Pages

Monday 6 May, 2013

பார்ப்பனருக்குக் கடைசியில் ஊரூராகச் சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல..அண்ணா



பாக்கிஸ்தான் தரவேண்டும் என்றால் சுயராஜ்யமே வேண்டாம் என்ற உறுதி என்னாயிற்று என்பது நமக்குத் தெரியும்.   என் பிணத்தின் மீது நின்று கொண்டு தான் பாக்கிஸ்தான் பிரிக்கப்படமுடியும் என்று பேசியவர்களை நானறிவேன்.  என்னென்ன நிலையில் எந்தெந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள், கொள்கைகளைக் குறைத்துக் கொண்டனர் என்பதும் எனக்குத் தெரியும்.

பெரியாரின் பொதுவுடமைப் பிரச்சாரம் என்ன ஆயிற்று என்பதும், அக்ரகாரத்தை கொளுத்த தீவட்டியைத் தயாராக பெட்ரோல் டின்னுடன் வைத்துக் கொண்டிருக்கச் சொன்னது என்ன ஆயிற்று என்பதும் எனக்குத் தெரியும்.  எனவேதான் தி.மு.கழகம் கொள்கையை மாற்றிக் கொண்டது என்று தூற்றக் கூடியவர்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்று சொன்னேன்.  எனக்கு உள்ள கவலை அவர்கள் என்னை ஏசுவார்கள் என்பது அல்ல.  என் மனம் என்ன பாடுபடும் என்பது தான்.  கொள்கையிலே எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு,  வெறுப்பு ஏற்பட்டு மாற்றிக் கொள்வதினால் மனம் பாடுபடாது. 

பார்ப்பனீயம் என்று நாம் பேசினோம்-நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிட்டோம். என்று பெரியார் பலத்த பிரச்சாரம் செய்தார்-மிகக்கேவலமான முறையிலே பேசினார்-நாம் பயந்துவிடவும் இல்லை-நமது கொள்கை பாதிக்கப்படவுமில்லை-நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிடவுமில்லை.  பார்ப்பனருக்குக் கடைசியில் ஊரூராகச் சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல.  

பிள்ளையாரை உடைக்கப்போவதில்லை என்று கூறினோம்-உடனே பெரியார் பார்! பார்! இவர்கள் சுயமரியாதையை விட்டுவிட்டார்கள்.  வைதீகர்கள் ஆகிவிட்டார்கள் என்று ஏசினார்.  நாம் அஞ்சிடவுமில்லை.  நமது வளர்ச்சி குன்றிடவுமில்லை.  சட்டசபைக்கு சென்றாலே காங்கிரசின் காலடியிலே வீழ்வார்கள் என்றார் பெரியார்.  நாம் அப்படி விழுந்துவிடவுமில்லை.  தூற்றி நம்மைத் தொலைத்துவிட்டிருக்க முடியுமானால்,  பெரியாரின் பிரச்சாரத்தின் காரணமாக, நாம் புதைக்கப்பட்ட இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும்.  தூற்றலுக்காக துளியும் அஞ்சவில்லை.  அஞ்சப்போவதுமில்லை.

..அறிஞர் அண்ணா..எண்ணித்துணிக கருமம்….விடுதலை வேட்கை..பக்கம் 54..55..திருச்சி கே.சௌந்தர்ராஜன்…வெளியீடு புரட்சிப் பாதை...1963 ஆம் ஆண்டு சூன் திங்கள், 8, 9, 10 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் தீர்மானமாக நிறைவேற்றப் பெற்றன. தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் அண்ணா பேசிய பேச்சின் ஒரு பகுதியே மேலே வருபவை.....(1963 பிரிவினை தடைச் சட்டம் அமலாகியபோது..அண்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன)

ஆண்டவனைக் கொண்டுவாருங்கள்!...வீழ்ந்து வணங்குவோம்!..அறிஞர் அண்ணா.

 



''மாதத்திற்கு ஒரு தடவை ''ஹரிஜன தினம்'' என்று கொண்டாடப்படுவதாகக் கூறப்பட்டது.  அந்த ஹரிஜன தினங்கள் சிலவற்றைக் கண்ணுறுகின்ற துர்பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  அரசாங்க அதிகாரிகள் தம்தம் பட்டியலை படிக்கவும், அதிகாரியிடம் சலுகை பெற வேண்டியவர்கள் தாமே புன்னகையை அடிக்கடி வருவித்துக்கொள்ளவும், பக்கத்திலே இருக்கும் ஒருவரிடம் 'இவர் யார்' என்று அதிகாரி கேட்க,  ''இவர் தான் இந்த வேலைக்குக் கான்டிராக்ட் எடுத்துக் கொள்ள விண்ணப்பம் போட்டவர்'' என்று கவனப்படுத்துவதும்  ஆக இந்த முறையில் தான் இந்த ஹரிஜன தினம் கொண்டாடப்படுகிறது.  இப்படிப்பட்ட தினங்கள் வாரத்திற்கொருமுறை  நடத்தினாலும் கூட நிச்சயமாக ஹரிஜனப் பிரச்சினை தீராது எனச் சொல்வேன்.

ஆகையால் கனம் அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு ஹரிஜன தினங்களை மிகவும் தீவிரமாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயிர் ஊட்டும் வகையில் உள்ளத்துக்கு உறுதியை வீரத்தை ஊட்டும் வகையில், மாபெரும் தினமாகக் கொண்டாடச் செய்தாலேயே பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிடும். 

ஹரிஜன தினத்தில் சேரியில் ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் அன்றைய தினம் பூராவும் 24-மணி நேரமும் ஒன்றாகக் கலந்து உறவாடத் தக்க வகையில், ஒரு பெரும் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட ஏதாவது வழிமுறைகளை வகுத்துத் தந்தால் அந்தச் சமுதாயத்தின் நிலைமையில் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய முடியும், அன்றைய தினம் ஆண்டவனை வேண்டுமானால் கொண்டுவாருங்கள்.  வீழ்ந்து வணங்குவோம்.  வணங்கச் சொல்வோம்.  நல்ல காரியத்திற்கு வணங்கினாலும் வணங்கலாம்.  அதைவிட்டு அந்த ஹரிஜன தினத்தில் அதிகாரிகள் பட்டியல் படிப்பதும்,  அவரோடு உள்ளவர்கள் புன்னகைப் பூப்பதுமாகச் சுவையற்ற தினமாக இருந்து வருவதை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ''

.. .....அறிஞர் அண்ணா…20.07.1957 -சனிக்கிழமை... சட்டமன்றத்தில் ஹரிஜன முன்னேற்றத்திற்கான மானிய கோரிக்கையைப் பற்றி எழுந்த விவாதத்தில் பேசியவைகளில் இருந்து ஒரு பகுதி…அண்ணாவின் சட்டசபை சொற்பொழிவுகள் தொகுதி-1 ..பாரதி பதிப்பகம்..பக்.72

நான் நாத்திகனா?...அறிஞர் அண்ணா.






நாத்திகத்தை புகுத்துவதாக, தமிழக சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டி பேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு (காங்கிரஸ்) அண்ணா கூறியதாவது;

அரசாங்க அலுவலகங்களில் கடவுள் படங்கள் மாற்றப்படுவது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர்,  நாங்கள் ஒரே நாத்திகக் கொள்கையை மக்கள் மீது திணிப்பது போல் பேசினார்.  அது மட்டுமல்ல இரணியனுக்கு ஏற்பட்ட கதிதான் எனக்கும் ஏற்படும் என்று ஒரு கதையைச் சொன்னார்.

இரணியன் பிரகலாதன் கதை அவருக்குத் தெரிந்து இருப்பது போலவே எனக்கும் தெரியும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உணர்ந்திருப்பார் என்று கருதுகிறேன்.  அந்தக் கதை தெரிந்து இருந்தும் அப்படி நான் செய்வேன் என்று எதிர்பார்க்கிறார் என்றால் அவரது நிலைக்காக மிகவும் பரிதாபப்படுகிறேன்.

ஆத்திகம் என்பது சில இடங்களில் சாமியின் படங்களை மாட்டி வைப்பதாலோ, மாற்றுவதாலோ ஏற்படுவதல்ல.  அது உள்ளத்திலேயே ஏற்படுகின்ற உணர்வு.  ஆகவே அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

இந்த அரசு ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் மனம் புண்படும்படியான எந்த ஒரு செயலையும் செய்ததில்லை என்பதை நினைவுப் படுத்துகிறேன்.  அது மட்டுமல்ல.  ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற பல்வேறு திருவிழாக்கள் மகாமகம் போன்ற பண்டிகைகளுக்கு - அரசாங்கம் உதவி புரிந்ததை இந்த நாடறியும்.  நல்லவர்கள் உணர்வார்கள்.  ஆகவே அரசாங்க அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டுவதால் இரணியன் போல் ஆகி விடுவேன்''  என்று கூறுவது என்பது எப்படியாவது இவன் அழிய மாட்டானா?  என்ற அவர்களது ஆசையைத்தான் காட்டுமே தவிர உண்மையில் எங்களை யாரும் தவறாகக் கருத மாட்டார்கள்!

…அறிஞர் அண்ணா..சட்டமன்றத்தில் அண்ணா…ந.முடிகோபதி..மணிவாசகர் பதிப்பகம்…பக்கம் 221-222

பண்பின் சிகரம் அண்ணா




முதலமைச்சராக இருந்த காலத்திலேயும்கூட ஆடம்பரமாக அவர் என்றைக்கும் இருந்ததில்லை.   எளிமைதான் அவருடைய மிகப்பெரிய வலிமையாக இருந்திருக்கிறது.  எதிரிகளிடத்தில் அவர் காட்டுகிற அன்புதான் அவர்களையும்கூட அவரை அண்ணா என்று அழைக்கவைத்திருக்கிறது.


அண்ணாவினுடைய கூர்மையான அறிவு, மக்களைக் கவர்கிற மிகச்சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், இவைகளைப் பற்றி யெல்லாம் இந்த நாடு அறியும்.  அவை எல்லாவற்றையும் தாண்டி மிகச்சிறந்த பண்பாளராக, மிக உயர்ந்த மனிதராக இந்த மண்ணிலே வாழ்ந்தவர்தான் நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள்.

