Pages

Tuesday, 9 February 2010

வரி ஏய்த்த நகை கொள்ளை போனது, அபகரித்தவர் வாழ்க்கை கொள்ளியில் போனது!




சில வருடங்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு விசேஷத்திற்காக தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகையால் அங்கு புறப்பட்டு சென்றேன். அந்த பகுதி பகலில்  மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் சந்தைப்பகுதி, உறவினர் இல்லமும் அந்தப் பகுதியொட்டிய தெருவில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

வீட்டிற்குள் நுழையும் போதே உறவுக்காரப் பாட்டனாரிடம் சில அதிகாரிகள் கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் எதிர்வீட்டில் அந்த அரசு அதிகாரிகள் போவதும் வருவதுமாகவும், சிலப்பெட்டிகளை தூக்கி வருவதுமாக இருந்தனர். அது  ஒரு மார்வாடி வீடு, வெளியில் நிறுத்தப்பட்ட வாகனம் பழைய ஸ்டாண்டர்டு வேன், (முற்றிலும் சீலிடப்பட்ட வாகனம்) இப்பொழுது அங்கே என்ன நடக்கின்றது என்பதை நானே யூகித்துக்கொண்டேன். 

வேறொன்றமில்லை வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த மார்வாடி முகத்தில் சவக்கலை, அந்த அதகாரிகளிடம் என்னென்னவோ பேசி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர்கள் அதை அலட்சியம் செய்து கொண்டே அவர்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். அந்த மார்வாடி பல இடங்களில் பவுன் புரோக்கர் மற்றும் வட்டிக்கடை நடத்திவருபவர்.

மெதுவாக அங்கிருந்த உறவுகளிடம் '' என்ன? கையொப்பம் வாங்குகின்றனர்! பாட்டனாரிடம்...'' (அது ஒரு பெரிய கூட்டு குடும்பம், அந்த வீட்டின் மூத்தவரான அந்த (பாட்டனார்) பெரியவர் ஊர்த்தலைவர், அரசியல் புள்ளி மற்றும், வியாபாரி சங்கத் தலைவரும் ஆவார்) என்று வினவியபோது. அவர்கள் கூறியபோது எதிர் வீட்டில் நடக்கும் சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள், சொத்துக்கள், மற்றும் ரொக்கங்கள் இவற்றிற்காக சாட்சி கையொப்பம் வாங்குகின்றனர். 

இதற்காக அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் '' நீங்களே பெரியத் தலைவராக இருந்து கொண்டு மறுத்தால் எப்படி?'' என்று வாதாடிக்கொண்டிருந்தனர். அது வேறொன்றுமில்லை அந்த மார்வாடி எதிர் வீட்டுக்காரர் தவறாக நினைத்துவிடப்போகிறார் என்ற அச்சத்தில் தான் அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். இறுதியில் கையொப்பம் போட்டுவிட்டார். பொருள்களும் வாகனத்தில் போய்விட்டது.

இது இரவு பகலாக இரண்டு நாளாக நடந்து கொண்டிருந்த  சோதனை அன்று தான், அதாவது  நான் செல்லும் போது தான் முடிவடைந்திருக்கிறது.

இதில் என்ன செய்தியிருக்கிறது..... இதற்கு பின் தான் ஒரு செய்தியிருக்கிறது..

அதற்குபின் ஒருவாரம் அங்கே தங்கியிருந்தேன். அன்றிரவே அந்த வீட்டு மொட்டை மாடியில், தூக்கம் வராமல், நடு இரவில் காற்று வாங்குவதற்காக தற்செயலாக சென்றேன் இரவு 1 மணியளவில். அப்போதே அந்த விட்டு கூரையின் மீது சில நடமாட்டங்கள் நிழலாகத் தெரிந்தது. வேறோருவராக இருந்தால், அந்த திடீர் உருவங்களைப் பார்த்து பேய் என்று பயந்து வந்திருப்பார்கள். அந்தப் பகுதியில் இரவில் ஒரு நடமாட்டமும் இருக்காது. ஆள் அரவமற்று நிசப்தமாக இருக்கும்.

சில உருவங்கள் குனிவதும் என் தலை பார்த்ததும், பதுங்குவதுமாக இருந்தது. அந்த உருவங்கள் எதையோ தேடிக்கொண்டிருந்ததை மட்டும் என்னால் சந்தேகத்துடன் உணரமுடிந்தது. அது பற்றியும் உறவுகளிடமும் விசாரித்தேன் என்னைத்தான் திட்டினார்கள்... உனைன யார் பேய் உலாவுகின்ற நேரத்தில் மொட்டை மாடிக்கு செல்ல சொன்னது.... என்று பெரியவர்கள் எனக்கு சுற்றிப்போட ஆரம்பித்தனர்.

மீண்டும் அந்த விசேஷ நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்பினோம். ஒரு 1 மாதம் கழித்து மீண்டும் அந்த இல்லம் சென்று தங்க வேண்டியிருந்தது. சென்றேன். இந்த முறை அந்த மார்வாடி வீட்டில் பாட்டுக்கள் (இந்திப் பாடல்கள் தான்) ஒலித்து கொண்டிருந்தது. வீடே மங்களகரமாக இருந்தது. மார்வாடி வீட்டில் உள்ள உறவுகள் அனைவரும் மார்வாடி வீட்டில் போய்க்கொண்டிருந்தனர். 

மார்வாடி வீட்டு பக்கத்து வீட்டில் ஒரு பால்காரர் வசித்துவருகிறார். அவர் முந்தைய இரவில்  மாரடைப்பால் அகால மரணமடைந்து அவருடைய உடல் வெளியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.  அங்கிருந்த பகுதி மக்கள் அந்தப் பால்காரரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதையை செலுத்திவிட்டு புன்னைகயுடன் போய்க்கொண்டிருந்தனர்.  போகும் போது அனைவரும் மார்வாடியைப் பார்க்கத் தவறவில்லை. பக்கத்து வீட்டில் துக்கம் மார்வாடி வீட்டில் பாட்டு, குதூகலம்.... இது திடீரென்று பார்ப்பவர்கள் அனைவருக்கும் சந்தேகத்தை உருவாக்கியது. மார்வாடி எதை பற்றியும் கவலைப்படாமல் இதை செய்து கொண்டிருந்தார்.

இவர்கள் ஏதோ விஷயம் புரிந்து கொண்டு சிரிக்கின்றனர். இத்தனைக்கும் துக்க வீட்டிற்கு சென்று வருபவர்கள் சிரிப்பார்களா? எனக்கு வழக்கம் போல சந்தேகம் வந்து உறவுகளிடம் கேட்ட பொழுது ஒரு கதையை கூறினர்.....அந்த கதை இது தான்...

கடந்த முறை தணிக்கை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீரென்று நிழைய முற்பட்டபொழுது அந்த மார்வாடி அனைத்து நகைகளையும், எடுத்து வீட்டின் கூரை மீது எறிந்திருக்கிறார். அது பல இலட்ச மதிப்புள்ள நகைகள். இதை இரு கண்கள் முதலிலேயே பார்த்து விட்டது. அதற்கு பின் கதவைத்திறந்து அதிகாரிகளை உள்ளே விட்டிருக்கிறார் இந்த மார்வாடி. வீட்டின் சோதனை நடைபெற்றிருக்கும் பொழுதே ஒரு உருவம் முகத்தை மறைத்து கொண்டு பக்கத்து வீட்டின் மாடி சன்னல் பகுதியில் இருந்து கையை விட்டு இந்த மூட்டைகளை எடுத்துக் கொண்டது. 

அந்த உருவம் வேறு யாருமல்ல. அந்த பக்கத்து வீட்டு பால்காரர் தான். இதை இந்த மார்வாடி பார்த்துவிட்டார். அப்போது கத்தவும் முடியாது. தன் கண்ணெதிரே நகை களவாடப்படுவதை இல்லையில்லை எடுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார், அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிய மார்வாடி. அவர் அதை பிறகு பக்கத்து வீட்டாரிடம் பார்த்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.

வருமான வரி சோதனைகள் முடிந்து அவர்கள் புறப்பட்டதும். அந்தப் பால்காரரிடம் போய் நகைகளை கேட்டிருக்கிறார் மார்வாடி.

