லா மதத்தினருக்கும், ஆடவர்-பெண்டிர் இருபாலருக்கும் பொருந்துகிற பெயர்!
     ஒரு காலத்தில் ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் திராவிடர் இயக்கம் வளர்ந்த திரு. பாஸ்கரன் அவர்களின் துணைவியார் பெயர்கூட கருணாநிதிதான்! ''கருணை-நிதி'' அதாவது அருட்கருவூலம்-அல்லது அருட்செல்வம்-இப்பெயர் எம்மதத்திற்கும்-ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக் கூடியதுதானே-அதனால் பேராசிரியர் சிரித்துக்கொண்டே, அந்தப்பெண் குழந்தைக்கு 'கருணாநிதி' என்று பெயர் வைத்ததும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு!
     பின்னர் அவர் பேசி முடித்தார். நான் பேச எழுந்தேன்.என்னிடமும்  ஒரு தாய் தன்னுடைய பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து பெயர் சூட்டுமாறு கேட்டார். நான் அந்தக் குழந்தைக்கு ''அன்பழகி'' என்று பெயர் வைத்து-பேராசிரியர் மீது எனக்கிருந்த செல்லக் கோபத்தைத் தணித்துக் கொண்டேன்.
     ஒரு பேச்சாளர் கூட்டங்களில் தூக்கிக்கொண்டு வருவார்! பெயர் வையுங்கள் என்பார்! இன்னாருடைய குழந்தைக்கு இன்ன பெயர் சூட்டப்படுகிறது என்று ஒலிபெருக்கியில் சொல்வதற்காக அவரைப் பார்த்துக் குழந்தையின் தகப்பனார் பெயர் என்னவென்று கேட்போம்! உடனே அவர் ''நான்தான்'' என்பார். பரபரப்பில் பெயரைச் சொல்லத்திணறுவார். பிறகு ஒரு வழியாகத் தன் பெயரைக் கூறுவார். அவரது பெயர் அப்துல் ரகுமான் என்று இருக்கும்.
     அந்தக் குழந்தைக்கு என்ன பெயரை அவர் விரும்புகிறார்-இஸ்லாம் மார்க்கத்துக்கேற்ற பெயரையே விரும்புகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆம் என்றால் ஷாஜகான்-ஜகாங்கீர்-இக்பால்-என்பன போன்ற பெயர்களில் ஒன்றை ஆண் குழந்தைக்கும், நூர்ஜகான், மும்தாஜ், கதீஜா போன்ற பெயர்களில் ஒன்றை பெண் குழந்தைக்கும் சூட்ட வேண்டும். அந்தப் பெயர்களைக் கேட்டுப் பெற்றோரும் அவர்கள் உற்றாரும் மகிழ்ச்சி அடைவர்!
     பொதுவான பெயர்களைச் சூட்டுவதெனில் கதிரவன், கதிரொளி, அன்புமணி, அறிவுமணி, கணிமொழி, கயல்விழி, எழிலரசி என்பன போன்ற எல்லா மதத்தினருக்கும் பொருந்தக்கூடிய பெயர்களைச் சூட்டலாம்.
     இப்படிப் பெயர் வைப்பதிலேயிருந்து கூட்டத்தில் பேசிப் பெயரெடுப்பது வரையில் பேச்சாளர்கள், மிகுந்த அக்கறையுடன் இருந்திடல் வேண்டும்.
     மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு அ.தி.மு.க. ஆட்சியினரால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டையொட்டித் திறந்து வைக்கப்பட்ட சுற்றுலாவாரிய  ஓட்டலுக்கு ''இராசராசன்'' என்று பெயர் சூட்டி, அதற்கான பெரிய அளவு விளம்பரங்கள் அனைத்தும் செய்யப்பட்டன.  ஓட்டல் முகப்பில் 'இராசராசன்'' என்ற பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், திடீரென்று திறப்புவிழா நாளன்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் பெயரை அகற்றச் சொல்லிவிட்டார். அச்செயல் தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
     அச்சமயம் எனது சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் தஞ்சை, திருச்சி, புதுக் கோட்டை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  அந்த நிகழ்ச்சிகளின்போது மேடைகளில் என்னிடம் பெயர் சூட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆண் குழந்தைகள் பலருக்கு''இராசராசன்'' என்றே பெயர்வைத்தேன். உடனே கூட்டத்தினர் ''இராசராசன்'' வாழ்க!'' என முழங்கினர். பெயர் வைப்பதில் கூட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்தம் இதய ஒலியை எதிரொலிக்கப் பயின்றிருக்க வேண்டுமெனில், நாட்டில் உள்ள எத்தனையோ பிரச்சனைகளில் மக்களின் கவனத்தைக் கவருவதற்கு ஏற்றவண்ணம் பேசும் கலையை வளர்த்துக் கொள்ளுதல் இன்றியமையாத்து அல்லவா?
     ''ஈஸ்த்துகிணு போ!'' என்ற சென்னை தமிழும், ''எலே! வாலே!' என்ற நெல்லைத்தமிழும், ''அந்தாண்டே! இந்தாண்டே'' என்ற தஞ்சைத் தமிழும் ''கீறியா? என்னாப்பா பேப்பர் கீதா?' வட ஆற்காட்டுத்தமிழும். இவ்வாறு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுகிற தமிழும்-பேசுகிறவர்கள், மேடையில் ஏறிப்பேசினால், அவர்கள் நல்ல பேச்சாளர்கள் என்றால், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மேடைக்கேற்ற இலக்கணத் தமிழையே பேசுவர்!
     சொற்பொழிவு மேடைக்கு அத்துணைச் சக்தி உண்டு! அந்தச் சக்தியை அலட்சியப்படுத்தி, எந்தப் பேச்சாளராவது தாங்கள் பழக்கத்தில் பேசுகிற வழூஉச்சொற்களையே மேடையில் பயன்படுத்தினால் அவர்கள் நல்ல பேச்சாளர் பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். ஏதோ அந்தக் கூட்டத்தில் சொல்லவேண்டிய கருத்தைச் சொன்னார் என்ற அளவிலேதான் அவரது பேச்சு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அவர் ஒரு பேச்சாளராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்.


