Pages

Saturday 29 January, 2011

மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? நம்ப மறுக்கும் தமிழக.....மூடநம்பிக்கையாளர்கள்!

சமீபத்தில் சபரிமலை மகரஜோதி பற்றிய சர்ச்சைகள் குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் 26.1.11 அன்று வெளியிடப்பட்ட காட்சிகள் குறித்து...


சமீபத்தில் சபரிமலை அருகே புல்மேடுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கணக்காணவர்களைப் பலிவாங்கியது...கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கிற இடத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை எப்படி மேற்கொள்வதுஎனபது குறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்வியைப் பின்தொடர்ந்து செல்லுகிறபொழுது எதிர்பாராத விதமாக இனொனொரு சர்ச்சையும் ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவில்....தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் திருத்தலம்...இங்கு ஆண்டுதோறும் காட்சி தரும் மகரஜோதி தரிசனம்....யாத்திரிகர்களை பொருத்தவரை ஓர் அதிசயம்...அதுவும் தமிழக, கர்நாடக, ஆந்திர நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே இது ஒர் அதிசயம்...
இதோ நேரில் பார்த்தது மாதிரி பொய் பேசி மக்களை உசுப்பேத்தும் மூடநம்பிக்கையாளரின் விளக்கம்....(அவருக்கு மக்கள் உயிரை பற்றி என்ன வந்தது... அவா உயிரோடு இருந்தால் போதாதா?)
மகரஜோதி எனபது...நிச்சயமாக..சத்தியமாக...(நிச்சயம்..சத்தியம் இரண்டும் வேறு வேறா...?) மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல..தேவாதி தேவர்கள் இந்திர லோகத்தில் இருந்து அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இறங்கி, அவா அங்கே இறங்கி, அந்த டயத்துல தான் அவா அங்கே இறங்கறா...இறங்கி சுவாமியையும் சூரியனையும் ஆராதனை பண்ணி வழி காமிச்சி விட்டுட்டு அவா போய்டுவா.... இது நம்பிக்கைக்கு பாத்திரமான அனுபவ விஷயம் (மூடநம்பிக்கை என்று வந்து விட்ட பிறகு அனுபவம் எங்கே வந்தது...?) அங்கே நடப்பது தேவ ரகசியம். (மூடநம்பிக்கையாளருக்கு மட்டும்...கேரள மக்களுக்கு அல்ல...!)
மேலே கூறப்பட்ட மூடநம்பிக்கையின் பேரில் தான் இந்த ஆண்டும் (2011) ஜனவரி 14 ந் தேதி சபரிமலையில் லடசக்கணக்கான நம்பிக்கையாளர்கள் கூடியிருந்தனர். மகரஜோதி தரிசனம் முடிந்தது கூடியிருந்த நம்பிக்கையாளர்கள் புல்மேடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 100 க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கின.
புல்மேடு பகுதியில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு லட்சகணக்கில் உதவித்தொகை வழங்கப்பட்டது.இப்படியான கூட்ட நேரங்களில் எப்படிப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விவாதங்களும் முன்வைக்கப்பட்டது. அதைவிட அந்த காட்டுப்பகுதியையே மூடிவிடலாமா? என்ற யோசனையும் சொல்லப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்த வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் நீதிமன்றம் எழுப்பிய மிக முக்கியமானதொரு கேள்வி தான் இத்தனை பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது.
நீதிமன்றம் எழுப்பிய இந்த கேள்வியும் இதற்கு கோவில் நிர்வாகம் தந்த பதிலும் தான் தற்போது ஐயப்ப நம்பிக்கையாளர்களிடேயே பெரும் பதட்டத்தையும், பலவிதமான அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இத்தனை பரபரப்பிற்கும் காரணமான மகரஜோதி தரிசனம் உண்மையிலேயே ஓர் அதிசயம் தான் எனபது யாத்திரிகர்கள் பலரது நம்பிக்கை.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அன்று மட்டும் தான் மகரஜோதி தரிசனம் கிடைக்கும். இதனால் குறிப்பிட்ட அந்த நாளில் சபரிமலையில் லட்சக்கணக்கில் யாத்திரிகர்கள் கூடுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாளில் கடவுள் ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணப் பெட்டி கோயிலுக்கு வந்து சேரும். மாலையில் கடவுளுக்கு தங்க ஆபரணம் அணிவித்து தீபாரதனை காட்டும் சமயம், சபரிமலையில் இருந்து கிழக்கு திசையில் அமைந்துள்ள காந்த மலை மீது ஒரு பிரகாசமான நட்சத்திரம் தெரியும். அதை தொடர்ந்து ஒரு தீபஜோதி ஒரு சிலநிமிடங்களுக்கு தோன்றி மறையும். இதுதான் மகரஜோதி தரிசனம். மூன்று முறை தோன்றி மறையும் மகர ஜோதியை கண்டு சபரிமலை முழுவதும் பக்தர்களால் முழங்கப்படும் சரண கோஷம் மலை முழுக்க எதிரொலிக்கும்.
 