அவருடைய பண்பாட்டுக்கு ஆயிரம் எடுத்துக்காட்டுக்களை எதிர்க்கட்சியினரே கூடச் சொல்வார்கள்.  சட்டமன்றத்தில், பொதுக் கூட்டத்தில், பொது நிகழ்வுகளில் எந்த இடத்திலேயும் அவர் பண்பாட்டினுடைய குன்றாய் விளங்கினார் என்பதை அவரோடு இருக்கிறவர்கள் அல்ல…. அவரை மறுக்கிறவர்கள்கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.  அவருடைய பண்பாடுகள் குறித்துப் பல செய்திகளைப் பலர் கூற நான் கேட்டிருக்கிறேன்.  அண்ணாவினுடைய ஆட்சிக் காலத்திலே அரசு அதிகாரியாக இருந்த சிலம்பொலி செல்லப்பனார், அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்.  எந்த அளவுக்கு அண்ணா அதிகாரிகளிடம் நாகரிகமாக, பண்பாக நடந்து கொள்வார் என்பதை அவர் அந்தக் கூட்டத்திலே விளக்கினார்.

அதிலே இரண்டு நிகழ்ச்சிகள் அப்படியே என் நெஞ்சத்திலே பதிந்துவிட்டன.  ஒருமுறை ஒரு பெரிய அதிகாரி அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கிறார்.  பேசிக்கொண்டிருந்து விட்டுச் சில கோப்புகளைப்பற்றி விவாதித்து விட்டு, அந்த அதிகாரி வெளியே போனபோது, ஏதோ ஒன்றை அவரிடத்திலே சொல்ல அண்ணா மறந்து விட்டார்.  பக்கத்திலே இருந்த சட்டமன்ற உறுப்பினரை அழைத்து அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அழைத்துக் கொண்டு வரும்படி அவசரமாகச் சொல்கிறார். அண்ணா அவசரமாகச் சொல்கிறாரே என்று நினைத்து, நாம் போய் அழைத்து வருவதற்குக்கூட நேரமாகலாம் என்று கருதியோ என்னவோ, அந்தச் சட்டமன்ற உறுப்பினர், அதிகாரி வெளியேறப் போகிற நேரத்தில் வேகமாகக் கை தட்டி "ஐயா இங்கே வாங்க, உங்களை முதலமைச்சர் கூப்பிடுகிறார்"... என்று சொல்கிறார்.  கைதட்டி அந்த அதிகாரியை அழைத்த உடன் அண்ணாவினுடைய முகம் அப்படியே சுருங்கிப் போய் விடுகிறது.  இதை அண்ணா அவர்கள் எதிர்பார்க்கவில்லை.  ஓடிப்போய் அழைத்து வருவார் என்றுதான் அண்ணா நினைத்தார்.  இப்படி அவர் கைதட்டிக் கூப்பிடுவார் என்று அவர் கருதவில்லை.

 


அந்த அதிகாரி திரும்ப வந்துவிட்டார்.  "அழைத்தீர்களா?"  என்றார் "இல்லை… இல்லை…  நான் இன்னொருவரை அழைக்கச் சொன்னேன், மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களை இல்லை நீங்கள் போகலாம்..." என்று அண்ணா சொல்லியிருக்கார்.  அந்த அதிகாரி போனதற்குப் பிறகு பக்கத்திலே இருந்த சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து  

"நான் கை தட்டினால் எனக்கு கை வலிக்கும் என்றா உங்களை அழைக்கச் சொன்னேன்.  அவர் எவ்வளவு பெரிய அதிகாரி…  இன்றைக்கு நாம் அமைச்சர்களாக இருக்கிறோம்…  இன்னும் 5 வருடத்துக்கு அதிகபட்சம் இருக்கலாம்.  மறுபடியும் வருவோம், வராமல்கூடப் போவோம்.  ஆனால் அவர் ஓய்வு பெறுகிறவரை அதிகாரி.  அது மட்டுமல்ல.  அவர் படித்தவர்… அறிவாளி.  நாட்டினுடைய நிர்வாகத்திலே ஒரு பொறுப்பிலே இருக்கிறவர்.  கைதட்டி அழைக்கலாமா?" என்று கடுமையாகக் கடிந்து கொண்டிருக்கிறார்.  "என்னால் போகமுடியவில்லை.  ஓடிப்போய் கூப்பிடுங்கள் என்று உங்கள் உதவியை கேட்டுத்தானே நான் சொன்னேன்.  ஓரு மூத்த அதிகாரியை இப்படிக் கைதட்டி அழைக்கலாமா? இன்றோடு இந்தப் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்"... என்று தன்னோடு இருக்கிற தன் கட்சிக்காரரை கடுமையாக அண்ணா கடிந்து கொண்டிருக்கிறார்.  அந்தக் காட்சியை பக்கத்திலேயே அதிகாரியாக இருந்த சிலம்பொலியார் பார்த்திருக்கிறார்.  இது ஒரு நிகழ்வு.





இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் அவர் குறிப்பிட்டார்.  பாவலர் முத்துச்சாமி அன்றைக்கு ஒரு அமைச்சராக இருக்கிறார்.  அந்தத் துறையிலே அவரோடு சேர்ந்து சிலம்பொலியாரும் முதலமைச்சரைப் பார்ப்பதற்காக அறைக்குப் போகிறார்.  கோப்புகளை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.  அரசு தொடர்பான… ஆட்சி தொடர்பான சில செய்திகளை முதலமைச்சரிடம் பேசவேண்டும்.  அப்படி உள்ளே போகிறபோது.  அண்ணாவுக்கு மிக நெருக்கமான ஒரு நண்பர் அண்ணாவினுடைய அறையிலே அமர்ந்திருக்கிறார்.  முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர் அவர், அவரை வெளியே செல்லுமாறு இவரகள் சொல்ல முடியாது.  ஆனால் அது முதலமைச்சரிடம் தனியாகப் பேச வேண்டிய செய்தி.  என்ன செய்யலாம் என்கிற ஒரு தயக்கத்தோடு அங்கே அந்த அமைச்சர் அமர்ந்திருக்கிறார்.  அருகிலே அதிகாரியாக ஐயா அமர்ந்திருக்கிறார்.  அண்ணா அந்த தயக்கத்தைக் குறிப்பின் மூலமாகவே புரிந்து கொள்கிறார்.

இவர்கள் தன்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்த நண்பரை அனுப்புவதற்காக மறைமுகமாக வெவ்வேறு செய்திகளையெல்லாம் சொல்கிறார்.  ஆனால் அவர் புரிந்து கொள்வதாக இல்லை.  சிலபேர் நேரடியாகச் சொன்னாலே தவிர புரிந்துகொள்ளமாட்டார்கள்.  எத்தனையோச் செய்திகளை மறைமுகமாகச் சொன்னதற்குப் பிறகும் நண்பர் அங்கேயே அமர்ந்திருக்கிறார்.  அண்ணாவுக்கு எழுந்து போங்கள் என்று சொல்வதற்கு மனமில்லை.  கடிந்து கொள்கிற பழக்கமில்லாதவர்.  தன்கூட இருக்கிற கட்சிக்காரர்களை, மிகவும் உரிமை எடுத்துக் கொள்கிறவர்களைத் தான் அவர் கடிந்து கொள்வார்.  இவர் என்னதான் நண்பரானுலும், வெளியே போங்கள் என்று சொன்னால் நாம் அரசு பொறுப்பிலே இல்லை அதனாலேதான் மதிக்கவில்லை என்று அவர் கருதிவிடுவாரோ என்கிற அச்சம்.  கடைசியில்  சுவையான ஒரு உத்தியை அண்ணா கையாளுகிறார்.  அந்த நண்பரைப் பார்த்து ..''பக்கத்தில் இருக்கிற நூலகத்திலே ஒரு புத்தகம் எனக்கு வேண்டும் அதை எடுத்துக் கொண்டு வருவீர்களா?'' என்று கேட்கிறார்.  ''சொல்லுங்கள் என்ன வேண்டுமோ நான் எடுத்து வருகிறேன் என்று சொல்கிறார்.''  ஒரு ஆசிரியரினுடைய பெயரையும், புத்தகத்தினுடைய பெயரையும் எழுதி ''எனக்கு உடனடியாக வேண்டும், எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை.  இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் வரவேண்டும்'' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.  அனுப்பிவைத்துவிட்டு , இவர்களிடம் ''சொல்லுங்கள் என்ன செய்தி? ''என்று கேட்கிறார்.  இவர்கள் சொல்லத் தொடங்குகிறார்கள்.  கொஞ்சம் வேகம் வேகமாகச் சொல்கிறார்கள்.  அண்ணா சொல்கிறார்.  ''...நீங்கள் மெதுவாகவே சொல்லலாம்.  அவர் இப்போதைக்கு திரும்ப வரமாட்டார்.  ஏனென்றால் நான் எழுதிக் கொடுத்திருக்கிற புத்தகம் அந்த நூலகத்திலே இல்லை என்பது எனக்குத் தெரியும்.  இல்லாத புத்தகத்தினுடைய பெயரைத்தான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.  எப்படியும் கொஞ்ச நேரம் ஆகும்.  பிறகு இல்லை என்றுதான் திரும்ப வருவார்.  அதற்குள்ளே நாம் பேசிவிடலாம்...'' என்று அண்ணா சொல்கிறார்.

யாருடைய மனமும் நோகாமல், அதே நேரத்தில் வந்திருக்கிற அமைச்சரின் குறிப்பையும் அறிந்து கொண்டு அண்ணா அணுகிய விதத்தைச் சிலம்பொலியார் அன்றைக்கு மேடையிலே சொல்கிற போது, எவ்வளவு பக்குவமான எவ்வளவு பண்பான மனிதராக அண்ணா இருந்திருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.

முதலமைச்சராக இருந்த காலத்திலேயும்கூட ஆடம்பரமாக அவர் என்றைக்கும் இருந்ததில்லை.  எளிமைதான் அவருடைய மிகப்பெரிய வலிமையாக இருந்திருக்கிறது.  எதிரிகளிடத்தில் அவர் காட்டுகிற அன்புதான், அவர்களையும்கூட அவரை அண்ணா என்று அழைக்க வைத்திருக்கிறது.  அத்தனை பேருக்கும் அண்ணாவாக, உடன் பிறந்த அண்ணாவாக, சின்னக் குழந்தையிலே இருந்து கட்சியிலே அவரைவிட மூத்தவர்களாக இருந்தவர்கள் வரைக்கும், அத்தனை பேருக்கும் அண்ணாவாக, உடன் பிறந்த அண்ணாவாக,  வழிகாட்டும் தலைவராக வாழ்ந்த அண்ணா அவர்கள் மிகக் குறுகிய காலம் தான் இந்த நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தார்.  ஆனால் பல நல்ல செய்திகளை பெரிய தொடக்கங்களை அவர் ஆட்சியிலே தொடக்கி வைத்தார்.  மிகக் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், தாய்க்குப் பெயரிட்ட மகன் அவர்தான்.  இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று அவர்தான் பெயர் சூட்டினார்.  சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்கிற ஒரு புரட்சிகரமான சட்டம் அவருடைய காலத்திலேதான் நிறைவேறிற்று.