''பால்காரர் எந்த நகை? என்னிடம் வந்து கேட்கிறாய்? ''என்று பதிலுக்கு ஒன்று தெரியாதவர் போல் நடிக்க... 
....மார்வாடி தொடர்ந்து நடந்தவைகளைக் கூற....
...''நான் எதையும் எடுக்கவில்லை... வேண்டுமானால் காவல் துறையில் போய் முறையிடு....''
(அங்கே போக முடியாதே! இது தெரிந்து தான் பால்காரர் சமயோசிதமாக சொல்கிறார்)
....''''இந்த சோதனைப் பற்றியே எனக்குத் தெரியாது''... என்று பால்காரர் முரண்டு பிடிக்க... ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்றி...வாய்த்தகராறில் முடிந்தது... ...''என் நகை போனது என்...... (முடிக்கு) சமம், நீ எப்படி வாழ்ந்துவிடுகிறாய் என்று பார்த்துவிடுகிறேன்...''

என்று அவர் பங்குக்கு கூறிவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார், அந்த மார்வாடி.

இனி என்ன பால்கார்ருக்கு செம குஷி... நகைகளை அப்போதே ஊரில் எடுத்து சென்று பதுக்கி வைத்துவிட்டார், இந்த விபரீத மனிதர்.  உடனே ஊருக்குச் சென்றார் கொஞ்சம் கொஞ்சமாக காசாக்கினார். மிக ஜாலியாக குடியும், குடித்தனமுமாக போயிற்று. ஒரு கட்டத்தில் இவரின் சந்தோஷம் எல்லை மீறி மிக அதிகமாக குடித்தார் மாரடைப்பு வந்து விட்டது. அப்படியே சந்தோஷ மரணமடைந்துவிட்டார்.

இப்போது தெரிந்து விட்டது மார்வாடி ஏன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார் என்று? மார்வாடிக்கு மிக சந்தோஷம். பால்காரர் வீட்டில் துக்கம் இவர் வீட்டில் பாட்டுக் கச்சேரி..... திரைப்படத்தில் வந்த வடிவேல் நகைச்சுவை மாதிரி இருந்தது.

வரி ஏய்த்த காசு வாய் புளித்திடுமா?....நாய் வித்த காசு தான் குரைத்திடுமா?....

வரி ஏய்ப்பினால் மார்வாடி நகைகள் கொள்ளை போனது... அதை அபகரித்தவர் வாழ்க்கையோ கொள்ளியில் போனது.... என்று அங்கிருந்தவர்கள் முனகி கொண்டு சென்றனர்... இப்படியல்ல இப்படி...
ஊரை ஏய்த்த மார்வாடிக்கு (மசிறு )போச்சு..... அதை பிடுங்கித்தின்ன பால்காரருக்கு உசிறு போச்சு....
மார்வாடி அப்படித்தானே நகைகளை தூக்கி போட்டார் சர்வ சாதாரணமாக விட்டின் கூரை மேல்....

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த விஷயத்தையே அந்த பகுதி மக்கள் தங்களுக்குள் நகைச்சுவையாக சொல்லி சிரித்து கொண்டிருந்தனர்.

இப்போது எனக்கும் புரிந்து விட்டது அன்று ஏன்? நடுஇரவில் அந்த வீட்டின் கூரை மீது நடமாட்டம் தெரிந்ததின் பின்புலம். இதை என் உறவுகளும் உறுதி படுத்தினர். அதற்கு பின் தொடர்ந்து அந்த வீட்டின் கூறை மீது பலர் நடு இரவில், சிறுவர்களும், பேய் மாதிரி தேடிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. ஆசை எனும் பேய் யாரை விட்டது. அது பிடிக்காத மனிதர்கள் இல்லை. 

''ஆசையே துன்பத்திற்கு காரணம் '' என்று இதற்குத்தான் சாக்கிய முனிவரான கௌதம புத்தர் சொன்னாரோ?


Friday, 5 February 2010

தவறான கணிப்பு..... பாதிப்பு யாருக்கு.....!





இந்தப் பதிவு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பரும் நானும் சந்தித்த நிகழ்வினை பகிர்ந்து கொள்ளும் எண்ணமே. இது அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் நிகழலாம். நிகழாமலும் போகலாம்....

ஒரு முறை என் அலுவலக் மூத்த நண்பர்  ஒருவர் தற்செயலாக என்னிடம் ஒரு 3000 ரூபாயை கொடுத்து ஆயுள் காப்பீட்டில் அந்த பக்கமாக செல்லும் வேலையிருந்தால் கட்டிவிடவும் என்று கூறினார். அனைத்து ரூபாய் தாள்களும் இந்தியாவன் பிரபல தனியார் வங்கியில் இருந்து தானாயங்கி மூலம் பெறப்பட்டவை ஆகும்.  இரண்டு 500 ரூபாய் தாள்களும் இருபது  100 ரூபாய் தாள்களும் இருந்தன. 100 ரூபாய் தாள்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அடங்கிய தொடர் எண்கள் கொண்டவை. 

அவர் கொடுத்த பணம் லேசாக கசங்கி இருந்தது. காரணம், இந்த 100 ரூபாய் நோட்டுக்களை பழைய கால் சட்டையிலிருந்து (பேன்டிலிருந்து) எடுக்காமல் அதை அப்படியே மின்சார சூடு சலவை எந்திரத்தில் (டிரையர்) போட்டு துவைத்துவிட்டார் மனிதர். அதற்குப்பின் தான் அவருக்கு அந்த ரூபாய் தாள்கள் கால் சட்டையில் வைத்ததே ஞாபகத்திற்கு வந்திருக்கிறது.  பின்பு அது அனைத்தையும் எடுத்து பார்த்தவுடன் தாள்களின் மேல் உள்ளப் பூச்சுக்கள் லேசாக அழிந்திருந்தது. (மைகொட்டினால் அழிந்தது போல் அல்ல) தாள்களின் மேல் வழவழப்பான பூச்சு மட்டுமே அழிந்து லேசாக ஒரு சில இடங்களில் மட்டும் சொர. சொரப்பாக மாறியத் தாள்களாக கிழியாமலே இருந்தது.

இன்னும் புதுசு போலவே இருந்தது.  வழக்கமாக துணிகளில் தெரியாமல் வைத்துவிட்டு பின் துவைத்து விட்டு பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது. பலத் தாள்களை அப்படித்தான் பயன்படுத்தியிருக்கிறோம். இன்னும் பயன்படுத்தி கொண்டு தான் வருகின்றோம். மேலும் இது மாதிரி துவைப்பதினால் இந்த தாள்கள் பாதிப்படைவதில்லை என்பதும் இந்திய சேம வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) அளித்துள்ளத் தகவல்கள் தான். 

அதன்படி அவரிடம் இது ஒன்றும பெரிய விஷயமில்லை என்று வாங்கிச் சென்று கட்டத் தயாரானேன். அந்த அலுவலகம் ''''என்  நண்பர்கள் பணிபுரியும் ஆயுள் காப்பீட்டு கிளை அலுவலகம் தான். ஆகையால் பிரச்சினை ஒன்றுமில்லை என்றும், வந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்'''' என்று கூறிப் பெற்றுச் சென்றேன்.

அதே போன்று கிளைக்குச் சென்று கட்டணம் செலுத்தும் இடத்தில் அந்த பணத்தை கொடுத்து காப்பீட்டு எண்ணையும் கொடுத்தேன். காசாளராக பெண் தான் இருந்தார். வழக்கம் போல் அனைத்து நோட்டையும் புறவூதாக் கதிர் உட்பாட்டுக்கு கொண்டு சென்றனர். அதில் என்ன தெரிந்த்தோ? தெரியவில்லை? (ஒரு அலை போன்ற மாறுபாட்டை காட்டியிருக்கும் மற்றபடி அது எந்த தகவலையும் அளிக்காது) இது போலி என்று சுட்டிக்காட்டினர். நான் அந்த நபருடைய காப்பீட்டு எண் மற்றும், தொலைபேசி எண், அனைத்தையும் கொடுத்து அவரிடமே இது பற்றி விசாரிக்கச் சொன்னேன். இருந்தாலும் நான் தான் அளித்தேன் என்பதால், என்னையே தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். நான் அவரிடம் தொடர்பு கொண்டு அந்த தாள்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்ற விவரத்தையும் சொன்னேன்.

அது சம்பந்தமான பரிவர்த்தனை ரசீதும் (டிரான்சாக்சன் சிலிப்) தன்னிடம் உள்ளதாகவும் அது எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டது என்பதையும் நண்பர் தெரிவித்தார்.  பின் அந்த தனியார் வங்கியை அவர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். எங்களிடம் அந்த மாதிரி தாள்கள் வருவதில்லை. அதை தணிக்கை செய்ய தனியாக ஒரு பிரிவே செயல்படுவதாகவும் அந்த வங்கி கறாராகத் தெரிவித்தது. அந்த எண்ணில் சரியானத் தாள்கள் உள்ளது என்பதை அந்த வங்கியும் தெரிவித்த்து. அப்படி சந்தேகம் என்றால் வேறு தாள்கள் தரவும் அந்த தனியார் வங்கி ஒப்புக்கொண்டது. இது அனைத்தையும் தொலைபேசியில் தெரிவித்தார்.