...தமிழ் மூடநம்பிக்கையாளர்..
நட்சத்திரத்திற்கு பிறகு ஜோதி தெரியும் அது இங்கும் அங்கும் அசையாது...அது மலைகளுக்கு இடைப்பட்ட இடத்தில் தெரியும்...இது தமிழ் ஆள்....(மீண்டும் மீண்டும் தமிழ் ஆட்கள் மட்டுமே தெரிவிக்கும் தகவல்...மலையாளி அல்ல....)
ஒவ்வொரு ஜனவரி 14 ந் தேதி....சபரிமலையில் வானத்தில் தோன்றும் மகரவிளக்கு குறித்த விவாதம் நீண்டநாளகவே நடைபெற்று வருகிறது...சமீபத்தில் நடந்த சம்பவத்தால் இந்த விவாதம் சர்ச்சையாகவும் மாறியிருக்கிறது....
தற்பொழுது எது மகரஜோதி? எனபதில் தான் குழப்பம் ஏற்படுத்தி ஒரு புதுவிதமான சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது....அனைறயதினம் வானில் தோன்றும் பிரகாசமான நட்சத்திரம் தான் மகரஜோதி..அதை தொடர்ந்து வானில் தெரியும் தீபவிளக்கு தான் மகரவிளக்கு....இது பொன்னம்பல மேட்டில் ஒரு பழங்குடியினமக்களால் செய்யப்படும் ஒரு தீபராதனை சடங்கு....அதாவது மகரஜோதி என்பது புனித நடசத்திரம்...மகரவிளக்கு என்பது மனிதர்கள் ஏற்றிவைப்பது என சபரிமலை பூஜைப்பணிகளை செய்துவரும் தந்திரி குடும்பத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நட்சத்திரத்தை தொடர்ந்து வரும் தீப ஒளியே மகரஜோதி என பக்தர்களிடையே இன்றுவரை நம்பப்படும் அழுத்தமான நம்பிக்கை. அடர்ந்த காட்டுப்பகுதியான பொன்னம்பல மேட்டில் யாரும் தீபம் ஏற்றி பக்தர்களை நம்பவைக்கமுடியாது என்பதே பலரது உறுதியான (மூடநம்பிக்கை) கருத்து.
(இது அனைத்தையும் கூறுவது மூடநம்பிக்கையில் மூழ்கிகிடக்கும் தமிழர்கள் தான்...)100 க்கு 100 சதவீதம் தெய்வீகம் தான், உண்மையானது, நம்பிக்கையானது மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல...குறிப்பாக அந்த காந்தமலைப்பகுதிக்கு சாதரணமாக யாரும் போக முடியாது...(இவர் போலனா யாரும் போகமுடியாதா...? ..ப்பூ...செவ்வாய் கிரகத்துக்கே போறான் மனிதன்...)
இன்னொரு மூடநம்பிக்கையாளர்...60 ஆண்டுகளாக சபரிமலை போய்வருகிறேன் ''நான் பார்த்த வரையில் ஜோதி உண்மையானது''
''ஜோதி இயற்கையானது தானே தவிர செயற்கையானது கிடையாது'' இதுவும் முடநம்பிக்கை தமிழ் பேசும் ஆளின் கூற்று....(இயற்கையெல்லாம் பொய்யாக போய்விட்டது...)

