Pages

Friday, 12 February 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-8





தமிழ்த் திருமணம்
III மந்திரங்கள்

(இங்கே குறிக்கும் எண்கள் 11 வது பகுதியான சடங்குகள் பகுதியில் இடம் பெற்ற வரிசை எண்கள் மந்திரம் ஓத வேண்டிய நிகழ்ச்சிகளின் எண்கள் மட்டும் தரப்பெற்று அவற்றிற்கு நேரே மந்திரங்களும் தரப்பெற்றுள்ளன. மந்திரம் ஓத வேண்டிய தேவை இல்லாத எண்கள் தரப்படவில்லை)

(1), (2), (3), (4), (i) திருமணத்திற்கு இறைவியின் இன்னருளை மடுத்துக் கொள்வதற்காக, அபராமி அந்தாதி' 'சௌந்தரியலகரி, ஆனந்தலகரி' போன்ற தேவியின் பாடல்களை ஓதிக்கொண்டே செய்க.

(குறிப்பு; புத்தகத்தில் பாடல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அது செய்யுள் நடை.  பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள், மற்றும் தமிழ் இலக்கியம் பயின்றவர்களால் முழுதும் பொருளுணர்ந்து கொள்ள முடியும்.  செய்யுள் இலக்கணம் தெரிந்தவர்களால் முழுதும் பொருளுணர்ந்து கொள்ள முடியும். பிரித்து பொறுமையாக வாசித்தோமானால் அனைவராலும் பொருளுணரமுடியும். இணையத்தில் அகராதிகள் உள்ளன. இருப்பினும் சில பாடல்களுக்கு  பொருளுரைகளை கொடுக்க முயற்சித்துள்ளேன்.. சில பாடல்களுக்கு பொருளுரைத் தேவையில்லை. முடிந்தவரை கொடுக்க  முயலுகின்றேன். தங்களுக்கு தெரிந்தாலும் கொடுக்கலாம்.)

(4) (ii) முன்னவனார் பூஜை



உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
                                                                                                                ----கச்சியப்பர்
பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.
                                                                                                     

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே!  

                                                    -------(கம்பர்)
 பொருள்; உலகங்கள் அனைத்தையும் தன்னந்தனியராக இருந்து படைத்தலும், தம் படைப்புகளாகிய ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லா உயிர்களையும் பரிவோடு காத்தலும், காத்தவற்றை அழித்தலும் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்பவரான அந்த இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவர் ஆவார். அந்தக் கடவுளிடமே நாங்கள் சரணடைவோம் என்பதாக இப்பாடல் கூறுகின்றது.

(iii) இறைவன் இறைவியை எழுந்தருளச்செய்தல்
    விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
           விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்    மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
         வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்   கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
         கடலமு தேகரும் பேவிரும் படியார்    எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்!
        எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே!. 376                                                     ----------திருவாசகம்
    பதப் பொருள்; விண்ணகத்தேவரும்-விண்ணில் வாழும் தேவர்களும், நண்ணவும் மாட்டா-அணுகவும் முடியாத, விழுப்பொருளே-மேலானப் பொருளாய் உள்ளவனே, உன்-உன்னுடைய, தொழும்பு அடியோங்கள்-தொண்டைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை, மண்ணகத்தே வந்து வாயச்செய்தானே-மண்ணுலகில் எழுந்தருளி வந்து வாழச்செய்தவனே,வண்திருப்பெருந்துறையாய்-வளப்பம் பொருந்திய திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே, வழியடியோம்-பரம்பரை அடியாராகிய, எங்களுடைய கண்ணகத்தே நின்று-கண்ணில் நின்று, களி தரு தேனே-களிப்பைத் தருகின்றத் தேன் போன்றவனே, கடல் அமுதே- பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே, கரும்பே- கரும்பு போன்றவனே,  விரும்பு அடியார்- அன்பு செய்கின்ற அடியவரது, எண்ணகத்தே-எண்ணத்தில் இருப்பவனே,  உலகுக்கு உயிர் ஆனாய்-உலகமனைத்துக்கும் உயிர் ஆனவனே, எம்பெருமான்- எம்பெருமானே, பள்ளி எழுந்தருளாய்- பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
பொருள்; 'விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு வந்து மனிதரை ஆட்கொள்ளும் வள்ளலர்தலின் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே' என்றார். 'வான் பழித்து மண் புகுந்த மனிதரை ஆட்கொண்ட வள்ளல்' என்ற அடியையும் ஒப்பு நோக்குக. அடியார்களுக்கு கண்ணுக்கினியக் காட்சியை நல்கி இன்பத்தை தருவான் என்பார். 'கண்ணகத்தே நின்று கனி தரும் தேனே'என்றார். 'கண்ணிலே தோன்றி இன்பத்தை தருதலோடு எண்ணத்திலும் விளங்கி நன்மையும் செய்வான்' என்பார். 'எண்ணகத்தாய்' என்றார். இறைவனது இயக்கமின்றி உலகம் இயங்காதாதலின், உலகுக்குயிரானாய் என்றார்.

இதனால் இறைவன் உலகுக்கு பேரின்பம் நல்குவான் என்று கூறப்பட்டுள்ளது.




1. உடையாள் உன்தன் நடுவிருக்கும்
         உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
       இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்
      புரி யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
      முடியும் வண்ணம் முன்னின்றே. 378

                                                    ------திருவாசகம்

பதப்பொருள்; பொன் அம்பலத்து-பொற்சபையில் ஆடுகின்ற, எம்முடியா முதலே-எம் ஈறில்லா முதல்வனே, உடையாள்- எம்மை ஆளாகவுடைய உடையம்மை, உன் தன் நடு இருக்கும்- சொரூப நிலையில் உன்னிடேயே அடங்கித் தோன்றும், உடையாள் நடுவுள்- உடையவளாகிய உமையம்மையினடத்தே, நீ இருத்தி- தடத்த நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய், அடியேன் நடுவுள்- அடியேன் இடையே, இருவீரும் இருப்பதனால்-நீங்கள் இருவீரும் இருப்பது உண்மையானால், என் கருத்து முடியும் வண்ணம்-என் எண்ணம் நிறைவேறும்படி, முன் நின்று- எனக்கு முன்னே நின்று, அடியேன்-அடியேனாகிய யான், உன் அடியார் நடுவுள் இருக்கும்-உனது அடியார் நடுவில் இருக்கின்ற,  அருளைப் புரியாய்- திருவருளைப் புரிவாயாக.

விளக்கம்; ' உமையாள் உன்றன் நடு இருக்கும்' என்றது. சிவம் உலகை நோக்காது. அறிவே வடிவமாய் இருக்கும் போது. சக்தி சிவத்தில் அடங்கி அதன் வயமாய் நிற்றலை. இதுவே சிவத்தின் சொரூப நிலை. அல்லது உண்மை நிலையாம். 'உடையாள் நடுவுள் ந இருத்தி' என்றது. உலகத்தை நோக்கி அருள் புரிய வரும்போது. சிவம் சக்தியில் அடங்கி அதன் வயமாய் நிற்றலை. இதுவே சிவத்தின் தடத்த நிலை அல்லது அருள் நிலை. ஆதலின் சிவன் வேறு சக்தி வேறு அல்ல, இரண்டும் ஒன்றேயாம்.

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பது என்றது. இறைவன் சிவம் சக்தி என்னும் இருநிலையோடும் உயிருடன் கலந்திருத்தலை. அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிதலாவது  திருப்பெருந்துறையில் காட்சி கொடுத்து மறைந்த போது உடன் அழைத்து சென்ற அடியவர்களோடு அடிகளைச் சேர்த்தல். அதாவது, வீட்டு நிலையை அருளல் என்பதாம். இத்திருப்பாடலுக்கு பஞ்சாக்கரத்தோடு பொருத்தி உரை காண்டலும் உண்டு.

இதனால் அடியார் கூட்டச் சிறப்பு கூட்டப்பட்டது


கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
    கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
    வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
    இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
    அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே! 1

                                              ----தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி

[பொருள்; சூரியன் கிழக்கே தோன்றி விட்டான். இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண்-பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலை போல அதிர்கிறது. அரங்கனே எழுந்திரு!]

காதலைப் பற்றி பெரியார் கூறுபவையாக பேராசியர் மா நன்னன் விளக்குகிறார்

ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால் தானே தெரியும்? திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சுப் போடலாமா? அன்பு, குடம், பழக்க வழக்கம் இவைகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகவேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை.

இத்தகைய உரிமைச் சூழலில் முளைவிடும் காதலே சரியானதாக இருப்பதோடு வலுவானதாகவும் நிலைத்துப் பயன் விளைப்பதாகவும் இருக்க முடியும்.
‘மலரினும் மெல்லிது காமம்’ என்று காதலுக்கு விளக்கங்கூறிய திருவள்ளுவர் ‘சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்’என்று வேறு ஒரு வரையறையும் வகுத்துள்ளார். காதலை உண்மையாகவும், முழுமையாகவும் புரிந்து கொண்டு அதனை அடைவோர் சிலரே; பலரல்லர் என்று வரையறைப்படுத்திக் கூறியுள்ளமை அறியத்தக்கது. மிக மிக நுண்ணுணர்வாகிய காதலை யானை கண்ட குருடர்போல் புரிந்துகொண்டவர்களும் அக்குருடர் கூற்றுகளை மட்டும் கேட்டறிந்து கொண்டவர்களுமாகிய மாந்தர் பலர் காதல் இலக்கியம் படைக்கின்றனர். அதனால் தான் இன்றைய கதை, திரைப்படம் படைப்புகளில் வரும் காதற் காட்சிகள் பெரும்பாலும் புறப் பொருட்காட்சிகளாகவே அமைந்துவிடுவது தவிர்க்க முடியாத்தாகிவிட்டது. எல்லாரிடத்திலும் காதலுணர்ச்சி இருக்கிறது. ஆனால், எத்தனை மக்கள் தம் உணர்வைப் புரிந்து கொள்ளும் திறம் உடையவர்களாக உள்ளனர். அரைப் பார்வைக்காரரின் புறக் காட்சிபோல் இத்தகையோரின் அகக் காட்சிகளும் அமைந்துவிடுகின்றன. அரைப் பார்வையாளருக்கப் புறத்தே ஏதோ இருப்பதாகத் தெரியுமேயன்றி அது மாடா? ஆளா? ஆடா? என்று தெளிவாக விளங்காது.
அதுபோல் தான் இந்த அகக் காட்சியாளர்களும் காதலை விளங்கிக் கொள்கின்றனர். அவர்கள் படைப்பாளராகவும் இருந்துவிடுவதால் அவர்களின் காதல் படைப்புகளை குறைபாடு மிகுந்தனவாகவும் மரண்பாடு உள்ளனவாகவும் இருந்திருக்கின்றன. இத்தனை வகையானவர்களும் சேர்ந்து எலியைக் குத்திக் குத்திப் பெருச்சாளியாக்கி விட்டது போல் காதல் உணர்ச்சியை ஒரு பெரும் குழப்பமானதாகவும் அஞ்சத் தக்கதாகவும், மயங்கத் தக்கதாகவும் ஆக்கிவிட்டனர். இந்நிலையில் காதலின் உண்மையான பொருளை-இயலைப் பெரியார் எப்படி விளக்கிப் புலப்படுத்தியுள்ளார் எனப் பார்ப்போமா?