பண்பின் சிகரம் அண்ணா.
செயலின் வடிவம் அண்ணா.


...பேராசிரியர் சுப.வீரபாண்டியன். ஒன்றே சொல் நன்றே சொல்.. கலைஞர் தொலைக்காட்சி..தொகுப்பில் இருந்து.

ராமர் தடவிய அணில் குஞ்சும் மதக்கலவரமும்...சுப.வீ (கலைஞர் சிறுகதை)







  • ''''ங்கேயும் எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான ஒரு சூழல் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.''''


    • தம் என்பது அவரவருடைய ''வாழ்க்கை நெறி'' அல்லது ''வாழ்க்கை முறையாக'' இருக்கிற வரையில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை. 


    • அவரவர் நெறியில் அவரவர் வாழ இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் எல்லோருக்கும் ''உரிமை'' இருக்கிறது.


    • ஆனால், எப்போது மதநெறி எப்போது மதவெறியாக மாறுகிறதோ, அந்த நாடு கலவரத்துக்கு உள்ளாகி விடுகிறது. பொதுவாகவே நாம் கணக்கெடுத்துப் பார்த்தால், இரண்டு நாடுகளுக்கு நடந்த போரில் இறந்துப்போன மனிதர்களைக் காட்டிலும், இரண்டு மதங்களுக்கு இடையே நடந்த போராட்டங்களிலும், கலவரங்களிலும் இறந்துபோன மனிதர்களின் எண்ணிக்கை தான் கூடுதலாக இருக்கிறது.

    அதுவும்1992 ஆவது ஆண்டு பாபர் மசூதிஇடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியா முழுவதும் இதுபோன்ற கலவரங்கள் அங்கேங்கே நடந்துகொண்டிருக்கின்றன. ஒருபக்கம் கலவரம் என்றால் இன்னொரு பக்கம் மதநல்லிணக்கம் குறித்த கலை இலக்கியங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன அப்படிப்பட்டஒரு சிறுகதை, மதம் என்பது அவரவர்வாழ்க்கை நெறியாக இருக்கட்டும், ஏன்மோதிக் கொள்கிறீர்கள் என்கிற உணர்வை ஊட்டுகிற சிறுகதையாக உள்ளது.  அணில்குஞ்சுஎன்பது  அக்கதையின் பெயர்.  மிகஅருமையான கதை அது. எழுதப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  இப்போதும்அந்தக்கதை பொறுத்தமாக இருக்கிறது.

    பாரூக் என்று ஒரு இளைஞன், 10 வயதுஇருக்கும்.  பள்ளிக் கூடத்தை விட்டு வெளியிலே வருகிறபோது, முதலில் ஒரு கூட்டத்திலே பேசுகின்ற ஒரு செய்தி அவன் காதிலே விழுகின்றது.  கொஞ்சதூரம் நடந்து வந்தால், இன்னொருகூட்டத்தில் பேசப்படுகின்ற செய்திகளும் அவன் காதிலே விழுகின்றன.  முதல்கூட்டத்திலே, பாபர் மசூதியைஇடித்தது சரிதான் என்று பேசப்படுகிறதுஇன்னொரு கூட்டத்தில்பாபர் மசூதியை இடித்ததினாலேதான் நாட்டிலே இத்தனை கலவரங்களும் என்றுசொல்லப்படுகிறது. இரண்டையும் கேட்டுக் கொண்டு பாரூக் வருகிறபோது, மரத்தில் இருந்து தொப்பென்று ஒரு அணில் குஞ்சுகீழே விழுகிறது.  அப்போதுதான் பிறந்திருக்கிற, அழகான வேகமாக ஒடமுடியாத ஒரு அணில் குஞ்சு.  அதைப் பார்த்தபோது, அந்த பாரூக் என்கிற சிறுவனுக்கு அந்த அணில்குஞ்சின்மீது ஒரு ஆர்வம் ஏற்படுகிறது.  அதைப் பிடித்து தனதுகைகளிலே வைத்துக் கொள்கிறான்.  அழகாக இருக்கிறது.  அதுசின்ன அணில் குஞ்சு என்பதினாலே அதனுடைய கீழ்ப்பகுதி சிவந்திருக்கிறது.  அதுஅதற்கு மேலும் அழகூட்டுகிறது.  அதன் மேலே இருக்கிறமூன்று கோடுகளையும் அவனும் ஒருமுறை தடவிக் கொடுத்து, அந்த அணில் குஞ்சைத் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டு வருகிறான்.

    அவனுடையஅம்மா கேட்கிறாள், என்னடா இந்தஅணில் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறாயே என்று.  அம்மா மரத்திலிருந்துதொப்பென்று விழுந்தது,  அழகா இருக்கும்மா அதனால தூக்கிட்டு வந்தேன்என்று சொல்கிறான். அப்போது கறிக்கடை வைத்திருக்கிற அவனுடைய வாப்பாவீட்டுக்குள்ளே வருகிறார்.  அவரும் அந்த அணில்குஞ்சைப் பற்றிக் கேட்கிறார்.  முதலில் அவரும் அழகாய்இருக்கிறது வைத்துக் கொள் என்று தான் சொல்கிறார்.  ஆனால் பாரூக் சொன்னசிலவார்த்தைகள் அவருக்கு கோபமூட்டுகின்றன.  பாரூக் சொல்கிறான் அப்பாஇந்த அணில் குஞ்சுக்கு மேலே மூன்று கோடுகள் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா?  இது ராமனுக்கு பாலம் கட்ட இந்த அணில் குஞ்சு உதவியபோது அவர் தடவிக் கொடுத்ததினாலேவந்துச்சாம்எங்க பள்ளிக் கூடத்திலே டீச்சர் சொன்னாங்க என்று  சொன்னவுடனேயே வாப்பாவுக்கு கோபம் வருகிறது.  ஏன்டாராமன் வைத்திருந்த குஞ்செல்லாம் இங்கே ஏன் கொண்டுவருகிறாய்கொண்டுபோய்முதலில் வெளியே விடு என்கிறார்.


    • அணில்குஞ்சு அழகாக இருக்கிறதுஅதை நீ வைத்துக் கொள்என்று சொன்ன அதே மனிதர்தான், மதத்தோடுதொடர்பு படுத்தப்பட்ட உடனேயே கோபப்பட்டு, அப்படி ராமர் தடவிக் கொடுத்த அணில் என்று டீச்சர் வகுப்பிலே சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்றால், அதையெல்லாம்நம் வீட்டிலே வைத்துக் கொள்ளக் கூடாது, அதை முதலிலே கொண்டு வெளியே விடு என்கிறார்.  அந்தப் பையனுக்கு மனம்வரவில்லை


    • அழகாக இருக்கிற இந்த அணிலுக்குள் எப்படி? ''மதம்'' வந்து சேர்ந்தது என்றுஅந்தச் சிறுவனுக்குப் புரியவில்லை

         ஆனாலும், வாப்பாவோடு அதை எல்லாம் கேட்டு வாதாடமுடியாது.  இல்லையப்பாநான் வைத்துக்கொள்கிறேன் என்று கெஞ்சிப்பார்க்கிறான்.  அவர் விடுவதாக இல்லை.  அம்மாஇடையிலே புகுந்து, இரண்டுபேருக்கும் இடையில் ஒரு சமாதானம் செய்கிறாள்.  சரி, நீங்கள் சொன்னதற்கு அப்புறம் அவன் வைத்துக்கொள்ளமாட்டான்., கொண்டு போய் விட்டுவிடுவான். என்று அவள் சமாதானம்செய்கிறாள்.  அந்தச் சமாதானத்தை இரண்டு பேருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.

         காற்றுப்போவதற்கு வசதியான ஒரு கூண்டுக்குள்ளே இரவு முழுக்க வைத்து,அதற்குத் தேவையான தீனிகளையும் கொடுத்து, அந்த அணிலின் அழகை ரசித்து ரசித்து அந்தப்பையன் பாரூக் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  மறுநாள் காலையில் பொழுதுவிடிகிறபோது சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்.  அப்பாவுக்கு இனிமேலும்வைத்துக் கொண்டிருந்தால் கோபம் வந்துவிடும் என்று அணில் குஞ்சை எடுத்துக் கொண்டு, எடுத்த அந்த மரத்துக்கு அருகிலேயே கொண்டு போய்விட்டு விடலாம் என்று நினைத்து அங்கே போகிறான்.

         போகிறபோது, அந்த ஊரைச் சேர்ந்த ஆராவமுத ஐயங்கார் எதிரிலே வருகிறார்.  என்னடா அம்பி கையிலேஅணில் குஞ்செல்லாம் வைச்சிண்டிருக்கிறே என்று கேட்கிறார்.  இந்தப் பையன் நடந்ததைச்சொல்கிறான்.  இங்கிருந்து நேற்று எடுத்துக் கொண்டு போனேன்.  இது ராமர் தடவிக் கொடுத்தஅணில் என்பதினால வாப்பாவுக்கு கோபம் வந்துவிட்டதுதிரும்பவும் கொண்டுபோய்விட்டுவிடச் சொன்னார், அதற்காகவருகிறேன் என்கிறான்.

          அப்போது ஆராவமுத ஐயங்கார் கேட்கிறார் ''எங்களுடைய ராமர்வைத்திருந்த குஞ்செல்லாம் நீங்கள் ஏன் கொண்டுபோய் வைத்திருக்கிறேள்''.  உங்கள்வீட்டிலெல்லாம் வைத்திருக்க கூடாது இங்கே கொண்டு விட்டு விடுவது தான் சரி,'' என்கிறார்.

    • யாருமேஅதை ஒரு அணிலாக…. ஒரு உயிராகப்பார்க்காமல் ''மதத்தோடு'' இணைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.

         அந்தநேரத்தில் பாரூக்கினுடைய அப்பா அந்த இடத்துக்கு வருகிறார்.  பையனிடம் என்னபேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அவரைப் பார்த்து இவர் கேட்கிறார்.  அவர்நடந்ததை சொன்னபோது வாப்பாவுக்கு மறுபடியும் கோபம் வருகிறது. ராமருக்குஉதவி செய்த அந்த அணில் குஞ்சை நம் வீட்டுக்கு ஏன் கொண்டு வருகிறாய் என்று கேட்டஅதே அப்பா தான், இப்போது ஆராவமுதஐயங்கார் கேட்ட உடனே, ஏன் நாங்கஅணில் குஞ்சை வைத்துக் கொள்ளக் கூடாதுஅது உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அணில் எல்லோருக்கும்தான் சொந்தம்இதிலே நீங்கள் எப்படிச் சொந்தம் கொண்டாடுவது, உங்கள் மதத்துக்கும் அணிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்வாய்வாதம் வலுக்கிறது.

          சின்னப்பையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  கொஞ்ச நேரத்திலே இந்தப்பக்கத்திலே இருந்து இரண்டு பேர் வருகிறார்கள், அந்தப் பக்கத்திலே இருந்து ஒருவர் வருகிறார்.  கொஞ்சம் கொஞ்சமாக விவாதம்சூடேறுகிறது.  அணில் குஞ்சை ஒரு இஸ்லாமியர் தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? என்கிற ஒரு தேவையற்ற விவாதம், அந்த இடத்திலே ஒரு சண்டையாக மாறுகிறது.   பலரும் கூடுகிறார்கள்.  இந்தநேரத்தில் பாரூக்கின் அம்மாவும் அங்கே வந்து சேருகிறாள்.   அவள் சொல்கிறாள், போகிற போக்கைப் பார்த்தால், இந்த அணில் குஞ்சினால் பத்துக் கொலை விழும் போலஇருக்கிறது, வேண்டாம் பாரூக் விட்டுவிடு என்கிறாள்.  அதை விடுவதற்குத்தானே வந்தேன் அம்மா, அதற்குள் இவ்வளவு பெரிய சண்டை வந்துவிட்டதே என்கிறான்.

    அமைதியாக…அன்பாக இருந்தவர்களிடத்திலே மதம் இப்படிகலவரத்தை தூண்டி விடுகிறது என்று இந்தக் கதை மிக அழகாகச் சொல்கிறது.  அதற்குப்பிறகும் அதை வைத்துக்கொண்டிருக்க மனமில்லாமல் அந்தப் பையன் அணில்குஞ்சை கீழேவிட்டு விடுகிறான். அப்போது மரத்திலிருந்து ஒரு பருந்து ஒடி வந்து அந்தஅணில் குஞ்சைக் கவ்விக் கொண்டு போய்விடுகிறது.

      இந்த ஊரில் மதக்கலவரம்வந்துவிடாமல் இருக்க வேண்டுமென்று அந்த அணில்குஞ்சு தன்னைத் தியாகம் செய்துகொண்டுவிட்டது என்று அந்தக் கதை முடிகிறது.




    • எங்கேயும்எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான சூழல் இந்த நாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற ஒரு அருமையான சிறுகதையாகஇந்தக் கதை இருக்கிறது.

    இந்தக்கதையை எழுதிய எழுத்தாளர் யார் என்று சொல்ல நான் மறந்துவிட்டேன்அத்தனைபேரும் அறிந்த எழுத்தாளர் தான் அவர்.

    நம்முடைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிற கதைதான் இந்த "அணில்குஞ்சு" என்கிற சிறுகதை.

    .…பேரா.சுப.வீ...ஒன்றே சொல் நன்றே சொல்..கலைஞர்தொலைக்காட்சி…தொகுதி 3 பக்..99-103

    திராவிட இயக்க நூற்றாண்டு-27.02.2012


    Monday 4 March, 2013

    பெரியாரின் அன்பர் மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளார்

     இனப்பற்றாளர் இறைத்தொண்டர் - பெரியாரின் அன்பர் மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளார்




    மிழகத்தைப் பொருத்தவரை நாத்திகம் என்பது கீழ்ச்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது.'' என்ற புதிய சித்தாந்தத்தைச் சொன்ன புரட்சித் துறவிதான் திருவண்ணாமலை ஆதீன கர்த்தர் குன்றக்குடி மகாசன்னிதானம் புகழுடம்பு எய்திவிட்ட மகாசன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார்.

    தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ரெங்கநாதன் தருமபுரம் ஆதீனம் கட்டளைத் தம்பிரானாகத் தொடங்கிச் சமயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பின்னர்க் குன்றக்குடி சன்னிதானமாய்ப் பரிணாமம் பெற்றவர்.

    சன்னிதானத்தின் கல்வி என்பது சமய நூல்கள் அதிலும் அதிகமாய்ச் சைவ நூல்கள்- அது குறித்த ஆய்வு- பதவுரை பொழிப்புரை- என்பதோடு முடித்துவிடுவதுதான் வழக்கம்.

    குன்றக்குடி அடிகளின் கல்வியும் பணியும் அதற்கு முன்னும் பின்னும் இருந்த ஆதீனங்களின் எல்லை தாண்டியது விரிவானது, விசாலமானது, ஆழமானது. துணிச்சல் மிக்கது அதனால் கடும் கண்டனத்துக்கு ஆளானது.  அரசின் குற்றவியல் சட்டப்படி தண்டமே விதிக்கப்பட்டது.


    தமிழ்நாட்டின் சமய நிறுவனங்கள் என்பவை 

    சைவம் - வைணவம் - அதில் வடகலை - தென் கலை இன்னும் பல்வேறு நம்பிக்கையுடன் மடங்கள், நிறுவனங்கள் எனப் பல இருந்தன, இருக்கின்றன.

    அவை கடந்த நூற்றாண்டில் இந்து சமய ஆட்சித்துறை என்ற அரசின் கட்டுப்பாட்டிற்குள் வேறு பல நல்ல நோக்கங்களுக்காகக் கொண்டுவரப் பட்டன.   காலப் போக்கில் ''கறையான் புற்றெடுக்கக் கருநாகம் புகுந்த கதையாகிவிட்டது.''  கடந்த 1947 க்குப் பின்னர் மெல்ல மலைப் பாம்பு இரையை வளைப்பது போல் காஞ்சி சங்கரமடம் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைத்து இந்து சமய நிறுவனங்களையும் தன் குடைக்கீழ் இந்து மதம் என்ற பெயரால் கொண்டுவரத் தொடங்கியது.  அந்தக் கைங்கர்யம் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனவுடன் பரிபூரணத்துவம் பெற்றுவிட்டது.  இந்து மதம் என்றால் காஞ்சி சங்கரமடம், அதன் தலைமை, சங்கராச்சாரியார்களே.  இந்து மதத்தின் போப்பாண்டவர்கள் சங்கரர்களே என்ற நிலைப்பாட்டை எவ்வளவு வலிமையானதாக்க முடியுமோ அவ்வளவு வலிமையாக்கினார்கள்.

    இந்தியத் தலைமை அமைச்சர் முதல் மாநில முதல்வர்கள்- நடுவணரசு அமைச்சர்கள்- பெரிய பெரிய அரசு அதிகாரிகள்- கவர்னர்கள் யாவரும் தமிழ்நாட்டிற்கு வந்தால் காந்தி நினைவிடத்திற்குப் போகிறார்களோ இல்லையோ காஞ்சி மடத்திற்குச் செல்வதும் - முக்கால் நிர்வாணமாய்ச் சங்கர மடத்தலைவரிடம் போய்க் கைகட்டி நிற்பதும்- முக்காலே மூணுவீசம் நிர்வாணமாய் நின்று சங்கராச்சாரி ஆசீர்வாதம் செய்வதும் - அரசாங்க விழாக்களில் தேசிய கீதம் பாடுவது போல் தவிர்க்க இயலாத நிகழ்ச்சி நிரல் ஆகிப்போனது.

    இந்த நிறுவனம் அந்த 1950 களிலேயே பல்வேறு சட்ட - சம்பிரதாய விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தது என்பது சுவையான செய்தி.

    மேற்சொன்ன இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் தான் குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் குன்றக்குடி மடத்தலைவராகிறார்.  இயல்பாகவே நல்ல பேச்சாற்றலும்-செழுமையான சொல்வளமும் - மிக்க குன்றக்குடி அடிகளாருடைய சொற்பொழிவுகள் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தனபெருங்கூட்டத்தை ஈர்த்தன.

    ஆன்மீகம் - ஆத்திகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் போல் பேணப்பட்ட உருவாக்கப்பட்ட தத்துவம் என்பதை அடிகளார் சொன்னதைக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியிருக்கிறோம்ஆனால், இதை அடிகளாரே உணர்ந்து கொள்ள அவருக்கே கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டதுதான் கொடுமை.





    கௌதம புத்தனுக்கு ஞானம் போதி மரத்தடியில் பிறந்தது போல் அடிகளாருக்கு இது புரிந்தது திருச்சி பொன்மலையில்.  புத்தனுக்குப் பகுத்தறிவில்லாத மரத்தினடிஅடிகளாருக்குப் பகுத்தறிவு இயக்கத் தலைவர் தந்தைபெரியாரின் அண்மை!

    ஆன்மீகம் உண்மையென்றால் ஆன்மிக நூல்களுக்கு விளக்கவுரை சொல்வது தானே!      

    அதற்குமேல் இறைவனுக்கு ஏற்பட்ட வேலையே எதிரிகளை அழிப்பதும் வேண்டியவர்களை வாழவைப்பதும் தானே.  இன்றைய வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டியே இறைவன்தான் போலிருக்கிறது.  ஆன்மிகமும் - ஆன்மிக உரைகளும் நல்லவர்களை வாழ்த்தியதோ இல்லையோ எதிரிகளை தாக்கியதுஅழித்ததுசிலரை அழிக்க முயன்று தோற்றது.

    அடிகளாரும் இந்த வழக்கமான ஆன்மிக மேடை உரைகளிலிருந்து தொடக்கத்தில் விலகி விடவில்லைபெரியாரும் - பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும் அடிகளாரின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாயின.  ஓரிரு இடங்களில் பெரியாரின் திராவிடர் கழகத்தினரும் இதற்குப் பதிலடி கொடுத்தனர்.

    அந்த நேரத்தில்தான் பெரியாரும் மகா சன்னிதானமும் கலந்து கொள்ளும் பொன்மலை நிகழ்ச்சி அமைந்ததுஅதுதான் சன்னிதானத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாயும், சமய உலகிற்கு ஒரு ஆச்சரியமாகவும் சனாதன (பார்ப்பனர்) உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியாகவும் அமைந்ததுபொன்மலை நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்தடுத்துப் பெரியாரும் - அடிகளாரும் கலந்து கொண்ட பலநிகழ்ச்சிகள் தொடர ஆரம்பித்தனதமிழர்கள் இடையில் இது மாபெரும் வரவேற்பைப் பெற்றதுஅதே சமயம் அடிகளார் உருவாக்கிய அருள் நெறித்திருக்கூட்டம் தெய்விகப் பேரவை போன்ற அமைப்புகளுக்கு அடிகளார் பேரில் கடும் கோபம் ஏற்பட்டு, சிலர் கண்டனமும் செய்யத் தொடங்கினர்.