ஆனால் இவர்கள் அருகில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள காசாளரிடம் இந்த தாள்களை காட்டி அவரிடமும் வய்மொழி மூலம் போலி என்று ஒப்புதல் பெற்றுக் கொண்டனர்.

அந்த காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் நண்பர் இவரை எனக்குத் தெரியும் இவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கூறிவிட்டார்.  அவர்கள் பின் என்னை தொந்தரவு செய்வதை விட்டு விட்டனர். பிறகு உள்ளே சென்று மேலாளர் அறையில் ஏதேதொ பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களாகவே வந்து அனைத்து தாள்களிலும் போலி என்று தடிமனான எழுத்தில் எழுதினர்.. அப்படியே நன்றாக உள்ள  500 ரூபாய் தாள்களிலும் எழுதிவிட்டனர். அது நான்றாகத்தானே இருக்கிறது என்றால் இல்லை, ஒருவர் கொண்டு வரும் தாள்களில் ஒரு கத்தை நோட்டே போலி என்று கண்டுணர்ந்தால். அவர் கொண்டு வந்துள்ள தாள்கள் அனைத்துமே போலியாகத் தான் இருக்கும் என்ற முடிவுக்குத் தான் வரமுடியும் என்று கூறிவிட்டனர். (எல்லாமே யூகம் தான்)


இதற்கு பின் நண்பரே கிளைக்கு வந்து என்னிடம் முதலில் வருத்தத்தை தெரிவித்தார். வீணான சிரமத்திற்கு உங்களை ஆளாக்கிவிட்டேன் என்று மிகவும் வருந்தினார். அவருக்கு என்னை சிக்கலில் மாட்டவிட்டோமே என்ற வருத்தம் மட்டுமே. மற்றபடி இது ஒரு பெரிய விஷயமில்லை. அவரே மேலாளர் அறைக்கு அனைத்தையும் விவரித்து அது சம்பந்தமான ரசீதுகளையும் கொடுத்தார். அவரிடம் போலி என்று எழுதப்பட்ட தாள்கள் ஒப்படைக்கப்பட்டது.  அவரும் இதில் ஏன் எழுதினீர்கள் என்று வினவினார். இப்படித்தான் எழுதி ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் காவல் துறையிடம் தான் ஒப்படைக்க முடியும் என்றனர். அவர் தாராளமாக புகார் செய்யுங்கள், இல்லை நானே செய்யட்டுமா? என்றார், என் நண்பர். அப்போதே பதட்டம் ஏற்பட்டுவிட்டது. இல்லை என்று ஒருவாறு மழுப்பினார்கள். சரி அது போலி என்பதை எழுத்துமூலமாவது தாருங்கள் என்று கேட்டார். தரமறுத்து விட்டனர்.

 உடனே ''''நீங்கள் இதை போலி இல்லை என்பதை எப்படி நிருபிப்பீர்கள், முடிந்தால் நிருபியுங்கள்'''', அதற்கு பின்  நாங்கள் தருகிறோம்?'''' என்றனர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினர். நாங்கள் போக மாட்டோம் என்று நினைத்து கொண்டனர் போலும்.  பதிலுக்கு நாங்களும், ''''நீங்கள் எப்படி யூகித்தீர்கள் என்று தானே எழுத்து மூலம் கேட்கின்றோம்''''. ஆனால்  இதற்கு பதிலில்லை, இது தானே அரசு நிறுவனம்.

இதை நான் கூட பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை  இதை பெரிய விஷயமாக நண்பர் எடுத்துக் கொண்டார். அதுவும் நல்லது தான். இல்லாவிட்டால் இந்த பதிவு எழுதியிருக்க முடியாது. அந்த தாள்களை அந்த வங்கியில் கொண்டு சென்றவுடன் அவர்கள் வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர், அதற்கான கடிதத்தையும் தருகிறோம் என்று கூறினர். ஆனால் இதில் போலி என்று எழுதப்பட்டுள்ளதே. இப்போது நாங்கள் தலையிடமுடியாது. இதை சாதாரணமாக ஒருவர் எழுதமுடியாது. ஆகையால் இதை ஆய்வுக்கு உட்படுத்த ரிசர்வ் வங்கிக்கு கொடுங்கள் என்றார்.

அங்கே அவருடையை உறவுகள் பணிபுரிந்து வந்ததால் (மற்றவரும் நாடலாம்) அவர் பணி எளிதாக முடிந்தது. அவர்கள் இந்த தாள்கள் உண்மையானவை,. அசல் தாள்கள் தான் என உறுதியளித்தனர். மேலும் இதை யார்? இப்படி எழுதினார்களோ? அவர்கள் மீது  நீங்கள் விரும்பினால் நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்த தணிக்கை அதிகாரி கடிதம் கொடுத்து விட்டார். மாற்றுத் தாள்களையும் தந்துவிட்டனர். இல்லை நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அந்த தாள்கள் மேல் அப்படி எழுதிய அலுவலகத்தில் இருந்து கடிதம் பெற்று வருமாறு கூறினார்கள்.

உடனே அவர் என்னை நாடினார். அதே போன்று கிளையையும் நாடினார். ஆயுள் காப்பீட்டுக் கிளையில் கடிதத்தை காண்பித்ததும் பயந்து விட்டனர். உடனே அன்று போலி என்று வாய் மொழியாக உறுதி கொடுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியை கை காட்ட ஆரம்பித்தனர். உடனே விடவில்லை நம் நண்பர் ''''அங்கே போய் அந்த காசாளரிடம் கடிதம் வாங்கிவருமாறு'''' அறிவுறுத்தினார். இல்லையேல் ''''நீங்கள் கொடுங்கள் ''''

அவர்கள் போய்  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேட்டவுடன் ''''நீங்கள் சொன்னதற்காகத் தான்  நான் அப்படி சந்தேகமாகத் தான் கூறினேன்''' என்று காசாளார் நழுவினார். ''''நான் விளக்கினடியில் பார்க்கும் பொழுதும் அப்படித் தெரிந்தது''''. நீங்கள் நம் வாடிக்கையாளராயிற்றே, அதனால் தான் கூறினேன் என்று மேலும் ஆதரவாக நைசாகப் பேசி அவர்களை அனுப்பிவைத்தார். வெறுங்கையுடன் வந்து கிளை மேலாளரிடம் முறையிட்டனர் ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள்.

இது பற்றி விவாதித்து நல்ல முடிவெடுப்பதாக கூறி எங்களை அப்போதைக்கு அனுப்பி வைத்தார்., பின் கிளை மேலாளர், வளரச்சி அதிகாரி என்று ஒரு குழுவாக சென்று பேசி விவாதித்தப் பின் இறுதியில் ஆயுள் காப்பீட்டு நண்பர் மூலம் என்னிடம் சமரசத்திற்கு இரவு 1 மணியளவில் என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ""இதை அப்படியே விட்டு விடுமாறு உங்கள் நண்பரை அறிவுறுத்துங்கள் "" என்று கெஞ்சினார்கள். ""இதனால் இருவரின் வேலையே போய்விடும்"" என்ற காரணத்தையும் காட்டினர்.  ''''இதை பற்றி மேலிடத்திலும் விசாரித்தோம் அவர்களும் ஆமாம் இது தவறு தான் என்று கூறினார்கள்.  ஏதோ தவறு நடந்து விட்டது..... இதை இத்தோடு சுமுகமாக முடித்து வையுங்கள். மேலாளர் மிகவும் கலவரமுற்று இருக்கிறார்.''''... என்று தெரிவித்தனர்.

ஆனால்  பாதிக்கப்பட்ட நண்பர் விடுவதாயில்லை என்பதை பதிலாகத் தெரிவித்தேன். ஆகையால் தான் உன்னிடம் பேசி அதை ஒரு அமுக்கு அமுக்கச் சொல்கிறோம். '' ''அவர் மிக கோபமாக இருக்கிறார்,'''' என்று கூறினார்கள். 