-கலைஞர் மு. கருணாநிதி


இன்னும் வரும்-10

Tuesday, 19 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -8



 

பேசும் கலை வளர்ப்போம்-8


அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சொற்பொழிவாளராகத் தமிழகத்தில் அறிமுகமான தொடக்கக் காலத்திலே அவரது பேச்சில் அடுக்குச் சொற்கள் மிகுதியாக வந்துவிழும். ஆனால், அந்த சொற்கள் எதுவும் பொருள் இல்லாமல் ''அ'' வுக்கு ''அ'' , ''க'' வுக்கு ''க'ய என்ற நிலையில் கையாளப்பட்டதில்லை! ''மாளிகையில் இருந்த நீதிக் கட்சியை மைதானத்திற்குக் கொண்டு வந்தவர் பெரியார்'' என்று அண்ணா பேசுவதின் மூலம், அந்தக் கட்சி ஏழை எளியோர்களின் கட்சியாக மாற்றப் பட்டுவிட்ட வரலாற்று உண்மையை அடுக்குத் தொடரால் விளக்கிவிடுவார். மக்கள் உள்ளம் கவர்ந்திடுவார்.      அரசியலார் 144 தடைச்சட்டம் போடுவார்களேயானால் அதனை அப்படியே தகவலாகச் சொல்லித் தாக்கிடாமல், ''நாகரிக நாட்களிலே நாக்கறுக்கும் சட்டமா''? என்று மேடையில் கேள்விக்கணை பொழிவார்.இதனைக் கண்ட சிலர், தாங்களும் பேச்சாளராக அடுக்குச் சொற்களைக் கோத்துப் பேசினால் போதுமெனக் கருதினர். பேசும்பொழுது அடுக்குச் சொற்களானாலும் அழகான தமிழானாலும் தானாக வந்து பொழிந்திட வேண்டுமேயல்லாமல் அவற்றைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்திப் பேச முனைந்தால் பேச்சுக் கலையில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும்.
     ''அடக்குமுறைகளால் முடக்கிவிடலாமெனத் துடுக்கு கொண்டு மிடுக்குடன் நடப்பது அடுக்குமோ என நான் ஆத்திரத்துடன் அரசாங்கத்தை அறைகூவல்விட்டுக் கேட்கிறேன்.''
     இது அடுக்குச் சொல்லை மட்டும் நம்பிப் பேசுகிற பேச்சு! நான் முதலில் குறிப்பிட்டதைப்போல அண்ணாவுடன் நாடகத்துக்குச்சென்ற நிகழ்ச்சி வேறொன்றை நினைவு படுத்துகிறேன்.
      தாம்பரத்திற்கருகே நாடகம்! நாடகத் தலைப்பு, ''மரணப்படுக்கையில்'' என்பது! நாடக விளம்பரங்கள் ''மரணப் படுக்கையில் அண்ணா'' என்றே சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. நாடகத்திற்கு அண்ணா தலைமை வகிப்பதைத்தான் அவ்வளவு அழகாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
     அண்ணாவுடன் நானும் சென்றிருந்தேன்.  ஆரம்பம் முதல் ஒரே அடுக்குச் சொல் வசனம்தான்.
     ''பேயனே! அந்த பேப்பரை எடுத்துவரச் சொன்னால், என்னமோ பிரமாதமாக நின்றுகொண்டு பிரம்மராட்சசனைப்போலப் பேந்தப் பேந்த விழிக்கிறாயே!''
    இது போன்ற வசனங்களுக்கெல்லாம் ஒரு உச்சக்கட்டம் என்ன தெரியுமா?
     வில்லன், கதாநாயகனைப் பார்த்து, ''உன் விஷயத்தில் நான் சர்ப்பமாக இருப்பேன்'' என்கிறான். உடனே கதாநாயகன் வில்லனை நோக்கி,'நான் சர்ப்பத்தையும் சாம்பார் வைத்துச்சாப்பிடுவேன்.' என்கிறான், அய்யோ அடுக்குச் சொல் படும்பாடே!'' என்று அண்ணாவும் மற்றவர்களும் நினைத்துக் கொண்டோம்!
     மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமிருக்கும்!''
     ''சாலையோரத்தில் வேலையற்றுதுகள். வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்! வேந்தே! அதுதான் காலக்குறி!''
     இப்படி எழிலார்ந்த நடைபோட்ட அண்ணாவின் அடுக்குச் சொல்லைக் கையாண்டு எல்லோரும் வெற்றி பெற்றுவிட முடியவில்லை. காரணம், அவர்கள் கையாண்ட அடுக்குச் சொற்களில் கருத்தோட்டமில்லை.