    ஏற்கனவே இது போன்ற மக்கள் அமைப்புகளைச் சமய மடத்தின் சுவர்களைத் தாண்டி எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் அடிகளார் பெற்று வந்த புகழையும்- செல்வாக்கையும் காஞ்சி மடமும் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்த பார்ப்பனர்களும் அவர்களுடைய அமைப்புகளும் அவர்களின் பத்திரிகைகளும் மேலும் ஊதிவிட்டு அடிகளாரையும் - அவருடைய அமைப்புகளையும் ஒரே கல்லில் அடித்துப் பல காய்களை வீழ்த்தும் உத்தியைக் கையாண்டனர்.

    இதில் மறைமுகமாகச் சைவை சமய அமைப்பினரும் கலந்து கொண்டு ஒத்து ஊதினார்கள்அடிகளார் அடங்கிவிடுவார் என்று கற்பனை செய்தார்கள்விளைவு வேறுவிதமாக மாறிவிட்டது.

    ன்னைவிட பாதி வயதே உடையவரும் - மாற்றுக் கருத்துக் கொண்டவருமான குன்றக்குடி அடிகளாரிடம் பெரியார் காட்டிய பண்பாடும் - அடிகளார் கலந்து கொள்ளும் மேடைகளில் பெரியார் தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கைகளைச் சொல்வதில் காட்டிய அணுகுமுறையும்பெரியாரின் திராவிடர் கழகத்து மாவட்ட அளவிலான தோழர்களின் பணிவும் அடிகளாரை நெகிழச் செய்துவிட்டன.  அடிகளாரின் அன்பர்களும் அந்தந்த ஊர்களில் இதே விதமாகப் பெரியார் தொண்டர்களால் நடத்தப் பட்டார்கள்அடிகளார்- பெரியாருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று முன்னிலும் அதிக உறுதி காட்டினார்கள்.

    பெரியாரின் வழியில் பிரச்சினைகளை அணுகும் முறை அரசியலிலும் அடிகளாரிடமும் எதிரொலித்ததுகாமராசரின் இலவசக் கல்வித் திட்டத்தையும் பெரியாரின் வழியில் அடிகளார் ஆதரித்தார் இது அன்றைய தமிழகக் காவல் துறை அமைச்சராய் இருந்து பின்னர் முதலமைச்சராகவும் ஆகிவிட்ட பக்தவச்சலத்துக்கு மிகுந்த எரிச்சலூட்டியது.  காங்கிரசார் என்ற வேடத்திலிருந்து காமராசர் எதிர்ப்பாளர்கள் வேறு சிலருக்கும் இது பிடிக்கவில்லை.

    இயல்பாகவே மொழிப்பற்றும் - இனப்பற்றும் மிக்க அடிகளாரை 1965 நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டமும் அதனை ஒட்டித் தமிழகத்தில் நடைபெற்ற காவல் துறை அடக்குமுறைகளும் உலுக்கியதில் வியப்பில்லைபெரிய கல்லூரிப் பட்டமோ, மொழிப்புலமையோ இல்லாத தி.மு.கழகத்தின் எளிய தொண்டர்கள் மொழிப்போரில் தங்களை மாய்த்துக் கொண்டது தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உலுக்கியது.  போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களைப் பக்தவச்சலம் அரசினர் வரைமுறையின்றித் தாக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்ஆன்றைய ஆளும் கட்சியினரும் நடைமுறைகளால் இன்று போலவே உள்ளூர்க்காரர்களை எரிச்சலூட்டினர்குன்றக்குடியில் நடைபெற்ற மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் உணர்வு மேலிடக் குன்றக்குடி ஆதீனம் காவி உடையுடனே வந்து கலந்து கொண்டது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுகாவல் துறையினர் அடிகளாரைத் தனிமைப்படுத்தினார்கள்நீதிமன்றத்தில் அடிகளாருக்குப் பல நூறு ரூபாய்கள் தண்டம் விதிக்கப்பட்டது.

    பெரியார் 1938-39 போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்ஆனால் 1965 இல் நடைபெற்ற அந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் அதில் முக்கிய பங்கு கொண்ட அனைவரையும் கடுமையாகச் சாடி வந்த நேரமிதுகாரணம் 1938-39 இல் கட்டாய இந்தியைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்த ராசகோபாலச்சாரி (ராஜாஜி) 1965 இந்தி எதிர்ப்புப் போரில் முக்கிய நாயகராய் நின்றதைப் பெரியார் அய்யத்தோடு பார்த்தார்இது தமிழகத்தில் காமராசரின் அரசை வீழ்த்த இராசகோபாலர் கையாளும் அரசியல் சூழ்ச்சி என்றார்.







    ஆனாலும், அதே பெரியார் - அதே இந்தி எதிர்ப்புப் போரில் குன்றக்குடி சன்னிதானத்தைக் கைது செய்ததற்காகவும் இவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததற்காகவும் மிகக் கடுமையாய் பக்தவச்சலம் அரசைக் கண்டித்தார்.  பெரியாரின் இந்த இரட்டை நிலை பலருக்குப் பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுகுன்றக்குடி ஆதீனகர்த்தர் பேரில் அய்யாவுக்கு இருந்த பேரன்பைப் பலரும் மேலும் போற்றினார்கள்.

    பின்னர் 1967 இல் ஆட்சியமைத்த பேரரிஞர் அண்ணா அடிகளாருக்கு தமிழக அரசு தண்டல் செய்த தொகையை மீண்டும் அவரிடமே திருப்பித் தரச் செய்தார்.  குன்றக்குடி அடிகளார் பேரவையில் உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்இந்தியாவிலேயே சட்டப்படியான ஒரு ஆதீனகர்த்தர் முதன் முறையாக மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டது நாத்திகர்கள் அரசு எனச் சைவ சமய அறிஞரான கிருபானந்தவாரி சுவாமிகளாலேயே வர்ணிக்கப்பட்ட தி.மு.க அரசால் தான்.  இது வருங்காலச் சமய உலகின் வரலாற்று ரீதியான ஆய்விற்குரிய ஒன்றாகும்.

    தி.மு.க அரசு அமைந்த பின்னர்த் திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் கல்வி நிறுவனங்களில் பெரியாரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது தந்தை பெரியார் அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார் நான் (செல்வேந்திரன்) யாவரும் கலந்து கொண்டோம்.

    அந்த ஆண்டு பெரியார் தமது பிறந்த நாள் செய்தியாக- அவருக்கு அவருடைய மனைவியுடன் குடும்ப அளவில் இருந்த மனச்சங்கடங்களை மறைமுகமாகச் சொல்லி ''நான் துறவியாகிவடலாமா என்று பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்இது பல்வேறு முனைகளில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது அப்போது பேரறிஞர் அண்ணா அமெரிக்காவில் இருந்தார்அறுவை சிகிச்சைத் துன்பத்திற்கு இடையிலேயும் தன் ஆசான் பெரியாருக்கு ஒரு ஆறுதல் கடிதம் எழுதியிருந்தார்.






    மகா சன்னிதானம் குன்றக்குடி அடிகளார்தாம் அன்றைய விழாத் தலைவர்பெரியாரின் மேற்கண்ட துறவு பூணுதல் செய்தியைக் குறிப்பிட்டு ''அப்படித் துறவு மேற்கொள்வதானால் குன்றக்குடி மடத்துக்கு வாருங்கள்''  என்று அன்பழைப்பு விடுத்துப் பேசிப் பார்வையாளர்களின் இடையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    பின்னர்ப்பேசிய நான் (செல்வேந்திரன்) ''பெரியார் குன்றக்குடி மடத்திற்குப் போய்விட்டால் திராவிடர் கழகத் தலைமையை யார் மேற்கொண்டு இந்தப் பணியைச் செய்வதுஓர் இடமாற்றம் செய்து கொள்வோம்மகா சன்னிதானம் திராவிடர் கழகத் தலைமையை ஏற்கட்டும்பெரியார் குன்றக்குடி மடத்தலைவராகட்டும்மகா சன்னிதானம் அதற்காகச் செய்யும் அறிவிப்புப் பெரியாருக்கு மிகச் சிறப்பான பிறந்த நாள் பரிசாக அமையும்'' என்று பேச பார்வையாளர் இடையில் மிக உற்சாகமான கரவொலி, வரவேற்புஅரங்கம் மேலும் பரபரப்பானதுநாவலர் நெடுஞ்செழியன் என்னைப் பார்த்துக் கிண்டலாக ''என்ன அடிகளாருடனேயே பட்டிமன்றமா'' என்றார்ஏனென்றால் பட்டிமன்றம் என்றதொரு அமைப்பை- சிறப்பாயும் - ஆக்க பூர்வமாயும் எளிய மக்களும் உணரும் வண்ணம் எடுத்துச் சென்ற முன்னோடி அடிகளார்தாம்.

    தந்தை பெரியார் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர பதிலொன்றும் சொல்லவில்லை.  அடிகளாரின் முடிவுரையை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களிடம் அடிகளார் ''பெரியாரே இது பற்றி ஏதும் சொல்லாததால் நான் செல்வேந்திரன் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்'' என்று பட்டிமன்ற பாணியில் பதில் சொல்லி அரங்கிற்கு கலகலப்பு ஊட்டினார்.

    பெரியார் அன்று உரையைத் தொடங்குமுன்புதான் என் நெஞ்சில் ஓடி, ஊனில் ஓடி, உயிரில் கலந்த அந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றதுஅடிகளார் பெரியாருக்கு ஒரு பொன்னாடையை அணிவிக்கத் தன் இருக்கையிலிருந்து எழுந்து போய் அணிவிக்க முயன்றார்சாதரணமாய்ப் பெரியாரால் பிறர் துணையின்றி எழ முடியாதுஇருந்தாலும் பெரியார் அன்று தானே முயன்று எழுந்து கால்கள் நடுங்க நின்றார்அடிகளார் பெரியாருக்குப் பொன்னாடையை அணிவித்து வணக்கம் தெரிவிக்க பெரியார் கால்கள் நடுங்க - நடுங்கக் குனிந்து மகா சன்னிதானத்தின் கால்களைத் தொட்டு வணங்கினார்இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.  வந்திருந்தோரில் பெரும்பகுதி திராவிடர் கழகத்தினார்மற்றவர்கள் பெரியார் பற்றாளர்களான அரசு அலுவலர்கள் - வணிகர்கள் - தொழில் அதிபர்கள்இதைப் பார்த்தவுடன் நிலவிய மயான அமைதி யாருமே இதனை ஏற்கவில்லை என்பதைக் காட்டிவிட்டதுமுதலில் இதனை எதிர்பாராத அடிகளார் அடுத்த விநாடியே சமாளித்துத் தடுக்க முயன்றார்ஆனால் அதற்குள் யாவும் முடிந்துவிட்டன.

    மறுநாள் காலை திருச்சி பெரியார் மாளிகையில் கழக முன்னணியினர் யாவரும் கூடி நின்றனர் பெரியாரைச் சுற்றியாருமே முதல் நாள் நிகழ்ச்சியை விரும்பவில்லை என்றாலும் பெரியாரிடம் அதைச் சொல்லும் துணிவு யாருக்கும் இல்லை.

    பெரியாரே பேச்சைத் தொடங்கினார்''என்னநேத்து எல்லோரும் விழாவுக்கு வந்தீங்களாகடைசிவரை இருந்தீங்களாபேச்செல்லாம் எப்படி?''  என்றார்.

    ஒரே ஒரு விநாடி அமைதிஇருந்தவர்களில் நான்தான் வயதில் மிகச்சிறியவன்ஆனால் அய்யாவின் செல்லப்பிள்ளை''அய்யா…  எல்லாம் நல்லா போய்க்கிட்டு தான் இருந்திச்சு…  கடைசிலே அய்யா செஞ்ச அந்தக் காரியம் தான் யாருக்குமே பிடிக்கலை…  எனக்கெல்லாம் இராத்திரி தூக்கமே இல்லை…''  என்றேன்.

    அய்யா நிமிர்ந்து பார்த்தார்எதைக் குறிப்பிடுகிறேன் என்று புரிந்துகொண்டார்''எல்லோருமா…?''  என்றார்சுற்றி இருந்தவர்கள் மவுனத்தின் மூலமே ஆமோதித்தார்கள்.

    பெரியாரே தொடங்கினார், ''என்னங்க செல்வேந்திரன் உங்களை நான் ரொம்ப புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேனே…''  என்றார் கேலியாக.

    சர்.சி.பி.இராமசாமி அய்யரைத் தெரியுமா உங்களுக்குஎருமை நாக்கை விரும்பிச் சாப்பிடுகிற பார்ப்பனத் தலைவர்  உலகமெல்லாம் சுத்தி வந்து பெரியப் பதவியிலெல்லாம் இருந்தவர்அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி கால்லே உழுவுறாரு…  ஏன்…  தான் மரியாதை பண்ணினாத்தான் தன்னோட சாதி நிறுவனம் பெருமைப்படுனுமின்னுஅதைத்தான் நானும் செஞ்சேன்.  சூத்திரசாதி மடத்தை நானும் பெருமைப்படுத்தோணுமின்னு செஞ்சேன்  எனக்கு என் மரியாதை முக்கியமல்ல…  என் இனத்தோட மரியாதைதான் முக்கியம்  பகுத்தறிவு எல்லா எழவையும் அப்புறம் பாத்துக்கலாம்''  என்றார்.

    எங்களுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லைபெரியார் எவ்வளவு பெரிய தொலைநோக்காளர்இதை மற்றவர்கள் எவ்வளவு உணர்ந்தார்களோ இல்லையோ…  மகா சன்னிதானம் புரிந்திருந்தார்…  உணர்ந்திருந்தார்.

    பெரியாரின் மறைவிற்குப் பின் பெரியாரின் நிறுவனத்துடன் அடிகளாரின் உறவு முன்போல் இல்லைபுதிய தலைமை தன்னையும் பெரியாராகவே எல்லோரும் ஏற்க வேண்டுமென விரும்பியதை அடிகளார் ஏற்கவில்லை.  என்னைப் போன்ற சிலரிடம் மகாசன்னிதானம், அதை வெளிக்காட்டிக் கொள்ளவும் தயங்கவில்லை.  பல நிகழ்ச்சிகளுக்குப் பெரியார் இயக்கத்தின் புதிய தலைவர்கள் அழைத்தபோது தவிர்க்கவும் செய்தார்.

    சைவ சமயத்தின் நாயன்மார்களும் - வைணவ சமய ஆழ்வார்களும்கூடச் சென்று நிற்க முடியாத இடத்தில் அடிகளார் நின்றார்.

    சமயக் குரவர்கள் - ஆழ்வார்களின் காலத்தில் மாறுபட்ட கொள்கை உடைய சகோதர சமயங்களான சமண, பவுத்தங்களுடன் இணக்கமாய் இல்லாதது மட்டுமல்ல, மோதுதல், சண்டை என்று தொடங்கிக் கொலை வரை நீடித்ததுதிருஞான சம்பந்தர் காலத்தில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்வது என்ற எல்லைவரை ''அன்பே சிவம்''  என்ற சைவம் ''அம்பே சிவம் - கத்தியே கடவுள்''  என்று போய் நின்றது.

    சைவ சமயத்தைத் தொண்டு சமயமாக்க முயன்றவர் அப்பரடிகள்மன்னவன் தவறு செய்தபோது அதையும் எதிர்த்து, கடலில் வீசப்பட்டாலும் அஞ்சேன் என்று நின்றவர்அரசின் தண்டனையை ஏற்றவர்அப்பரடிகளுக்குப் பிறகு அதேபோல் சமயத்தைச் சாமான்ய மக்களிடம் எடுத்துச் சென்றவர் குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் மட்டும் தான்!

    சைவச் சமய சின்னங்களை அணிந்தபடியே பெரியார் கூட்டிய நாத்திகர் அவைகளிலும் - கிறித்துவ இசுலாமியச் சமய அமைப்புக் கூட்டங்களிலும் துணிவோடு சென்று கலந்து கொண்டவர்களில் முதல் சமயத் தொண்டர் குன்றக்குடி அடிகளார்தாம்கடந்த ஆயிரம் ஆண்டு சைவ, சமய வரலாற்றில் வேறெந்த ஒரு சமயத் தொண்டருக்கும் இவருக்கு முன் இந்தத் துணிவுமில்லை, வரவேற்புமில்லை.

    பெரிய புராணத்திற்கு - புதிய பொழிப்புரை - திருவிளையாடற் புராணத்திற்குப் புதுப்பதிப்பு என்று தன் மொழிப் பணியை இலக்கியப் பணியை நிறுத்திக்கொள்ளாமல் விஞ்ஞானத் தமிழுக்கு வித்திட்டவர் - நூல்கள் எழுதியவர் - இதழ்கள் நடத்தியவர் குன்றக்குடி அடிகளார் மட்டுமேஅதற்காகத் தமிழுலகம் அவருக்கு மிகவும் கடன்பட்டுள்ளது.

    அடிகளார் அரசு அறிவித்த ஏழைகளுக்கு வழங்கும் இலவசத் திட்டங்களை எதிர்ப்பவராய் இருந்தார்தமிழீழப் பிரச்சினையில் மறைந்த குன்றக்குடி அடிகளாரிற் நிலைப்பாடு என் போன்ற அவருடைய அன்பர்களுக்கே உடன்பாடானதாயில்லைஅதற்காக நான் அவரோடு பட்டிமன்ற - வழக்காடு மன்ற மேடையில் உண்மையிலே மோதிக்கொள்ளும் சூழ்நிலைகள் இரண்டு மூன்று முறை ஏற்பட்டன.





    ஆனால், இவை எல்லாம் தாண்டி என் பேரிலும் என் குடும்பத்தார் பேரிலும் தனிப்பட்ட அன்பு செலுத்தி வந்தார்.   நான் சமுதாய விடுதலை இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்தைவிட்டு தி.மு..வில் இணைந்ததைத் தனிப்பட்டமுறையிலும் - இரண்டுக்கு மேற்பட்ட முறைகள் மேடையிலுமே ''சரியான முடிவல்ல''  என்று சுட்டிக் காட்டினார்மகா சன்னிதானம் என்ற நிலையையும் தாண்டி என்னிடம் அன்புக் கொண்டிருந்தார்.  அவர் மறைந்த அன்று - பெரியார் மறைந்தபோது எப்படியொரு ழப்பை தனிமையை உணர்ந்தேனோ அதுபோல் உணர்ந்தேன்அடிகளார் இறைப்பற்றுமிக்க சமயத் தலைவர்நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகத் தொண்டன்இந்த உறவை என்னவென்று சொல்வது?

     ...திருச்சி செல்வேந்திரன்..(தற்போதைய தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர் முன்னாள் திருச்சி திராவிடர் கழகத் தலைவர்).இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா...நாம் தமிழர் பதிப்பகம்...(பக்கம் 171-184)
     இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?

    அய்யாவைப் பற்றி அம்மையார்

    ர்வலம் பெரியார் மாளிகையை அடைந்தது.  மாணவர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்.  பெரியார் வெளியே வந்தார். 

    அன்று மாணவர்களிடையே பெரியார் ஆற்றிய உரை ஜூலியஸ் சீசர் கொலைக்குப் பின் மார்க் ஆண்டனி ஆற்றிய உரையையும் மிஞ்சியது.

    ''அன்புக்குரிய வாலிப ஜீவ ரத்தினங்களே!'' என்று துவங்கிய பெரியார் ''உங்கள் அன்பான ஆதரவைக் கண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழும் உரம் பெற்றுவிட்டேன்.  நம் எதிரிகள் என் சிலையை செருப்பால் அடித்தாலும் -என்னையே செருப்பால் அடித்தாலும் அந்தக் கோபத்தையெல்லாம் இந்தத் தேர்தலில் அவர்களை அடியோடு தோற்கடிப்பதில் காட்டுங்கள்''  என்றார்.  பெரியார் சொன்னது நடந்தது.  பத்து நாட்கள் முன்னர் மாணவர்களால் வழி மறிக்கப்பட்ட அண்ணன் அன்பில், பின்னர் மாணவர்கள் அணிவகுத்து முன்செல்ல வாக்கு கேட்டுக் கொண்டு வந்தார்!
     
    மாணவர்களிடம் உரையாற்றி முடித்து உள்ளே போய் அமர்ந்த பெரியாரிடம் -தினமும் அவரைப் பார்க்கப் போகும் நான் பத்து நாட்கள் 'தலைமறைவிற்கு'ப் பின் பார்த்தேன்.

    ''செல்வேந்திரன் -டர்னிங் பாயிண்ட் ஏற்படுத்திப் போட்டீங்க- டர்னிங் பாயிண்ட் ஏற்படுத்திப் போட்டீங்க…'' என்றார் பெரியார், என் கைகள் இரண்டையும் பிடித்து முத்தமிட்டுக் கொண்டே. எனக்கு அவர் தான் எல்லாம்!  அவரில்லாமல் நானில்லை.  இந்தப் பாராட்டுகளுக்கு ஆயிரம் பொன் மகுடங்கள் நிகராகுமா?
     