வேறு வழி என்ன செய்வது. அவரிடம் இது பற்றி கூறினேன். அவர்கள் எந்தளவுக்கு நம்மை அலைய வைத்திருப்பார்கள், உங்களுக்கும் மனவுளைச்சல் தந்திருப்பார்கள், அவர்களை சும்மா விடவா சொல்கிறீர்கள்? என்றார். ஆனால் கேட்பதும் ஒரு நண்பர் தான் என்று விளக்கினேன். '' ''நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள்'' '' என்று  பிரச்சனையை அத்தோடு விட்டு விட்டார்.

இதை எதற்கு கூறுகிறேன் என்றால் சட்டம் தெரியாமல் இருந்தால் இது மாதிரி சிக்கல்களில் நாமும் சமயங்களில் மாட்டிக்கொண்டு அவதிப்பட நேரிடும். ரிசர்வ் வங்கி கூறும் தகவல் இதுதான் போலி தாள்கள் பரிசோதிப்பது என்பது பல கட்ட சோதனைகளுக்கு உட்பட்டது. இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முதல் கட்டத்திலேயே அதுவும் புற ஊதா விளக்கின் முடிவிலேயே ரூபாய்த்  தாள்கள் போலி என்ற தவறான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அப்படி வந்தது இல்லாமல் ரிசர்வ் வங்கி கையிலெடுக்கும் அதிகாரத்தை தாங்களே எடுத்துக்கொண்டு ரூபாய்த்தாள்களில் போலி என்று எழுதியது அதை விட பெரிய குற்றம். இதனால் அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் மேல் குற்றவியல்  (கிரிமினல்) வழக்கை வாடிக்கையாளரும் தொடுக்க முடியும். ரிசர்வ் வங்கியும்  புகாரின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கும். அசல் தாள்களை போலி என்று தன்னிச்சையாக அறிவிப்பது எவ்வளவு தவறு, அதற்கான சட்டம் என்ன என்பதை உணராமலேயே அந்த ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் செய்துள்ளனர். வாடிக்கையாளரையும் பல்வேறு மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். 

ஆனால் ரிசர்வ் வங்கி அந்தத் தாள்களை கையில் வாங்கியவுடனேயே ''''இது அசல் தாள்கள் தான். இதை யார் போலி என்று  இப்படி முட்டாள் தனமாக எழுதியது'''' என்று கேட்டனர்.  ஆக ருபாய் தாள்கள் பரிசோதிப்பு முறையும் அரசு அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு சரியான பயிற்சி இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ஏதோ குருட்டுப் போக்கில் எல்லாவற்றையும் தவறாக கணிக்கின்றனர். நமக்கும் தொந்தரவு தருகின்றனர்.


ஒரு நிர்வாகம் எதையும் அறியாமல் ஏதோ பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து விட்டோம் என்று ஆர்ப்பரித்து கொண்டு செய்ததின் விளைவு. அதை செய்ததற்கான ஆதாரத்தையும் தாள்களின் மேல் அவர்கள் கைப்பட எழுதிவிட்டனர். 

இம்மாதிரி ரிசர்வ் வங்கியே உடனே முடிவெடுக்காதாம். அது பல ஆய்வுகளுக்கு பின் தான் இறுதி செய்யப்படும். சமயத்தில் இது மாதிரி துணி துவைப்பதினால் ஏற்பட்ட சிலும்பல்களினால் புறஊதாக் கதிர் அலைகள் மாறுபட்டுத் தெரிவிக்கும் அதை வைத்து ஒருவரை, ''''போலி ரூபாய் நோட்டு வைத்திருக்கிறார்''' என்ற உடனடியான முடிவுக்கு வந்து விடமுடியாது. அதுவும் தானே இறுதி முடிவையும் எடுத்து விடக் கூடாது என்பது தான் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்பது அங்கு சென்ற பின் தான் தெரிந்தது.

போலி ரூபாய் நோட்டுக்களின் விஷயத்தில் சட்டம் எப்படிப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதற்காக தவறாக கணிப்புக்கு ஒரு தனி நபர் ஆளாக முடியாது.   போலி ரூபாய் தாள்கள் எங்கிருந்து உருவாக்கப்பட்டன என்று ஆதி முதல் அந்தம் வரை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்காகவே இவ்வளவு கடுமையான சட்டம் என்பது நம்க்குத் தெரியாமலில்லை.


வங்கியிலிருந்து பெறப்படும் பரிவர்த்தனை ரசீதுகளை பத்திரப்படுத்திவைத்துக்கொள்ளவும்  இந்தப் பதிவு அறிவுறுத்துகிறது. இது சமயத்தில் நமக்கே உதவுகிறது. தானியங்கி மூலம் பெறப்படும் பணம் போலித்தாள்கள் உள்ளது என கண்டுணர்ந்தால் உடனடியாக அந்த வங்கியை காலதாமதம் செய்யாமல் அங்கிருக்கும் தொலைபேசி மூலமாகவே தெரிவித்து மாற்று நோட்டைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான அத்தாட்சியை காண்பித்தபின் இது சாத்தியமாகும்.

எந்த வங்கி பரிவர்த்தனை ரசீதுகளையும் பத்திரப்படுத்தி, கோப்புகளில் வைத்திருப்பது நல்லது. கல்லூரியில் தேர்ச்சி அறிக்கையையே இந்த ரசீதின் மூலம் தான் பெறமுடிந்தது. பணம் செலுத்தவில்லை என்று தேர்ச்சியையே நிறுத்தி வைத்திருந்தனர். பின்பு தேர்வு கட்டணம் வங்கியில் செலுத்தியதற்கான  அத்தாட்சியை, வங்கி ரசீதை.  நகல் எடுத்து இணைத்து அனுப்பியவுடன் தேர்ச்சி அறிக்கை வந்தது. '' ''இதெல்லாம் நடக்கும் என்று முன்பே தெரியுமா?'' '' என்று கூட கேட்டனர். இந்த பின்பற்றலை வழக்கமாக கொண்டிருந்ததால் இது சாத்தியமாயிற்று. நமக்கு நாமே துணை. பலவேளைகளில் வங்கிகளால் நமக்கேற்படும் பிரச்சனைகளுக்கு, தீர்வு காண்பதற்கு இம்மாதிரி அத்தாட்சிகளே உதவுகின்றது. உதவியும் இருக்கின்றது.

தானியங்கி மூலம் பெறப்படும் ரசீதுகளையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. அப்படியிருந்தால் பணம் எங்கிருந்து பெற்றோம், என்று பெற்றோம், எவ்வளவு பெற்றோம் என்பதை உடனே நம்மாள் கணிக்க முடியும். பலர் அதை குப்பையில் அப்போதே தூக்கி எரிவார்கள். வங்கித் தகவல்கள் கணிணியில் கிடைக்கிறது இப்போது இது பெரிய விஷயமில்லை. இருப்பினும்.... இப்படியிருப்பது நல்லது.

....நன்றி அனுபவம்....

Thursday, 4 February 2010

மெலியாரை ஏய்க்கும் வலியோர் கூட்டம்....





சமீபத்தில் உறவுகளுடனும், நட்புகளுடனும் சென்னை மெரினாவிற்கு சற்று காலத்தை கொல்வதற்காகவும், காற்று வாங்குவதற்காகவும் சென்றோம்.  அது ஒரு ஞாயிறு.... ஞாயிறு கடலுக்குள் மறையும்  வேளையில்.....

...அங்கே பலூனை சுட்டி காதலை வெளிப்படுத்த அலைமோதும் இளசுகள்... ஒரு பஞ்சு மிட்டாயை .....இரண்டு பேரும் காக்கா கடி கடித்து காதலை வெளிப்படுத்தும் ஜோடி..., பஜ்ஜிக்காக பறந்து பறந்து சென்று கடாயில் கையை விட்டு...  சூடு ஆறுவதற்குள் வாயுக்குள் உள்ளே தள்ளும் குடும்பங்கள்..., 


...தீப்பொறி சட்டையில் பட்டாலும் பரவாயில்லை சோளக் கதிரைத் தீயிலிட்டு பொரித்து உடனே தின்னத்துடிக்கும் இளைஞர்கள் கூட்டம்...

....படிப்பைத் தொலைத்துவிட்டு ஜோடிக்களைத் தேடிச்சென்று சுண்டல்களை திணிக்கும்...சிறிய வியாபாரச் சிறுவர்கள்...

...படிப்பிலிருந்தும், அம்மா அப்பா தொல்லயிலிருந்தும் சிறிது நேரமெ விடுதலை... என்று விடுதலையின் பெருமையை உணரும் குழந்தைகளின் குதுகலத் துள்ளல்கள்... ''''அம்மா அம்மா இங்கேயே இருந்திடலம்மா''''... ...அம்மா அப்பாவை பொம்மை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கும் குழந்தைகளின் சிலும்பல்கள, அழுகைகள்...