காதல் என்பது ஆசை, காமம், நேச்ம், ,மோகம், நட்பு என்பவைகளைவிடச் சிறிதுகூடச் சிறந்தது அல்ல........அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண், பெண்களுக்குள் புகுத்தி விட்டதால், ஆண், பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக் கொள்ளவேண்டுமென்று கருதி, எப்படி பக்திமான் என்றால் இப்படியெல்லாம் இருப்பான் என்று சொல்லப்பட்டதால் அனேகர் தங்களைப் பக்திமான் என்று பிறர் சொல்லவேண்டும் என்று கருதிப் பூச்சு பூசுவதும், பட்டை நாமம் போடுவதும், சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும், வாயில் சிவசிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்தும் தங்களைப் பக்திமான்களாக் காட்டிக் கொள்கிறார்களோ அது போலவும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேசம் போட்டுக் கண்களை மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காகத் தூங்கினால் கால் ஆடுமே என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைத்துக் கொள்ளவேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அது போலவும், எப்படி பெண்கள், இப்படி இப்படியிருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாக் காட்டிக் கொள்கிறார்களோ அதுபோலவும் உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்கிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேடத்தையெல்லாம் போடுவார்கள். ஆகவே, ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிடக் காதல் என்பதாக வேறு ஒன்றும் இல்லை. 33

அன்பு, அருள், நட்பு, உறவு, பக்தி, அகியவற்றுள் எந்த வகையான வேறுபாடு உள்ளதோ அந்த வகையிலும், அளவிலும்தான் மேற்கூறப்பட்ட சொற்களும் காதல் என்னும் சொல்லுக்கும் இடையிலும் வேறுபாடு அமைந்திருக்க முடியும். தெரியாதவர்களும் எத்தொடர்பு மற்றவர்களுமாகிய அயலாரிடம் தோன்றும் அன்பே அருள் எனப்படுகிறது; நெருக்கமாகப் பழகி உற்றுழியுதவுவோருக்கிடையில் ஏற்படும் அன்பே நட்பு எனப்படும். பெற்றோர் முதலியோருடன் ஏற்படும் அன்புத் தொடர்பே உறவு என்று கூறப்படுகிறது. எவ்விடத்திலும் எக்காலத்திலும் இல்லாத பொருளை உவமையாக கூறுவது போல் எங்கும் எப்போதும் இல்லாத கடவுளிடம் காட்டும் அன்பே பக்தி எனப்படுவதாயிற்று. இவைபோன்றே பல்வகைப் பொருத்தங்களும் அமைந்த ஆண் பெண் ஆகிய இருவரிடம் தக்க பருவத்தில் அறிவார்ந்த விருப்பத்திற்கிணங்கத் தோன்றும் அன்பே காதல் என்னும் பெயரைப் பெற்றது என்பதேயன்றிக் காதல் என்பது முற்றிலும் வேறுபட்டு அன்பு முதலியவற்றுக்கு மாறாக மாந்தரிடம் தோன்றும் சிறப்புக் குணமன்று என்பதே பெரியார் காதலுக்குத் தரும் விளக்கமாகும்.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -9

Thursday, 11 February 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-7






II சடங்குகள்
மண அறையின் தென்புறமக மண ஆசிரியர் வடக்கு நோக்கி அமர்க;

1. முன்னவனார், இறைவன், இறைவி கலசங்கள் அமைத்தல்

2.
(அ) தலை வாழையிலை இரண்டை ஒன்றன் மேல் ஒன்று
தலைப்பகுதி வடபுறம் இருக்கும்படி, மேற்கு நோக்கி இடுக
நடுநரம்புகளுக்கு இடையே அரிசியைப் பெய்க.

(ஆ) மஞ்சள் பிள்ளையாரை, முன் இலையின் தலைப் பக்கம் அமர்த்துக, குங்குமம் இடுக, மலர் சொரிக, பழம் படைக்க.

(இ) முக்கால் அளுவு நீர் நிரம்பிய இரு செம்புகளுக்கு நாற்புறமும் மஞ்சள் பொட்டு வைத்துக் குங்குமம் இடுக. பெரிய செம்பை வலப்புறமும் சிறியதை இடப்புறமும் அரிசிமீது பொருத்துக. செம்புகளில் மாவிலை செருகுக. மாவிலைமீது நாரோடு உள்ள தேங்காய்களை மஞ்சள் குங்குமம் இட்னு வைக்க தேங்காய்கள் மீது மலர்ச்சரம் மாலையாகச் சூட்டுக. இரு கலசங்களுக்கு முன் வெற்றிலைப் பாக்கு விரல் மஞ்சள், பழம் படைக்க.


2. காப்புக் கயிறு;
(அ) ஒரு முழ நீளம் உள்ள மஞ்சள் பூசிய மூன்று துண்டு நூல்களில் விரல் மஞ்சள் முடிக்க.
(ஆ) ஒரு தட்டில் அரிசி பெய்து. அதன் மீது நாரோடுள்ள ஒரு தேங்காயைப் பொருத்துக. தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இடுக. மலர் சொரிக. வெற்றிலை பாக்கு பழம் வைக்க. தேங்காயின் மீது கப்பு நூல்கள் மூன்றையும் இடுக.


3. மங்கல நாண்;
(அ) நாரோடுள்ள ஒரு நல்ல தேங்காய்க்கு நிரம்ப மஞ்சள் பூசிக் குங்குமம் இடுக. ஒரு தட்டில் அரிசி பெய்து அதன் மீது தேங்காயைப் பொருத்துக.
(ஆ) மாங்கல்ய நூலுக்கு நிரம்பிய மஞ்சள் தடவி அதில் மாங்கல்யத்தைக் கோத்து இருபுறமும் முடி இடுகந அதனைத் தேங்காய் மீது சுற்றுக. மலர்ச்சரம் சுற்றுக. வெற்றிலை பாக்கு, விரல் மஞ்சள், பழம் இவற்றைத் தேங்காயின் முன் தட்டில் வைக்க.
(இ) இன்னொரு தட்டில் அரிசியுடன் மஞ்சளும் மலரும் கலந்து வைக்க.


4.மண வேட்டி, சேலை, மாலை;
(அ) ஒரு பெரிய தட்டில் மண வேட்டி, சேலை, மணமாலை, வெற்றிலை பாக்கு, மஞ்சள் வைத்துக் கலசங்கள் முன் வைக்க.
(ஆ) மன்னவனாரை வழிபடுக.
(இ) இறைவன், இறைவியை வழிபடுக.
(ஈ) வேட்டி, சேலைத் தட்டினை, அவையினரிடம் எடுத்துச் சென்று வாழ்த்துப் பெறுக.


5. மணமக்களுக்கு வேட்டி, சேலை, மாலை வழங்குக;
(அ) மணமகனை மண அறைக்கு வரச்சொல்லி, வேட்டி மாலையை வாழ்த்தியளிக்க.
(ஆ) மணமகளை மண அறைக்கு வரச்சொல்லி, சேலை மாலையை வாழ்த்தியளிக்க.




6. அரசாணிக்கால் நடுதல்;
மண அறையின் நடுவில் ஒரு தாம்பாளம் வைத்து அதில் அரசாணிக்காலை ஐந்து வாழ்வரசியர் நிறுத்திப் பிடிக்க. நீர் விட்டு பால் விட்டு பிறகு நீர் விட்டு மஞ்சனம் ஆட்டுவிக்க,. மஞ்சள் பூசி குங்குமம் இடச் செய்து மலர்ச் சரம் சூட்டச்செய்க. சாம்பிராணி, வர்த்தி, கற்பூரம் காட்டி நிறை குடங்களுக்கு இடையில் நடச்செய்க (கெட்டிமேளம்)

7. மணப் பொங்கல் படைத்தல்;
மணமகனும், மணமகளும் உடுத்திக் கொண்டு மாலையணிந்து வந்ததும், மணப்பந்தலுக்கு எதிரே இடப்படுப் மணப்பொங்கல் படையலுக்குச் சாம்பிராணி வர்த்தி கற்பூரம் காட்டி வழிபடச் செய்க.

8. மணமக்கள் மண அறையில் அமர்தல்;
மணப்பொங்கல் படைத்தபின் மணமக்கள் வலமாக வந்து மண அறையில் மேற்கு ஓரமாக இடப்பட்டுள்ள மணமனையில் கிழக்கு நோக்கி, அமரக (மணப்பெண் வலப்புறமும் மணமகன் இடப்புறமுமாக)

9. திருநீறு குங்குமம் அளித்தல்;
(அ) மணமக்களுக்குத் திருநீறு குங்குமம் அளிக்க;
(ஆ) ஐந்தெழுத்து எட்டெழுத்து ஓதுவிக்க.

10. காப்புக் கட்டுதல்;
(அ) அரசாணிக்காலுக்குக் காப்புக் கட்டுக (கெட்டி மேளம்)
(ஆ) மணமக்களின் வலக்கையில் கட்டுக. (கெட்டி மேளம்)
(இ) மணமகளின் இடக்கையில் மணமகளைக் கட்டச் செய்க. (கெட்டிமேளம்)
(தட்டிலுள்ள அரிசியுடன் தேங்காயை மணமக்கள் இருகைகளாலும் அள்ளி ஏந்தச் செய்து)

11. பெற்றோரை வழிபடுதல்;
(அ) தட்டில் மணமகனின் பெற்றோர் இருவர் பாதங்களையும் வைக்கச் செய்து மணமகன் நீர்விட்டு, பால்விட்டு, நீர்விட்டு, மஞ்சனமாட்டச் செய்க. மஞ்சள் பூசி, குங்குமம் இடச் செய்து, மலர் தூவச் செய்க, சாம்பிராணி வர்த்தி, கற்பூரம் காட்டி பாதங்களைத் தொட்டு வழிபடச் செய்க. பெற்றோர் பாதங்களின் மீதுள்ள மலரை மணமகன் மீது வாழ்த்திச் சொரியச் செய்க.
(ஆ) மணமகளும் தம் பெற்றோருக்கு இங்ஙனே வழிபாடாற்றச் செய்க.

12. ஓம்படை செய்தல்;
(அ) மணமக்களின் பெற்றோர் இருபுறமும் நிற்க மணமக்களை எழுந்து நிற்கச் செய்க.
(ஆ) மணமகள், தனக்கு வாய்க்கும் மணாளளின் தகுதியை நினைத்துக் கைகூப்பித் திருவருளை வேண்டுதல்.
(இ) மணமகனும் மணாட்டியின் பண்புநலம் நினைத்து வரவேற்றல்.
(ஈ) மணமகனின் வலக்கையைப் பெற்றோர் ஏந்த மணமகளின் வலக்கையை அவள் பெற்றோர் எடுத்து மணமனின் கைமேல் வைக்க (கெட்டிமேளம்)


13. இறை வழிபாடு ஆற்றுதல்;
(அ) முன்னவனார்.
(ஆ) இறைவன், இறைவி மங்கலநாண் மணமக்கள் மலர் தூவி வழிபடுக. சாம்பிராணி, வர்த்தி கற்பூரம் காட்டுக.
(இ) மங்கல நாண் தட்டினை அவையினரின் வாழ்த்துக்கு அனுப்புக.
(ஈ) மஞ்சள் அரிசித் தட்டினை இன்னொருவர் எடுத்துச் சென்று அரிசியை அவையினர் அள்ளிக் கொள்ளச் செய்க.

14. அழல் ஓம்புதல்;
(அ) ஒரு தாம்பாளத்தில் உமிபெய்து அதன்மீது ஓமச்சுப்பலை இட்டு, கற்பூரம், காட்டி சுப்பல் மீது இடுக.
(ஆ) ஒரு கிண்ணத்தில் நெய்வைத்துக் கொண்டு மாவிலைக் கரண்டியால் ஓமச் சுப்பல் மீது மாப்பிள்ளையைப் பெய்யச் செய்க.
(இ) மணமகன் ஒவ்வொரு சுப்பலாக எடுத்து ஓமத்தில் இடச் செய்க.
(ஈ) ஒரு வெற்றிலையில் சிறிது நெய் தடவி ஓமக்கரியில் அப்பி எடுத்துக் கொள்க (மணமக்களுக்கு ஓமப் பொட்டு இடுவதற்கு ஓமம் முடிந்தபின் செய்ய வேண்டியது.