அப்படியானால் லடசக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கை பொய்யாகிப்போனதா? மகரஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறதா? கோவில் நிர்வாகம் பூடகமாக இந்த விஷயத்தை பற்றி சொல்லியும் மூடநம்பிக்கையாளர்களோ இதனை ஏற்கத் தயாராக இல்லை....
அதனால் தான் கேரள அரசும் மகர ஜோதி குறித்து விசாரணை நடத்த மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்து விட்டது....
கேரள நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை மகரஜோதி தரிசனம் ஒர் அதிசயமாகப் பார்க்கப்படுவதில்லை....ஆனால் தமிழக, ஆந்திர, கர்நாடக நம்பிக்கையாளர்களோ ஒளி வடிவமாக ஐயப்பனே காட்சி தருவதாக மகரஜோதி தரிசனத்தை பார்க்கின்றனர். 
கேரள மக்களின் மகரஜோதி நம்பிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றியமைத்தது ஒரு காணொளி (வீடியோ) ஆதாரம்...அதை எடுத்து வந்து வெளியிட்டவர் தான் கேரள பத்திரிகையாளர் மனோஜ் கே புதியவிளா...அவர் தனியார் தொலைக்காட்சிக்குப் பல அதிர்ச்சிகரமானத் தகவலைக் கூறினார்.......
''நான் பொன்னம்பல மேட்டில மகரஜோதி ஏத்துற இடத்துக்கு போய்வந்தேன்...1989 இல் அங்கே என்ன நடக்கிறது? என்பதற்கான ஆதாரங்களை திரட்ட போயிருந்தேன்...திரும்பவும் 2000 த்தில் தொலைக்காட்சி பத்திரிக்கையாளராக அங்கே போய் அந்த இடத்தை எல்லாம் காணொளியில் ஒளிப்பதிவு செஞ்சேன்....
மகரஜோதி கொளுத்துகிற இடத்தையும் காணொளியில் பதிவு செஞ்சேன்...
கேரள தொலைக்காட்சியில் அந்த காணொளியை ஒளிபரப்பு செய்தோம்...
இதில இரண்டு விஷயம்...
ஒன்று அங்கு இருக்கிற ஆதிவாசி மக்கள்...சபரிமலை உற்சவத்தில் அவங்க தீபாராதனை காட்டி அவங்க வழிபட்டு வந்திருக்காங்க....
அது சபரிமலையில் இருந்து பார்க்கிறபொழுது ஆகாயத்தில் ஒரு அதிசயமான ஒளிதெரியற மாதிரி எல்லொரும் உணரந்தாங்க...அது ஒரு நம்பிக்கையாகவே மாறிடுச்சி...அதற்குப்பிறகு மலையில் மின்சார வயர்கள் (ஈ.பி லைன்) அமைச்ச காலகட்டத்தில ஆதிவாசி மக்களை அங்கிருந்து காலி பண்ணிட்டாங்க....