...நம் காலம் முடிந்துவிட்டது? என்று தூரத்தில் வரும் கப்பலின் தொலைவு இருக்குமா? நம் வாழ்க்கை?  அது வரை நாம் வாழ்வோமா? என்று நாட்களை எண்ணி ஏக்க பெருமூச்சு விடும் மூத்தவர்கள்...

...காதல் ஜோடிகள் ஒன்று சேருமா?, சேராதா? பெத்தவர்களிடம் மாட்டிக்கொள்ளுமா? மாட்டாதா?  என்று குறி சொல்லி தைரியத்தை வரவழைக்கக் காத்திருக்கும்...கைராசி, பெயர் ராசி பார்க்கும் பெண்கள் கூட்டம்.... 

....இவர்கள் காற்று வாங்குவதற்குள் நம்ம தாவு அறந்து போகிறது என்று அலுத்துக் கொண்டு, போக்குவரத்தையும், குளிப்பவர்களையும் ஒழுங்குபடுத்தும் காவலர்கள்.....

...எப்போதுமே எங்கள் பணி இரப்பது தான் என யாசிப்பவர்கள் கூட்டத்தின் ''''யம்மா! யம்மா! ...ஏழை பாட்டிக்கு காசு போடும்மா!'''' என்ற அவலக்குரல்கள.... .

இதை எதையுமே கவனிக்காத, ஆர்வமில்லாத ஜோடிப்புறாக்கள் மூக்கால் தீனியை செவ்வனேக் கொத்திக்கொண்டிருந்தது ஒரு பக்கம்.... என்று இப்படி ஆங்காங்கே போக்கிடமில்லாத நகர மக்களின் ஆதங்கத்தை ஒரளவுக்கு போக்கி கொண்டிருந்தது, அனைவரையும் ஆதரித்து கொண்டிருந்தது சென்னை மெரினா...

அங்கே போன பிறகு தானே தெரிந்தது காலத்தை கொல்ல நினைத்தது எவ்வளவு தவறு என்று........ பலர் மனித இதயங்களை கொன்று கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு....

அதில் ஒரு நிகழ்வு.... அங்கே ஒரு 50 வயதை தாண்டிய  பெரியவர் (இளைஞர்) அழுக்கு வேட்டியுடன் பரபரப்பாக பட்டம் விற்றுக் கொண்டிருந்தார். ஒரு பட்டம் 10 ரூபாய் என்ற விலையில் ஒரு 15 மீட்டர் நீள மாஞ்சாத் தடவாதா நூலுடன் விற்று கொண்டிருந்தார். அதை வாங்குவதற்கு சிறுவர்களை விட 45,55 நடுத்தர வயது,  பெரியவர்களுக்கே ஆர்வம் அதிகமிருந்ததைக் காணமுடிந்தது. 

அதில் ஒருவர் 45 வயது நபர் அல்ல அல்ல உள்ளத்தில் மிகச் சிறியவர் தனது இரண்டு பிள்ளைகளுக்காக (ஆண் பிள்ளை, பெண் பிள்ளை) காற்றாடி வாங்கி விடத் தெரியாமால் விட்டு கொண்டிருந்தார். 

அவர் பறக்க விட்ட காற்றாடி, காற்று திசை நோக்கி பறக்க விடாமல், ஒரே இடத்தில் நின்றதால் காற்றின் திசை மாறியதால் அடிக்கடி கீழே இறங்கியது.... பலரும் காற்றாடி விற்பவரை விட்டு விட்டு அவரின் சிறுபிள்ளைத்தனமான முயற்சியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

காற்றாடியை வாங்கிய இடத்திலேயே பறக்க விட்டு கொண்டிருந்ததால் காற்றாடி விற்றுக் கொண்டிருந்தவருக்கோ இடைஞ்சல் வேறு. அவரும் பலவாறு அவரை அறிவுறுத்திக் கொண்டிருந்தார். சற்று கடலை நோக்கி பின்னோக்கி சென்றோமானால் அனைவரும் தாராளமாக இடத்தை பயனபடுத்தி டீல் ஆகாமல் காற்றாடி விடலாம். (உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆயிற்றே இடமா இல்லை) காற்றாடியும் கீழே இறங்காது என்பதை விற்பவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அதை காதில் வாங்காமல் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டும் இருந்தார். இது அடுத்து காற்றாடி வாங்கும் எண்ணம் கொண்டோரை தடை செய்ததாலும், அடுத்து வாங்கியவரின் பட்டத்தில் சிக்கி அவருடைய பட்டத்தையும் கீழே சேர்த்து இறக்கியது.

இதை பார்த்து விட்டு வாங்குபவர்கள் காற்றாடி அடிக்கடி கீழே இறங்குகிறதே என்ன காரணம் என்று விற்கும் பெரியவரிடம் வினவியபடி வாங்கலாமா? (என்னமோ காற்றை அவர் திசை மாற்றுவது போல...) வாங்கக்கூடாதா? என்ற சிந்தனையில் விற்பவரையே நெருங்கினர். பறக்கவில்லை..பறக்கவில்லை..என அவரையே தொந்தரவும் செய்தனர்.

அவர் அதற்கு ''''அவருக்கு விடத்தெரியவில்லை'''' என்ற வார்த்தையை விடுத்து விட்டார். ''''கொஞ்சம் தள்ளிச் சென்று காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பின்னோக்கி சென்றால் பறக்கும்'''' என்று பதில் தெரிவித்தார். உடனே அந்த மேதாவிக்கு காற்றாடி பறக்காத கோவத்தினாலும், விடத்தெரியாது என்பதை ஏதோ ''''விமானம் தான் ஒட்டத் தெரியவில்லை'''' என்ற பொருளில் கூறிவிட்டார், என்ற ரீதியில்

...''''எப்படி நீ சொல்லலாம்?'''' என்று ஒருமையில் ஆரம்பித்து, ''''பின் எப்படிய்யா சொல்லலாம்?'''' என்று போய் இறுதியில் ''''ஆத்தா''''..... என்று தாய் மொழியில் வசை பாட ஆரம்பித்தார். அந்த மனிதருள் மாணிக்கம்.  

காற்றாடி விற்ற பெரியவருக்கோ அதிர்ச்சி....'''' நான் என்ன சொல்லி விட்டேன்.... ''''என்று கூறி விட்டு தன்னுடைய விற்பனையில் இன்னும் மும்முரமாகினார்.

ஆனால் அவருடைய பதில் இவருக்கு திருப்தியளிக்கவில்லை. மேதாவி மனதல்லாவா? எப்படித் திருப்தியடையும்...மேலும் விடாமல் தொடர்ந்தார்...

''''உனக்கு வேண்டியது காசு''''.... ''எவ்வளவுய்யா வேணும் என்று கத்தையாக ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் காட்டினார்''''...

''''என்க்கு உங்க காசு வேணாங்க'''...... இது  காற்றாடி விற்கும் பெரியவர்

..'''' உன் வேலை விற்பது தான்''''  ....இது அந்த மேதாவி. ( இது அனைத்தையும் பொறுமையாக காதில் வாங்கி கொண்டிருந்தார் ஒரு சிறு வியாபார மூதாட்டி...)

....என்று அவர் வேலையையும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். இது அத்தனையும் அனைவரும் கூடியிருக்கிற இடத்திலேயே இந்த அர்ச்சனைகள் ஆரம்பித்தது. அனைவரும் அவரின் ஏளனப் பேச்சை கேட்டு எள்ளி நகையாடினர். சிலர் என்ன மாதிரியான மனிதன் என்று வாய்திறந்து திட்டிக் கொட்டிருந்தனர் சற்றுத் தொலைவில்....
...''''அவரிடம் போய் சவடால் விடுகிறானே''''.... ''''இதை அந்த மனிதனின் மனைவி மற்றும் பிள்ளைகளும் பார்த்துக்கொண்டிருக்கின்றதே''''... 

என்று பக்கத்தில் அமர்ந்திருந்த வயதான மூதாட்டியும் தன்னுடைய எதிர்ப்பை முனகலாகத் தெரிவித்து கொண்டிருந்தார்.

அவர் தொடர்ந்து வசை பாடிக்கொண்டே இருந்த அந்த பெரிய மனிதன் ஒருகட்டத்தில்.... 
....''''எப்படிடா என்னை கேட்கலாம் ஆத்தா!?''''... என்று தொடங்கி 
அவரிடம் தன் வலிமையை காட்ட என்னிடம் 
''''எவ்வளவு பணம் இருக்கிறது தெரியுமா?.... ''''

....அவர் எனக்கு வேணாங்க'''' என்று மறுபடியும் அந்த பெரியவர் கூற அப்போதும் விடவில்லை. 
''''நான் எவ்வளவு படித்திருக்கிறேன் தெரியுமா? நான் ஒரு கம்யூட்டர் இன்ஜினியர்''''..'''எனக்கு கீழே எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் தெரியுமா?... இடையிடையே நாயே பேயே வேறு....