15. மங்கல நாண் அணிதல்;
(அ) மடமகன் உடன் பிறந்தாள், கையில் விளக்கு ஏந்தி மணமகளின் பின்புறம் நிற்க.
(ஆ) மங்கல நாணை வாழ்த்தி மணமகளின் கழுத்தில் அணிவதற்கு உகந்த வகையில் மாப்பிள்ளையின் கையில் தருக. மூத்த வாழ்வரசியார்


ஒருவர் உடனிருந்து கவனித்துக் கொள்ள, மங்கல நாணுக்கு மூன்று முடிச்சு இடச்செய்க (கெட்டிமேளம்)
(இ) அவையினர் மஞ்சள், அரிசி தூவி வாழ்த்துதல்,.
(ஈ) முடிச்சின் மீது மாப்பிள்ளை மஞ்சள் குங்குமம் இடச் செய்தல்.
(உ) மணமகளின் நெற்றியில் மணமகனைக் குங்குமம் இடச் செய்க. (மணமகளை அணைத்த பாங்கில்)


16. மாலை மாற்றிக் கொள்ளல்;
மணமக்கள் மும்முறை மாலை மாற்றிக் கொள்க.

17. உறுதிமொழி ஏற்றல்;
இரண்டு தாள்களில் வரையப்பெற்றுள்ள உறுதி மொழியை மணமகனும் மணமகளும் அவையினர் காதில் விழும்படி படித்துக் கையொப்பமிடுக. ஆசிரியர் வேறு இருவரும் ஒப்பமிட்டு மணமக்களிடம் தந்திடுக.

18. பட்டங் கட்டுதல்.
மாமியார் நாத்துணையார், உடன்பிறந்தார் என்னும் உறவுகள் கொண்டாடி, மணமக்களுக்கப் பட்டங்கள் கட்டுதல்.
19. வலம்வருதல்;
(அ) முன்னே ஒரு செல்வி விளக்கு ஏந்தச் செல்ல தொடர்ந்து இளஞ்செல்வியர் முளைப்பாலிகை ஏந்தி நடக்க மாப்பிள்ளைத் தோழர் மணமகனின் இடக்கைச் சுண்டு வரலைப் பற்றி நடக்க மும்முறை மண அறையை வலம் வருக.
(ஆ) முதல் சுற்றில் அம்மியருகே சென்றதும் மணாட்டியின் வலப்பாதத்தை மணாளன் எடுத்து அம்மிமீது வைத்து இரண்டாவது விரலில் காலாழி போடுக. இடப்பாதத்திலும் போடுக.
(இ) ஒவ்வொரு சுற்றிலும் மணமகளின் உடன் பிறந்தான் இருகைகளில் பொரி அள்ளி மணமகள் இருகைகளிலும் தர, மணமகள் மணமகனின் இரு கைகள்மேல் தம் பொரியேந்திய கையை வைத்து ஓமத்தில் பொரியைச் சொரிக.


20. பொரி மோதிரம் இடுதல்;
மூன்றவது சுற்றில் பொரி சொரிய உதவிய மைத்துனனுக்கு மாப்பிள்ளை சந்தனம் தந்து மாலை இட்டுப் பொரி மோதிரம் போடுக.
21. காப்பு அவிழ்த்தல்
வலம் வந்து முடிந்ததும் மணமக்களை மணையில் அமரச் செய்க.
(அ) அழல் ஓம்புக.
(ஆ) மணமக்களுக்கு ஓமப் பொட்டு இடுக.
(இ) கட்டிய முறையிலேயே மூன்று காப்புகளையும் களைந்து தட்டிலுள்ள தேங்காய் மீது இடுக.
(ஈ) காப்புக் கட்டுக்கான அரிசி, தேங்காயை மேளக்காரருக்கு அளிக்க.

22. மாறியமர்தல்;
மணாட்டி இடப்புறமும், மணாளன் வலப்புறமுமாக மாறி அமர்க.

23. வாழ்த்து.
(அ) அரிசி வாழ்த்து
(ஆ) திருநீறு பூசுதல்.
(இ) பரிசுகள் வழங்குதல்

24. கண்ணேறு கழித்தல்;
(ஆலம் சுற்றுதல்)மூத்த வாழ்வரசியார் செய்க.

25. வலம் வருதல்;II
முன் போன்றே
(முதல் தடவை மணமகன் வீட்டுச் செல்வியர் விளக்கும் முளைப் பாலிகையும் ஏந்திச் சென்றால் இந்தத் தடவை வீட்டுச் செல்வியர் ஏந்திச் செல்வர்.


26. பாலும் பழமும் அருந்துதல்;
வீட்டுக்குள்ளே சென்று மாப்பிள்ளைத் தோழர் பால்பழக் குவளையை எடுத்துத்தர, மணமகனும் மணமகளும் அருந்துதல்.

27. வாழ்த்துரை;
அச்சிட்ட வாழ்த்துரைகளைப் படித்தல், வாழ்த்து நவிலல். (மணமக்களை அவையில் நாற்காலிகளில் அமரச்செய்தல்.)


காதல் திருமணம் பற்றி பெரியார் கூறுபவை......

திருமணமுறை தொடக்க காலத்தில் இல்லை என்றும் ஒருவரையொருவர் மனம்நிறைந்த உவகையுடன் விரும்பிக் காதலித்து வாழும் வாழ்வே இருந்ததென்று வரலாற்றின்மூலம் அறியலாம்.

திருமணம் அல்லது கன்னிகாதானம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மக்களாகிய நமக்கு கிடையாது. நம்மவர்களுக்கெல்லாம் மணவாழ்க்கை இல்லை;காதல் வாழ்க்கைதான் இருந்தது.

என்று கூறும் பெரியார் காதலின் பழமையையும் அது தமிழர் வாழ்வில் பெற்றிருந்த சிறப்பையும் தெளிவாக்கியுள்ளார். தொல்காப்பியம் கூறும் காதல் வாழ்க்கையே தமழரின் அக வாழ்க்கை. ஆனால் வாழ்க்கையில் எப்பொழுது ஏற்பட வேண்டும்? எப்படி ஏற்பட வேண்டும்? என்பவற்றை அவர் இப்படிக்கூறுகிறார்...

உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சமநிலையில் பழகும் வாய்ப்புத் தந்து ஒருவருடைய குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து, ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

உயர்ந்த காதல் என்பது இதுதான். பிறவகையில் கூறப்படும் காதலெல்லாம் உயர்ந்த காதல் ஆகா.

.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -8

Wednesday, 10 February 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-6






iii செய்முறை விளக்கம்

மேலே கண்ட ஒவ்வொரு இனமும் நல்ல கருத்தை அடிப்படையாக கொண்டது.
தமிழரின் திருமணம் பண்டைக் காலத்திலே, சோலையிலே தான் முகிழ்த்தது. ஒருவனும், ஒருத்தியும் ஒருமனப்பட்டனர். அதற்கு அரசு மரத்தைச் சான்றாக வைத்துக் கொண்டனர். தெய்வத் திருவருளால் திருமணம் கூடுகிறது என்னும் நம்பிக்கை உடையவர்கள் நம்மவர்கள்.

மணப்பந்தல், பந்தற்கால்;
‘மணப்பந்தல்’ பண்டைக்காலத்திய சோலையை நினைவூட்டும். தெய்வ அருளால் மணம் கூடுவதால், அச்சோலையைப் ‘பந்தற்கால்’ என்னும் தெய்வச் சடங்கு வைத்து நடுவர். அரசமரம் திருமணத்திற்கும் ஆணிக்கால்போல சான்றாவதைக் குறிக்க அரசாணிக்கால் நடப்பெறுகிறது.
மண மனண;
மணமக்கள் அமரும் மணையின் அடியில் நெல்லோ, அரிசியோ இடுவர் அவர்கள் வாழ்வு நெல்லுக்கும் அரிசிக்கும் சிறிதும் குறைவு இன்றி அமைய வேண்டும் என்னும் அவாவினைக்குறிப்பதாகும். .வாழ்வுக்கு அடிப்படைப் பொருள் அரிசியே அன்றோ?

நிறை குடங்கள்;
மணமக்கள் இருவரின் இல்லற வாழ்க்கை. நிறைவானதாக அமைய வேண்டும். என்பதற்கு அறிகுறியாக இருநிறை குடங்கள், மங்கலத் தோற்றத்துடன், மணமக்கள் கண்முன்னே விளங்குவதற்கு அமைக்கப் பெறுகின்றன. குடங்களை வைக்க, அடியில் இடும் மணல், எதிர்பாராமல் எப்போதேனும் பந்தலில் தீப்பற்ற நேருமானால், அனைப்பதற்கு உடனடி உதவக்கூடியது. குடங்களில் உள்ள நீர் அவ்வண்ணமே பயன்படக்கூடியது.
குட விளக்கு;
மணமாகும் வரையில் மணமக்களின் நெஞ்சமாகிய குடத்திற்கு உள்ளேயிருந்த ஒளி விளக்கம், மணத்தினால் குடத்திற்கு வெளியே வந்து ஒளிவீசப் போகிறன்றது என்பதற்கு அடையாளமே குடவிளக்கு. இது அனணயாமல் இருக்க வேண்டும். எனவே இதற்கு இலை மறைப்பு மண நிகழ்ச்சிக்குப்பின் இவ்விளக்கை விழிப்பாகக் கொண்டு சென்று, வீட்டிற்குள் தூய இடத்தில் வைப்பர்.
முளைத்த கூலம்;
முளைத்த நவதானியம், மணமக்களின் கண் எதிரே அழகு செய்து, அவர்கள் ஒன்று பலவாக, அறிவில், திறமையில், ஆற்றலில், செல்வத்தில், சிறப்பில், பிறவற்றில் இனி முளைக்க வேண்டும் என்பதை அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறது.

அம்மியும் குழவியும்;
அம்மியும், குழவியும், மணமக்கள் எதைச் செய்தாலும் ஒன்றாக இருந்து செய்யவேண்டும் என்பதை நினைவுறுத்தியபடி விளங்குகின்றன. அம்மி தெருவிலும் குழவி புழக்கடையிலும் இருந்தால், அவற்றால் ஏதேனும் பயன் உண்டா?
தமிழ்த் திருமணப் பந்திலில் அம்மி மட்டும் போட்டு வைப்பதில்லை. குழவியும் இன்றியமையாமல் உடனிருக்கும். பிறவகை மணங்களில் அம்மி மட்டுமோ அல்லது ஒரு கருங்கல் துண்டோ இருப்பதைக்காணலாம். அகலிகை சாபத்தை நினைவூட்டவோ, அல்லது மணமக்கள் ஏழடி நடப்பதில் முதலடி எடுத்து, வைப்பதற்குப் பயன்படவோ எந்த கருங்கல்லும் சாலுமே, என்று அவ்வகையில் மணங்களைச் செய்து வைக்கும் ஆசிரியர் கூறக் கேட்டது உண்டு.

கை விளக்கு;
கைவிளக்கு மங்கல நாண் சூட்டும்போது மணமக்களின் உடன் பிறந்தாள் ஏந்தி நிற்கவும், வலம் வரும்போது முன்னே ஏந்திச் செல்லவும் பயன்படுகிறது. மங்கல நாண் சூட்டியதற்கு ஒரு முக்கிய சான்றாவார் விளக்கு ஏந்தியவர். வாழ்க்கையில் உலாவி வருவதற்கு, அறிவான ஒளி முன்னே செல்லப் பின்னே செல்ல வேண்டும் என்பதே விளக்கு எடுப்பதன் கருத்து.
கிளை விளக்கு;
கிளை விளக்கு அழகுக்கு மட்டும் அன்று, ஒரு விளக்கு அணைந்தாலும் பிற விளக்குகள் எரியும். காளைகளிலுள்ள எல்லா விளக்குகளும் ஒரே நேரத்தில் அனைந்து அமங்கலம் விளைவித்துவிடா.
அம்மையப்பர்;
உலகமே ஆணும் பெண்ணுமாக இயங்குகிறது. உயிரற்ற பொருள்களிலும் ஆண் உண்டு. பெண் உண்டு. மினவிசை ஒரு சடப்பொருளே. அதிலும் ஆண் ஆற்றல் பெண் ஆற்றல் இருப்பதை (Positive-Negative) காண்கிறோம். அண்டங்களை எல்லாம் நடத்திக் காத்துவரும் பேரறிவும் பேராற்றலுமான பரம் பொருளும் ஆணும் பெண்ணுமாக இயங்குவதை நம் முன்னோர்கள் உணர்ந்து அதனை அம்மையப்பர் என்றும் மாலும் திருவும் என்றும் போற்றிவரலாயினர். அப்பரம் பொருளையே இரு குடங்கள் உருவத்தில் மணமக்கள் கண்டுவழிபடுவதற்கு ஏற்றமுறையில் இரு செம்புகளில் எழுந்தருளச் செய்வது மரபு. சைவ, வைணவ நெறியினர் இருவர்க்கும் இம்மரபு பொது.