அதன்பிறகு ஆதிவாசி மக்கள் ஏற்றிய தீபராதனை ஏற்ற வழியில்லாத காரணத்தால் தேவஸ்தான துறையும் (தேவசம் போர்டும்), அரசும் சேர்ந்து தீபராதனையை கொளுத்த ஆரம்பிச்சாங்க...அது மட்டுமில்லாமல் ஊடகங்கள் (மீடியாக்கள்) மூலமாக காட்டும் பொழுது ஜோதி தெரிஞ்சது.....ஜோதி தெரிஞ்சது..ஜோதி தெரிஞ்சது....என்று ஒரு பெருவாரியான மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க...(மாஸ் ஹிஸ்டிரியா). அதுதான் மகரஜோதி ஒரு அற்புதமான விஷயம் என்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்திடுச்சி...''''
பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி விஷயம் பற்றிய மதிப்பீடுகள் கேரளாவிலும் ஆச்சர்யமான ஒன்றாகத்தான் கருத்ப்பட்டுவந்தது...
முதன்முதலாக பொன்னம்பல மேட்டிற்கு சென்று அந்த விஷயத்தை கண்டுபிடித்து வெளிப்படுத்தியப் பிறகே புதிய மாற்றத்தை கேரளாவிலும் ஏற்படுத்தியது என்று கூறுகிறார் மனோஜ்கே புதியவிளா...
''''சபரிமலையில் மகர சங்கராந்தி பூஜை நடக்கும் பொழுது...கிழக்கில ஒரு தீபம் தெரியும் ஒரு நட்சத்திரம் தெரியும் என்பது தான் ஒரு நம்பிக்கை...அந்த ஒளி தெரியும் பொன்னம்பல மேடு என்ற இடம் பூமியிலேயே இல்லை என்பதுதான் பலரது எண்ணம். அதானால் ஏற்படற பரபரப்பினால் கூடும் கூட்டத்தினால் ஏற்படும் நெரிசலினால்...1999 இல் 82 பேரும்...2011 இல் 102 பேரும் இறந்து போய்ட்டாங்க...(இந்த 82, 102 இதையும் நம்மாளுங்க கதை கட்டுனாலும் கட்டுவாங்க...இரட்டைப்படை...சொறி சிரங்கு படை என்று...எதற்கும் காத்து இருக்கலாம்...)''
இத்தனைக்கும் காரணம் மகரஜோதி ஒரு அதிசயம் அதை பார்க்கணுங்கற ஒரு எதிர்பார்ப்பு தான்...
கேரளத்தில் பகுத்தறிவுவாதிகள் சங்கம் மகரஜோதி ஏற்றும் இடத்தை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் சிறு கையேடு வெளியிட்டு பிரச்சாரம் நடத்தினாங்க. ""மகரஜோதி மனிதர்கள் தான் ஏத்தறாங்க"" அப்படிங்கற விஷயம் கேரள மக்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால தான் இப்படி இரண்டு பெரிய விபத்து கேரளத்தில் நடந்தும் அதில மலையாளிகள் பாதிக்கப்படவில்லை.
 