....''''. எங்கே இந்த கணக்கு எவ்வளவு சொல்ல முடியுமா?  1739 ரூபாயில் 360 ரூபாய் கழித்தால் எவ்வளவு என்று கூறு பார்ப்போம்...'' என்னால் எல்லாம் முடியும்...என்னை எப்படி டா...ஆத்தா!''.... ''ஆத்தா! எப்படிடா!....சொல்லலாம்!....அதுவும் என் பொண்டாட்டி முன்னாடி..... என் பொண்டாட்டி என்ன நினைப்பா''''.... 

...அனைத்திற்கும் மௌனம் காத்தார் ...அந்த பெரியவர்....அந்த எளிய காற்றாடி வியாபாரி.. வாய்த் திறக்கவில்லை... இன்னொரு காற்றாடிக்கு வால் ஒட்டிக்கொண்டிருந்தார்....அன்றைக்கு அதுதானே அவரது ஜீவனம்....

....அந்த அழகு, அவரின் அருமை பொண்டாட்டி இதை தட்டிக் கேட்பார்  என்று  சுற்றி அமர்ந்திருந்த அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை, பதிலுக்கு அந்த பெரியவரையே அதட்டினார் இப்படி...

....''''நீ எப்படிய்யா என் வீட்டுக்காரரை சொல்லலாம்?....  அவர் யார்? என்று தெரியுமா?''''

'''அந்த பெண்மணிக்கு தாய் தந்தையர் உண்டா இல்லையா? தெரியவில்லை? இவளும் ஒரு பெண்ணா?''' என்று அருகில் இருந்த முதிய. நடுத்தர வயது பெண்மணிகள் அந்த பெண்ணை வசை பாடினார்.... வாய்திறந்து, சற்றுத் தொலைவில், அவர்கள் காதில் விழாமல்.....

ஒரு கட்டத்தில் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் எழுந்து சென்று அந்த ஆளை உண்டு இல்லை என்று வாங்குவது என்று எழுந்து புறப்பட்டவுடன்.... 

அந்த பக்கத்தில் பொம்மைகள் விற்றுக்கொண்டிருந்த அந்த மூதாட்டியே  முந்திக்கொண்டார்......

''''யோவ் என்னய்யா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்...ஆத்தா...ஆத்தா... என்று ஏன் அடிக்கடி சொல்லுற...எதுக்கு அந்த பெரியவரை திட்டுரே...'' என்று சண்டைக்கு போக... 

'''இல்லம்மா என்னை எப்படி, காற்றாடி விடத்தெரியாது என்று சொல்லலாம்''''..... 

''''என்ன அப்படி பெரிசா சொல்லிட்டார் இப்படி குதிக்கிற.... '''' என்று மேலும் அந்த மூதாட்டி குத்திக்காட்ட... அந்த மனிதருக்கு சுருதி குறைந்தது....

இதெல்லாம் அந்த வயது வந்த பிள்ளைகளின் முன்னாலேயே நடத்திக் காட்டினார் அந்த பணம் படைத்த மேதாவி. அந்த பிள்ளைகளும் தடுக்கவில்லை. ஒருவாறு அந்த மேதாவியை அவரின் இன்னொரு உறவினர் வந்து.... அவரும் இந்த பெரியவரை திட்டிவிட்டு தான் நகர்த்தி கொண்டு சென்றார்...அந்த மேதாவியை...

பிறகு காரில் ஏறி அந்த மேதாவிக் கூட்டம் சென்றது.... அந்த மேதாவிக் கூட்டத்தைப்பார்த்து பல பெண்கள் இப்படிக் கூறினர்....

......''''போகிற வழியில் அடிபட்டு சாவான்... இவன்.''''....என்று ஒரு வயதான பெண்மணி அனைவரின் காது படக் கூறியது கண்டு, அனைவரும் அதை ஆமோதிப்பதாக குறுநகை புரிந்தனர்... சுண்டல் சாப்பிட்டுக்கொண்டே...

நாம் நினைத்துக் கொண்டோம் எளியாரை இழித்து வலியார் பெருமைக் கொள்வதும் இன்னும் மாறவில்லை.... எளியாரை ஏய்ப்பதும் இன்னும் மாறவில்லை.... என்று உள்ளூர சமூதாயத்தை திட்டிக்கொண்டு வள்ளுவர் கூறிய இந்த மூன்று குறளை நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

 பொருள், குடியியல், பெருமை (978)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை (302)

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.



 அறம், துறவறவியல், அருளுடமை (250)

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

 ---நன்றி மெரினா....

Wednesday, 3 February 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -3







லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள்



இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.


கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு ''நந்தனார்'' திரைக்கு வந்தது. ''நந்தனார்'' வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.


காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி,         '' என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே'' என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.


1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஔவையார்’. அந்த நாட்களில் “ஔவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஔவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஔவையாராக நடித்த அவரைத்தான் “ஔவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.


ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஔவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஔவையாராகத் தோன்றினாலே போதும்  நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.
 கே.பி.எஸ் படத்தில் நடிக்க வருடம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின்  மதிப்பு எவ்வளவு என்பதை  வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுக்க பணம் 86, 496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஔவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. ''''படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்'' என்று '''' இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்'' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் '''' இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.


ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.


தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். ''''ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்'''' என்றார்.



பேராசை பிடித்த ஹீரோயின் ''''ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?'''' என்று கேள்வி கேட்டார்.


உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.


வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.




''ஔவையார் படத்தைப் பார்த்த டி.கே, சண்முகம் ''நீங்கள் நடிக்கவில்லை, ஔவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்'' என்று கே.பி.எஸ் ஐ புகழ்ந்தார்.

''ஔவையார் திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த படம் கலைஞர் கதை வசனத்தில் உருவனா  ''பூம்புகார்'' என்ற படம். இந்த படம் எடுக்க முடிவு ஆனவுடன் அதில் வரும் கவுந்தியடிகளாக கே.பி.எஸ்  நடத்தால் தான் நன்றாக வரும் என்று அவரை ஒப்பந்தம் செய்ய முடிவெடுதத கலைஞர்., எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவித்தார் சுந்தராம்பாள்.


''''கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்'''' என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.


கலைஞரும் விடவில்லை. ''''நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.


''''சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்'' என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, ''''முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.


அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. ''''முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்'' என்று.


தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.


''''கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்'''' என்று ''''பூம்புகார்'''' படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது ''''வியப்பளிக்கும் ஆளுமைகள்'''' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.


“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று ''''திருவிளையாடல்'''', ''''துணைவன்''' ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, ''உயிர் மேல் ஆசை'', ''சக்திலீலை'', ''காரைக்கால் அம்மையார்’, ''திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.


கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த ''ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.


அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை ''ஏண்டாப்பா'' என்றும், கலைஞர் கருணாநிதியை  ''மகனே'' என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை   ''அண்ணா'' என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். இயற்கை எய்தினார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தந்துதவினார்.


கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.




கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்




''''கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட


கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ''''
 
இசையால் தமிழுலகத்தை ஈர்த்த பெண் கலைஞர் எவ்வளவு கொடுமையில் வாழ்ந்தார் என்பதை அறியமுடிகின்றது. அத்தனைக் கொடுமையிலும் இசைப்பணியை பல்வேறு போராட்டுங்களுக்கு இடையும் தொடர்ந்தார். வாழ்க அவர் புகழ்.


------ முற்றும்-----



Tuesday, 2 February 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -2








கோவைக்கும், கொடுமுடிக்குமாக ஓடுகிற ரயிலில், தன் வெண்கலக் குரலில் தேசபக்திப் பாடல்களைப் பாடியபடி, கேட்பவர்கள் மனமுவந்து தரும் காசுகளை வாங்கி, தன் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, வாழ்வு நடத்திக் கொண்டிருந்தவர் தான் கே.பி.சுந்தராம்பாள்.