நலங்கு;
மணமக்களுக்கு நலங்கு வைப்பது, அவர்களை இல்லற வாழ்வுக்கு ஆயத்தம் ஆக்கல். இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி மணமக்கள் சமுதாயத்தில் கலந்து பழகும் மனநிலையை வளர்ப்பது (நலுங்குதல்-கசங்குதல், இலக்கணமாதல்)

மண உடை;
மண ஆடையை இறைவனுக்குப் படைத்து அதற்கு அவையினரின் வாழ்த்துப் பெற்று, வழங்குவது. பெண்ணும் மாப்பிள்ளையும்,, முதல்முறையாக மணக்கோலம் பூண்பதற்குத் திருவருள் துணையும் மக்கள் நல்லெண்ணமும் நிலவ்வேண்டி.
அரசாணிக்கோல்;
அரசமரமே, காதலன் காதலி இருவரது உள்ளங்களும் முதன் முதலில் சோலையில் ஒன்றியதற்குச் சான்றாக அமைந்தது. சோலையிலுள்ள தாவரங்களினல் தலைசிறந்து ஓங்கி வளர்ந்த்து. வாழ்வரசியர் கூடி அரசங்காலை நடுவது. மணமக்கள் அரசு போல பன்னெடுங்காலம் மங்கல வாழ்வு வாழ்ந்து வரவேண்டி.

மணப்பொங்கல்;
இப்பொங்கல் படையல்கள், திருமணப் பந்தலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரியன, மணமணை ஏறுவதற்கு முன்பு மணாளனும் மணாட்டியும் கடவுளை வழிபட்டு அன்னதானம் செய்யும் நோக்கமுடையது.
(மணப்பொங்கல் சில குடும்பங்களில் இடுவதோ படைப்பதோ இல்லை).

காப்புக்கட்டல்;
இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வை இனிது நடத்துவோம் என்னும் உறுதியைத் தெரிவிப்பதே மணமக்கள் காப்பு அணிதல். சான்றாக நின்ற அரச மரத்திற்கும் முன்னதாகக் காப்புக் கட்டுவது பொருத்தமே.

பெற்றோர் போற்றல்;
சோலையிலே இருவரும் உளங்கலந்து திருமணம் பூண உறுதி செய்து கொள்வதே பண்டை நாளில் தமிழகத்தில் நடந்தது. பிறகு பெற்றோரின் ஒப்புதல் பெறுவர். அதற்கு வாயிலாக அமைவதே மணமக்கள் அவரவர் பெற்றோர்களுக்குத்திருவடிப் பூசை செய்து வணங்குவது பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ இல்லாதபோது, பெற்றோர் நிலையில் கணவன் மனைவியுமாக இருக்கும் இருவர் பாத பூசை செய்து கொள்வர்.

ஓம்படை செய்தல்;
ஓம்படை செய்ல் சங்ககாலச் செய்யுள்களில் பொறிக்கப் பெற்றுள்ள ஒரு வழக்கு.
மற்ற முறைகளில் நடைபெறும் திருமணங்களிலே கன்னியைத் தாரை வார்த்துத் தத்தம் செய்வது போன்றது அன்று. மணமகனும், மணமகளும் ஒத்த நலங்கள் உடையவர்கள். ஆதலின், பெண்ணை மாப்பிள்ளைக்குத் ‘தானம்’ செய்வதோ. தத்தம்ய பண்ணுவதே தமிழ் மரபுக்கு முற்றும் மாறானது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கல் தமிழ் வழக்கில் இல்லை.


இறை வழிபாடு;
இறைவனை மணமக்கள் வழிபடுவதற்கு விளக்கம் தேவை இல்லை. இருவரின் வாழ்விலும் ஈடு எடுப்பற்ற ஓர் இன்ப நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அவர்களைப் போலவே, ஆணும் பெண்ணுமாக அங்கிங்கு எனாதபடி விளங்கும் எல்லாம் வல்ல பரம்பொருளை இங்கித மண அறையில் வணங்குவது இன்றிஅமையாதது அன்றோ?.
மங்கல நாணுக்கு வாழ்த்து;
மங்கல நாண் தேங்காய் மேல் சுற்றப் பெற்றிருக்கும் தேங்காய் ஆடாதபடி, அரிசியின் மீது பொறுத்தப் பெற்று இருக்கும். அவையினர் தாலியைத் தங்கள் இருகரத்தாலும் தொட்டு, தூய சிந்தனையோடு வாழ்த்துவதற்கு ஏற்றபடி பொன் தாலி மேல்புறமாக அனைவர் கண்களிலும் தோன்றும்படி இருக்கும். திருமணத்திற்கு இன்றியமையாத அடையாளமாக வந்துவிட்ட தாலியைத் தொடுவதால் திருமணம் ந்டந்த்தற்கு அவையினர் சான்றாகின்றனர்.
மங்கல நாண் சூட்டும்போது, கெட்டிமேளம் அடிக்குமாதலின் அவையினர் நினைவு, தாலி கட்டும் நிகழ்ச்சிக்கு ஈர்க்கப் பெற்று, கையில் வைத்துள்ள மஞ்சள் அரிசி மலரைத் தூவி, தாலி கட்டியதற்கு நேர்ச்சான்றாகவும் அவையினர் ஆவர்.


அழல் ஓம்பல்;
அழல் ஓம்பல், இறைவன் ஒளி வடிவில் போற்றுவதற்குத் துணையாவது, இறைவன் ஐந்து பெரும் பொருள்களான நிலம், நீர். நெருப்பு, காற்று வெளி இவற்றில் ஊடுருவித் தங்கி உள்ளான் என்னும் உண்மைச் சிந்தனை செய்து நிலத்தின் மீது நீர் நிரம்பிய இரு கலசங்கள் வைத்து, எதிரே நெருப்பை வளர்த்து, வ்ழிபடுவது இயற்கைக்குப் பொருத்தமாவதே, காற்றும் வெளியும் முன்னைய மூன்றுள் கலந்தனவாகும். ஆதலின், ஐம்பூதங்களிலுமே இறைவனை உணர்ந்து போற்றுவதற்கு அம்மையப்பர் வழிபாடும், ஓமமும் வாயிலாகின்றன்.
இழல் ஓம்பல் பண்டைய நாளில், திருமணங்களில் இடம் பெற்றிருந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியதே. ஆயினும், ஒளிவழிபாடு சிறந்தது. என்பதை உன்னி இதனை மண நிகழ்ச்சியில் ஓர் இனமாக வைத்துக் கொள்வது அறிவுக்கு உகந்ததே.

அழல் ஓம்பல் 2;
இரண்டாவது ஒருமுறை ஓமம் வளர்ப்பது, கோள் குறைபிற குறைகளைத் தீயின் முன் தூசுபோல் அகலச் செய்ய இறைவனின் அருளைத் தீ வடிவில் வழிபடுவதற்காகும்.
மங்கல நாண் சூட்டல்;
மங்கல சூட்டும்போது, மணமக்களின் உடன் பிறந்தநாள் கைவிளக்கேந்தி நிற்பது பந்தலில் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி ஒளி அளிக்கப் பயன்டுவதோடு, தாலி கட்டியதற்குத் தக்க சான்றாக மாப்பிள்ளையின் அக்கா தங்கையே அமையவும் ஏற்பாடு செய்த்தாயிற்று.
தமிழ்மணத்தாலி, புலிப்பல் போன்றது. மணமகனின் வீரத்திற்கு அடையாளமாக அவன் புலியைக்கொன்று கொண்டுவந்ததாகக் கருதுதற் பொருட்டே இன்றும் தாலி புலிப்பல் வடிவில் செய்யப்பெறுகிறது.


சிக்கனத் திருமணம் பற்றி பெரியார் கூறியவை;

பெரியார் உருவாக்கித் தந்த திருமண முறை வீண் செலவுகள் தவர்க்கப்பட்டு மிகமிகச் சிக்கனமாகவே நடைபெறவேண்டும் என்பது ஒரு கட்டாயமாகும், மற்றும் எல்லாத் திருமணங்களும் பதிவு செய்யப்பெறவேண்டுமென்றும் அவர் வற்புறுத்துகிறார். சாதி பொன்ற எந்த வேறுபாடும், வரையறைகளும் இல்லாமல் ஆணும் பெண்ணும் தம் துணைவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமையிருக்கவேண்டுமென்றும் அவர் தெரிவிக்கிறார். துணைவர்களான பிறகு எக்காரணத்திலாவது ஒத்து வாழ விரும்பாத போது திருமண ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ளவும் உரிமையிருக்கவேண்டும் என்பதோடு கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்ள உதவ வேண்டுமென்றும் மன்பதையன்பராம் பெரியார் வகுத்துரைகக் காண்கிறோம். என்று பேராசிரியர் மா.நன்னன் குறிப்பிடுகிறார்.

மேலும்...
வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்டு வாழும் ஆணும் பெண்ணும் எவ்வகை ஏற்றத் தாழ்வுமற்று ஒத்த உரிமையுள்ள சமமான நண்பர்களாக ஒருவரையொருவர் கருதி நடைமுறையிலும் அதைப் பின்பற்றத் தவறக்கூடாது. அவ்வாறின்றிப் பெண்ணை ஆண் தன் அடிமை பொல் கருதி நடத்தும் பழைய கோட்பாட்டைப் பின் பற்றுவதாயிருந்தால் பெண் அவ்வாறு மணந்து வாழ்வதைவிடத் தருமணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது எவ்வளவோ மேல் என்று கூறும் பெரியார் எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்கவேண்டும்? பெண் ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன செய்ய முடியும்? என்றும் வினாவுகிறார். பெரியார் குறிப்பிடுவன்...

வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு அறிவு, அன்புப் பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும். இவற்றில் முரண்பாடு ஏற்பட்டுவிடுமாயின் அந்தத் திருமணமே இவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தமே‍‍ ‍‍...முறிந்து விட்டதாகவே அர்த்தம். என்று பெரியார் கூறுகிறார்.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -7

Tuesday, 9 February 2010

வரி ஏய்த்த நகை கொள்ளை போனது, அபகரித்தவர் வாழ்க்கை கொள்ளியில் போனது!




சில வருடங்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு விசேஷத்திற்காக தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகையால் அங்கு புறப்பட்டு சென்றேன். அந்த பகுதி பகலில்  மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் சந்தைப்பகுதி, உறவினர் இல்லமும் அந்தப் பகுதியொட்டிய தெருவில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

வீட்டிற்குள் நுழையும் போதே உறவுக்காரப் பாட்டனாரிடம் சில அதிகாரிகள் கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் எதிர்வீட்டில் அந்த அரசு அதிகாரிகள் போவதும் வருவதுமாகவும், சிலப்பெட்டிகளை தூக்கி வருவதுமாக இருந்தனர். அது  ஒரு மார்வாடி வீடு, வெளியில் நிறுத்தப்பட்ட வாகனம் பழைய ஸ்டாண்டர்டு வேன், (முற்றிலும் சீலிடப்பட்ட வாகனம்) இப்பொழுது அங்கே என்ன நடக்கின்றது என்பதை நானே யூகித்துக்கொண்டேன். 

வேறொன்றமில்லை வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த மார்வாடி முகத்தில் சவக்கலை, அந்த அதகாரிகளிடம் என்னென்னவோ பேசி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர்கள் அதை அலட்சியம் செய்து கொண்டே அவர்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். அந்த மார்வாடி பல இடங்களில் பவுன் புரோக்கர் மற்றும் வட்டிக்கடை நடத்திவருபவர்.

மெதுவாக அங்கிருந்த உறவுகளிடம் '' என்ன? கையொப்பம் வாங்குகின்றனர்! பாட்டனாரிடம்...'' (அது ஒரு பெரிய கூட்டு குடும்பம், அந்த வீட்டின் மூத்தவரான அந்த (பாட்டனார்) பெரியவர் ஊர்த்தலைவர், அரசியல் புள்ளி மற்றும், வியாபாரி சங்கத் தலைவரும் ஆவார்) என்று வினவியபோது. அவர்கள் கூறியபோது எதிர் வீட்டில் நடக்கும் சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள், சொத்துக்கள், மற்றும் ரொக்கங்கள் இவற்றிற்காக சாட்சி கையொப்பம் வாங்குகின்றனர். 

இதற்காக அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் '' நீங்களே பெரியத் தலைவராக இருந்து கொண்டு மறுத்தால் எப்படி?'' என்று வாதாடிக்கொண்டிருந்தனர். அது வேறொன்றுமில்லை அந்த மார்வாடி எதிர் வீட்டுக்காரர் தவறாக நினைத்துவிடப்போகிறார் என்ற அச்சத்தில் தான் அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். இறுதியில் கையொப்பம் போட்டுவிட்டார். பொருள்களும் வாகனத்தில் போய்விட்டது.

இது இரவு பகலாக இரண்டு நாளாக நடந்து கொண்டிருந்த  சோதனை அன்று தான், அதாவது  நான் செல்லும் போது தான் முடிவடைந்திருக்கிறது.

இதில் என்ன செய்தியிருக்கிறது..... இதற்கு பின் தான் ஒரு செய்தியிருக்கிறது..

அதற்குபின் ஒருவாரம் அங்கே தங்கியிருந்தேன். அன்றிரவே அந்த வீட்டு மொட்டை மாடியில், தூக்கம் வராமல், நடு இரவில் காற்று வாங்குவதற்காக தற்செயலாக சென்றேன் இரவு 1 மணியளவில். அப்போதே அந்த விட்டு கூரையின் மீது சில நடமாட்டங்கள் நிழலாகத் தெரிந்தது. வேறோருவராக இருந்தால், அந்த திடீர் உருவங்களைப் பார்த்து பேய் என்று பயந்து வந்திருப்பார்கள். அந்தப் பகுதியில் இரவில் ஒரு நடமாட்டமும் இருக்காது. ஆள் அரவமற்று நிசப்தமாக இருக்கும்.

சில உருவங்கள் குனிவதும் என் தலை பார்த்ததும், பதுங்குவதுமாக இருந்தது. அந்த உருவங்கள் எதையோ தேடிக்கொண்டிருந்ததை மட்டும் என்னால் சந்தேகத்துடன் உணரமுடிந்தது. அது பற்றியும் உறவுகளிடமும் விசாரித்தேன் என்னைத்தான் திட்டினார்கள்... உனைன யார் பேய் உலாவுகின்ற நேரத்தில் மொட்டை மாடிக்கு செல்ல சொன்னது.... என்று பெரியவர்கள் எனக்கு சுற்றிப்போட ஆரம்பித்தனர்.

மீண்டும் அந்த விசேஷ நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்பினோம். ஒரு 1 மாதம் கழித்து மீண்டும் அந்த இல்லம் சென்று தங்க வேண்டியிருந்தது. சென்றேன். இந்த முறை அந்த மார்வாடி வீட்டில் பாட்டுக்கள் (இந்திப் பாடல்கள் தான்) ஒலித்து கொண்டிருந்தது. வீடே மங்களகரமாக இருந்தது. மார்வாடி வீட்டில் உள்ள உறவுகள் அனைவரும் மார்வாடி வீட்டில் போய்க்கொண்டிருந்தனர். 

மார்வாடி வீட்டு பக்கத்து வீட்டில் ஒரு பால்காரர் வசித்துவருகிறார். அவர் முந்தைய இரவில்  மாரடைப்பால் அகால மரணமடைந்து அவருடைய உடல் வெளியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.  அங்கிருந்த பகுதி மக்கள் அந்தப் பால்காரரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதையை செலுத்திவிட்டு புன்னைகயுடன் போய்க்கொண்டிருந்தனர்.  போகும் போது அனைவரும் மார்வாடியைப் பார்க்கத் தவறவில்லை. பக்கத்து வீட்டில் துக்கம் மார்வாடி வீட்டில் பாட்டு, குதூகலம்.... இது திடீரென்று பார்ப்பவர்கள் அனைவருக்கும் சந்தேகத்தை உருவாக்கியது. மார்வாடி எதை பற்றியும் கவலைப்படாமல் இதை செய்து கொண்டிருந்தார்.

இவர்கள் ஏதோ விஷயம் புரிந்து கொண்டு சிரிக்கின்றனர். இத்தனைக்கும் துக்க வீட்டிற்கு சென்று வருபவர்கள் சிரிப்பார்களா? எனக்கு வழக்கம் போல சந்தேகம் வந்து உறவுகளிடம் கேட்ட பொழுது ஒரு கதையை கூறினர்.....அந்த கதை இது தான்...

கடந்த முறை தணிக்கை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீரென்று நிழைய முற்பட்டபொழுது அந்த மார்வாடி அனைத்து நகைகளையும், எடுத்து வீட்டின் கூரை மீது எறிந்திருக்கிறார். அது பல இலட்ச மதிப்புள்ள நகைகள். இதை இரு கண்கள் முதலிலேயே பார்த்து விட்டது. அதற்கு பின் கதவைத்திறந்து அதிகாரிகளை உள்ளே விட்டிருக்கிறார் இந்த மார்வாடி. வீட்டின் சோதனை நடைபெற்றிருக்கும் பொழுதே ஒரு உருவம் முகத்தை மறைத்து கொண்டு பக்கத்து வீட்டின் மாடி சன்னல் பகுதியில் இருந்து கையை விட்டு இந்த மூட்டைகளை எடுத்துக் கொண்டது. 

அந்த உருவம் வேறு யாருமல்ல. அந்த பக்கத்து வீட்டு பால்காரர் தான். இதை இந்த மார்வாடி பார்த்துவிட்டார். அப்போது கத்தவும் முடியாது. தன் கண்ணெதிரே நகை களவாடப்படுவதை இல்லையில்லை எடுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார், அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிய மார்வாடி. அவர் அதை பிறகு பக்கத்து வீட்டாரிடம் பார்த்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.

வருமான வரி சோதனைகள் முடிந்து அவர்கள் புறப்பட்டதும். அந்தப் பால்காரரிடம் போய் நகைகளை கேட்டிருக்கிறார் மார்வாடி.

''பால்காரர் எந்த நகை? என்னிடம் வந்து கேட்கிறாய்? ''என்று பதிலுக்கு ஒன்று தெரியாதவர் போல் நடிக்க... 
....மார்வாடி தொடர்ந்து நடந்தவைகளைக் கூற....
...''நான் எதையும் எடுக்கவில்லை... வேண்டுமானால் காவல் துறையில் போய் முறையிடு....''
(அங்கே போக முடியாதே! இது தெரிந்து தான் பால்காரர் சமயோசிதமாக சொல்கிறார்)
....''''இந்த சோதனைப் பற்றியே எனக்குத் தெரியாது''... என்று பால்காரர் முரண்டு பிடிக்க... ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்றி...வாய்த்தகராறில் முடிந்தது... ...''என் நகை போனது என்...... (முடிக்கு) சமம், நீ எப்படி வாழ்ந்துவிடுகிறாய் என்று பார்த்துவிடுகிறேன்...''

என்று அவர் பங்குக்கு கூறிவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார், அந்த மார்வாடி.

இனி என்ன பால்கார்ருக்கு செம குஷி... நகைகளை அப்போதே ஊரில் எடுத்து சென்று பதுக்கி வைத்துவிட்டார், இந்த விபரீத மனிதர்.  உடனே ஊருக்குச் சென்றார் கொஞ்சம் கொஞ்சமாக காசாக்கினார். மிக ஜாலியாக குடியும், குடித்தனமுமாக போயிற்று. ஒரு கட்டத்தில் இவரின் சந்தோஷம் எல்லை மீறி மிக அதிகமாக குடித்தார் மாரடைப்பு வந்து விட்டது. அப்படியே சந்தோஷ மரணமடைந்துவிட்டார்.

இப்போது தெரிந்து விட்டது மார்வாடி ஏன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார் என்று? மார்வாடிக்கு மிக சந்தோஷம். பால்காரர் வீட்டில் துக்கம் இவர் வீட்டில் பாட்டுக் கச்சேரி..... திரைப்படத்தில் வந்த வடிவேல் நகைச்சுவை மாதிரி இருந்தது.

வரி ஏய்த்த காசு வாய் புளித்திடுமா?....நாய் வித்த காசு தான் குரைத்திடுமா?....

வரி ஏய்ப்பினால் மார்வாடி நகைகள் கொள்ளை போனது... அதை அபகரித்தவர் வாழ்க்கையோ கொள்ளியில் போனது.... என்று அங்கிருந்தவர்கள் முனகி கொண்டு சென்றனர்... இப்படியல்ல இப்படி...
ஊரை ஏய்த்த மார்வாடிக்கு (மசிறு )போச்சு..... அதை பிடுங்கித்தின்ன பால்காரருக்கு உசிறு போச்சு....
மார்வாடி அப்படித்தானே நகைகளை தூக்கி போட்டார் சர்வ சாதாரணமாக விட்டின் கூரை மேல்....

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த விஷயத்தையே அந்த பகுதி மக்கள் தங்களுக்குள் நகைச்சுவையாக சொல்லி சிரித்து கொண்டிருந்தனர்.

இப்போது எனக்கும் புரிந்து விட்டது அன்று ஏன்? நடுஇரவில் அந்த வீட்டின் கூரை மீது நடமாட்டம் தெரிந்ததின் பின்புலம். இதை என் உறவுகளும் உறுதி படுத்தினர். அதற்கு பின் தொடர்ந்து அந்த வீட்டின் கூறை மீது பலர் நடு இரவில், சிறுவர்களும், பேய் மாதிரி தேடிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. ஆசை எனும் பேய் யாரை விட்டது. அது பிடிக்காத மனிதர்கள் இல்லை. 

''ஆசையே துன்பத்திற்கு காரணம் '' என்று இதற்குத்தான் சாக்கிய முனிவரான கௌதம புத்தர் சொன்னாரோ?


Friday, 5 February 2010

தவறான கணிப்பு..... பாதிப்பு யாருக்கு.....!





இந்தப் பதிவு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பரும் நானும் சந்தித்த நிகழ்வினை பகிர்ந்து கொள்ளும் எண்ணமே. இது அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் நிகழலாம். நிகழாமலும் போகலாம்....

ஒரு முறை என் அலுவலக் மூத்த நண்பர்  ஒருவர் தற்செயலாக என்னிடம் ஒரு 3000 ரூபாயை கொடுத்து ஆயுள் காப்பீட்டில் அந்த பக்கமாக செல்லும் வேலையிருந்தால் கட்டிவிடவும் என்று கூறினார். அனைத்து ரூபாய் தாள்களும் இந்தியாவன் பிரபல தனியார் வங்கியில் இருந்து தானாயங்கி மூலம் பெறப்பட்டவை ஆகும்.  இரண்டு 500 ரூபாய் தாள்களும் இருபது  100 ரூபாய் தாள்களும் இருந்தன. 100 ரூபாய் தாள்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அடங்கிய தொடர் எண்கள் கொண்டவை. 

அவர் கொடுத்த பணம் லேசாக கசங்கி இருந்தது. காரணம், இந்த 100 ரூபாய் நோட்டுக்களை பழைய கால் சட்டையிலிருந்து (பேன்டிலிருந்து) எடுக்காமல் அதை அப்படியே மின்சார சூடு சலவை எந்திரத்தில் (டிரையர்) போட்டு துவைத்துவிட்டார் மனிதர். அதற்குப்பின் தான் அவருக்கு அந்த ரூபாய் தாள்கள் கால் சட்டையில் வைத்ததே ஞாபகத்திற்கு வந்திருக்கிறது.  பின்பு அது அனைத்தையும் எடுத்து பார்த்தவுடன் தாள்களின் மேல் உள்ளப் பூச்சுக்கள் லேசாக அழிந்திருந்தது. (மைகொட்டினால் அழிந்தது போல் அல்ல) தாள்களின் மேல் வழவழப்பான பூச்சு மட்டுமே அழிந்து லேசாக ஒரு சில இடங்களில் மட்டும் சொர. சொரப்பாக மாறியத் தாள்களாக கிழியாமலே இருந்தது.