கடந்த ஈராயிரம் ஆண்டில் வெளியான இந்த காணொளி ஆதாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
மகரஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறதா? அப்படியென்றால் யார்? ஏற்றுகிறார்கள்?
சபரிமலை மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அதன் உண்மை நிலையை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு நிர்பந்தத்தை முன்வைத்திருக்கிறது....
 
மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் பெரிதாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை...அதை விஞ்ஞான ரீதியாக அணுகுவதுமில்லை...ஆனால் இது சர்ச்சைக்கு ஆளான காரணத்தினால் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.........
மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அப்படியென்றால் யார்? ஏற்றுகிறார்கள்? என்ற இந்த கேள்விக்கு பதிலாக வந்தவர் தனவச்சபுரம் சுகுமாறன்...
 
''கேரள பகுத்தறிவுவாதிகள் சங்கத்தின் மூலமாக இந்த மகரஜோதி உண்மைகளை ஆராயவேண்டும் என்று முடிவெடுத்து முதல் முதலாக 1980 இல் முடிவு பண்ணோம்...1980 ஜனவரி 14 அன்று மூழியாறிலிருந்து 35 கிலோ மீட்டர் காட்டுப்பாதையில நடந்து போய் பம்பா அணை என்ற இடத்தைப் போய் சேர்ந்தோம்...அங்கிருந்து கொச்சி பம்பை என்ற இடத்திற்கு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து பொன்னம்பலமேடு என்ற இடத்திற்கு போய் சேர்ந்தோம். நாங்க போன சமயம் கேரள தேவஸ்தானத்தின் ஜீப் ஒன்றும், கேரள காவல் துறை ஜீப் ஒன்றும் நின்றிருந்தது. அப்பதான் மகரஜோதி கொளுத்துகிற இடத்தை பார்த்தோம். அடுத்து அந்த வழியாக வந்த மின்சாரத்துறை ஜீப்பில் ஏறி நாங்களும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
தேவஸ்தான துறை ஜீப்பில் ஒரு சாக்குப் பையில் 8, 10 கிலோ கற்பூரமும் ஒரு பாத்திரமும் எடுத்துட்டு வந்திருந்தாங்க..சாயந்தரம் ஒரு ஐந்தரை மணி இருக்கும் அங்கிருந்த பாறையில எல்லாத்தையும் வைச்சாங்க...அந்த இடம் வடக்கு கிழக்காக இருந்த்து..சபரிமலையில் இருந்து 2000 அடி உயிரத்தில் ஒரு புல் மேடாக கிடந்தது...அப்புறம் ஒரு பாத்திரத்தில கற்பூரங்களை நிரப்பி 6.40 மணிக்கு கொளுத்தி தூக்கி காமிச்சாங்க..மின்சாரத்துறையை (ஈ பி) சார்ந்த கோபிநாத் என்ற ஊழியர் தான் அந்த வருஷம் மகரஜோதியை ஏற்றிக் காண்பித்தவர் அணைத்து...அணைத்து மூன்று முறை மகரஜோதியை ஏற்றிக்காண்பித்தனர். இப்படித்தான் மகரஜோதியை ஏற்றிக்காண்பிக்கின்றனர் என்ற விஷயம் அன்றுதான் தெரிந்தது.
 
ஒருகட்டத்தில் யார்? மகரஜோதியை ஏற்றுவது? என்ற போட்டியால் ஏற்பட்ட குழப்பங்களால் இந்த உண்மைகள் வெளி உலகுக்கு அம்பலமானது எனகிறார் சுகுமாறன்.
 