தன் கம்பீரமான குரலில், உச்ச ஸ்தாயியில் பாடுவதையே தனக்கென ஒரு பாணியாய் கொண்டு, இசை உலகில் ஒரு தலையாய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, கோவையில் தன் நாடகம் ஒன்றை முடித்துக் கொண்டு, செங்கோட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்த ரயிலில், ரயில் ஓட்டத்தில் ஏற்படுகிற ஓங்காரக் கூச்சலுக்கிடையே, அதையும் மீறி நாதம் ஒன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டு, "யார் பாடுவது, எங்கிருந்து இந்த இனிய நாதம் வருகிறது?' என்று தன்னிலையையும் மீறிய ஆவலில், தானிருக்கும் இடத்திற்கு அருகில் வரட்டும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்.

ஒவ்வொரு பெட்டியாக பாடிக் கொண்டே வந்த சுந்தராம் பாள், கிட்டப்பா இருந்த பெட்டிக்கும் வந்தார். யாரையும் லட்சியம் செய்யாமல், மடை திறந்த வெள்ளம் போல ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு, எதிரே பிரபலமான இசைக்கலைஞர் கிட்டப்பா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்து, அவரறியாமலேயே நின்றது.

அவரிடம் கிட்டப்பா, "ஏம்மா, நீ பாட்டுக்கு பாடு, ஏன் நிறுத்திட்டே?' என சொல்ல, சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் பாடலைத் தொடர்ந் தார். பாடல் முடியவும், கிட்டப்பாவின் முன் கூனிக்குறுகி நின்றார்.

பிறகு, "என் வயிற்றுப் பிழைப்புக்கு, எனக்குத் தெரிந்த எதையோ பாடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.


"நீ, முறையாக இசை பயின்றவர்களை விடவும், மிகவும் நேர்த்தியாகப் பாடுகிறாய். இசைவாணர்களின் எல்லாவித திறனும், பாணியும், நுணுக்கங்களும் உன் பாடலில் தானாக வருகிறது.

"நீ சாதாரணமாகப் பாடுவதாக எண்ணாதே... நான் தான் சிறப்பாக உச்ச ஸ்தாயியில் பாடுவதாக இதுவரையும் எண்ணியிருந்தேன். இன்று தான் என்னையும் வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு பாடகி இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன்...' என்றார் கிட்டப்பா.

என்ன சொல்வது என்று தெரியாமல், திகைப்புடன் நின்றார் சுந்தராம்பாள்.

"வாம்மா, இப்படி உட்கார்...' என்று இடம் தந்தார். முதலில் அவர் முன், அருகில் அமர தயங்கி, பிறகு, அவரது கண்டிப்புக்கு இணங்கி, அவருக்கு மதிப்பளிக்கும் வகையில், பணிவுடன் அமர்ந்தார்.


தான் அன்றாடம் பாடிக் கொண்டிருந்த அத்தனை பாடல்களையும், முன்னே பாடியதை விட உணர்ச்சி ததும்பும்படியாக, கிட்டப்பா கேட்க, கேட்க பாடிக் காட்டினார்.

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் எஸ்.ஜி.கிட்டப்பாவே, அந்தப் பெண்ணைப் பாடச் சொல்லி, அருகில் அமர வைத்துக் கேட்டு ரசிப்பதை பார்த்தும், கேட்டும் அதிசயித்துப் போயினர்.

கிட்டப்பா, சுந்தராம்பாளை ஒரு அர்த்தமுடன் பார்த்தார்; பேசினார். தன்னுடனேயே செங் கோட்டைக்கு அழைத்துச் சென்று விட்டார். கிடப்பாவின் மதிப்புக்குரியவராக மட்டுமல்ல, மன துக்கு பிடித்தவராகவும், மனைவியாகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்.

கேட்பவர்களை தேனுண்ட வண்டாக மயங்க வைத்த இரு குரல்களும், தாம்பத்திய வாழ்க்கைக்கு வழிவகுத்து ஒளியேற்றி வைத்தன. கச்சேரிகள், மேடை நாடகங்கள் என, அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்தது. தமிழகமே அவர்களின் சேர்க்கைக்கு எல்லா வகையிலும் பாராட்டையே தந்தது. ( நன்றி தினமலர்)


இருப்பினும் கிட்டப்பா கே.பி.எஸ் தம்பதியர்களின் வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்பதே வரலாற்றியலாளர்களின் கூற்று. இது கிட்டப்பாவை விட்டு பிரிந்த நாட்களில் கேபிஎஸ் எழுதிய கடிதங்களில் வாயிலாக தெரிகின்றது என்று சித்ரா லட்சுமணன் தெரிவிக்கின்றார்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது. கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.


1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.

சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்


கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.


சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.


கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.


“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.


“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது'''' என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.


இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.


கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,
தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,

சுந்தரம்.


சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.


1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே உயிரோடிருந்தது.  குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.


சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.


தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு ஷேமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.


மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு

சுந்தரம்.


“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.


இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பா மறைந்த செய்தி காங்கிரஸ் கூட்டத்தில் பாடிக்கொண்டிருந்த கே.பி. சுந்தராம்பாளுக்கு இடையில் தெரிவிக்கப்பட்டது. பாடுவதை நிறுத்தி மேடையிலிருந்து இறங்கி துக்கத்தில் கலந்து  கொண்டார்.
கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

அதன் பின் பாடுவதையும், நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். அந்த இளம் கைம்பெண். கொடுமையிலும் கொடுமை கண்டார் கொடுமுடி கோகிலம்.

பேசும் படம் வருவதற்கு முன்னரேயே கிட்டப்பா மறைந்தார். 

தொடரும்....3

Monday, 1 February 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -1















நாடகம், இசை திரைப்படம் ஆகிய மூன்று துறைகளிலும் சாதனை படைத்த கே.பி. சுந்தரம்பாள் குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியவர். அவருடைய நிஜவாழ்க்கை, சினிமாக் கதைகளையும் மிஞ்சக் கூடியதாகும்.

கோவை மாவட்டம் கரூரை அடுத்த கொடுமுடியில் பாலாம்பாள் என்கிற கொங்கு கவுண்டர் இன ஒரு ஏழைப் பெண்மணிக்கு 1908_ம் ஆண்டு அக்டோபர் 11_ந்தேதி சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்று ஒரு தம்பி, சுப்பம்மாள் என்று ஒரு தங்கை. சிறுமியாக இருக்கும் பொழுதே தந்தையை இழந்தவர். (கொடுமுடி மும்மூர்த்திகள் குடிகொண்டிருக்கும் தெய்வீக தளம்.

குடும்பத் தலைவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. அம்மா பாலம்பாளின் தம்பி அதாவது தாய் மாமா மலைக்கொழுந்தன் ஆதரவில் வளர்ந்தனர். இருப்பினும், சுந்தராம்பாளின் தாயார் பாலம்பாள், குழந்தைகளை வளர்க்க வீட்டு வேலைகள் செய்ய நேரிட்டது. வறுமை அளவு கடந்து போனதால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள பாலம்பாள் முயற்சி செய்தார்.

இதுபற்றி, பிற்காலத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில சுந்தராம்பாளே குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- .

வறுமையின் காரணமாக எங்களை இழுத்துக்கொண்டு போய் நல்லதங்காள் மாதிரி காவிரியில் தள்ள முயன்றார் அம்மா. நான், தம்பி, தங்கை எல்லோரும் ஓவென்று அழுதோம். வீட்டு வேலை செய்து காப்பாற்றுவதாக அம்மாவிடம் சொல்லி காலைக் கட்டிக்கொண்டு அழுதேன். அம்மாவோ எங்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு அழுதார்.

பிழைக்க வேண்டி, கரூருக்கு ரெயிலில் பயணமானோம். அம்மா கண்களில் நீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. அவரைப் பார்த்து நாங்களும் அழுதோம். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் மெல்ல எங்களை அணுகி, "நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்? உங்களைப் பார்த்துக் குழந்தைகளும் அழுகின்றனவே!" என்றார்.

அம்மா விஷயத்தைச் சொன்னார். அவரும் பரிதாபப்பட்டுப் போனார். "என் தங்கை விதவையாக வந்து என்னுடன் வசிக்கிறாள். உங்களை உடன் பிறவாத பொறப்பாக நினைத்துக் கொள்கிறேன். எனக்கும் பிள்ளைகள் கிடையாது. இந்தக் குழந்தைகளை வளர்த்து விட்டுப் போகிறேன்" என்று தன் வீட்டுக்கு அழைத்தார். அம்மாவுக்கு முதலில் பயம். பின்னர் ஒத்துக்கொண்டார்.

அந்தப் பெரியவரின் பெயர் மணவாள நாயுடு. "மாமா" என்று அழைக்க ஆரம்பித்தோம். மாமா கரூர் முனிசிபாலிடியில் படிக்கற்களுக்கு முத்திரை வைக்கும் உத்தியோகம் செய்து வந்தார்.

இரவு வேளையில் நான் வாசலில் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டு வெகுநேரம் ராகம் போட்டு ஏதாவது பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பேன். விடியற்காலையில் இரண்டு காவல்காரர்கள் வந்து என்னை அழைத்தார்கள். அம்மா பயந்து கொண்டே அனுப்பி வைத்தார். "நடு ராத்திரியில் பாடியது யார்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

நான்தான்" என்றேன். அவர் நம்பவில்லை.

எங்கள் கதையைக் கேட்டார். சொன்னேன். அவர் மூலம் வேலு நாயரிடம் அனுப்பி வைக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமானேன். அவரிடம் சேர்ந்து நான் நடித்த முதல் நாடகம் நல்லதங்காள். அப்போது எனக்கு வயது ஏழு.

காவிரியாற்றில் அம்மா தள்ள நினைத்தபோது, எப்படி அழுது கதறினேனோ அதுவே கதாபாத்திரமாகக் கிடைத்தது. நடித்தேன், உணர்ச்சிகரமாக.

இவ்வாறு சுந்தராம்பாள் குறிப்பிட்டார்.

வேலு நாயர் நாடகக் கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக (பால பார்ட்) நடிக்கத் தொடங்கிய சுந்தராம்பாள் படிப்படியாக முன்னேறினார். அவர் பாடல்கள், பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது.



குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சீக்கிரமே நடிகையாக மாறினார் (ஸ்திரீபார்ட்) வள்ளித்திருமணம், பவளக்கொடி சாரங்கதாரா நந்தனார்.... நாடகங்கள் கே.பி. சுந்தராம்பாளை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.!


ஆண்வேடம் (ராஜபார்ட்) பூண்டும் நடித்தார். அர்ஜூனனாக தோன்றி கம்பீரம் காட்டினார். உச்ச ஸ்தாயி (ஏழு சுவரங்களின் ஒரு அலகு-unit of sound notes spectrum of sounds) எட்டுக்கட்டையில் பாடும் பெண் கே.பி. சுந்தரம்பாள் மட்டும் தான். நாடகம் பார்க்க உட்கார்ந்திருக்கும் கடைசி ரசிகனுக்கும் இவர் குரல் தெளிவாய் கேட்டது. தமிழ்க் கடவுளாம் முருகனின் மீது தீவிர பற்று கொண்டதால் அதிகமாக நாடக மேடையில் முருகனைப்பற்றித் தான் பாடுவார்.



மெளனப்பட காலம் என்பதால் நாடகங்களுக்கே அதிக வரவேற்பு இருந்தது. அதிலும் கே.பி.எஸ் நடிக்கிறார் என்றால் வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள். பாட்டியின் துணையுடன் சுந்தரம்பாள் நாடகங்களில் நடித்து வந்தார். தமிழகம் மட்டுமில்லாது இவரது புகழ் கடல் கடந்தும் பரவியது.



இலங்கையில் இருந்தும் அழைப்பும் வந்தது. தாய்மாமன் மலைக்கொழுந்தன் துணையுடன் இலங்கைக்கு நாடகத்தில் நடிக்க சென்றபொழுது கிட்டப்பாவின் அறிமுகம் கிடைத்தது.



கே.பி.சுந்தரம்பாள்.... ''ஔவையார்'' இசை உலகமும் இந்த கொடுமுடி கோகிலத்தின் செளந்தர்யக் குரல் என்றும் அழியாத நிலை கொண்டவை....!


என்றும் இளமையாய் இருக்கும் அந்த சுந்தர்வ கானம் கேட்டு மயங்காத மனிதனே இல்லை!


இறைபற்றைப் போலவே! தேசப் பற்றும் கே.பி சுந்தரம்பாளின் ரத்தத்தின் கலந்தவை!
கிட்டப்பா கே.பி.எஸ் இருவரும் கல்ப்புத்திருமணம் புரிந்து ஜோடியாக சேர்ந்து நாடக உலகை திரும்பி பார்க்க வைத்ததால், கிட்டப்பாவின் வரலாற்றை சற்று பார்ப்போம்.....


தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர், எஸ்.ஜி.கிட்டப்பா.


நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சேர்ந்திருந்தது. அங்கு, கங்காதர அய்யர் _ மீனாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1906_ம் ஆண்டு ஆகஸ்டு 26_ந்தேதி கிட்டப்பா பிறந்தார்.


அவருடைய இயற்பெயர் ராமகிருஷ்ணன். எல்லோரும் செல்லமாக "கிட்டப்பா", "கிட்டன்" என்று அழைப்பார்கள். அதில் கிட்டப்பா என்ற பெயர் நிலைத்து விட்டது.


கிட்டப்பாவுடன் பிறந்தவர்கள் 8 சகோதரர்கள். ஒரு சகோதரி. இவர்களில் காசி அய்யர், சுப்பையர், செல்லப்பா ஆகியோர், அந்த நாளில் பிரபலமாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நிரந்தர நடிகர்களாக இருந்தார்கள்.


கிட்டப்பா தன் 6 வயதில் சகோதரர்களின் நாடகத்தைக் காணச் சென்றார். அப்போது அவர் மேடை ஏறி, கணீர் குரலில் பாடினார். தம்பியின் குரல் வளத்தைக் கண்ட சகோதரர்கள் அவரையும் நாடக நடிகராக்கினர்.


இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு நாடகக்குழு, கிட்டப்பாவையும், அவர் சகோதரர்களையும் நாடகங்களில் நடிக்க அழைத்தது. 1916_ம் ஆண்டில் கிட்டப்பா தன் சகோதரர்களுடன் இலங்கை சென்று, நாடகங்களில் நடித்தார். அங்கு கிட்டப்பா பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.

சென்னை திரும்பிய கிட்டப்பா சகோதரர்கள், "வள்ளி திருமணம்" உள்பட பல நாடகங்களை நடத்தினர். கிட்டப்பா புகழ் பரவியது.


அழகும், இனிய குரலும் கொண்ட கிட்டப்பாவுக்குப் பெண் கொடுக்க பலர் முன் வந்தனர். பெற்றோர், கிட்டம்மாள் என்ற பெண்ணைப் பார்த்து முடிவு செய்தனர்.


கிட்டப்பா _ கிட்டம்மாள் திருமணம் 24 ஜுன் 1923_ல் சென்னையில் நடந்தது. அப்போது கிட்டப்பாவுக்கு வயது 18. கிட்டப்பா தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். அவர் நடித்த "தசாவதாரம்" ஒரே ஆண்டில் 200 முறை மேடை ஏறியது.


இந்த சமயத்தில், கே.பி.சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.


"கிட்டப்பாவையும், சுந்தராம்பாளையும் ஜோடியாக நடிக்க வைத்தால் நாடகங்கள் பிரமாதமாக அமையும். வசூலும் அமோகமாக இருக்கும்" என்று, நாடக அமைப்பாளர்கள் நினைத்தனர்.


இலங்கைக்கு வந்து நாடகங்களில் நடிக்கும்படி, கிட்டப்பா சகோதரர்களுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, கிட்டப்பாவும், அவருடைய சகோதரர்களும் 1925 இறுதியில் இலங்கை சென்றனர்.

எஸ்.ஜி.கிட்டப்பாவும், கே.பி.சுந்தராம்பாளும் முதன் முதலாக இலங்கையில் "வள்ளி திருமணம்" நாடகத்தில் ஜோடியாக நடித்தனர். கிட்டப்பா வேலனாகவும், சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடித்தனர். இருவரும் போட்டி போட்டுப் பாடி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர்.


தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும், கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் பல நாடகங்களில் இணைந்து நடித்தனர். அவர்கள் புகழ் திக்கெட்டும் பரவியது.


(குறிப்பு; இவரின் வாழ்க்கை பலவாறு குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் இவரின் வாழ்க்கை தொடர்வண்டியில் (யாசகம்) இரப்பைப்  பெறப் பாடிக்கொண்டிருக்கும் பொழுது பலரால் கண்டுணர்ந்து நாடகத்துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டாதாக கூறப்படுகின்றது. தொடர்வண்டியில் பாடி இரப்பை (யாசகம்) பெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே கிட்டப்பாவின் அறிமுகமும் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடரும்...2 

(ஆதாரத் தகவல்கள், இணையம், மாலை மலர், தினமலர், தமிழ்த் திரையுலக சாதனைப்படங்கள் நூல்...எழுதியவர் பாலபாரதி.......)