இன்னும் புதுசு போலவே இருந்தது.  வழக்கமாக துணிகளில் தெரியாமல் வைத்துவிட்டு பின் துவைத்து விட்டு பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது. பலத் தாள்களை அப்படித்தான் பயன்படுத்தியிருக்கிறோம். இன்னும் பயன்படுத்தி கொண்டு தான் வருகின்றோம். மேலும் இது மாதிரி துவைப்பதினால் இந்த தாள்கள் பாதிப்படைவதில்லை என்பதும் இந்திய சேம வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) அளித்துள்ளத் தகவல்கள் தான். 

அதன்படி அவரிடம் இது ஒன்றும பெரிய விஷயமில்லை என்று வாங்கிச் சென்று கட்டத் தயாரானேன். அந்த அலுவலகம் ''''என்  நண்பர்கள் பணிபுரியும் ஆயுள் காப்பீட்டு கிளை அலுவலகம் தான். ஆகையால் பிரச்சினை ஒன்றுமில்லை என்றும், வந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்'''' என்று கூறிப் பெற்றுச் சென்றேன்.

அதே போன்று கிளைக்குச் சென்று கட்டணம் செலுத்தும் இடத்தில் அந்த பணத்தை கொடுத்து காப்பீட்டு எண்ணையும் கொடுத்தேன். காசாளராக பெண் தான் இருந்தார். வழக்கம் போல் அனைத்து நோட்டையும் புறவூதாக் கதிர் உட்பாட்டுக்கு கொண்டு சென்றனர். அதில் என்ன தெரிந்த்தோ? தெரியவில்லை? (ஒரு அலை போன்ற மாறுபாட்டை காட்டியிருக்கும் மற்றபடி அது எந்த தகவலையும் அளிக்காது) இது போலி என்று சுட்டிக்காட்டினர். நான் அந்த நபருடைய காப்பீட்டு எண் மற்றும், தொலைபேசி எண், அனைத்தையும் கொடுத்து அவரிடமே இது பற்றி விசாரிக்கச் சொன்னேன். இருந்தாலும் நான் தான் அளித்தேன் என்பதால், என்னையே தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். நான் அவரிடம் தொடர்பு கொண்டு அந்த தாள்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்ற விவரத்தையும் சொன்னேன்.

அது சம்பந்தமான பரிவர்த்தனை ரசீதும் (டிரான்சாக்சன் சிலிப்) தன்னிடம் உள்ளதாகவும் அது எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டது என்பதையும் நண்பர் தெரிவித்தார்.  பின் அந்த தனியார் வங்கியை அவர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். எங்களிடம் அந்த மாதிரி தாள்கள் வருவதில்லை. அதை தணிக்கை செய்ய தனியாக ஒரு பிரிவே செயல்படுவதாகவும் அந்த வங்கி கறாராகத் தெரிவித்தது. அந்த எண்ணில் சரியானத் தாள்கள் உள்ளது என்பதை அந்த வங்கியும் தெரிவித்த்து. அப்படி சந்தேகம் என்றால் வேறு தாள்கள் தரவும் அந்த தனியார் வங்கி ஒப்புக்கொண்டது. இது அனைத்தையும் தொலைபேசியில் தெரிவித்தார்.

ஆனால் இவர்கள் அருகில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள காசாளரிடம் இந்த தாள்களை காட்டி அவரிடமும் வய்மொழி மூலம் போலி என்று ஒப்புதல் பெற்றுக் கொண்டனர்.

அந்த காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் நண்பர் இவரை எனக்குத் தெரியும் இவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கூறிவிட்டார்.  அவர்கள் பின் என்னை தொந்தரவு செய்வதை விட்டு விட்டனர். பிறகு உள்ளே சென்று மேலாளர் அறையில் ஏதேதொ பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களாகவே வந்து அனைத்து தாள்களிலும் போலி என்று தடிமனான எழுத்தில் எழுதினர்.. அப்படியே நன்றாக உள்ள  500 ரூபாய் தாள்களிலும் எழுதிவிட்டனர். அது நான்றாகத்தானே இருக்கிறது என்றால் இல்லை, ஒருவர் கொண்டு வரும் தாள்களில் ஒரு கத்தை நோட்டே போலி என்று கண்டுணர்ந்தால். அவர் கொண்டு வந்துள்ள தாள்கள் அனைத்துமே போலியாகத் தான் இருக்கும் என்ற முடிவுக்குத் தான் வரமுடியும் என்று கூறிவிட்டனர். (எல்லாமே யூகம் தான்)


இதற்கு பின் நண்பரே கிளைக்கு வந்து என்னிடம் முதலில் வருத்தத்தை தெரிவித்தார். வீணான சிரமத்திற்கு உங்களை ஆளாக்கிவிட்டேன் என்று மிகவும் வருந்தினார். அவருக்கு என்னை சிக்கலில் மாட்டவிட்டோமே என்ற வருத்தம் மட்டுமே. மற்றபடி இது ஒரு பெரிய விஷயமில்லை. அவரே மேலாளர் அறைக்கு அனைத்தையும் விவரித்து அது சம்பந்தமான ரசீதுகளையும் கொடுத்தார். அவரிடம் போலி என்று எழுதப்பட்ட தாள்கள் ஒப்படைக்கப்பட்டது.  அவரும் இதில் ஏன் எழுதினீர்கள் என்று வினவினார். இப்படித்தான் எழுதி ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் காவல் துறையிடம் தான் ஒப்படைக்க முடியும் என்றனர். அவர் தாராளமாக புகார் செய்யுங்கள், இல்லை நானே செய்யட்டுமா? என்றார், என் நண்பர். அப்போதே பதட்டம் ஏற்பட்டுவிட்டது. இல்லை என்று ஒருவாறு மழுப்பினார்கள். சரி அது போலி என்பதை எழுத்துமூலமாவது தாருங்கள் என்று கேட்டார். தரமறுத்து விட்டனர்.

 உடனே ''''நீங்கள் இதை போலி இல்லை என்பதை எப்படி நிருபிப்பீர்கள், முடிந்தால் நிருபியுங்கள்'''', அதற்கு பின்  நாங்கள் தருகிறோம்?'''' என்றனர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினர். நாங்கள் போக மாட்டோம் என்று நினைத்து கொண்டனர் போலும்.  பதிலுக்கு நாங்களும், ''''நீங்கள் எப்படி யூகித்தீர்கள் என்று தானே எழுத்து மூலம் கேட்கின்றோம்''''. ஆனால்  இதற்கு பதிலில்லை, இது தானே அரசு நிறுவனம்.

இதை நான் கூட பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை  இதை பெரிய விஷயமாக நண்பர் எடுத்துக் கொண்டார். அதுவும் நல்லது தான். இல்லாவிட்டால் இந்த பதிவு எழுதியிருக்க முடியாது. அந்த தாள்களை அந்த வங்கியில் கொண்டு சென்றவுடன் அவர்கள் வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர், அதற்கான கடிதத்தையும் தருகிறோம் என்று கூறினர். ஆனால் இதில் போலி என்று எழுதப்பட்டுள்ளதே. இப்போது நாங்கள் தலையிடமுடியாது. இதை சாதாரணமாக ஒருவர் எழுதமுடியாது. ஆகையால் இதை ஆய்வுக்கு உட்படுத்த ரிசர்வ் வங்கிக்கு கொடுங்கள் என்றார்.

அங்கே அவருடையை உறவுகள் பணிபுரிந்து வந்ததால் (மற்றவரும் நாடலாம்) அவர் பணி எளிதாக முடிந்தது. அவர்கள் இந்த தாள்கள் உண்மையானவை,. அசல் தாள்கள் தான் என உறுதியளித்தனர். மேலும் இதை யார்? இப்படி எழுதினார்களோ? அவர்கள் மீது  நீங்கள் விரும்பினால் நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்த தணிக்கை அதிகாரி கடிதம் கொடுத்து விட்டார். மாற்றுத் தாள்களையும் தந்துவிட்டனர். இல்லை நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அந்த தாள்கள் மேல் அப்படி எழுதிய அலுவலகத்தில் இருந்து கடிதம் பெற்று வருமாறு கூறினார்கள்.

உடனே அவர் என்னை நாடினார். அதே போன்று கிளையையும் நாடினார். ஆயுள் காப்பீட்டுக் கிளையில் கடிதத்தை காண்பித்ததும் பயந்து விட்டனர். உடனே அன்று போலி என்று வாய் மொழியாக உறுதி கொடுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியை கை காட்ட ஆரம்பித்தனர். உடனே விடவில்லை நம் நண்பர் ''''அங்கே போய் அந்த காசாளரிடம் கடிதம் வாங்கிவருமாறு'''' அறிவுறுத்தினார். இல்லையேல் ''''நீங்கள் கொடுங்கள் ''''

அவர்கள் போய்  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேட்டவுடன் ''''நீங்கள் சொன்னதற்காகத் தான்  நான் அப்படி சந்தேகமாகத் தான் கூறினேன்''' என்று காசாளார் நழுவினார். ''''நான் விளக்கினடியில் பார்க்கும் பொழுதும் அப்படித் தெரிந்தது''''. நீங்கள் நம் வாடிக்கையாளராயிற்றே, அதனால் தான் கூறினேன் என்று மேலும் ஆதரவாக நைசாகப் பேசி அவர்களை அனுப்பிவைத்தார். வெறுங்கையுடன் வந்து கிளை மேலாளரிடம் முறையிட்டனர் ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள்.

இது பற்றி விவாதித்து நல்ல முடிவெடுப்பதாக கூறி எங்களை அப்போதைக்கு அனுப்பி வைத்தார்., பின் கிளை மேலாளர், வளரச்சி அதிகாரி என்று ஒரு குழுவாக சென்று பேசி விவாதித்தப் பின் இறுதியில் ஆயுள் காப்பீட்டு நண்பர் மூலம் என்னிடம் சமரசத்திற்கு இரவு 1 மணியளவில் என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ""இதை அப்படியே விட்டு விடுமாறு உங்கள் நண்பரை அறிவுறுத்துங்கள் "" என்று கெஞ்சினார்கள். ""இதனால் இருவரின் வேலையே போய்விடும்"" என்ற காரணத்தையும் காட்டினர்.  ''''இதை பற்றி மேலிடத்திலும் விசாரித்தோம் அவர்களும் ஆமாம் இது தவறு தான் என்று கூறினார்கள்.  ஏதோ தவறு நடந்து விட்டது..... இதை இத்தோடு சுமுகமாக முடித்து வையுங்கள். மேலாளர் மிகவும் கலவரமுற்று இருக்கிறார்.''''... என்று தெரிவித்தனர்.

ஆனால்  பாதிக்கப்பட்ட நண்பர் விடுவதாயில்லை என்பதை பதிலாகத் தெரிவித்தேன். ஆகையால் தான் உன்னிடம் பேசி அதை ஒரு அமுக்கு அமுக்கச் சொல்கிறோம். '' ''அவர் மிக கோபமாக இருக்கிறார்,'''' என்று கூறினார்கள். 

வேறு வழி என்ன செய்வது. அவரிடம் இது பற்றி கூறினேன். அவர்கள் எந்தளவுக்கு நம்மை அலைய வைத்திருப்பார்கள், உங்களுக்கும் மனவுளைச்சல் தந்திருப்பார்கள், அவர்களை சும்மா விடவா சொல்கிறீர்கள்? என்றார். ஆனால் கேட்பதும் ஒரு நண்பர் தான் என்று விளக்கினேன். '' ''நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள்'' '' என்று  பிரச்சனையை அத்தோடு விட்டு விட்டார்.

இதை எதற்கு கூறுகிறேன் என்றால் சட்டம் தெரியாமல் இருந்தால் இது மாதிரி சிக்கல்களில் நாமும் சமயங்களில் மாட்டிக்கொண்டு அவதிப்பட நேரிடும். ரிசர்வ் வங்கி கூறும் தகவல் இதுதான் போலி தாள்கள் பரிசோதிப்பது என்பது பல கட்ட சோதனைகளுக்கு உட்பட்டது. இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முதல் கட்டத்திலேயே அதுவும் புற ஊதா விளக்கின் முடிவிலேயே ரூபாய்த்  தாள்கள் போலி என்ற தவறான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அப்படி வந்தது இல்லாமல் ரிசர்வ் வங்கி கையிலெடுக்கும் அதிகாரத்தை தாங்களே எடுத்துக்கொண்டு ரூபாய்த்தாள்களில் போலி என்று எழுதியது அதை விட பெரிய குற்றம். இதனால் அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் மேல் குற்றவியல்  (கிரிமினல்) வழக்கை வாடிக்கையாளரும் தொடுக்க முடியும். ரிசர்வ் வங்கியும்  புகாரின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கும். அசல் தாள்களை போலி என்று தன்னிச்சையாக அறிவிப்பது எவ்வளவு தவறு, அதற்கான சட்டம் என்ன என்பதை உணராமலேயே அந்த ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் செய்துள்ளனர். வாடிக்கையாளரையும் பல்வேறு மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். 

ஆனால் ரிசர்வ் வங்கி அந்தத் தாள்களை கையில் வாங்கியவுடனேயே ''''இது அசல் தாள்கள் தான். இதை யார் போலி என்று  இப்படி முட்டாள் தனமாக எழுதியது'''' என்று கேட்டனர்.  ஆக ருபாய் தாள்கள் பரிசோதிப்பு முறையும் அரசு அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு சரியான பயிற்சி இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ஏதோ குருட்டுப் போக்கில் எல்லாவற்றையும் தவறாக கணிக்கின்றனர். நமக்கும் தொந்தரவு தருகின்றனர்.


ஒரு நிர்வாகம் எதையும் அறியாமல் ஏதோ பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து விட்டோம் என்று ஆர்ப்பரித்து கொண்டு செய்ததின் விளைவு. அதை செய்ததற்கான ஆதாரத்தையும் தாள்களின் மேல் அவர்கள் கைப்பட எழுதிவிட்டனர். 

இம்மாதிரி ரிசர்வ் வங்கியே உடனே முடிவெடுக்காதாம். அது பல ஆய்வுகளுக்கு பின் தான் இறுதி செய்யப்படும். சமயத்தில் இது மாதிரி துணி துவைப்பதினால் ஏற்பட்ட சிலும்பல்களினால் புறஊதாக் கதிர் அலைகள் மாறுபட்டுத் தெரிவிக்கும் அதை வைத்து ஒருவரை, ''''போலி ரூபாய் நோட்டு வைத்திருக்கிறார்''' என்ற உடனடியான முடிவுக்கு வந்து விடமுடியாது. அதுவும் தானே இறுதி முடிவையும் எடுத்து விடக் கூடாது என்பது தான் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்பது அங்கு சென்ற பின் தான் தெரிந்தது.

போலி ரூபாய் நோட்டுக்களின் விஷயத்தில் சட்டம் எப்படிப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதற்காக தவறாக கணிப்புக்கு ஒரு தனி நபர் ஆளாக முடியாது.   போலி ரூபாய் தாள்கள் எங்கிருந்து உருவாக்கப்பட்டன என்று ஆதி முதல் அந்தம் வரை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்காகவே இவ்வளவு கடுமையான சட்டம் என்பது நம்க்குத் தெரியாமலில்லை.


வங்கியிலிருந்து பெறப்படும் பரிவர்த்தனை ரசீதுகளை பத்திரப்படுத்திவைத்துக்கொள்ளவும்  இந்தப் பதிவு அறிவுறுத்துகிறது. இது சமயத்தில் நமக்கே உதவுகிறது. தானியங்கி மூலம் பெறப்படும் பணம் போலித்தாள்கள் உள்ளது என கண்டுணர்ந்தால் உடனடியாக அந்த வங்கியை காலதாமதம் செய்யாமல் அங்கிருக்கும் தொலைபேசி மூலமாகவே தெரிவித்து மாற்று நோட்டைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான அத்தாட்சியை காண்பித்தபின் இது சாத்தியமாகும்.

எந்த வங்கி பரிவர்த்தனை ரசீதுகளையும் பத்திரப்படுத்தி, கோப்புகளில் வைத்திருப்பது நல்லது. கல்லூரியில் தேர்ச்சி அறிக்கையையே இந்த ரசீதின் மூலம் தான் பெறமுடிந்தது. பணம் செலுத்தவில்லை என்று தேர்ச்சியையே நிறுத்தி வைத்திருந்தனர். பின்பு தேர்வு கட்டணம் வங்கியில் செலுத்தியதற்கான  அத்தாட்சியை, வங்கி ரசீதை.  நகல் எடுத்து இணைத்து அனுப்பியவுடன் தேர்ச்சி அறிக்கை வந்தது. '' ''இதெல்லாம் நடக்கும் என்று முன்பே தெரியுமா?'' '' என்று கூட கேட்டனர். இந்த பின்பற்றலை வழக்கமாக கொண்டிருந்ததால் இது சாத்தியமாயிற்று. நமக்கு நாமே துணை. பலவேளைகளில் வங்கிகளால் நமக்கேற்படும் பிரச்சனைகளுக்கு, தீர்வு காண்பதற்கு இம்மாதிரி அத்தாட்சிகளே உதவுகின்றது. உதவியும் இருக்கின்றது.

தானியங்கி மூலம் பெறப்படும் ரசீதுகளையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. அப்படியிருந்தால் பணம் எங்கிருந்து பெற்றோம், என்று பெற்றோம், எவ்வளவு பெற்றோம் என்பதை உடனே நம்மாள் கணிக்க முடியும். பலர் அதை குப்பையில் அப்போதே தூக்கி எரிவார்கள். வங்கித் தகவல்கள் கணிணியில் கிடைக்கிறது இப்போது இது பெரிய விஷயமில்லை. இருப்பினும்.... இப்படியிருப்பது நல்லது.

....நன்றி அனுபவம்....

Thursday, 4 February 2010

மெலியாரை ஏய்க்கும் வலியோர் கூட்டம்....





சமீபத்தில் உறவுகளுடனும், நட்புகளுடனும் சென்னை மெரினாவிற்கு சற்று காலத்தை கொல்வதற்காகவும், காற்று வாங்குவதற்காகவும் சென்றோம்.  அது ஒரு ஞாயிறு.... ஞாயிறு கடலுக்குள் மறையும்  வேளையில்.....

...அங்கே பலூனை சுட்டி காதலை வெளிப்படுத்த அலைமோதும் இளசுகள்... ஒரு பஞ்சு மிட்டாயை .....இரண்டு பேரும் காக்கா கடி கடித்து காதலை வெளிப்படுத்தும் ஜோடி..., பஜ்ஜிக்காக பறந்து பறந்து சென்று கடாயில் கையை விட்டு...  சூடு ஆறுவதற்குள் வாயுக்குள் உள்ளே தள்ளும் குடும்பங்கள்..., 


...தீப்பொறி சட்டையில் பட்டாலும் பரவாயில்லை சோளக் கதிரைத் தீயிலிட்டு பொரித்து உடனே தின்னத்துடிக்கும் இளைஞர்கள் கூட்டம்...

....படிப்பைத் தொலைத்துவிட்டு ஜோடிக்களைத் தேடிச்சென்று சுண்டல்களை திணிக்கும்...சிறிய வியாபாரச் சிறுவர்கள்...

...படிப்பிலிருந்தும், அம்மா அப்பா தொல்லயிலிருந்தும் சிறிது நேரமெ விடுதலை... என்று விடுதலையின் பெருமையை உணரும் குழந்தைகளின் குதுகலத் துள்ளல்கள்... ''''அம்மா அம்மா இங்கேயே இருந்திடலம்மா''''... ...அம்மா அப்பாவை பொம்மை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கும் குழந்தைகளின் சிலும்பல்கள, அழுகைகள்...

...நம் காலம் முடிந்துவிட்டது? என்று தூரத்தில் வரும் கப்பலின் தொலைவு இருக்குமா? நம் வாழ்க்கை?  அது வரை நாம் வாழ்வோமா? என்று நாட்களை எண்ணி ஏக்க பெருமூச்சு விடும் மூத்தவர்கள்...

...காதல் ஜோடிகள் ஒன்று சேருமா?, சேராதா? பெத்தவர்களிடம் மாட்டிக்கொள்ளுமா? மாட்டாதா?  என்று குறி சொல்லி தைரியத்தை வரவழைக்கக் காத்திருக்கும்...கைராசி, பெயர் ராசி பார்க்கும் பெண்கள் கூட்டம்.... 

....இவர்கள் காற்று வாங்குவதற்குள் நம்ம தாவு அறந்து போகிறது என்று அலுத்துக் கொண்டு, போக்குவரத்தையும், குளிப்பவர்களையும் ஒழுங்குபடுத்தும் காவலர்கள்.....

...எப்போதுமே எங்கள் பணி இரப்பது தான் என யாசிப்பவர்கள் கூட்டத்தின் ''''யம்மா! யம்மா! ...ஏழை பாட்டிக்கு காசு போடும்மா!'''' என்ற அவலக்குரல்கள.... .

இதை எதையுமே கவனிக்காத, ஆர்வமில்லாத ஜோடிப்புறாக்கள் மூக்கால் தீனியை செவ்வனேக் கொத்திக்கொண்டிருந்தது ஒரு பக்கம்.... என்று இப்படி ஆங்காங்கே போக்கிடமில்லாத நகர மக்களின் ஆதங்கத்தை ஒரளவுக்கு போக்கி கொண்டிருந்தது, அனைவரையும் ஆதரித்து கொண்டிருந்தது சென்னை மெரினா...

அங்கே போன பிறகு தானே தெரிந்தது காலத்தை கொல்ல நினைத்தது எவ்வளவு தவறு என்று........ பலர் மனித இதயங்களை கொன்று கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு....

அதில் ஒரு நிகழ்வு.... அங்கே ஒரு 50 வயதை தாண்டிய  பெரியவர் (இளைஞர்) அழுக்கு வேட்டியுடன் பரபரப்பாக பட்டம் விற்றுக் கொண்டிருந்தார். ஒரு பட்டம் 10 ரூபாய் என்ற விலையில் ஒரு 15 மீட்டர் நீள மாஞ்சாத் தடவாதா நூலுடன் விற்று கொண்டிருந்தார். அதை வாங்குவதற்கு சிறுவர்களை விட 45,55 நடுத்தர வயது,  பெரியவர்களுக்கே ஆர்வம் அதிகமிருந்ததைக் காணமுடிந்தது. 

அதில் ஒருவர் 45 வயது நபர் அல்ல அல்ல உள்ளத்தில் மிகச் சிறியவர் தனது இரண்டு பிள்ளைகளுக்காக (ஆண் பிள்ளை, பெண் பிள்ளை) காற்றாடி வாங்கி விடத் தெரியாமால் விட்டு கொண்டிருந்தார். 

அவர் பறக்க விட்ட காற்றாடி, காற்று திசை நோக்கி பறக்க விடாமல், ஒரே இடத்தில் நின்றதால் காற்றின் திசை மாறியதால் அடிக்கடி கீழே இறங்கியது.... பலரும் காற்றாடி விற்பவரை விட்டு விட்டு அவரின் சிறுபிள்ளைத்தனமான முயற்சியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

காற்றாடியை வாங்கிய இடத்திலேயே பறக்க விட்டு கொண்டிருந்ததால் காற்றாடி விற்றுக் கொண்டிருந்தவருக்கோ இடைஞ்சல் வேறு. அவரும் பலவாறு அவரை அறிவுறுத்திக் கொண்டிருந்தார். சற்று கடலை நோக்கி பின்னோக்கி சென்றோமானால் அனைவரும் தாராளமாக இடத்தை பயனபடுத்தி டீல் ஆகாமல் காற்றாடி விடலாம். (உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆயிற்றே இடமா இல்லை) காற்றாடியும் கீழே இறங்காது என்பதை விற்பவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அதை காதில் வாங்காமல் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டும் இருந்தார். இது அடுத்து காற்றாடி வாங்கும் எண்ணம் கொண்டோரை தடை செய்ததாலும், அடுத்து வாங்கியவரின் பட்டத்தில் சிக்கி அவருடைய பட்டத்தையும் கீழே சேர்த்து இறக்கியது.

இதை பார்த்து விட்டு வாங்குபவர்கள் காற்றாடி அடிக்கடி கீழே இறங்குகிறதே என்ன காரணம் என்று விற்கும் பெரியவரிடம் வினவியபடி வாங்கலாமா? (என்னமோ காற்றை அவர் திசை மாற்றுவது போல...) வாங்கக்கூடாதா? என்ற சிந்தனையில் விற்பவரையே நெருங்கினர். பறக்கவில்லை..பறக்கவில்லை..என அவரையே தொந்தரவும் செய்தனர்.

அவர் அதற்கு ''''அவருக்கு விடத்தெரியவில்லை'''' என்ற வார்த்தையை விடுத்து விட்டார். ''''கொஞ்சம் தள்ளிச் சென்று காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பின்னோக்கி சென்றால் பறக்கும்'''' என்று பதில் தெரிவித்தார். உடனே அந்த மேதாவிக்கு காற்றாடி பறக்காத கோவத்தினாலும், விடத்தெரியாது என்பதை ஏதோ ''''விமானம் தான் ஒட்டத் தெரியவில்லை'''' என்ற பொருளில் கூறிவிட்டார், என்ற ரீதியில்

...''''எப்படி நீ சொல்லலாம்?'''' என்று ஒருமையில் ஆரம்பித்து, ''''பின் எப்படிய்யா சொல்லலாம்?'''' என்று போய் இறுதியில் ''''ஆத்தா''''..... என்று தாய் மொழியில் வசை பாட ஆரம்பித்தார். அந்த மனிதருள் மாணிக்கம்.  

காற்றாடி விற்ற பெரியவருக்கோ அதிர்ச்சி....'''' நான் என்ன சொல்லி விட்டேன்.... ''''என்று கூறி விட்டு தன்னுடைய விற்பனையில் இன்னும் மும்முரமாகினார்.

ஆனால் அவருடைய பதில் இவருக்கு திருப்தியளிக்கவில்லை. மேதாவி மனதல்லாவா? எப்படித் திருப்தியடையும்...மேலும் விடாமல் தொடர்ந்தார்...

''''உனக்கு வேண்டியது காசு''''.... ''எவ்வளவுய்யா வேணும் என்று கத்தையாக ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் காட்டினார்''''...

''''என்க்கு உங்க காசு வேணாங்க'''...... இது  காற்றாடி விற்கும் பெரியவர்

..'''' உன் வேலை விற்பது தான்''''  ....இது அந்த மேதாவி. ( இது அனைத்தையும் பொறுமையாக காதில் வாங்கி கொண்டிருந்தார் ஒரு சிறு வியாபார மூதாட்டி...)

....என்று அவர் வேலையையும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். இது அத்தனையும் அனைவரும் கூடியிருக்கிற இடத்திலேயே இந்த அர்ச்சனைகள் ஆரம்பித்தது. அனைவரும் அவரின் ஏளனப் பேச்சை கேட்டு எள்ளி நகையாடினர். சிலர் என்ன மாதிரியான மனிதன் என்று வாய்திறந்து திட்டிக் கொட்டிருந்தனர் சற்றுத் தொலைவில்....
...''''அவரிடம் போய் சவடால் விடுகிறானே''''.... ''''இதை அந்த மனிதனின் மனைவி மற்றும் பிள்ளைகளும் பார்த்துக்கொண்டிருக்கின்றதே''''... 

என்று பக்கத்தில் அமர்ந்திருந்த வயதான மூதாட்டியும் தன்னுடைய எதிர்ப்பை முனகலாகத் தெரிவித்து கொண்டிருந்தார்.

அவர் தொடர்ந்து வசை பாடிக்கொண்டே இருந்த அந்த பெரிய மனிதன் ஒருகட்டத்தில்.... 
....''''எப்படிடா என்னை கேட்கலாம் ஆத்தா!?''''... என்று தொடங்கி 
அவரிடம் தன் வலிமையை காட்ட என்னிடம் 
''''எவ்வளவு பணம் இருக்கிறது தெரியுமா?.... ''''

....அவர் எனக்கு வேணாங்க'''' என்று மறுபடியும் அந்த பெரியவர் கூற அப்போதும் விடவில்லை. 
''''நான் எவ்வளவு படித்திருக்கிறேன் தெரியுமா? நான் ஒரு கம்யூட்டர் இன்ஜினியர்''''..'''எனக்கு கீழே எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் தெரியுமா?... இடையிடையே நாயே பேயே வேறு....

....''''. எங்கே இந்த கணக்கு எவ்வளவு சொல்ல முடியுமா?  1739 ரூபாயில் 360 ரூபாய் கழித்தால் எவ்வளவு என்று கூறு பார்ப்போம்...'' என்னால் எல்லாம் முடியும்...என்னை எப்படி டா...ஆத்தா!''.... ''ஆத்தா! எப்படிடா!....சொல்லலாம்!....அதுவும் என் பொண்டாட்டி முன்னாடி..... என் பொண்டாட்டி என்ன நினைப்பா''''.... 

...அனைத்திற்கும் மௌனம் காத்தார் ...அந்த பெரியவர்....அந்த எளிய காற்றாடி வியாபாரி.. வாய்த் திறக்கவில்லை... இன்னொரு காற்றாடிக்கு வால் ஒட்டிக்கொண்டிருந்தார்....அன்றைக்கு அதுதானே அவரது ஜீவனம்....

....அந்த அழகு, அவரின் அருமை பொண்டாட்டி இதை தட்டிக் கேட்பார்  என்று  சுற்றி அமர்ந்திருந்த அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை, பதிலுக்கு அந்த பெரியவரையே அதட்டினார் இப்படி...

....''''நீ எப்படிய்யா என் வீட்டுக்காரரை சொல்லலாம்?....  அவர் யார்? என்று தெரியுமா?''''

'''அந்த பெண்மணிக்கு தாய் தந்தையர் உண்டா இல்லையா? தெரியவில்லை? இவளும் ஒரு பெண்ணா?''' என்று அருகில் இருந்த முதிய. நடுத்தர வயது பெண்மணிகள் அந்த பெண்ணை வசை பாடினார்.... வாய்திறந்து, சற்றுத் தொலைவில், அவர்கள் காதில் விழாமல்.....

ஒரு கட்டத்தில் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் எழுந்து சென்று அந்த ஆளை உண்டு இல்லை என்று வாங்குவது என்று எழுந்து புறப்பட்டவுடன்.... 

அந்த பக்கத்தில் பொம்மைகள் விற்றுக்கொண்டிருந்த அந்த மூதாட்டியே  முந்திக்கொண்டார்......

''''யோவ் என்னய்யா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்...ஆத்தா...ஆத்தா... என்று ஏன் அடிக்கடி சொல்லுற...எதுக்கு அந்த பெரியவரை திட்டுரே...'' என்று சண்டைக்கு போக... 

'''இல்லம்மா என்னை எப்படி, காற்றாடி விடத்தெரியாது என்று சொல்லலாம்''''..... 

''''என்ன அப்படி பெரிசா சொல்லிட்டார் இப்படி குதிக்கிற.... '''' என்று மேலும் அந்த மூதாட்டி குத்திக்காட்ட... அந்த மனிதருக்கு சுருதி குறைந்தது....

இதெல்லாம் அந்த வயது வந்த பிள்ளைகளின் முன்னாலேயே நடத்திக் காட்டினார் அந்த பணம் படைத்த மேதாவி. அந்த பிள்ளைகளும் தடுக்கவில்லை. ஒருவாறு அந்த மேதாவியை அவரின் இன்னொரு உறவினர் வந்து.... அவரும் இந்த பெரியவரை திட்டிவிட்டு தான் நகர்த்தி கொண்டு சென்றார்...அந்த மேதாவியை...

பிறகு காரில் ஏறி அந்த மேதாவிக் கூட்டம் சென்றது.... அந்த மேதாவிக் கூட்டத்தைப்பார்த்து பல பெண்கள் இப்படிக் கூறினர்....

......''''போகிற வழியில் அடிபட்டு சாவான்... இவன்.''''....என்று ஒரு வயதான பெண்மணி அனைவரின் காது படக் கூறியது கண்டு, அனைவரும் அதை ஆமோதிப்பதாக குறுநகை புரிந்தனர்... சுண்டல் சாப்பிட்டுக்கொண்டே...

நாம் நினைத்துக் கொண்டோம் எளியாரை இழித்து வலியார் பெருமைக் கொள்வதும் இன்னும் மாறவில்லை.... எளியாரை ஏய்ப்பதும் இன்னும் மாறவில்லை.... என்று உள்ளூர சமூதாயத்தை திட்டிக்கொண்டு வள்ளுவர் கூறிய இந்த மூன்று குறளை நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

 பொருள், குடியியல், பெருமை (978)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை (302)

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.



 அறம், துறவறவியல், அருளுடமை (250)

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

 ---நன்றி மெரினா....

Wednesday, 3 February 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -3







லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள்



இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.


கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு ''நந்தனார்'' திரைக்கு வந்தது. ''நந்தனார்'' வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.


காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி,         '' என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே'' என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.


1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஔவையார்’. அந்த நாட்களில் “ஔவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஔவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஔவையாராக நடித்த அவரைத்தான் “ஔவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.


ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஔவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஔவையாராகத் தோன்றினாலே போதும்  நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.
 கே.பி.எஸ் படத்தில் நடிக்க வருடம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின்  மதிப்பு எவ்வளவு என்பதை  வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுக்க பணம் 86, 496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஔவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. ''''படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்'' என்று '''' இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்'' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் '''' இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.


ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.


தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். ''''ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்'''' என்றார்.



பேராசை பிடித்த ஹீரோயின் ''''ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?'''' என்று கேள்வி கேட்டார்.


உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.


வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.




''ஔவையார் படத்தைப் பார்த்த டி.கே, சண்முகம் ''நீங்கள் நடிக்கவில்லை, ஔவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்'' என்று கே.பி.எஸ் ஐ புகழ்ந்தார்.

''ஔவையார் திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த படம் கலைஞர் கதை வசனத்தில் உருவனா  ''பூம்புகார்'' என்ற படம். இந்த படம் எடுக்க முடிவு ஆனவுடன் அதில் வரும் கவுந்தியடிகளாக கே.பி.எஸ்  நடத்தால் தான் நன்றாக வரும் என்று அவரை ஒப்பந்தம் செய்ய முடிவெடுதத கலைஞர்., எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவித்தார் சுந்தராம்பாள்.


''''கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்'''' என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.


கலைஞரும் விடவில்லை. ''''நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.


''''சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்'' என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, ''''முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.


அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. ''''முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்'' என்று.


தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.


''''கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்'''' என்று ''''பூம்புகார்'''' படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது ''''வியப்பளிக்கும் ஆளுமைகள்'''' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.


“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று ''''திருவிளையாடல்'''', ''''துணைவன்''' ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, ''உயிர் மேல் ஆசை'', ''சக்திலீலை'', ''காரைக்கால் அம்மையார்’, ''திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.


கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த ''ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.


அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை ''ஏண்டாப்பா'' என்றும், கலைஞர் கருணாநிதியை  ''மகனே'' என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை   ''அண்ணா'' என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். இயற்கை எய்தினார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தந்துதவினார்.


கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.




கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்




''''கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட


கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ''''
 
இசையால் தமிழுலகத்தை ஈர்த்த பெண் கலைஞர் எவ்வளவு கொடுமையில் வாழ்ந்தார் என்பதை அறியமுடிகின்றது. அத்தனைக் கொடுமையிலும் இசைப்பணியை பல்வேறு போராட்டுங்களுக்கு இடையும் தொடர்ந்தார். வாழ்க அவர் புகழ்.


------ முற்றும்-----