     அண்ணா அவர்களேகூட, தனது பேச்சுக்களையும் எழுத்துக்களையும் மக்களுக்காகப் புரியவைப்பதில்-அவர்களது இதயங்களில் பதியவைப்பதில் அக்கறை காட்டினாரே தவிர-வெறும் அடுக்குச் சொல்லை அடுக்கி, சொல்ல வேண்டியவைகளைச் சொல்லாமல் விட்டுவிட்ட குறைபாட்டுக்கு என்றைக்குமே தன்னை ஆளாக்கிக் கொண்டதில்லை.
     மேடையில் பேசுவதற்கு எடுத்துக் கொள்கிற பொருள்தான் மிக முக்கியம்! பொன் கட்டியைப் போன்றது பொருள் என்றால், அதனை அணியாகச் செய்து மெருகேற்றிடுவதுதான் சொற்களும்-சுவையான உவமைகளுமாகும்!
     மேடையில்  ஏறி நின்று வெறும் வார்த்தை ஜாலங்கள் புரிந்துவிட்டு, தனக்குத் தெரிந்த நாலு கவிதைகளை அழகாகக் கூறிவிட்டு, எந்தக் கருத்தையும் வலியுறுத்தி மக்கள் உள்ளத்தில் பதிய வைக்காமல் இறங்கிவிட்டால், ஏதோ ஒரு வாத்தியக் கருவி செய்த வேலையைத்தான் செய்ததாக ஆகும்! அந்தச் சங்கீத்தைச் சிறிது நேரம் ரசிப்பது போலத்தான் அந்தப்பேச்சையும் மக்கள் ரசிப்பார்கள்!.
     இதயமற்றவரைப்போல ஒரு முதலமைச்சர் நடந்து கொண்டு, மக்கள் மீது அடக்கு முறையை அவிழ்த்துவிட்டதை ஒரு முறை , கடற்கரைக் கூட்டத்தில் அண்ணா குறிப்பிட்ட அழகே அழகு!
     ''நமது முதல்வருக்கு உள்ளமிருக்குமென்று நம்பினேன். ஆனால் பாவம்; அவருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே ஒரு பள்ளம்தான் இருக்கிறது''!
     ''உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன1''
     சட்டசபையில் விநாயகம் அவர்கள் அண்ணாவை நோக்கி இந்தச் சொற்களை வீசியவுடன்,
     ''என் அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன!''
      என்று அண்ணா பதில் அளித்த பாங்கினை விநாயகமே வியந்து போற்றினார்.
     சட்டக்கல்லூரியில் ஒரு விழா! நானும் குமரி அனந்தன் அவர்களுன் கலந்து கொண்டோம்! அவர் என்னை விளிக்கும்மோது; ''குறளோவியம் போல் விளிக்கிறேன் ''மு.க.'' அவர்களே!'' என்றார்.
     நான் அவரை விளிக்கும்போது. ''நானும் குறள் போல விளிக்கிறேன்;''அன்புள்ள குமரி'' அவர்களே!'' என்று கூறினேன்.
     ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர்.


-கலைஞர் மு. கருணாநிதி


-இன்னும் வரும்-9