1982 இல் பொன்னம்பலமேட்டுக்கு ஜனவரி 14 க்கு ஒரு நாள் முன்னாடியே அதாவது ஜனவரி 13 அன்றே சென்று 6.40 மணிக்கு நாங்க ஒரு மகரஜோதியை ஏற்றிவிட்டோம்...இது பற்றி மாத்ருபூமியில் யாரோ போலியாக மகரஜோதியை ஏற்றிவிட்டார்கள் என்று தலைப்புச் செய்தியே வெளியானது. வானொலியிலேயும் மகரஜோதி தெரிந்ததாக செய்தி சொன்னாங்க...உடனே இந்த விஷயத்தை தேவசம் போர்டு மறுத்திடுச்சி...அதற்கடுத்த நாள் 1982 ஜனவரி 14 ம் நாள் அந்த வருஷம் மகரஜோதியை ஏற்றியது காவல் துறை தான்.(போலிஸ்). தேவசம் போர்டு ஆட்கள் பொருட்களை எடுத்துட்டுப்போய் கொடுத்தாங்க போலிஸ் அதை ஏத்திச்சு. அன்னைக்கு ஏற்றும்பொழுது அங்கிருந்த புல்மேட்டில் தீப்பிடித்து விட்டது. அதை நாங்க எல்லோரும் ஒன்று சேர்ந்து தான் அணைச்சோம். இது பற்றி கேரள பத்திரிகையில் கூட செய்தி வந்துள்ளது.
அதறகடுத்து 1983 ம் ஆண்டும் போனோம் அப்போது அங்கே 30 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆயுதத்தோடு வந்து எங்க எல்லோரையும் பலமாக தடியடி நடத்தி தாக்கினார்கள். எல்லோருக்கும் நல்ல அடி...எனக்கும் பலமான அடி மூன்று மாதம் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கிற அளவுக்கு அடி...இப்படியாக 1983 மகரஜோதி அமைந்தது..தொடர்ந்து பல வருடங்களாக மகரஜோதி சமயத்தில் பொன்னம்பல மேட்டுக்கு போய்ட்டுதான் இருக்கிறோம்...இப்போது 2011 இல் மகரஜோதி முடிந்த பிறகும் அங்கு போய் பார்த்தோம்...கடந்த 30...31 வருஷமாக தேவசம் போர்டு தான் மகரஜோதியை ஏத்திட்டு வர்றாங்க...
தற்போது சபரிமலை நிர்வாகம் மகரஜோதி என்பது காந்தமலை மீது தோன்றும் நடசத்திரம் மட்டுமே என்று இறுதியாக அறிவித்து உள்ளது...
மகரஜோதி, மகரவிளக்கு இரண்டும் வேற! வேற! என்று புது குழப்பத்தை தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அவங்க சொல்ற மாதிரி மகரஜோதி என்பது நட்சத்திரம்! என்ற பட்சத்தில் அதை பார்க்கிறதுக்கு சபரிமலைக்கோ, பொன்னம்பலமேட்டிற்கோ போக வேண்டியதில்லை...கேரளாவிலே எந்த பாகத்தில் இருந்து பார்த்தாலும் அந்த நட்சத்திரம் தெரியும்...! அதுமட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் எஙகிருந்து பார்த்தாலும் அந்த நடசத்திரம் தெரியும்! அதுவும் ஜனவரி 14 மட்டும் தான் தெரியும் என்று எந்த வானசாஸ்திரமும் சொல்லவில்லை...இப்படியெல்லாம் மக்களை யாரும் ஏமாத்தக்கூடாது....
காலம் காலமாக நம்பிக்கைகள் நொறுங்கும்பொழுது யாராலும் தாங்கவியலாது...எனபது நிதர்சனம்...என்று அந்த தொலைக்காட்சி முடித்திருக்கிறது...
இந்த சபரிமலை மகரஜோதி விஷயத்தில் மூன்று விஷயம் பேசப்படுகிறது...
தேவஸ்தான்ம் எங்களுக்கும் மகரஜோதிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லியது....
அதே மாதிரி தேவஸ்தானமே மகரஜோதிங்கறது வேற..மகரவிளக்கு என்பது வேற..என்பதை மக்கள் குழப்பிக்கொள்ளக் கூடாது...என்று கூறியது
மூன்றாவது மக்களுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை அறிவியல் ரீதியாக ஆராயத் தேவையில்லை என்று கேரள அரசும் கருத்து சொல்லியிருப்பது...
இதுவே ஒரு ஏமாத்துவேலையாக தெரிகிறது...எல்லாம் அங்கு குவியும் காணிக்கை (144 கோடி)  வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இதை மறைக்கிறார்கள் எனபது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது....இது மொத்தம் இது போன்ற தமிழக, ஆந்திர, கர்நாடக மூடநம்பிக்கையாளர்களால் சேருகிறது என்பது ஊரறிந்த விஷயம்....வரி ஏய்ப்பு எப்படி வசூலானால் என்ன,,,? நாட்டிற்கு தேவையான வருமானம் கிடைக்கிறதே...என்று கேரள அரசு நினைக்கிறதா? (சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களை பற்றி வெளியிடத்தேவையில்லை என்பது மாதிரி...இதிலும் அரசு மெத்தனம் காட்டுகிறது...)

...நன்றி கேரள பகுத்தறிவுவாதிகள் சங்கம்..தனியார் தொலைக்காட்சி..நன்றி டெக் சத்தீஸ் இணையதளம்.... 

No comments: