Pages

Saturday, 29 October 2011

இறுகிய பிடி! திணறிய ஜெ! வெளிவராத கோர்ட் காட்சிகள்!



ங்கே கால் வைக்கமாட்டேன் என்று இத்தனை ஆண்டுகளாக ஜெ பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாரோ அங்கே அவரை நேரில் ஆஜராகச் செய்துவிட்டது உச்சநீதிமன்ற உத்தரவு.  இரண்டு நாட்கள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் 313 ஸ்டேட்மெண்ட்டுக்காக ஆஜராகிவிட்டு, அடுத்த வாய்தாவை எப்படித் தடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஜெ.வால், அக்டோபர் 20,21 இரண்டு நாட்களும் நடந்த விசாரணையின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம்.

     அக்டோபர் 21-ந் தேதி வெளியான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்திருந்தபோதும், பெங்களூருவிலிருந்து திரும்பிய ஜெ. தன்னை வரவேற்ற வெற்றி வேட்பாளர்களிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை.  காரணம், சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.வைத் துளைத்தெடுத்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் கருத்துகளும், அரசு வழக்கறிஞர் வாதங்களும்தான் என்கிறார்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்த அ.தி.மு.க. அமைச்சர்களே.

      பாதுகாப்பில் எந்தக் குளருபடியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று சுமார் 2000 கோலீசாரைக் குவித்திருந்த கர்நாடக அரசைப் போலவே நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, ஜெ.வின் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்.  19-ந் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரகாரத்தில் சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தைப் பார்வையிட பெங்களூரு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர்.  அப்போது அங்கு வந்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யா அவர்களை யாரென விசாரித்துவிட்டு, விசாரணையின் போது பத்திரிகையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் தரப்பிலிருந்து கோரிக்கை வந்திருக்கிறது.  அதனால் நாளை யாருக்கும் அனுமதி கிடையாது என்றவர், அதனை உத்தரவாகவே போட்டார்.  நீதிமன்றத்திலிருந்து 2கி.மீ முன்னதாகவே பத்திரிகையாளர்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணி இதுதான்.

       அடுத்து ஜெ. தரப்பிலிருந்து, தங்கள் அமைச்சர்கள், வக்கீல்கள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் 27 கார்கள் கொண்ட கான்வாய் வரும்.  அதனை நீதிமன்ற வளாகத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.  எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தியும் சைரன் காரில் வந்தபோது, அவரையும் போலீசார் அனுமதித்தனர்.  மின்விசிறிக்குக் கீழே ஜெ.வை உட்கார வைக்கவேண்டும்.  அவருக்கு மதிய உணவு இடைவெளியாக ஒன்றரை மணிநேரம் வேண்டும் என்றெல்லாம் ஜெ. தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளையும் ஏற்றுச் செயல்படுத்தினார் நீதிபதி.  எனினும், வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டிருந்தன.  அவருடைய கண்டிப்பான முகம் அப்போதுதான் வெளிப்படத் தொடங்கியது.

      இதுபற்றி நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களிடம் விசாரணை முடிந்த பிறகு பேசினோம்.  அவர்கள் நம்மிடம், "ஒவ்வொரு கேள்வியையும் நீதிபதி சம்பந்தமாக படித்தார்.  பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது.. பொய்.. ஞாபகமில்லை' என்று ஒற்றை வார்த்தையில் ஜெ பதிலளிக்க, அவற்றைக் கவனமாக ஒரு பள்ளி மாணவன் போல தனது வழக்கு ஆவணங்களில் நீதிபதி பதிவு செய்துக்கொண்டிருந்தார்" என்றனர்.

     "நம்ம கோரிக்கைகளை ஏற்றுக்கிட்டப்ப நீதிபதி ரொம்ப சாதகமா இருப்பாருன்னு நினைச்சோம்.  ஆனா, கோர்ட்டில் அவரோட நடவடிக்கைகள் இத்தனை ஸ்டிரிக்ட்டா இருக்கே" என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டார்களாம்.  20-ந் நேதியன்று விசாரணை முடிந்தபோது ஜெ.  "நாளைக்கு நான் ஆஜராகமாட்டேன்.  22-ந் தேதி டெல்லியில் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது.  ஒரு முதல்வர் என்ற முறையில் அதற்கானத் தயாரிப்புகளில் ஈடுபடவேண்டும்" என்றார்.

       அதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எதிர்ப்புத் தெரிவிக்க, அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.  கண்டிப்பாக 21-ந் தேதியும் ஆஜராகவேண்டும் என ஜெ.வின் முகத்திற்கு நேராகப் பார்த்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க, ஜெ படு அப்செட்.  அரசு வக்கீலின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டதால் கோபமான ஜெ. அன்று மாலை ஏற்போர்ட்டுக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம், "என்ன இங்கே ரெக்கார்டு டான்சா நடக்குது, போய் எல்லோரும் உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிங்க" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.  இதனால் தான், இரண்டாவதுநாள் ஜெ. விசாரணைக்காகப் போனபோது ஏர்போர்ட்டில் அ.தி.மு.க. கரைவேட்டிகள் அவ்வளவாக இல்லை என்று ர.ர.க்களே சொல்கிறார்கள்.

      உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் ஆரம்பநிலையைக் கவனித்துவிட்டுத்தான் 21-ந் தேதி பெங்களூருக்கு தனிவிமானம் ஏறினார் ஜெ.  நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜெ.வின் முகத்தில் களைப்பு வெளிப்பட்டுள்ளது.  நகை பற்றிய கேள்விகளை நீதிபதி கேட்டதும், "இதற்கு நேற்றே நான் பதில் சொல்லிவிட்டேன்" என்று ஜெ. சொல்ல, "உங்களுடைய நகைகளை 4 நாட்கள் ஆராய்ந்து மதிப்பீடுசெய்த கஸ்டம்ஸ் நகை மதிப்பீட்டாளரின் கணக்குகள் பற்றிய கேள்வி இது.  நீங்கள் உரிய பதில் சொல்ல வேண்டும்" என கண்டிப்பான குரலை வெளிப்படுத்தியிருக்கிறார் நீதிபதி.

      டென்ஷனான ஜெ. "கோர்ட்டில் எந்த உத்தரவும் பெறாமல் நான் வீட்டில் இல்லாதபோது என் வீட்டுக்குள்ளே நுழைந்து  ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?  அவர்கள் கைப்பற்றியதாக கணக்கு காட்டிய நகைகள் என் வீட்டில் இருந்தவைதான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு?" என்றார்.  அப்போது குறுக்கிட்ட ஆச்சார்யா, "அந்த நேரத்தில் போயஸ் கார்டனில் இருந்தவர்கள் இந்த நகைகளெல்லாம் உங்கள் வீட்டில் இருந்தவைதான் என்று ஒப்புதல் கையெழுத்துப் போட்டிருக்கிறார்களே"ன்னு சொன்னார்.

      மீண்டும் டென்ஷனனான ஜெ. " என் வீட்டு வேலைக்காரர்கள் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டால் அதெல்லாம் நான் முதலமைச்சராக இருந்தபோது வாங்கிய நகைகளாகிவிடுமா?  அதில் பல நகைகள் நான் சினிமாவில் நடித்தபோது  வாங்கியவை.  சில நகைகள் வெறும் தங்க முலாம் பூசியவை" என்று பதில் சொன்னார்.  அரசு வழக்கறிஞர் விடவில்லை.  "98 ரிஸ்ட் வாட்சுகள், 200 செருப்புகள் யாருடையவை" எனக் கேட்க, "அது என்னுடையதல்ல" என்றார் ஜெ.

      போயஸ் தோட்டத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வெள்ளிப் பொருட்கள் பற்றி கேள்வி கேட்டதும், அதெல்லாம் அ.தி.மு.க.வினர் கொடுத்தது.  ஒரு பாதுகாப்புக்காக என் வீட்டில் இருந்தது என்று சமாளித்தார் ஜெ. தொடர்ந்து இதேபோன்ற கேள்விகளை நீதிபதி கேட்டபடியே இருக்க, ஜெ.வின் டென்ஷனும் அதிகரித்தது.  "நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.  15 கம்பெனி போலீசார் கொண்ட பெரும்படையை என்னுடைய வீட்டுக்குள் எந்தவிதமான நோட்டீசும் இல்லாமல் அனுப்பி, 28 கிலோ நகை, 98 ரிஸ்ட் வாட்சுகள், வெள்ளிப்பொருட்கள், செருப்பு என மதிப்பீடு செய்து பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள்" என்று ஜெ. சொல்ல, "இதை நான் மறுக்கிறேன்" என்றார் அரசு வக்கீல் ஆச்சார்யா.

      அவர் பக்கம் திரும்பிய ஜெ. "யார் இவர்?  நான் பேசும்போது ஏன் குறுக்கிடுகிறார்?  இவர் ஒரு சாதாரண அரசு வக்கீல்.  நான் பெங்களூரு வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதுவும் இருக்காது என்று இவர் பேட்டி கொடுக்கிறார்.  நான் ஒரு மாநிலத்தின் முதல்வர்.  நான் என்ன செயல்களை செய்தேன், அதற்கு எப்படியெல்லாம் விளைவுகள் வரும் என்றெல்லாம் எனக்குத்தான் தெரியும்.  அது பற்றி கருத்து சொல்ல இவர் யார்?" என்று வெடித்தார்.

       அப்போது நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, "அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு நிலைப்பாடு பற்றி பொதுவான கருத்தைத்தானே சொன்னார்" என்று சொல்லிவிட்டு, ஜெ.வின் சொத்துவிவரங்கள் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்து விட்டார்.  அரசு வக்கீலின் கருத்துக்கு ஆதரவாக நீதிபதி பேசியதோடு, தொடர் கேள்விகளால் துளைத்ததும், ஜெ.வை எரிச்சலடைய வைத்துவிட்டது.  "போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் பங்களா இதெல்லாம் நான் முதல்வராவதற்கு முன்பே வாங்கிய சொத்துக்கள்" என்று சலிப்போடு பதில் சொன்னார் ஜெ..  அதைத் தொடர்ந்து  ஜெ.வும், சசியும் இயக்குநர்களாக உள்ள கம்பெனிகள் பற்றிய கேள்விகளை நீதிபதி தொடுக்க, "நான் அதிலெல்லாம் சைலண்ட் பார்ட்னர்தான்" என்று சுரத்தே இல்லாமல் பதில் வந்திருக்கிறது.

      "சனிக்கிழமை நீங்கள் நேரில் ஆஜராகி பதில் சொல்ல வேண்டும்" என்று நீதிபதி சொன்னபோது, டென்ஷனின் உச்சத்திற்கே போன ஜெ.வின் முகமெல்லாம் சிவந்துவிட்டது என்கிறார்கள், நீதிமன்றத்தினுள் இருந்த வழக்கறிஞர்கள்.  "தண்ணீர் வேணும்" என்று ஜெ. கேட்க, ஒரு தண்ணீர் பாட்டில் அவருக்குத் தரப்பட்டது.  அதைக் குடித்துவிட்டு, தனது வக்கீல் குமாருடன் ஆலோசனை செய்தார் ஜெ..  அதைத்தொடர்ந்து, இன்னும் எத்தனை கேள்விகள் இருக்கிறது என்று கேட்டார் வக்கீல் குமார்.

      அதற்கு நீதிபதி "மொத்தமுள்ள 259 அரசு தரப்பு சாட்சியங்களில் 159 சாட்சியங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார்.  இன்னும் 100 சாட்சியங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவேண்டும்.  இன்னும் மூன்று நாட்கள்  அவர் பதில் சொல்ல வேண்டி வரும்" என்றதும் ஜெ. படுடல்லாகி விட்டார்.  வக்கீல் மூலமாக, "சனிக்கிழமையன்னைக்கு டெல்லியில் நடக்கும் தேசிய வளர்ச்சி ஆணையக் கூட்டத்தில் கலந்துக்கணும்" என்று ஜெ. சொல்ல, "அப்படியென்றால், நவம்பர் 4-ந் தேதி வைத்துக்கொள்ளலாமா?" என்று கேட்டார் நீதிபதி.  அந்த தினத்திலும் ஒரு எங்கேஜ்மென்ட் இருப்பதாக ஜெ.வின் வக்கீல் சொல்ல, "சரி..8-ந் தேதி?" என்று கேட்டார் நீதிபதி.

      மீண்டும் ஆஜராவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த ஜெ. தன் வக்கீலை அழைத்து ஏதோ சொன்னார்.  உடனே அவருடைய வக்கீல், சிறப்பு நீதிமன்றத்தில் 2 நாட்கள் ஆஜராகவேண்டும் என்றுதான் சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டிருக்கு என்றார்.  அதற்கு என்ன எதிர் வாதம் வைக்கப்பட்டது என்பதை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவே பின்னர் நம்மிடம் நேரில் தெரிவித்தார்.

      "313 சட்டப்பிரிவின்படி பதிலளிக்க நேரில் ஆஜராகவேண்டும் என்றுதான் சுப்ரிம் கோர்ட் சொல்லியிருக்கிறதே தவிர, வெறெந்த உத்தரவையும் இடவில்லை.  மெத்தம் 1400 கேள்விகள்.  அதில் 567 கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லியிருக்கிறார்.  சட்டப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் ஜெ. பதில் சொல்லவேண்டும்.  இரண்டு நாட்களில் 10 மணி நேரத்திற்குள் எல்லாக் கேள்விகளையும் கேட்டு, அதற்குத் தரப்படும் பதில்களுக்கு ஒப்புதல் கையெழுத்து வாங்குவது என்பது எந்த நீதிமன்றத்தாலும் முடியாத விஷயம்.  அப்படி செய்ய சுப்ரிம் கோர்ட் எப்படி உத்தரவிடும்? என்று வாதங்களை வைத்தேன்" என்றவர், "ஜெ. தரப்பு வக்கீல் பொய் சொல்கிறார்.  வருகிற 8-ந் தேதி ஜெ. கட்டாயம் ஆஜராகியே தீரவேண்டும்.  அவர்  அதற்குள் சுப்ரிம் கோர்ட்டுக்கே போய் கேட்கட்டும்.  எந்த கோர்ட்டுக்குப் போனாலும், ஜெ. இங்கு மறுபடியும் வருவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

      ஜெ. தரப்பு வாதத்தையும் அதற்கு ஆச்சார்யா வைத்த எதிர்வாதத்தையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, 8-ந் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று சொல்ல, கோர்ட்டிலேயே இடிந்து போய்விட்டார் ஜெ.  இரண்டாம் நாள் விசாரணையில் 187 கேள்விகளுக்குப் பதில் சொன்ன ஜெ. அதற்கான வழக்கு ஆவணத்தில் ஒரு மணிநேரம் கையெழுத்துப் போட்டுவிட்டு, கோர்ட் வளாகத்திலேயே வக்கீல் குமாரோடு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

      அங்கிருந்த அ.தி.மு.க வக்கீல்கள், "இந்த நீதிபதி இப்படி கடுமையாக இருக்கிறார், அரசு வக்கீல் பாய்கிறார், இதை நாம் எப்படி சமாளிப்பது?  குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 4 பேர் சார்பிலும் தலா 20 சாட்சிகள் என்று 80 சாட்சிகளை ரெடி பண்ணி கோர்ட்டில் நிறுத்தி, அவர்களின் சாட்சியத்தை பதிவு செய்து, அரசு தரப்பு கிராசிங் செய்ய சொல்லி வழக்கை இழுத்தடிக்க வேண்டும்னு  ப்ளான் போட்டோமே, அதெல்லாம் இங்கே எடுபடுமா? என தங்களுக்குள் ஆலோசனைகள் நடத்தியபடி இருந்தனர்.

      டென்ஷன் குறையாமல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து புறப்பட்ட ஜெ. போயஸ் கார்டனுக்குத் திரும்பிய போது, தமிழக உள்ளாட்சித் தேரதலில் எதிர்பார்த்தது போலவே அ.தி.மு.க. பெரும்பாலான இடங்களைப் பிடித்திருந்தது.

      சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் ஜெ.வுக்காக பூங்கொத்தோடு காத்திருந்தார்கள்.

      முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், பூங்கொத்துகளை வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார் ஜெ.

      கார்டனிலும் யாரிடமும் சரியாகப் பேசாமல் இருக்கும் ஜெ.வின் ஒரே சிந்தனை, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க சாம-பேத-தான-தண்டம் என எந்த வழிமுறையையும் பயன்படுத்தி, விடுபடவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள்.
----பெங்களூருவிலிருந்து பிரகாஷ்
       படங்கள்;ஸ்டாலின்---நக்கீரன் அக்-26-28-2011

********************
பொது ஜனம்; என்னய்யா இது? வேலைக்காரங்க கையெழுத்து போட்டா, நகைகள் என்னுதாயிடுமான்னு! கேட்டுட்டு! அதில் பல நகைங்க நடிக்கும்போது வாங்கியதுன்னு! கோர்ட்டுல பதில் சொல்லியிருக்குதே! ஜெ.

பொது ஜனம்; ஆமாம்! அதானே! தங்க முலாம் பூசினது வரை கரெக்டா தெரிந்து வைத்திருக்கும் போது நகைகங்க அந்தம்மாவுது தானே!

பொது ஜனம்; எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு மாட்டிக்கிச்சே!

பொது ஜனம்; இப்பக் கூட அராசங்க அதிகாரிங்க, அரசியல்வாதிங்க வீட்ல ஜெ. போலீஸ் ரெய்டு எடுத்துச்சே என்ன? சொல்லிட்டா எடுத்துச்சு! 
பொது ஜனம்; அதுக்கு ஒரு சட்டம்! மத்தவங்களுக்கு ஒரு சட்டம் போல இருக்குது!

பொது ஜனம்; அதுனால தான் அரசுத் தரப்பு வக்ககீலை கோர்ட்டுன்னு கூட பார்க்காம தாக்குச்சா?

பொது ஜனம்; அது என்ன? சாதாரண அரசு வக்கீல்!? ஸ்பெஷல் அரசு வக்கீல்!?

பொது ஜனம்; இந்த சாதாரண முதலமைச்சர் மாதிரி, அதுவும் சாதாரணமானதா இருக்குமோ? என்னவோ?

பொது ஜனம்; அன்றைய சொத்து குவிப்பு மதிப்பு 66 கோடின்னா? இன்னைக்கு மதிப்பு பத்து மடங்கா ஆகியிருக்காது!

பொது ஜனம்; அப்ப 660 கோடியா? எம்மாடியோவ்!

பொது ஜனம்; தெரியலைப்பா? இருந்தாலும் இருக்கும்??????????????


    
    



குற்றவாளி கூண்டில் ஜெயலலிதா! அடுத்த முதல்வர் யார்? அ.தி.மு.க.வில் பரபரப்பு!

      

ந்திய நீதிமன்ற வரலாற்றில் எந்தவொரு வழக்கிற்கும் இத்தனை முறை வாய்தா வாங்கப்பட்டதேயில்லை. தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இதுவரை 130 க்கும் அதிகமான முறை வாய்தா வாங்கியிருந்தார் ஜெயலலிதா.  எக்காரணம் கொண்டும் இந்த வழக்கிற்காக நீதிமன்றத்தின் படிக்கெட்டுகளில் ஏறமாட்டேன் என்று சொன்ன ஜெ.வும் சட்டத்திற்குட்பட்டவர்தான் என்பது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 20-ந் தேதியன்று நிரூபணமானது.

      1991-96 ஆட்சிக்காலத்தில் மாதம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொன்ன ஜெ. அந்த 5 ஆண்டுகாலத்தில் தனது வருமானத்திற்கு மீறி 66 கோடி ருபாய்க்கு சொத்துகள் குவித்தார் என்பதுதான் வழக்கு.  96-ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது ஜெ. ஆட்சிக்காலத்து ஊழல்கள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்று.  அப்போதே, ஜெ. தனது வக்கீல்களிடமும் நெருக்கமானவர்களிடமும், 'என் மேலே போட்டிருக்கிற கலர் டி.வி. வழக்கு, ப்ளசண்ட் ஸ்டே ஒட்டல் வழக்கு, டான்சி வழக்கு, சி.பி.ஐ. போட்டிருக்கும் பிறந்தநாள் பரிசு வழக்கு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படலை.  வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததா போட்டிருக்கிற 'வெல்த் கேஸ்' தான் தலைக்கு மேலே கத்தி போல ஆபத்தானதாக இருக்கு.  அந்தக் கேஸை ஆரம்பத்திலேயே முறியடிச்சிடணும்' என்று சொல்லியிருக்கிறார்.

      தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெ. மீதான ஊழல்களை விசாரிப்பதற்காக 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.  முடிந்தளவு ஒவ்வொரு வழக்கையும் இழுத்தடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த ஜெ., இந்த சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஒரு முறைகூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  2001-ல் ஜெ ஆட்சிக்கு வந்ததும், வழக்கு திசைமாறுவதையறிந்த தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ' இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.  அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் தனி நீதிமன்றம் அமைத்து ஜெ.வின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.

      உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூருவில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தின் நீதிபதியாக மல்லிகார்ஜூனய்யா பொறுப்பேற்றார்.  அரசு வழக்கறிஞராக ஆச்சார்யலு நியமிக்கப்பட்டார்.  ஜெ.வுடன் அவரது தோழி சசிகலா, ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் அண்ணி இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

      வழக்கு ஆவணங்களை மொழிபெயர்த்துத் தரவேண்டும் என வாய்தா, மொழிபெயர்ப்பு சரியில்லை என வாய்தா, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என வாய்தா, குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் தனது சொந்தப்பணிக்காக வாய்தா என இந்த வழக்கு வாய்தா வழக்காகவே போய்க்கொண்டிருந்தது.  இதனிடையே, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்குகளும் போடப்பட்டன.  130-க்கும் அதிகமான வாய்தாக்கள், பலவிதமான இழுத்தடிப்பு வழக்குகள் என காலம் நீண்டுகொண்டேபோனதே தவிர, ஒரு முறைகூட பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராகவில்லை.

      இத்தனை இழுத்தடிப்புகளுக்கு நடுவிலும், சாட்சிகள் விசாரணை நடந்தது.  அரசு வழக்கறிஞர் ஆச்சார்யலு நேர்மையான முறையில் வழக்கினைக் கொண்டு செல்ல, நீதிபதி மல்லிகார்ஜூனய்யா சட்டவிதிகளின்படி வழக்கை கையாண்டார்.  சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டபிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் 313 ஸ்டேட்மென்ட் பதிவு செய்யவேண்டும்.  இதிலும் பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராயினர்.  ஜெ.வோ, தேர்தல் காலம் என்றும் முதல்வர் பொறுப்பில் இருப்பதால் நேரில் வராமல் வீடியோ கான்ஃபரன்சிங்கில் விசாரணை நடத்தலாம் என்றும், இசட்+ பாதுகாப்பில் இருக்கும் தனக்கு தனி நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இருக்காது என்றும் சொல்லி உச்சநீதிமன்றம் வரை சென்றார்.  உச்சநீதிமன்றம் அவருடைய மனுவை நிராகரித்து, அக்டோபர் 20-ந் தேதி தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டது.

      இந்நிலையில் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதைத் தவிர்க்கும் கடைசி முயற்சியாக அக்டோபர் 18-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜெ. சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.  விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் செல்லும்போது இசட்+ பாதுகாப்பு வசதி உரிய அளவில் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும், பரப்பன அக்ரகாரம் நீதிமன்றத்திற்கு பெயிண்ட் அடிப்பதால் ஜெ.வின் உடல்நிலைக்கு ஒத்துவராது என்றும், அதனால் ஆஜராகும் தேதியைத் தள்ளிவைக்கவேண்டும் என்றும், ஜெ.வின் மனுவில் கோரப்பட்டிருந்தது.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி-தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது.

      பாதுகாப்பு வசதிகள் குறித்து கர்நாடக அரசு சார்பில் அதன் தலைமைச் செயலாளர்-டி.ஜி.பி. ஆகியோரின் முழுமையான ரிப்போர்ட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செப்டம்பர் 26-ந் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் வரவில்லை என கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.  ஜெ. தரப்பிலோ அவருக்கு என்.எஸ்.ஜி. பாதுகாப்பு தரப்படவேண்டும் என்றும், இதற்கு 96 மணி நேரம் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.  பிரதமரும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பில்தான் இருக்கிறார்.  அவர் அவசரமாக ஒரிடத்திற்குப் போகும்போது இந்த 96 மணிநேர விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று கண்டித்ததுடன், 19-ந் தேதி பிற்பகலில் அளித்த தீர்ப்பில், 'கர்நாடக அரசு பாதுகாப்பை உறுதி செய்துள்ள நிலையில், பொது வாழ்வில் உள்ள ஜெயலலிதா இவ்வழக்கிலிருந்து ஒதுங்கிப்போவது நல்லதல்ல.  நியாயமாக நடந்துகொள்ளவேண்டும்.  வழக்கு விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர்.

      உச்சநீதிமன்றம் உறுதியான உத்தரவை வழங்கியதையடுத்து, தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ஜெ.  அவருடைய வழக்கறிஞர்களிடம் 313 செக்ஷன் கீழான விசாரணை எப்படி இருக்கும் என ஜெ. கேட்டுள்ளார்.  1000 கேள்விகள் அளவுக்கு கேட்பார்கள் என்றும் அந்தக் கேள்விகள் எப்படி? இருக்கும் என்றும் டைப் செய்து கொடுத்த வக்கீல்கள், இதற்கு இப்படியெல்லாம் பதில் சொல்லலாம் என்று அதனையும் தயாரித்து தந்துள்ளனர்.  அச்சிடப்பட்ட காகிதத்தில் இருப்பதை எளிதாக மனப்பாடம் செய்து மேடையில் பேசிவிடுவார் ஜெ. அதேபாணியில், தனி நீதிமன்றத்திற்கும் ரெடியானார்.

      அக்டோபர் 20-ந் தேதி காலையில் சென்னையிலிருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூரு புறப்பட்டார் ஜெ. அவரது வருகையொட்டி 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகள் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் சோதனையிடப்பட்டு, அரசியல் சார்புள்ளவர்களாக இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கொடநாட்டிலிருந்து வந்த சசிகலா உறவினர்களும், தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் அரசு காரில் வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும் இப்படித்தான் தடுக்கப்பட்டனர்.  அமைச்சர் அதன்பின் கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் கார் ஒன்றைப் பிடித்து பெங்களூரு வந்தார்.

      ஜெ.வின் சிறப்பு விமானம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் விமானதளத்தில் தரையிறங்க, அங்கே வழக்கம்போல் அவரது வருகையை படம்பிடிக்க ஜெயா டி.வி. குழு காத்திருந்தது.  அவர்களைப் பார்த்ததும், 'இதையெல்லாம் படம்பிடித்து ஒளிபரப்பவேண்டாம்' என்று சொல்லிவிட்டார் ஜெ.  14 கார்கள் கொண்ட கான்வாய் அந்த விமான தளத்திலிருந்து புறப்பட, ஜெ.வுடன் ஒரே காரில் 'சசிகலா பயணித்தார்.  ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர்கள், தம்பிதுரை எம்.பி ஆகியோரும் பின்தொடர்ந்த கார்களில் பயணித்தனர்.

      பரப்பன அக்ரகாரம் சிறை வளாக நீதிமன்றம் என்பது, அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் டெல்கி மீதான வழக்கிற்காக அமைக்கப்பட்டது.  தற்போது பரப்பன அக்ரகாரம் சிறையில் தான் சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இருக்கிறார்.  அந்த வளாகத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜராவதற்காகத்தான் ஜெ.வின் கான்வாய் விரைந்து வந்துகொண்டிருந்தது.  கோர்ட் வளாகத்திலிருந்து 2 கி.மீ முன்னதாகவே தடுப்பரண்கள் போடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வழக்கு விசாரணை பற்றிய செய்திகளைத் தொகுக்கலாம் என நினைத்திருந்த மீடியாக்கார்களை 2 கி.மீ முன்னதாகவே தடுத்து நிறுத்திவிட்டது கர்நாடக காவல்துறை.

      காலை 10.30 மணி ஜெ.வின் கான்வாய் உள்ளே நுழைந்தது.  அங்கே திரண்டிருந்த அ.தி.மு.க. வழக்கறிஞர்களும் உள்ளே நுழையவேண்டும் என போலீசாருடன் மல்லுக்கட்டினர்.  கடைசியில், 20 வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அப்போது நீலக்கொடிகளுடனும், கருப்பு கொடிகளுடனும் ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா, வெங்கடசாமி தலைமையிலான சமாத சைமிக்க தளா, ராவணன் தலைமையிலான பெரியார்.தி.க. ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் அங்கே கூடி, ஜெ.வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துக் குரலெழுப்பிய அவர்கள், ஜெ.வின் ஊழலையும் எதிர்த்து கோஷம் போட்டனர்.  அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் ஜெ.வுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள்.  பெரியார்.தி.க. ராவணன் நம்மிடம், ''தார்மீக அடிப்படையில் ஜெ. ராஜினாமா செய்யவேண்டும்.  பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்' என்றார் ஆவேசமாக.  அவர்களை கர்நாடகப் போலீசார் வேகவேகமாக அப்புறப்படுத்தினர்.

      11 மணிக்கு, நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தனது ஆசனத்தில் அமர்ந்தார்.  குற்றவாளிக் கூண்டுக்கு முன்பாக போடப்பட்டிருந்த நாற்காலியில் ஜெ. உட்கார்ந்தார்.  ஏ.சி வசதியில் இருந்தவர் ஜெ. கோர்ட்டில் ஏ.சி. கிடையாது.  குற்றவாளிக் கூண்டு உள்ள பகுதியில் ஃபேன் காற்றும் சரியாக வராது.  அதனால், நீதிபதிக்காக உள்ள ஃபேனிலிருந்து காற்று வரும் அளவில், ஜெ.வுக்கு குற்றவாளிக் கூண்டுக்கு முன்பாக நாற்காலி போடப்பட்டிருந்தது.  சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் குற்றவாளிக்கூண்டுக்குள் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.

      ஜெ.தரப்பில் வழக்கறிஞர்கள் பி.குமார், அசோகன், ராஜன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.  சசிகலாவுக்காக வழக்கறிஞர் கந்தசாமி, சுதாகரனுக்காக வக்கீல் சரவணகுமார், இளவரசிக்காக மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆஜராயினர்.  வெளியிலிருந்த முன்னாள் சபா பி.ஹெச்.பாண்டியனும் தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் என சண்டைபோட்டு, உள்ளே சென்றுவிட்டார்.  கோகுல இந்திராவை உள்ளே அனுப்புமாறு ஜெ. தரப்பிலிருந்து சொல்லப்பட அவரும் அனுமதிக்கப்பட்டார்.  தமிழக அமைச்சர்களும் அனுமதிக்கப்பட்டனர்.  ஜெ.சார்பிலான இந்த படைக்கு முன் ஒற்றை ஆளாக நின்று எல்லாவற்றையும் எதிர்கொண்டார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யலு.  அவருக்கு உதவியாக அவரது ஜூனியர் சந்தோஷ் இருந்தார்.


      சொத்துக் குவிப்பு வழக்கில் 249 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களின் சாட்சியங்களிலிருந்து மொத்தம் 412 கேள்விகளை நீதிமன்றம் தயாரித்திருந்தது.  ஜெ.விடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா.  அவருடைய குரல் மென்மையாகவும் கேள்விகள் துளைத்தெடுக்கும் வகையிலும் இருந்தன.

       போயஸ் கார்டனிலிருந்த தங்க நகைகள் குறித்த கேள்விகளிலிருந்து விசராணை ஆரம்பமானது.  '28 கிலோ நகைகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.  இந்த நகைகள் எப்போது வாங்கப்பட்டன. எப்படி வாங்கப்பட்டன?' என்று நீதிபதி கேட்க, 'எனக்கு நினைவில் இல்லை', என்று ஜெ. பதில் சொல்லியிருக்கிறார்.  போயஸ் கார்டனிலிருந்த வைரங்கள் பற்றியும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பங்களாக்கள் பற்றியும் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் ஜெ.விடமிருந்து, 'தெரியாது', 'நினைவில் இல்லை', 'இது தவறான குற்றச்சாட்டு' என்ற ரீதியிலேயே பதில் வந்துள்ளது.

      மதிய உணவு இடைவேளை வந்தபோது, பெங்களூருவில் உள்ள 'இஸ்கான்' என்ற சேவை அமைப்பினரின் பிரபலமான தயாரிப்பின் தரமான ஆரோக்கிய உணவு ஜெ.வுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.  பின்னர் தொடர்ந்த கேள்விகளிலும் ஜெ.விடம் வலிமையான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார் நீதிபதி.

       'பி.சுப்ரமணியம் என்பவரின் 59 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சசிகலா வாங்கியிருக்கிறார்.  நீங்கதான் சீஃப் மினிஸ்டர்.  உங்கள் வீட்டில்தான் அவர் இருக்கிறார்.  (குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் தங்கள் முகவரிகளாக 36-போயஸ்கார்டன் - சென்னை-600 086 என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்)  அந்த சொத்தின்மீது உங்களுக்கு என்ன இன்ட்ரஸ்ட்?'  என்று நீதிபதி கேட்க, 'எனக்கு அதுபற்றித் தெரியாது.  எனக்கு அதில் தனிப்பட்ட ஆர்வமில்லை' என்று ஜெ.பதிலளித்தார்.

      மாலை 4 மணி வரை 359 கேள்விகள் முடிந்திருந்தன.  இதில் 80 முதல் 90 கேள்விகளுக்கு, 'எனக்குத் தெரியாது என்றும் 100 முதல் 130 கேள்விகளுக்கு :அது பற்றி என் கவனத்திற்கு வரவில்லை அல்லது தவறானத் தகவல் என சொல்லியிருக்கிறார்.  மீதி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.  மிச்சமுள்ள 163 கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை பதிலளிப்பதற்காக கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி மல்லிகர்ஜூனய்யா உத்தரவிட, ஜெ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், 'எனது கட்சிக்காரர் தேசியவளர்ச்சி ஆணையக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன, அதனால் முதல்வர் என்ற முறையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பணி இருக்கிறது' என்று தெரிவித்தார்.  நீதிமன்றம் இந்த காரணங்களை ஏற்கவில்லை.  மறுநாளும் ஆஜராக வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் ஜெ.

       இதன்பின், ஒவ்வொரு கேள்வியும் அதற்கு ஜெ. சொன்ன பதிலும் பதிவு செய்யப்பட்ட காகிகதங்களில் கையெழுத்துப் போடவேண்டிய படலம் ஆரம்பமானது.  4.15 க்கு கையெழுத்துப் போடத் தொடங்கிய ஜெ. 5.10 வரை கையெழுத்திட்டார்.  இடையில், அவருடைய பேனாவில் இங்க் தீர்ந்துவிட்டதால், புதுப் பேனா தரப்பட்டது.  கையெழுத்துப் போட்டுவிட்டு ஜெ. வெளியே வந்தபோது, மணி 5.20.

       ஜெ.வின் வழக்கறிஞர் பி.குமாரிடம் நாம் வழக்கு விசாரணை பற்றிக் கேட்டபோது, ''அரசுத்தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் 313 ஸ்டேட்மென்ட் பெறப்பட்டுள்ளது.  இன்னும் டிஃபன்ஸ் தரப்பு சாட்சியங்களை விசாரிக்கவேண்டும்.  அதிலும் 200 க்கும் மேலான சாட்சியங்கள் எங்கள் தரப்பில் உள்ளன'' என்றார்.

      வெள்ளியன்றும் விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என்பதால் பெங்களூரிலேயே ஜெ. தங்குவதற்கு இடம் பார்க்கப்பட்டது.  பின்னர், அது சரிவராது என சென்னைக்கு ஸ்பெஷல் ஃப்ளைட்டில் திரும்பி, மறுநாள் அதே ஃப்ளைட்டில் பெங்களூரு வரலாம் என முடிவெடுக்கப்பட்டது.

       ஜெ.வை பயப்படவைத்துள்ள இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை வேறு எந்தெந்த வகைகளில் இழுத்தடிக்கலாம் என ஆலோசிக்கத் தொடங்கிவிட்டது அவரது வழக்கறிஞர்கள் குழு.

------பெங்களூரிலிருந்து பிரகாஷ்.
----நக்கீரன்--அக்-22-25-2011
**********************
பொது ஜனம்; எப்படியாவது தீர்ப்பு வந்து தண்டனை கொடுத்தா புண்ணயமா போகும்!

பொது ஜனம்; எல்லோரையும் ராஜினாமா செய்! என்று கூறும் ஜெயலலிதா மட்டும் குற்றவாளி கூண்டிலேயே நின்னுட்டு வந்துருக்கு! இன்னும் ராஜினாமா பண்ணலையே!

பொது ஜனம்; அதுதான் சொல்லிச்சே! குற்றம் செஞ்சவங்க பொம்பளையா இருந்தா என்ன? ஆம்பளையா இருந்தா என்ன? குற்றவாளி குற்றவாளி தான்னு பெரிய உத்தமராட்டம் சொல்லுச்சே, அது கனிமொழிக்கும் மட்டும் தானா? இதுக்கு இல்லையா? 

பொது ஜனம்; ராஜினாமா பண்ணும்பா! அதுதான் உச்சநீதிமன்றத்திலே அதுக்கும் வழக்கு போட்டிருக்காங்களே!



Tuesday, 11 October 2011

பரமக்குடி படுகொலை-வெளிவராத வீடியோத் தகவல்கள்

*********************************************

பொது ஜனம்; போலீசு பிஸ்டலை எல்லாம், கலவரத்துல வெளிப்படையா யூஸ் பண்ணலாமா?....அது சகட்டு மேனிக்கு குறித்தவறித்தான் சுடும். 

பொது ஜனம்; ஊர்வலம் கலவரத்துல, அதை அடக்கறதுக்கு பையோனெட் ரைபிலைத்தான் யூஸ் பண்ணுவாங்க அதையும் ஷோல்டர்ல முட்டுக்கொடுத்துதான் சரியா சுடமுடியும். இவங்க என்ன? கொலைவெறிப்பிடிச்சவன், கொள்ளைக்காரன் சுடற மாதிரி சுடறானுங்களே!

பொது ஜனம்;தற்காப்புக்காக லைசன்சோட சுடறவங்க கூட இது மாதிரி சுடமாட்டேங்களேய்யா?

பொது ஜனம்; உட்கார்ந்து அந்த பையோனட் துப்பாக்கியில் குறிபார்த்து சுடறதுக்குள்ளே மக்கள் சும்மா இருக்கமாட்டாங்கே!

பொது ஜனம்; அப்ப ஏ.கே47 வைச்சு சுடறது தானே!
பொது ஜனம்; அதை அடுத்த தடவை யூஸ் பண்ணுவானுங்க!

பொது ஜனம்; அப்ப! அவங்க குடும்பத்தை நோக்கி ஒரு தடவை சுட்டுட்டு அப்புறம் பொது மக்களை சுடட்டும்!

பொது ஜனம்; மக்கள் என்று ஒத்துகிட்டதுக்கு சரி! மக்கள் வானத்தை நோக்கி சுட்டாலே ஒடிடுவாங்களேய்யா! லத்தியை சுழட்டுனாலே நம்மூர் ஆளுங்க ஓடுவாங்க! லத்தி அடின்னா சும்மாவா! "பொடம்" வைச்சுரும்!  வெளியிலே காயமேத் தெரியாது.

பொது ஜனம்; யோவ்! சும்மா இருய்யா! பத்து பேர் ரைபில் வைச்சு காலை குறிபார்த்து சுட்டாலே போதும். 

பொது ஜனம்; ஆமாய்யா! ஒரு பையோனட் துப்பாக்கிய வைச்சு, 3 கி.மீ தூரத்தில இருந்து கூட குறிதவறாம சுட முடியும். வரிசையா ஆறு பேரை நிக்கவைச்சு சுட்டாக்கூட குண்டு முதல்லே இருக்கறவனை துளைச்சி, பின் ஆறாவதா இருக்கறவனையும் துளைச்சிகிட்டு அந்த பக்கமா வெளியே வந்துரும்! தெரியுமில்லே! என்னமோ! எங்ககிட்டே வந்து பீலா வுடறே!

பொது ஜனம்; இவனுங்க! கொலை வெறியிலே எல்லோரும் சாவட்டம்னு சகட்டு மேனிக்கு சுட்டு இருக்கானுங்க! 

பொது ஜனம்; அதான்! அங்கேயிருந்த  நிராயுதபாணியான பெரியவரை கூட எப்படித் தாக்குறானுங்க பார்! இவனுங்க மனுசனுங்களா! 

பொது ஜனம்; ஏய்யா கொய்யாலே! அப்சல் குரு..அந்த குரு...இந்த குருன்னு பலபேரை கொன்னவனுங்களுக்கே கருணை காட்ட சொல்லி சொல்றானுங்க! அப்புறம் ஏய்யா இந்த கொலைவெறி!

பொது ஜனம்; பஸ்ட்! இந்த செயலை செஞ்சவனுங்களை தூக்கில போடச் சொல்லுங்கய்யா! 

பொது ஜனம்; உச்சநீதிமன்ற சொன்ன வழிகாட்டுதல்கள்ல ஒன்னைக் கூட இவனுங்க பின்பற்றலை! 

பொது ஜனம்; இந்த மாதிரி அளுங்களை காப்பாத்ததான் ஜெயலலிதா பாடுபடுதா? 

பொது ஜனம்; ஜெயலலிதா சொல்லாமலா....? இதையெல்லாம் செஞ்சாங்க!

பொது ஜனம்; சி.பி.ஐ வைச்சு விரைவு நீதிமன்றத்துல இவனுகளுக்கு கடுமையான தண்டனையை விரைவாக வழங்கணும்.


Tuesday, 4 October 2011

ஜெயலலிதாவே! நீயும் ஓரு பெண்ணா?....குமுறும் வாச்சாத்தி!


....வாச்சாத்தி! ஜெ.அரசின் கருப்பு நாள்!

க்கீரனால் முதன்முதலில் உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்ட வாச்சாத்தி கொடூரத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது.  பத்தொன்பது வருட காத்திருப்பிற்குப் பின், தாமதமானாலும் தர்மம் தோற்காது என்று நிரூபிக்கும் வகையில் வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வந்திருக்கிறது.
     அரூர் அருகில் இருக்கும் மலையடிவார கிராமங்களில் ஒன்றுதான் வாஞ்ஞாத்தி ஏறத்தாழ 250 குடிசை வீடுகளைக் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம் என்பதால், ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் துணையோடு மரக்கடத்தல் பேர்வழிகள் சந்தன மரங்களை சுவாஹா செய்தபடி இருந்தனர்.  இவர்களுக்கு முதலில் பணிந்து வேலைபார்த்த பழங்குடி இன மக்கள் ஒருகட்டத்தில் 'திருட்டு மரம் வெட்ட எங்களை கூப்பிடாதீர்கள்' என்று போக மறுத்தனர்.  இந்த நிலையில் மரக்கடத்தல் விவகாரம் வெளியே கசிய ஆரம்பித்தது. 



அப்போது ஜெ. முதல்வராகவும் செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

     இதில் கொதித்துப்போன வனத்துறையினர், வாச்சாத்தி மக்கள் தான் சந்தன மரம் உள்ளிட்ட வனவளங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று விவகாரத்தை திசை திருப்ப, வருவாய்த்துறையினரோடும் காவல் துறையினரோடும் வாச்சாத்தி கிரமத்திற்கு ரெய்டுக்கு போனார்கள்.

     இவர்களால் ரெய்டு நடந்த 20.06.1992, ஒரு கறுப்பு நாளானது.

      சோதனை என்ற பெயரில் வாச்சாத்திக்குள் நுழைந்த இந்த டீம் வீடுகளையெல்லாம் அடித்து நொறுக்கியது.  கண்ணில் பட்ட ஆண்களையெல்லாம் அடித்து நொறுக்கியது.  பெண்களை மானபங்கப்படுத்தியதோடு ஏரிக்கரைக்குத் தூக்கிப்போய் கற்பழிப்பு கொடூரங்களையும் நடத்தியது.  இதோடு நிறுத்தாமல் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 133 பேரை கைது செய்து ஸ்டேஷனில் வைத்து, அங்கும் பெண்களை வேட்டையாடியது. 

      இவ்வளவு நடந்தும் இந்த விவகாரம் நான்கைந்து நாள்வரை வெளியே வரவில்லை.

      முதன்முதலில் இந்தத் தகவல் நம் நக்கீரனுக்குத்தான் வந்தது.  அப்போது அந்த விவகாரத்தை விசாரித்து ரிப்போர்ட் தந்த அப்போதைய நக்கீரன் நிருபரும், தற்போதைய ஒசூர் கோர்ட் வழக்கறிஞருமான ஜெயப்பிரகாஷ், அந்த நாட்களை இப்படி நினைவு கூறுகிறார்......

      "அப்ப அரூர் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வாக இருந்த அண்ணாமலை எனக்கு இந்தத் தகவலை அனுப்பி, உடனே இந்தக் கொடுமையை விசாரிச்சி நக்கீரனில் அம்பலப்படுத்துங்கன்னார்.  இதைக்கேட்டு திகைத்துப்போன நான் அரூர்ல இருந்து சைக்கிள்ல வாச்சாத்திக்கு கிளம்பினேன்.  வேற போக்குவரத்து வசதி அப்பக் கிடையாது.  பெரியாம்பட்டு கூட்ரோடு போய் அங்கு காத்திருந்த தோழர்களோட வாச்சாத்திக்குள் போனேன்.  ஊரே பயங்கர நிணப்தத்தில் இருந்தது.  அங்க இருந்த எந்தக் குடிசையிலும் கூரைகள் இல்லை.  எல்லாம் பிய்த்து எறியப்பட்டிருந்தது.  வீடுகளில் இருந்த ஜன்னல் கதவுகள் எல்லாம் உடைக்கப்பட்டிருந்தன.  ஊர்ல ஒருத்தரையும் காணலை.  கூட வந்திருந்த கம்யூனிஸ்டு தோழர்கள், பயப்படாம எல்லோரும் வாங்கன்னு கூப்பாடு போட்ட பிறகுதான், தேட்டங்களிலும், காட்டுப்பகுதியிலும் பீதியோடு ஒளிந்துகொண்டிருந்த மலைமக்கள் ஒவ்வொருத்தரா வெளில வந்தாங்க.  எங்களை நாசப்படுத்திட்டானுகன்னு பெண்கள் கதற, சிலர் பேசக்கூட திராணி இல்லாதவங்களா இருந்தாங்க.  அவங்க வீடுகளுக்குள் ஒரு பொருளும் இல்லை.  எல்லோரும் ஊர் முகப்பில் இருந்த கிணத்தைக் கொண்டு போய் காட்டினாங்க.  கிணத்துக்குள் சைக்கிள்கள், கயித்துக் கட்டில்கள், இரும்புச் சாமான்கள் எல்லாம் வீசப்பட்டிருந்தன.  அதிகாரிகளின் வக்கிரத்தாண்டவத்தை ஊரின் நிலையே காட்டியது.  நாசப்படுத்தப்பட்ட பெண்களை படம் எடுக்காதீங்கன்னு தடுத்தாங்க.  அப்படியும் அவங்களை சமாதானப்படுத்தி படம் எடுத்தேன்.  அதுமட்டுமல்ல அவங்க வீடுகளில் இருந்த செம்பு, பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் லாரியில் எடுத்துட்டுப் போய் அரூர்ல இருக்கும் பழைய இரும்புஃகடைகளில் அதிகாரிகள் தரப்பு விற்கக்கொடுத்திருந்தது.  இதையும் அப்ப ஒரு டெம்போவுக்குள் ஒளிஞ்சிகிட்டு படம் எடுத்தேன்.  ரெய்டுக்குப் போன பெண் போலீஸ்காரங்கக் கூட அவங்க வைத்திருந்த பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பொருட்களை அள்ளிட்டுப் போனாங்களாம்.  இதையெல்லாம் அப்ப பரபரப்பா நக்கீரன்ல ரிப்போர்ட் பண்ணியதன் விளைவா, தமிழகமே இந்த அநீதியை கண்டிச்சி ஒன்று திரண்டது.  முறையாக வழக்கும் நடந்து ஒரு நல்ல தீர்ப்பும் கிடைத்திருக்கு" என்றார் உற்சாகமாக.

      குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.  இதில் 54 பேர்,  வழக்கு நடக்கும் போதே இறந்து போய்விட்டனர்.

      மீதமுள்ளவர்களில் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், வனத்துறை முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி ஹரிகிருஷ்ணன், வனப்பாதுகாப்பு அதிகாரியான முத்தையன், மாவட்ட வனப்பாதுகாப்பு அலுவலர்களான லோகநாதன் மற்றும் பாலாஜி ஆகிய நான்கு பேர் உட்பட 198 பேருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனையும், முதன்மை அமர்வு நீதிபதி குமரகுருவால் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வளவு கொடூரங்களையும் அரங்கேற்றிய இந்தக் குற்றவாளிகள்.... இதற்கான தடயங்களை முழுமையாக அழிக்கவும் பெருமுயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது நீதிமன்றம்.

     வாச்சாத்தி ஊர் கவுண்டரான பெருமாளோ  "அன்றைய சம்பவத்தை நாங்க இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காமாட்டோம்,.  அந்த வேதனையும் வலியும் இன்னும் மாறலீங்க.  அன்று அந்த பாதகர்களால் ஜெயா, சித்தரா, ஆமரக்கா, காந்திமதி, மல்லிகா, கம்சலா, மாரிக்கண்ணு, முத்துவேடி, பழனியம்மாள், சுகணா, பாப்பாத்தி, சின்னபாப்பா, லட்சுமி மாயி, சரோஜா, பூங்கொடி ஆகிய 18 பெண்கள் கொடூரங்களுக்கும் வக்கிரங்களுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்" என்றார் மனம் கனத்துப்போனவராய்.

      கருமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான காந்திமதி நம்மிடம் "அன்னைக்கு காலை 11:30 மணிக்கு எங்க தோட்டத்தில் வேலை செயதுகிட்டிருந்தோம், அப்ப லாரியில் வந்து இறங்கிய போலீஸ் என்ன? ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க... வலியால் துடித்து அய்யோ அம்மான்னு அலறி துடித்தோம்.  பிறகு ஊருக்குள் அழைத்துப்போய், ஆலமரத்தடியில் உட்காரவைச்சாங்க.  அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை எங்களுக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.  மரத்தடியில் கூடியிருந்த கூட்டத்தில் அன்று மாலை 7 மணிக்கு, வயசுப் பெண்கள் 18 பேரை மட்டும், ஏய் நீ வாடி, நீ வாடின்னு மினி லாரியில் ஏத்தினாங்க.  பக்கத்தில் இருக்கும் ஏரிக்கரைக்கு கொண்டுபோய் ஒட்டுத் துணி இல்லாமல் உருவிட்டாங்க.  அப்புறம் எங்கள் வாழ்க்கையை சூறையாடிட்டானுக...  அங்கிருந்து இரவு 10 மணிக்கு வனத்துறை அலுவலகத்திற்குக் கொண்டுபோய் அங்கும் அதிமிதி பண்ணினானுங்க.  அதோட எங்க ஊர் கவுண்டர் பெருமாளை எங்கள் 18 பேர் கையிலும் துடைப்பத்தை கொடுத்து அடிக்க சொல்லி ரசிச்சானுக.  இன்னும் கொடுமை என்னன்னா? எங்க ஊர் கவுண்டருக்கு சிறுநீர் கொடுத்து குடிக்க சொன்னானுக, எங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பு கிடைச்சிருக்கு" என்றார் கண்களில் நீர் திரள.

      லட்சுமிமாயியோ 'அதை என்னால் மறக்க முடியவில்லை அதோட பாதிப்பால் நோய்வாய்ப்பட்டு எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே செத்துப் போயிட்டாங்க.  எனக்கு இன்னும் கல்யாணமாகாததால் இப்போ அண்ணன் கூட இருக்கேன்" என்றார் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே.  ஊர் கவுண்டர் மனைவி குப்பு " என் கண் முன்னாடியே என் கணவரை அடித்து காலை ஒடிச்சாங்க.  தடுக்கப்போன என்னையும் அடித்து கையை முறிச்சிட்டாங்க" என்றார் கையைக் காட்டியபடியே...

     பரந்தாயி என்பவரோ "எங்க கிராமத்தையே அவனுங்க கைல இருந்து காப்பாற்றியது அப்போதைய எம.எல்.ஏ. அண்ணாமலை அய்யாதான்.  செல்வராஜ் என்ற வனத்துறை அதிகாரியை கொலை செய்ததாக எங்கள் தரப்பில் 108 பேரு மீதும் வழக்கு இருக்கு.  ஆனா செல்வராஜ் இப்பவும் உயிரோடுதான் இருக்கார்" என்றார் காட்டமாக.

     இதே நேரத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சிலர் கதறி அழுதவாறே நம்மிடம், "ரெய்டுக்குப் பிறகு சில நாட்களில் ரெய்டுக்குப் போனவர்களுக்கு அரசு பதக்கம் தரப்போகிறது என்று வனத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.  பதக்கத்துக்கு ஆசைப்பட்டு ரெய்டுக்குப் போகாத எங்க வீட்டுக்காரரும் ரெய்டுக்குப் போனதாக பெயர் கொடுத்துவிட்டார். அந்த பதக்க லிஸ்ட்டை எடுத்த சி.பி.ஐ. எல்லோரையும் சிக்க வைத்துவிட்டது" என்றார்கள்.

     போராடி நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.சண்மூகம் நம்மிடம் "முதன்முதலில் நக்கீரந்தான் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது.  இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கொடுமைகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு எதிராக, நீதி தர்மம் வெல்லும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு சி.பி.ஐ. யின் நியாயமான விசாரணைதான் காரணம்.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு இன்னும் வழங்கவில்லை, வெறும் ரூ.15 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளனர்.  வீடுகளை சேதப்படுத்தியதற்கும் மற்ற இழப்பீடுகள் கிடைப்பதற்கும் சட்ட ரீதியான எங்கள் போராட்டம் தொடரும்" என்றார் அழுத்தமாய்...

     தரமத்தை நிலை நாட்ட நக்கீரன் எழுப்பிய குரல் வீண் போய்விடவில்லை எனபதையே வாச்சாத்தி தீர்ப்பு காட்டுகிறது. 
-வடிவேல் நக்கீரன் அக் 01-04,2011.

*************************************************************


பொது ஜனம்; ஜெயலலிதாவுக்கு என்ன? அரக்க மனமா இல்லை இரக்க மனமா?

பொது ஜனம்; இவ்வளவு பெரிய அராஜகத்தை பெண்களுக்கு எதிராக நடத்திட்டு, அங்கே ஒன்னுமே நடக்கலைன்னு செல்லிட்டு, எப்படி? பதவியில உட்கார்ந்து இருக்குது. இதுக்கு நல்ல சாவே வராது.

பொது ஜனம்; ஜெயலலிதாவை மானபங்கப்படுத்தியிருந்தா தெரியும்...இல்லைன்னா ஜெயலலிதா பொண்ணை இப்படி பண்ணியிருந்தா தெரிஞ்சிருக்கும்...?

பொது ஜனம்; ஏன்? கவர்னர் சென்னா ரெட்டி என்னை (ஜெயலலிதா) மானபங்கப்படுத்தினார்னு, நடக்கமுடியாத கிழ ஆளுமேல பழியைப் போடலை.

பொது ஜனம்; 1989 ல சட்டமன்றத்துல என் சேலையை தி.மு.க காரங்க உருவினாங்க என்று போலியா ஆர்ப்பாட்டம் பண்ணலை.

பொது ஜனம்; செங்கோட்டையன் பெண்ணுக்கு, மானபங்கம் நடந்திருந்தா எப்படியிருக்கும்! இவனெல்லாம் ஒரு மந்திரி....இவனை எந்திரி இவனுக்கும் நல்ல சாவு வராது.

பொது ஜனம்; சந்தனமரத்தையெல்லாம் ஈமெயில்லையா அனுப்புவானுங்க! ரோடு வழியாத்தானே லாரியில போகணும்....அப்ப ஏன் போலீசு பிடிக்கலை!

பொது ஜனம்; அப்ப இந்த மரத்தையெல்லாம் செங்கோட்டையனே ஆளை வைச்சி கடத்தி வித்திருப்பானோ! 

பொது ஜனம்; சந்தன மரத்தை கடத்தி, வித்தவனுங்க ஒருத்தனைக் கூடவா இதுவரைக்கும் பிடிக்க முடியலை. அவ்வளவு சின்ன பொருளா? 

பொது ஜனம்; கடத்தல் பண்ணி பணக்காரன் ஆனவனுங்களை சுடேன்! பார்ப்போம்!

பொது ஜனம்; அப்பாவி பொது மக்களையும், தலித் மக்களையும், பழங்குடி இனத்தவரையும் இந்த காக்கிகளின் துப்பாக்கிகள் சுடும். மற்றவர்களிடம் எச்சை காசு வாங்கி சாப்பிடும். விசுவாசத்தையும் காட்டும்.

பொது ஜனம்; இவங்களை எல்லாம் வாச்சாத்தி மக்கள் விருப்பப்படி சுட்டுத் தள்ளனும்யா!

பொது ஜனம்; இந்த தண்டனை போதாது...உச்சநீதிமன்றத்தில் இன்னும் அதிகமாக தண்டனை வழங்கணும்!

Wednesday, 14 September 2011

நீறு பூத்த நெருப்பு ! உயிர்களை பறித்த வன்முறை!

   


 
தேவேந்திர குல வேளாள மக்களின் குலதெய்வமாகவும், தீண்டாமைக்கு எதிரானக் குறியீடாகவும் போற்றப்படும் தியாகி இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவுதினத்தை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

     "தொலைதூரத்திலிருந்து அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்வதில்லை.  கடைகளை கட்டாயப்படுத்தி போலீசே அடைக்கச் சொல்வதால் எங்கள் மக்களுக்கு குடிக்கத் தண்ணீர்கூட கிடைப்பதில்லை"  என்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஜீவன்குமார் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். 

     இதற்கு உயர்நீதிமன்றம், ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டபோது, "நாங்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம், கடைகளை வியாபாரிகளே அடைத்துவிடுகிறார்கள்" என்று சொன்னது எஸ்.பி. தரப்பு.

      இந்த நிலையில்தான் விழா நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ நடத்திய கூட்டத்தில் பேசிய பரமக்குடியைச் சேர்ந்த தலித் தலைவர் ஒருவர், "எங்கள் விழாவுக்கு பத்திரிகையாளர்கள் வரக்கூடாது.  தேவர் குரு பூஜைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால் பகுதியைக் கூட இம்மானுவேலுக்கு கொடுப்பதில்லை.  அதனால் அவர்கள் வரக்கூடாது" என்று கடுமையாகப் பேசியுள்ளார்.  இந்த நிலையில் தான் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.யிடம் "எங்கள் தேவர் பெயருக்கு முன்னால் போடப்படும் 'தெய்வத் திருமகன்' எனும் அடைமொழியை இம்மானுவேல் பெயருக்கு முன்னால் போட்டு எங்களை வம்புக்கு இழுக்கிறார்கள்" என்று முறையிட்டனர்.

       இதற்கு எந்த பதிலையும் கூற முடியாத மாவட்ட நிர்வாகம், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தது.  இப்படியே டென்ஷன் நீடித்துக்கொண்டிருந்த நிலையில் தான் கடந்த 9-ந்தேதி கமுதி அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த +1 மாணவன் பழனிக்குமார், நாடகம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்.  இவர் தேவேந்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், டென்ஷன் இன்னும் அதிகமானது.  போலீஸ் போர்ஸைப் போட்டு, மக்களின் கொந்தளிப்பை அடக்கி வைத்தனர்.

      குருபூஜை பாதுகாப்புக்காக, இதே மாவட்டத்தில் பணிபுரிந்த எஸ்.பி.க்களான செந்தில்வேலன், அனில்குமார், கிரி ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர்.

      11-ந் தேதி அதிகாலையிலிருந்து போலீசிடம் வாங்கிய அனுமதியின்படி ஒவ்வொரு அமைப்பாக வந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர்.  ஒருநாள் முன்பாக வந்த டாக்டர் ராமதாசும் அஞ்சலி செலுத்திவிட்டு, "இம்மானுவேல் தினத்துக்கு தொடர்ந்து வருவது நாங்கள்தான், இது இனி அரசு விழாவாக நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார்.


      இதையே அஞ்சலி செலுத்த வந்தவர்களும் "நாங்க ஓட்டுப்போட்டுதான் ஜெயலலிதா முதலைமைச்சரா வந்திருக்கு, இதை அரசு விழாவா அறிவிக்கணும், இல்லேன்னா கிருஷ்ணசாமியை இங்க வரவிடமாட்டோம்" என்று கோஷமிட்டபடி சென்றனர்.  தி.மு.க. சார்பில் சுப.தங்கவேலனும், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயகுமாரும் வருகை தந்தனர்..  மதியம் 12 மணிவரை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது.  அந்த நேரத்தில்தான் வல்லநாட்டில் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் பரவ, அஞ்சலி செலுத்த வந்த பிற அமைப்பினரும், 'ஜான்பாண்டியனை விடுதலை செய்யவில்லையென்றால் தமிழ்நாடே பத்திக் கொண்டு எரியும்' என்று போலீஸ் முன் கோஷம் போட்டனர்..  சிறிது நேரத்தில் அஞ்சலி செலுத்த வரும் கூட்டமும் குறைந்தது.  'அஞ்சுமுக்கு ரோட்டில் சாலை மறியல் நடக்கிறதாம்' என்ற தகவல் பரவ...ஆங்காங்கே நின்ற மக்கள் திரளாக அங்கு சென்றனர்.

      ரெண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அஞ்சுமுக்கு ரோட்டில் அமர்ந்து, ஜெயலலிதாவுக்கு எதிராகவும், டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு எதிராகவும் கோஷமிட்டபடி இருக்க... அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த டி.ஜ.ஜி. சந்தீப் மிட்டல், ஏ.சி செந்தில்வேலன் மிகவும் கெஞ்சல் தொனியில் அவர்களைக் கலைந்து செல்லச் சொல்கின்றனர்.  மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட வாகனங்கள் நுழையும் பகுதி ஐந்துமுக்கு ரோடு என்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்தன.  அதில் வந்தவர்களும் இறங்கி சாலையில் அமர ஆரம்பித்தனர்.  பக்கத்து ரயில்வே டிராக்கில் கிடந்த கற்கள் குவியல் குவியலாக கூட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டது.  போலீஸ் கலைந்து செல்லும்படி கடுமை காட்ட, அவர்களை நோக்கி கற்கள் பறந்து வர ஆரம்பித்தன.  அதில் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் தலையில் ரத்தம் வடிய ஆரம்பித்தது, அவர் கீழே விழுந்தார்...தொடர்ந்து வந்த கற்களால், செந்தில்வேலன் காலில் காயம்பட்டு ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது.  டி.எஸ்.பி. கணேசன், கமுதி எஸ்.ஐ. தங்கமுனியசாமி, ஐம்பதுக்கும் அதிகமான போலீஸ்காரர்கள் காயமானதும், லத்திசார்ஜ் செய்யப்பட்டதில் ஐந்துமுக்கு ரோடே போர்க்களமானது.


       அந்த நேரத்தில் அதை படம் பிடிக்கச் சென்ற நக்கீரன் புகைப்படக்காரர் பாலாஜியையும், ஜூனியர் விகடன் புகைப்படக்காரர் பாண்டியையும் ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது.  இருவர் கேமிராவையும் வாங்கி ரோட்டில் போட்டு உடைத்தனர்.  "நாங்கள் பத்திரிகைக்காரங்க, எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று இவர்கள் சொல்லியும் வெறியோடு இருந்த அந்தக் கும்பல் காதில் வாங்கவில்லை.  அவர்கள் கத்திகளை எடுத்து துரத்த, இருவரும் ஆளுக்கொரு திசையில் ஒட ஆரம்பித்தனர்.  மறுபக்கம், பெட்ரோல் குண்டுகள் வரிசையாக விழ ஆரம்பித்தன.  வஜ்ரா வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது, இதை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்திலும் பெட்ரோல் குண்டு விழ... பெரும் ஜூவாலையுடன் எரிய ஆரம்பித்தது.  போலீஸ் ஜீப், கார், கடைகள் என எல்லா இடத்திலும் நெருப்பு.  தலையில் பச்சை, சிவப்பு டர்பன் கட்டிய இளைஞர்கள் ரொம்பவும் தில்லாக நின்றபடி, கற்களை வீசிக்கொண்டிருந்தனர்.  போலீஸ் மொத்தமாக ஒரு பக்கம் சென்றால், இன்னொரு பக்கம் கல்வரக் கும்பல் தங்கள் அராஜகத்தை நடத்தினர்.  காவல்துறையினர் என்ன செய்வதென்று யோசித்த நிலையில்தான் துப்பாக்கிச் சூட்டை நடத்த ஆரம்பித்தனர்.  அதில் பரமக்குடி பன்னீர்செல்வம், ஜெயபால், கணேசன், வெள்ளைச்சாமி, தீர்ப்புகனி, முத்துக்குமார் உட்பட ஆறுபேர் ஸ்பாட்டிலேயே குண்டடிப்பட்டு விழுந்தனர்.

       துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மக்களின் கோபம் இன்னும் அதிகமானது.  தேவேந்திரகுல மக்கள் பெருவாரியாக வாழும் காட்டுபரமக்குடி, பொன்னையாபுரம் பகுதியில் திரண்டுவிட்டார்கள்.  பொன்னையாபுரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது.  அதற்குள் புகுந்த கலவரக்காரர்கள், அங்கிருந்த பெண் காவலர்களைத் தாக்க ஆரம்பித்தனர்.  காவல் நிலையத்தைக் கொளுத்த நினைத்த அவர்களை அப்பகுதி பெண்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், ஆயிரக்கண்க்கான போலீசுடன் சென்றுதான் அங்கிருந்த மூன்று பெண் காவலர்களை எஸ்.பி. மகேஸ்ரன், காளிராஜன் மீட்டு வந்தார்.  உடனே 144 சட்டம் அமல் படுத்தப்பட்டது.  காவல் துறையினர் மொத்தமாக ஓரிடத்தில் குவிந்தனர்.  பொன்னையாபுரம் பகுதியில் புகுந்து ஒவ்வொரு கலவரக்காரர்களைப் பிடித்து வந்து ஐந்துமுக்கு ரோட்டில்  ரவுண்டு கட்டி அடித்து துவைத்தனர்.  அதில் பத்துபேர் மூர்ச்சையாகி ரோட்டிலேயே கிடந்தனர்.

      தண்டவாளத்தை உடைத்து, ரயில்வே கேட்டை வளைத்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றோர் படம் போட்டு வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ்களை போலீசாரே அடித்து உடைத்தனர்.  ராம்நாடு- பரமக்குடி சாலையில் மரங்களை வெட்டியும், கற்களைப் போட்டும் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர்.  நம்மிடம் பேசிய போலீஸ்காரர் ஒருவர், "எங்களுக்குள்ளும் ஜாதி வெறியோடு பலர் இருக்கிறார்கள்.  தேவர் குருபூஜைக்கு ஆதரவாக சிலரும், இம்மானுவேல் பூஜைக்கு ஆதரவாக சிலரும் செயல்பட்டு பிரச்சினைளை உருவாக்குகிறார்கள்.  அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.யிலிருந்து எஸ்.ஐ. வரை அதிகம் வருவது குமரி,, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதியினர்தான்.  அவர்களுக்கு முக்குலத்தோர், தேவேந்திரர் ரெண்டுபேரும் ஆகாது.  அவர்களே சின்ன விஷயத்தைப் பெரிதாக்கி கலவரமாக்கிவிடுகிறார்கள்" என்றார்.

     நம்மிடம் பேசிய தலித் இளைஞர், "ஜான்பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்தால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தானே, அதை விடுத்து ஏன் தடுக்கிறார்கள்?  அவர் கைதானதால் மட்டும் எங்கள் மக்கள் போராட வரவில்லை.  தொடர்ந்து எங்கள் சமூதாயம், அரசியல் கட்சிகளாலும், அதிகாரிகளாலும், மீடியாக்களாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம்தான் அவர்களை கிளர்ந்தெழ வைத்துள்ளது" என்றார்.

      பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள், பீஸ் கமிட்டிகள் எல்லாம் போட்ட மாவட்ட காவல்துறை.... மக்கள் திடீரென்று போராட்டம் நடத்தினால் அதை கலவரமாக்காமல் எப்படி சால்வ் செய்யலாம் என்பதைப் பற்றி மட்டும் ஏன் யோசிக்கவில்லை...? என்பது தான், இன்று ஸ்தம்பித்துப் போயுள்ள தென்மாவட்ட மக்களின் கேள்வி.

---சேகுவேரா...படங்கள் பாலாஜி & அண்ணல்...
-----நக்கீரன்..செப்..14--16,2011
************************************************************************************************
ரியாக்ஷன்!
  தியாகி இம்மானுவேல் பேத்தி ரூபா;

     ற்கனவே கடந்த வாரம் பரமக்குடியில் ஒரு சங்கத்தினர் கூடிப்பேசி கலவரத்துக்கு திட்டம் வகுத்திருக்கிறார்கள்.  செப்.11-ல் இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.  'இதை நாம் ஏற்கக்கூடாது.  தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்து நடத்திவிட்டு அதன்பிறகு இம்மானுவேலுக்கு நடத்தட்டும். அதற்குமுன்பு இம்மானுவேலுக்கு விழா நடத்தவிடக்கூடாது' என்று அவர்கள் பேசியதோடு, ' நம்ம ஜாதி போலீசார் பட்டியலை ரெடிபண்ணி இம்மானுவேல் குருபூஜை அன்றைக்கு கலவரத்தை உருவாக்கணும்'னு திட்டம் போட்டிருக்காங்க.  திட்டமிட்டபடியே தேவேந்திரர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரமாக ஆக்கிவிட்டார்கள்.
      சென்னையில் இருந்து வந்து கலவரத்திற்கிடையே புகுந்த ஒரு தரப்பு ஆதரவு போலீஸார் தான் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை பெரிதாக்கினார்கள்.  

.....(இவர் தியாகி இம்மானுவேலின் மூத்தமகள் நிர்மலாமேரியின் மகள்)
....நக்கீரன்
************************************************************************************************
ஒரே சீராக ஏன் பாவிக்கவில்லை!
     ருவாய்த் துறையில் உள்ள ஒரு பட்டியலின அதிகாரி சொல்கிறார்-
      "தேவர் குருபூஜை "அக்டொபர் 30- ஆம் தேதி எந்தப் பகுதியிலும் எந்தப் பிரச்சினையும் தலை தூக்கிவிடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் ஏழெட்டு பேர், எஸ்.பி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி., சட்ட  -ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. என எல்லோரும் மதுரையில் கூட்டம் போட்டு பேசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  தேவர் குரு பூஜைக்கு தமிழக அரசு தாராளமாக முக்கியத்துவம் கொடுக்கட்டும்... வேண்டாம் என்று சொல்லவில்லை.

       அதேநேரத்தில் படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதியும் தேவேந்திர மக்கள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கின்ற ஒரு தினம் அல்லவா?  மதுரையிலிருந்து மானாமதுரை, பரமக்குடிவரை வழி நெடுகிலும் இருப்பது தலித் கிராமங்களாயிற்றே...'தோழனென்றால் உயிர் கொடுப்போம்! தொல்லை என்றால் உயிர் எடுப்போம்!' என பச்சை-சிகப்பு கொடியை உருவாக்கியவர்களாயிற்றே.. தலித்துக்கள் அனுஷ்டிக்கின்ற நாள் என்றால் மட்டமா?  அதுவும், தாழ்த்தப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற்று வரும் இந்த நேரத்தில் அவர்களை எத்தனை ஜாக்கிரதையாக கையாண்டிருக்கவேண்டும்.  தேவர் குரு பூஜை நாளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கும் கொடுத்திருந்தால், இத்தனை குளறுபடிகள், மோதல், கலவரமெல்லாம் வெடித்திருக்காது.  துப்பாக்கிச் சூட்டில் 7 (6) பேர் செத்த பிறகு 4000-க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்திருக்கிறார்கள்.  பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டிருக்கிறார்கள்.  இனியாவது, நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அமரராகி விட்ட இரண்டு தலைவர்களின் பெயரில் நடக்கும் குருபூஜைகளை சமமாக பாவிக்கவேண்டும் அரசு.  இல்லையென்றால் தீண்டாமை கொடுமையை அரசே செய்கிறது என்னும் பழியே தொடரும்" என்றார்.

....சி.என்.இராமகிருஷ்ணன்...நக்கீரன்
.***************************************************************************************************

விருதுநகர் மாவட்டத்திலும் டென்ஷன்!
     ஸ் மறியல் கடை அடைப்பு என அருப்புக்கோட்டையும் அவதிக்குள்ளானது.  பேருந்துகள் ஒடாததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.  விருதுநகர் அடுத்துள்ள்ள ஆமத்தூர் வழியாக மதரைக்குச் சென்ற அரசுப் பேருந்து மீது கல் வீச்சு நடந்து கண்ணாடி உடைந்தது.  டிரைவர் ராஜேஷ்கண்ணனுக்கு காயம்.  விருதுநகரிலிருந்து சுந்தரலிங்கபுரத்துக்குச் சென்ற அரசு டவுன் பஸ் மீது ராமன்குடும்பன்பட்டி அருகே கல் வீசி சேதப்படுத்தினார்கள்.  செங்குன்றாபுரத்திலும் பஸ் மறியல் நடக்க... விருதுநகர் தாசில்தார் வந்து பேசி சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
..........சி.என்.இராமகிருஷ்ணன்..நக்கீரன்
****************************************************************************************************

மதுரை பலி!
     துரை சிந்தாமணி ரிங் ரோடு வழியாக, தியாகி இம்மானுவேல் குருபூஜைக்காக பரமக்குடி சென்று கொண்டிருந்த தலித் இளைஞர்களின் வாகனத்தை, உதவி கமிஷனர் வெள்ளத்துரை தடுத்து நிறுத்தி, "பரமக்குடியில் வன்முறையா இருக்கு, வேறு பாதையில் போங்க என்றபடி பாதையைத் திருப்பிவிட்டார்.  நான்கைந்து நாட்களுக்கு முன் மாற்று சாதியினரால் கொல்லப்பட்ட  தலித் சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த ஏற்கனவே பக்கத்தில் இருக்கும் பச்சேரி கிராமத்துக்குப் போய் கொதிப்போடு திரும்பி வந்து கொண்டிருந்த ஒரு கும்பலும் மறிக்கப்பட, அவர்கள் ஏ.சி.வெள்ளத்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் சாலை மறியலிலும் இறங்க முயற்சித்தனர்.

     ஏ.சி.யோ அவர்களின் லாரியை அப்புறப்படுத்தச் சொல்ல ஆவேசப்பட்ட அந்தக் கும்பல் ஏ.சி.க்கு எதிராக கோஷம் எழுப்பியது.  ஏ.சி.யோ, " எல்லோரும் கலைஞ்சி போங்க, மீறிப்போனால் எல்லோரையும் குண்டியில் சுட்டுப்புடுவேன்" என்று மிரட்ட, பதிலுக்கு ஏ.சி. உள்ளிட்ட போலீஸ் மீதும் அவ்வழியாக வந்த அரசு பஸ்கள் மீதும் கற்களை வீசினர்.  ஸ்பாட்டுக்கு வந்த மதுரை எஸ்.பி அஸ்ரா கார்க் மீதும் கற்கள் வீசப்பட... இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஒடிவந்து எஸ்.பி.மீது கற்கள் படாமல் தடுத்தார்  அவர் உள்ளிட்ட 13 போலீசார்கள்மீது லாரியில் வந்து இறங்கியவர்கள் சரமாரியாகக் கற்களால் தாக்க, துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் சுட ஆரம்பித்தார்.  இதில் பாலகிருஷ்ணன், ஜெயபிரசாத் என்ற இரண்டு இளைஞர்கள் குண்டடிப்பட்டு சுருண்டு விழ....108 ஆம்புலன்ஸ் மூலம் குண்டு காயம் பட்டவர்கள் உள்ளிட்டவர்களையும், காயமடைந்த 13 போலீசாரையும் அரசு மருத்துவமனைக்கு அள்ளிக்கொண்டு போனார்கள்.  இதன்பிறகும் இரவு வரை அங்கே பதட்டம் தணியவில்லை.  போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால், முகூர்த்த நாளான அன்று திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு வந்தவர்களால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.  பொதுமக்கள் பீதியிலேயே நிமிடங்களைக் கழித்தார்கள்.

---முகில். நக்கீரன்.
*********************************************************************************************

பொது ஜனம்; இது என்னய்யா அடைமொழிப் பெயர் போட்டுக்கிறதுலக் கூடவாத் தகராறு....தெய்வத் திருமகன் என்று யார் வைத்துக்கொண்டால் என்ன? தமிழ் வார்த்தைகளுக்கு கூட பட்டாப் போட்டுக்கிறாங்க!

பொது ஜனம்; அதானே! இவங்களும் ஏட்டிக்கு போட்டியா வைச்சுகிட்டாங்கன்னா? "டபுள் தெய்வத் திருமகன்னு" இல்லைன்னா "தெய்வத்தின் தெய்வம்" என்று இவரு பேருக்கு முன்னாடி வைச்சுகிட்டாப்போகுது! ஜெயலலிதா மாதிரி அல்பத்தனமா யோசிக்கிறாங்களேப்பா!

பொது ஜனம்; அதான்! இதுக்காகவே ஜெயலலிதாவை ஜெயிக்கவைச்சிருக்காங்கன்னு சொல்லு!

பொது ஜனம்; அவங்கதான் வைச்சுட்டாங்களே! இவங்களாவது மாத்தி வைச்சிருக்கலாம் இல்லே! இவங்களுக்கு மட்டும் வார்த்தைகளே இல்லாத மாதிரி! வம்புக்குப் போறாங்களே!

பொது ஜனம்; ஆமாம்பா இதுவும் சரிதானப்பா!

பொது ஜனம்; சரி, அதுக்காக ஒருத்தனை ஒருத்தன் வெட்டிகிட்டு சாகனுமா?

பொது ஜனம்; போலீசு என்ன? ஐ.பி.எஸ் க்கு படிச்சுதா? இல்லை ஜாதியை எப்படி காப்பாத்தரதுன்னு படிச்சுதா? இல்லே ஜாதிக்கலவரத்தை எப்படி உருவாக்கிறதுன்னு படிச்சுதா? இந்த கேடுகெட்ட பொழைப்புக்கு பதில் வேறு ஏதாவது..... பார்க்கலாமே!

பொது ஜனம்; அதுங்க எங்க படிச்சுது? எப்படி உடுப்பு போட்டு அராஜாகம் பண்ணலாம் என்பதை தான் படிச்சது! ஆளுங்கட்சிக்கு எப்படி ஜால்ரா அடிச்சு பதவியை காப்பாத்திக்கலாம் என்பதைத்தான் படிச்சது! மக்களுக்காக என்னைக்கு வேலை செஞ்சதுங்க! 

பொது ஜனம்; அப்படியே செஞ்சாலும் "லஞ்சம்" என்ற பேரிலே பெட்டிக்கேசுக்கு கூட "சர்வீஸ் சார்ஜ்" போட்டுரும்! (இப்ப இப்படித்தான் சொல்லணும்)

பொது ஜனம்; யார் இந்த ஏ.சி. வெள்ளைத்துரை? இந்த நொச்சிக்குப்பம் வீரமணியையும், வீரப்பனையும்  போட்டுத்தள்ளின அந்த ஆளா?

பொது ஜனம்; இவங்களே ரவுடித்தனம் பண்ணசொல்லிட்டு இவங்களே பண்ணவங்களை போட்டுத்துள்ளுவாங்களே! அந்த பலே பேர்வழி தானே! இந்த வெள்ளைத்துரை!.

பொது ஜனம்; சரி! யாரு சுட்டாலும் தான் துப்பாக்கி சுடப்போகுது! இதுல வெள்ளத்துரைக்கு என்ன பெரிய ரோல்! இவருக்கு குண்டி இல்லையா என்ன? முதல்ல உச்சநீதிமன்ற கருத்துப்படி, மக்களின் சம்பாத்யத்தை வாங்கி கொண்டு மக்களையே கொல்லுகின்ற இவங்களை முதல்ல தூக்குல போடணும்!

பொது ஜனம்; இதை தேசிய மனிதவுரிமை ஆணையமும், சி.பி.ஐ யும் தான் விசாரிக்கணும். மாநில போலீசாரிடம் ஒப்படைக்க கூடாது.

பொது ஜனம்; இதுல சம்பந்தப்பட்ட அத்துணை போலீசாரையும் பணிநீக்கம் செய்யணும், கொலை குற்ற வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பொது ஜனம்; பலியானவர்களுக்கு பிச்சை போடறமாதிரி 1 லட்ச ரூபாய் கொடுத்திருக்குதே! இதுக்கு மேல கஜானவில பணமில்லையா!

பொது ஜனம்; இதுக்காக நாக்கறத்தவங்க, மூக்கறத்தவங்களுக்கு அரசு வேலை போட்டு கொடுக்குது! விட்டா தர்மபுரியில மூன்று மாணவிகளை உயிரோட கொளுத்துன அல்லக்கைங்களுக்கு கூட நிவாரணம் கொடுக்கும்.

பொது ஜனம்; இது வீணாக்கின பணமே பல கோடி ரூபாயாச்சேப்பா! இது எலிகாப்டர்ல போற செலவு ஆகுமா? இந்த ஏழுபேருக்கும் தலா பத்துலட்சம், ஏன் அதுக்கு மேலேயும் தரலாம்!


Monday, 12 September 2011

பொதுச்சொத்தைக் காப்பதற்காக போலீஸ்காரர்களை வைத்து கொலை செய்தேன்! ஜெ!






பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு ஏன்? முதல்வர் விளக்கம் : நிவாரணம் அறிவிப்பு





சென்னை: "பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மூன்று பேர் குடும்பத்திற்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். வன்முறையை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை: தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான, இம்மானுவேல் சேகரனின், 54வது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது சமாதியில், பல்வேறு அரசியல் கட்சியினரும் நேற்று மரியாதை செய்தனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருவதை, போலீசார் தடை செய்திருந்தனர். தடையை மீறி பரமக்குடி நோக்கிச் சென்ற, ஜான்பாண்டியனை, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் போலீசார் கைது செய்தனர். ஜான் பாண்டியன் கைதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், போக்குவரத்தை சீர்குலைக்கும் வகையில், பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். கலைந்து செல்ல வலியுறுத்திய போலீசார் மீது கற்களையும் வீசி, வன்முறையில் ஈடுபட்டனர். வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் மீதும் தீவைத்தனர். வன்முறையாளர்கள், போலீஸ் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியதால், தற்காப்புக்காகவும், பொதுச் சொத்தை பாதுகாக்கும் வகையிலும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில், மூவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதில், டி.ஜ.ஜி., சந்தீப் மிட்டல், டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். ஜான்பாண்டியன் கைதைக் கண்டித்து, மதுரை சிந்தாமணி சந்திப்பிலும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்தனர். கல்வீச்சு தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். இன்ஸ்பெக்டரை தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக அவர் துப்பாக்கியால் சுட்டதில், இருவர் காயமடைந்தனர். சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற வன்முறை செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

............தினமல(ம்)ர்.... 12.09.2011

**************************
பொது ஜனம்; பொதுச்சொத்தை காப்பதற்காக மக்களை சுட்டுச்சாம்!


பொது ஜனம்; அப்ப! இந்த பொம்பளைக்கு! நீதிமன்றம் இரண்டு வருடம் தண்டனை கொடுத்தது என்பதற்காக  தர்மபுரியில மூன்று கல்லூரி மாணவிகளை பேருந்திலேயே வைச்சு எரிச்ச அ.தி.மு.க அல்லக்கைங்க மூன்று பேரையும் ஏன்? இதுவரைக்கும் சுடலை!?


பொது ஜனம்; அதானே! இதுவரைக்கும் சுட்டுத்தள்ளனும்னு ஒரு அறிக்கையும் விடலையே!  

பொது ஜனம்; இத்தனைக்கும் அவனுங்க மூன்று இளம் மாணவிகளின் உயிரை எடுத்திருக்கானுங்க! பெத்தவங்களை துடிக்கவைச்சிருக்கானுங்க!
பொது ஜனம்; இப்ப போலீஸ்காரங்ககிட்ட சொல்லி உடனே சுட்டுரும்! இல்லைன்னா உடனே தூக்கில போட்டுரும்! சட்டசபையில தீர்மானம் கூட இயற்றும்! அந்த பொம்பளையைப் பத்தி தெரியாது! ரொம்ப! ரொம்ப! தகிரியமான பொம்பளை!

பொது ஜனம்; அப்படியா! 

பொது ஜனம்; ஆமாம்பா! நிறைய நெஞ்சு தகிரியம்பா! உச்சநீதிமன்றமே பயப்படுதாம்மே!

பொது ஜனம்; அப்ப ஜெயலலிதாவைத்தான் சுடனும்! எத்தனை பொதுச்சொத்தை நாசம் பண்ணியிருக்குது! (புதியத் தலைமைச்செயலகம், சமச்சீர் கல்வியை இழுத்தடித்து நாசம், மெட்ரோ திட்டம் முடக்கம்)

பொது ஜனம்; ஒரு உயிரைக்காப்பதற்காக, இல்லை பல அப்பாவி மக்களின் உயிர்களை காப்பதற்காக போலீஸ்காரங்க சுட்டாங்கன்னு சொன்னாலும், ஏதோ ஒரு ஞாயம் இருக்குது! (அதையும் போலீஸ்காரங்கதான் சொல்லணும், அவங்கதான் ஸ்பாட்ல இருந்தவங்க!) இது என்ன? டகால்டி அறிக்கையா இருக்குதே! 



பொது ஜனம்; இதுக்கு அறிக்கை விடக்கூடத் தெரியலை! இது என்னத்துக்கு? சும்மா முதலமைச்சர் நாற்காலியில உக்காந்து தேய்ச்சுகிட்டு இருக்குது!

பொதூ ஜனம்; இந்த கலவரம் அடங்காது போல இருக்கே! நாட்டுல இந்த பொம்பளையே தீவிரவாதத்தை வளர்த்து விடும்னு நினைக்கிறேன்!

பொது ஜனம்; இந்த அறிக்கையை வைச்சே நீதிமன்றத்துல கேஸ் போடலாம்!

பொது ஜனம்; சசிகலாவை திருப்தி படுத்த இந்த துப்பாக்கி சூடா?

பொது ஜனம்; அப்ப காமராஜர் காலத்துல நடந்த தேவேந்திரகுலம், மற்றும் தேவர் சமூகக் கலவரத்தை, இப்ப கொம்பு சீவி விடறாங்க டோய்!

பொது ஜனம்; 1957 இல் நடந்த மிகப்பெரிய ஜாதிக் கலவரத்தை ஜெயலலிதாவே உருவாக்கிடுச்சு!

பொது ஜனம்; தமிழ் நாட்டுல 144 தடையுத்தரவை முதல் முதலா இப்பத்தான் இன்றைய மக்கள் பார்க்கறாங்க! 

பொது ஜனம்; கலைஞர் ஆட்சியிலே இது மாதிரி எல்லாம், எதுவும் நடக்கவேயில்லைய்யா!  

பொது ஜனம்; அவருக்கு தகிரியம் கம்மி! மனிதாபிமானம் ஜாஸ்தி!

பொது ஜனம்; ஆமா! ஜெயலலிதா அமைதிப்பூங்காவா இருந்த தமிழகத்தை அராஜகப் பூங்காவாக மாத்திடுச்சி!

பொது ஜனம்; இது யார்யா? அப்பாவி மக்கள் மேல துப்பாக்கி சூடு நடத்திறதுக்கு! 

பொது ஜனம்; மக்கள் உயிர்களை இதோட தலை மயிரா? நினைச்சுடுச்சோ? 

பொது ஜனம்; இதை சும்மா விடக்கூடாது! மனிதவுரிமை ஆணையத்திடம் முறையிடனும். 

பொது ஜனம்; இதுக்காகவே ஆட்சியை கலைக்கலாம்! போலீஸ்காரங்க கூட வருத்தப்படுவாங்க போல இருக்குது! இது மக்களோட உயிரைப்பத்தி கவலைப்படாம போலீஸ்காரங்களை பத்தி கவலைப்படுதே!

பொது ஜனம்; போலீஸோட வேலை மக்கள் உயிரைப் பதுகாக்கிறது தானே! அதுக்குத் தானே சம்பளம்? அந்த சம்பளத்தை மக்களை கொலை செய்வதற்காக மாத்திட்டாங்களா?

பொது ஜனம்; மக்கள் பணத்தை வாங்கிட்டு மக்களையே கொலை செய்யறாங்களேய்யா! இதுக்கு இந்த ஜெயலாலிதா உடந்தை! இது சொல்லித்தான் சுட்டிருக்காங்க!

பொது ஜனம்; எந்த மாநிலத்திலேயும் இந்த மாதிரி மட்டரகமா அறிக்கை விடமாட்டாங்கய்யா! 

பொது ஜனம்; சட்டமன்றத்தில இருக்கிற, கம்யூனிஸ்ட்டுகள், திராவிட பாதுகாவலர்களான, விஜயகாந்த், இன்னும் மக்கள் நல அல்லக்கைகள் எல்லாம் என்ன பன்றாங்க?

பொது ஜனம்; அவங்க உயிராப் போச்சு! "தலித்தோட" உயிர்கள் தானே!

பொது ஜனம்; சனிக்கிழமையன்று, கமுதி மாணவனை வெட்டிக் கொன்றவர்களையும் இது வரைக்கும் இந்த தமிழகப் போலீஸ் கைது செய்யலை! இதுல ஏதோ உள்நோக்கம் இருக்குது! சசிகலா ஜாதி மேட்டர் இதுல ஒளிஞ்சுகிட்டு இருக்குதோ?

பொது ஜனம்; அவ்வளவு ஆபத்து வரப்போகுதுன்னா! முன்னாடி நாளிலேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்கலாமே! 

பொது ஜனம்; அதானே! இதோட அல்பத்தனமான மனப்பான்மைக்காக எத்தனைப் பேரை நடு இரவிலேயே கைது பண்ணி துன்பபடுத்துது! அவங்க வீட்டு பிள்ளைகள், குடும்பங்கள் எந்த கதிக்கு ஆளாகும்? என்பதை பத்தியெல்லாம் கவலைப்படுற ஆளா! இந்த பொம்பளை!

பொது ஜனம்; இதுக்கு அதெல்லாம் இருந்தாத்தானே!

பொது ஜனம்; தன் சுயநலத்துக்காக அடுத்தவங்களை துன்பப்படுத்தி பார்க்கிற ஆட்சி!

பொது ஜனம்; இதில் நீதிமன்றம் தன்னிச்சையாக தலையிடணும்!

பொது ஜனம்; ஆளுநர் இது குறித்து அறிக்கை கேட்கணும்!

பொது ஜனம்; இன்னும் என்னென்ன கொடுமைகள் இந்த பொம்பளையால நடக்கப்போகுதோ? தெரியலையே?