    நான் மெய்சிலிர்த்துப் போனேன்.  இந்த நிகழ்ச்சி மூன்று நாட்கள் கூட நீடிக்கவில்லை.  ஊடகங்கள் பெரும் புயலைக் கிளப்பின.  வழக்கம் போல் கள ஆய்வுகள் -கருத்துக் கணிப்புகள்.  தி.மு.க. தோற்கப் போகிறது -சட்டமன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எழுபது இடங்கள் கூட கிடைக்காது என்று பெரும் வதந்தி.  காவல்துறை -வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் தி.மு.க. அன்றைக்கு ஆளும் கட்சியாய் இருந்தாலும் எதிர்ப்புக் காட்ட ஆரம்பித்தார்கள்.

    பெரியாரே ஒரு கட்டத்தில் கலக்கமடைந்தார்.  காரணம் பெரியாரின் சேலம் மாநாடுதான் இத்தனைக்கும் காரணம் என்றொரு பிரச்சாரம்.  கலைஞர் வருத்தமடைந்திருந்த பெரியாரிடம் வழக்கம்போல் துணிச்சலாக ''வருவது வரட்டும் -தோல்வியே வந்தாலும் சேர்ந்தே எதிர்கொள்வோம்.  நான் அதற்குத் தயார்'' என்றார்.

    எனக்கோ நெருக்கடி அதிகமானது.  ''திருச்சி சம்பவங்களுக்குக் காரணமும் சேலத்தில் ராமரை நீ செருப்பால் அடித்தது தான்.  அதனால் பயங்கரமான குற்றப்பிரிவுகளில் உன் பேரில் வழக்குத் தொடருவேன்.  ஏழாண்டுகள் வெளிவரமுடியாது'' என திருச்சி பெரிய காவல்துறை அதிகாரி என்னை மிரட்டினார்.  அவர் 'ஆனஸ்ட்' தான், ஆனால் திராவிட இயக்க எதிர்ப்பாளர்.  பின்னாளில் உளவுத்துறையில் பெரும் பொறுப்பில் தமிழகத்தில் இருந்த அதிகாரி ஒருவரின் தந்தை.  என்னை அறியாமல் எனக்குள் ஒரு கலக்கம்.  அதிவேகம் அதி உற்சாகம் காட்டிவிட்டோமோ - 'அய்யா' என்ன சொல்லி விடுவாரோ என்று பயந்து போய் மீண்டும் ஓரிரு நாள் பெரியாரை பார்க்காமல் 'தலைமறைவு'.

    பெரியாரின் நம்பிக்கைக்கு உரிய, கழகப் பொறுப்பாளர் அல்லாத அண்ணன் அடைக்கலத்திற்கு தொலைபேசியில் சொல்லி 'ஒரு மணி நேரத்தில் செல்வேந்திரனை அழைத்து வா' என்றாராம் பெரியார்.


    பெரியார்முன் போய் பயத்தோடு நின்றேன்.  காவல்துறை அதிகாரி சொன்னது உள்பட யாவற்றையும் சொன்னேன்.  கண்கலங்கிவிட்டேன்.  பெரியார் என்னை அன்போடு பார்த்தார்.

    ''பைத்தியம்…  ஏன் பயப்படறீங்க…''  என்றார்.  ''நான் போலீசுக்குப் பயப்படலே…  அய்யாவுக்குத்தான்…''  என்றேன். பெரியார் என் தலையின் பின்முடியைப் பிடித்து செல்லமாய் உலுக்கினார்.

    ''எனக்காகத்தானே எல்லாம் செஞ்சீங்க…  உங்களுக்குத் தொல்லை வந்தால் நான் உட்டுடு வேனா…  பார்ப்போம்…  பார்ப்போம்…''  என்றார்.

    மறுநாளே மாபெரும் சேலம் தீர்மான விளக்கத்  -தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசினார்.

    'சேலத்தில் ''ராமன் சிலையை நான்தான் செருப்பால் அடிச்சேன்.  அப்படித்தானே படம் போட்டிருக்கே.  சிலையே கோவிச்சுக்கலே…  உனக்கென்ன கோவம்?''  என்று 'துக்ளக்' கார்ட்டூனை சுட்டிக்காட்டிப் பேசினார்.  'துக்ளக்' இதழ் ராமன் சிலையை பெரியார் வடிப்பதுபோல் 2 லட்சம் சுவரொட்டிகள் வெளியிட்டிருந்தது.  அதன் விளைவு பின்னால்தான் தெரிந்தது.  இவர்கள் சேய்க்கு வரும் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்.

    தேர்தல் பிரச்சாரம் படுவேகமாகவும் -உக்கிரமாகவும் நடந்தது.  மற்ற செய்திகள் அனைத்தையும் பின் தள்ளிவிட்டு ராமன் சிலை சம்பவமே முதன்மைப்படுத்தப்பட்டுவிட்டது.  மதவாதிகளுக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுவது ஒன்று பாம் அல்லது ராம்.  பெரியாரின் செயலால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்ற செய்தியை மதவாதிகளும் பத்திரிகைகளும் வேக வேகமாக ஊதிவிட்டனர்.  இந்திரா- கலைஞர் கூட்டணியையே இதில் உடைத்து பலவீனப்படுத்த முயன்றார்கள்.

      



    இந்திராகாந்தி அம்மையார் அவர் தந்தையார்  நேரு பண்டிதரைப்போல் பகுத்தறிவுவாதியல்ல.  கடவுள் நம்பிக்கையுடைவர் என்றொரு பொதுக்கருத்து அப்போது இருந்தது.  அது ஓரளவு உண்மையும்கூட.  இந்திரா காந்தி அம்மையாரிடம் பத்திரிகையாளர்கள் படையெடுத்தார்கள்.  அவர்கள் பலரின் கையிலிருந்தது பேனா அல்ல.  கூட்டணியை வெட்டி விடும் கத்தரிக்கோல்.

    சேலம் மாநாடு -பெரியார் ராமன் சிலையை,  தானே அடித்ததாய் ஒப்புக்கொண்ட செய்திகளை இந்திரா அம்மையாரிடம் காட்டி -இவர்களோடா கூட்டு?  இதை எப்படி நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்?  என கேள்வியாகாக் கூடக் கேட்கவில்லை.  பலர் குமுறினார்கள்.  சிலர் கொந்தளித்தார்கள்.

    நேருபண்டிதரின் மகளில்லையா?  இதற்கு எந்தவிதப் பதட்டமும் காட்டாமல் மென்மையாக பதில் சொன்னார்.  ''அதற்கென்ன…  பெரியார் பல ஆண்டுகளாய் இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்?  (கடவுள் படத்தை எரிப்பது- சிலைகளை உடைப்பது)  இப்போது மட்டும் என்ன கோபம்'' என்றார்.
    இன்னொரு சம்பவம்.  தேவராஜ் அர்ஸ்.  1970-80களில் மிகவும் பரபரப்பாய் அறியப்பட்ட பெயர்.  இந்திய அரசியல்வாதிகளிலேயே மிகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பெயர் போனவர்.  தங்கமும் -தந்தமும் -வைரகற்களும் இழைக்கப்பட்ட புகைக்குழாயில் (பைப்) தான் புகை பிடிப்பார்.  அவரை சென்னை கன்னிமாரா விடுதியில் மிக ஆடம்பரமான அறையொன்றில் சந்தித்தபோது அந்தக் குழாயை நான் பார்த்திருக்கிறேன்.

    தேவராஜ் பற்றி..விக்கி களஞ்சியம் (ஆங்கிலம்)

    செல்வாக்கு பெற்ற கர்நாடக முதல்வராய்- பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராய் இந்திராகாந்தியாரின் வலதுகரமாய் செயல்பட்டவர்.  பின்னர் மாறுபட்டவர்.  எதிரியாகிவிட்டவர்.  கன்னிமாரா விடுதியில் ஒரு நண்பர் அர்சிடம் ''இந்திரா காங்கிரசை விட்டு விலகிய நீங்கள் ஏன் பெரியாரைப்போல் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஓர் இயக்கம் துவங்கிப் போராடக்கூடாது?''  என்று கேட்டார்.  அர்ஸ் வேகமாய் குறுக்கிட்டார்.  ''என்னை அந்த மாமனிதனோடு ஒப்பிடாதீர்கள்.  நான் வெறும் அரசியல்வாதி.  (No… No…  don't compare me with that great man.  I am after all a politician)  (அப்போது பெரியார் இல்லை)  அர்ஸ் மேலும் தொடர்ந்தார்.

    ''ஒருமுறை தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் பற்றி என்னோடு இந்திராகாந்தி ஆலோசனை கலந்தார்.  'மிஸ்டர் அர்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் வளர கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்ட ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் யாரைப் போடலாம்' என்றார் இந்திரா.

    நான் (அர்ஸ்) சொன்னேன்.  'ஏன், ஆர்.வெங்கட் ராமனைப் போடலாமே'  (பின்னாளில் ஜனாதிபதியாக இருந்தவர்)  என்றேன்.  எப்போதும் காலையில் குளிக்குமுன் இந்திராகாந்தி ஒரு தைலம் தடவிக் கொண்டு சாவதானமாய் சாய்ந்து அமர்ந்திருப்பார்.  அப்போது யாரையும் சந்திக்கமாட்டார்.  எனக்கு (அர்ஸ்) விதிவிலக்கு.  நான் சொன்னதுதான் தாமதம்.  இந்திரா கோபமாய், நாற்காலியின் முன் பகுதிக்கு வந்துவிட்டார்.

    'என்ன அர்ஸ் பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறீங்கள்.  உங்கள் அண்டை மாநில அரசியல் சூழல் கூட தெரியாமல் இருக்கிறீர்கள்.  ஒரு பிராமணரை கட்சித் தலைவராகப் போட்டால் அந்தக் கட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?  அது பெரியார் ஈ.வெ.ரா.வின் பிரச்சாரத்தில் ஊறிய மண்' என்றார் இந்திராகாந்தி''  என்று மூச்சுவிடாமல் வேகமாய் ஆங்கிலத்தில் சொன்ன அர்ஸ்…  ஒருகணம் அப்படியே பேச்சை நிறுத்திவிட்டார்.

    அது அவர் இந்திராகாந்தியிடம் கடும் கருத்து வேறுபாடு கொண்டிருந்த- தாக்கிப் பேசிக்கொண்டிருந்த நேரம்.  இருந்தாலும் இந்திராகாந்தியையும் அவருடைய தந்தை நேரு பண்டிதரையும் பாராட்டினார்.  பெரியவர்கள் பெரியவர்கள் தான்.

    தேவராஜ் அர்ஸ் மேலும், ''தமிழ்நாட்டின் அரசியல் ரசாயனத்தை இந்திராவுக்கு அவருடைய தந்தை நேரு பண்டிதர் எவ்வளவு துல்லியமாய் கற்பித்திருக்கிறார்.  அதை அந்த அம்மையார் எவ்வளவு ஆழ்மனதில் பதித்திருக்கிறார் பாருங்கள்.  பெரியார் அப்படிப்பட்டவர்''  என்றார்.

    ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் 1971 தேர்தலின்போது இந்திராகாந்தி எளிதாய் பெரியார் பற்றி சொன்ன கருத்தின் ஆழம் எப்படி வந்தது என்று எனக்குப் புரிந்தது.  பெரியார் உடலாய் இல்லை, வரலாறாய் வாழ்கிறார்.

    மறுபடியும் நினைக்கிறேன்.  அந்த 1971 தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்றிருக்காவிட்டால்?  பெரியார் என்னுடைய செயலைத் தானே செய்ததாய் அறிவித்திருக்காவிட்டால்…?  நான் துன்பத்தின் உளைச்சலில் மடிந்து போயிருப்பேன்.

    சிறகில் எனை மூடி அருமை மகன்போல
    வளர்த்த கதை சொல்லவா?
    கனவில் நினையாத காலம் இடைவந்து
    பிரித்த கதை சொல்லவா?
    இந்த மண்ணும் கடல் வானும்
    மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா…

    உறவைப் பிரிக்க முடியாதய்யா!

    ...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!...நக்கீரன் வெளியீடு...தொடரும்... பகுதி7-ல்-  தலைப்பு ''
    'இந்தியனாய் இருந்து இழந்தோமா? பெற்றோமா? ''



    அன்று வந்த சோதனை

     
    ''எனக்கு ஏற்பட்ட பழி நீங்கிவிட்டது.  முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்'' என்றொரு அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியாரவர்கள்.  தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே மாற்றிப் போட்டுவிட்ட 1971-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிந்த பின்னர் தான் மேற்கண்ட அறிக்கை.

    தேர்தல் முடிவுகளும் -துவக்கமும் -இடையிலேயும் நடைபெற்ற சம்பவங்கள்தான் அவை.  வழக்கமாய் பயன்படுத்தப்படும் 'வரலாற்றை மாற்றியது' என்ற சொற்பிரயோகம் இதற்குத்தான் முழுக்க முழுக்கப் பயன்படும்.

    இந்தத் தேர்தல் முடிவுகள்…

     *வழக்கமான மத்திய-மாநில அரசுகளின் உளவுத்துறைகளின் துல்லியமான தேர்வு முடிவு கணிப்பு அறிக்கைகளையே நூற்றுக்குநூறு மாற்றிக் காட்டினது.

     *இந்திய அரசியலில் நேரு பண்டிதரின் அச்சத்திற்குரிய அறைகூவலுக்கே உரியவர் மூதறிஞர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஏறக்குறைய அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார்.  அவருடைய வருத்தம் 'தோற்றோம்' என்பதல்ல.  'யாரிடம்' தோற்றோம் என்பதுதான்.  (இது பெரியார் சொன்னது)

       *வெற்றி பெற்றாலும் கலைஞரும் அவருடைய அமைச்சரவையினரும் பெருந்தலைவர் காமராசரிடம் காட்டிய பணிவும் -மரியாதையும் - காமராசரின் அணுகு முறையிலேயும் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன.  "GREAT AS WARRIORS GREATEST AS VICTORS"  (போரில் வீரராகவும் வெற்றியில் மாவீரராகவும்) கலைஞர் நடந்துகொண்டதே காரணம்.
     
    இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் அந்தத் தேர்தல்தான்.  பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருக்கும் போதே முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு 1971-ல் பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தார்.  பலருக்குத் தலைவர் கலைஞர் பேரில் கோபம்.

    தங்கள் நாற்பதாண்டுகால பகையை மறந்து ராஜகோபாலாச்சாரியாரும் பெருந்தலைவர் காமராசரும் களமிறங்கியது பலருடைய கலக்கத்திற்குக் காரணமாகி விட்டது.  தேர்தலுக்கு முன் அந்த பெருங்கூட்டணி (GRAND ALLIANCE) யின் வெற்றிக்காக ராஜகோபாலாச்சாரியார் காமராசரை வாழ்த்தி அவர் நெற்றியில் திலகமிட்டார்.  ஆனால் அது வெற்றித் திலகமாய் அமையவில்லை.  காரணம் எளிதானது.  அதற்கு நான்கு ஆண்டுகள் முன்னர் 1967-ல் இதே ராஜகோபாலாச்சாரியார் தி.மு.க வை தேர்தலில் ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  ராஜகோபாலாச்சாரியாரை சேர்ந்தவர்களும்- சார்ந்தவர்களும் 'பெரியாரின் சீடர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறீர்களே' என்று கேட்டார்கள்.  ராஜகோபாலர் வழக்கம் போல் ராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டினார்.  ராமன் சொன்னான், ''யுத்தம் சீதையை மீட்க அல்ல, இராவணனைக் கொல்வதற்கே'' என்று.

    ''தேர்தலில் தி.மு.க. வுக்கு ஆதரவு தருவது காமராசரை வீழ்த்தவே'' என்றார் 1967-ல்.  அதுபோலவே காமராசருக்கு ராஜகோபாலரின் வெற்றித் திலகம் காமராசரின் வெற்றிக்கல்ல.  கலைஞரை வீழ்த்தவே என்பதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ சாமான்யமான வாக்காளர்கள் புரிந்து கொண்டார்கள்.

    இந்தப் பெரிய பிரச்சினைக்குள் சின்னவன் நீ எங்கே வந்தாய்' என்று நீங்கள் கேட்கலாம்.  இங்கிருந்து மறக்க முடியுமா தொடர்கிறது.

    கலைஞரின் கூட்டணியில் பெரிய வாக்கு வங்கியோ,  மக்கள் செல்வாக்கோ, தொண்டர்கள் வலிமையோ உள்ள கட்சிகள் இல்லை.

    தேர்தலில் போட்டியிடாத -தி.மு.க. வை ஆதரித்த பெரியாரின் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முகவர்களாய் பணியாற்றினார்கள்.  பெரியாரின் அனுமதியோடு அவர்களை அப்பணியில் அமர்த்தியவனே நான்தான்.

    ஆர்வமிகுதியால் சில நண்பர்கள் புராண ஆபாசப் படங்களையும் ஊர்வலமாய் எடுத்து வந்தார்கள்.  இது பெரியாருக்குத் தெரியாமல் நடந்தது.  

     ஊர்வலத்தையும் மாநாட்டையும் தடை செய்ய வேண்டுமென்று மாநாட்டிற்குப் பந்தல் அமைக்கத் துவங்கும்போதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொங்கு சதையான இந்து மகாசபை மாவட்ட ஆட்சியரிடமும், கவர்னரிடமும் வேண்டுகோள்கள் கொடுக்கத் துவங்கினார்கள்.  இந்து மகாசபை -இன்றைய பா.ஜ.க.வின் தந்தையர் இயக்கமாகும்.

     
    கலைஞரின் ஆட்சிதான் நடந்தது.  காவல்துறையினர் இருதரப்பிற்கும் வழியமைத்து நடுநிலையோடு நடந்து கொண்டார்கள்.  

     ஊர்வல ஒலி முழக்கங்கள் கூட முறைப்படுத்தப்பட்டன.  இந்து மகாசபையினர் நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு இடம் ஒழுங்கு செய்து பாதுகாப்பும் காவல்துறை கொடுத்தது.  ஆனால் அவர்கள் திட்டமிட்டு வந்தது பெரியாரின் பேரிலேயே செருப்பை வீசி -அது பெருங்கலவரமாகி துப்பாக்கிச் சூடு வரை கொண்டு போய் அதைத் தேர்தல் பிரச்சாரமாக்க எண்ணி இருந்தார்கள் என்பது.

     'சோ'வின் 'துக்ளக்' இதழ் வெளியிட்ட கார்ட்டூன்களும் அதையே பல லட்சம் சுவரொட்டிகளாக்கி தி.மு.க.விற்கு எதிராகத் தமிழகம் துவங்கி இந்தியா பூராவும் ஒட்டியதும் நிரூபித்தது.
     

    'பெரியார் வாழ்க… பெரியார் வாழ்க' என ஆவேசமாய் முழக்கமிட்டார்கள்.

     பெரியார் வண்டிதான் பக்கத்தில் வருகிறது என்று தவறாக எண்ணிய இந்து மகாசபைக் கூட்டம் காவல்துறையினருக்குத் தெரியாமல் வைத்திருந்த கருப்புக்கொடியைக் குச்சியோடு வெளியே எடுத்து உயர்த்தினார்கள்.  எல்லா கம்புகளிலும் பழைய செருப்புகள்.  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செருப்புக்கொடி ஆர்ப்பாட்டமாகி 'ஒழிக' கோஷத்தோடு அவர்கள் சரமாரியாய் செருப்புகளை வீசினார்கள் எங்கள் பேரில்.
     
    லாடம் கட்டிய செருப்பொன்று வண்டியின் மேல் நின்றிருந்த என் மேல்பட்டு ரத்தம் கொட்டியது. எனக்கோ ஆத்திரம்.  என்னுடைய வண்டியைச் சுற்றி இருந்த தோழர்களோ வெறி கொண்ட வேங்கையானார்கள்.  காவல்துறை வளையத்தை உடைத்துக் கொண்டு கருஞ் சட்டை வெள்ளம் உள்ளே பாய -போலீசார் தடியடி நடத்தி கருஞ்சட்டைத் தோழர்களை தடுத்துக் கொண்டிருக்க இந்து மகாசபை கூட்டம் கலைந்தோடியது.

    மாநாட்டில் பெரியார் பெண்ணுரிமையை வலியுறுத்தும் தீர்மானமொன்றைத் தனது பாணியில் சற்றுக் கூடுதல் அழுத்தம் கொடுத்து நிறைவேற்றினார்.

    அத்தனை ஆதிக்க சாதிப் பத்திரிகைகளும் ஓர் குரலாய் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள்.  ''ராமனை அவமரியாதை செய்த கட்சிக்கா உங்கள் ஓட்டு?'' என்ற ஒற்றை வரி முழக்கமே எதிரணியின் தேர்தல் திட்டமானது.

    நாடெங்கும் பரபரப்பு தங்களுக்குச் சம்பந்தமில்லாதது என்று உணராத மாணவ-மாணவிகளையும் தி.மு.க. அணிக்கு எதிராகக் களம் இறக்கினார்கள்.  சேலம் தி.க. மாநாட்டின் தீர்மானத்திற்காக தி.மு.க. வேட்பாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனத் திருச்சியில் அண்ணன் அன்பில் தர்மலிங்கம் (முன்பு நான் படித்த) தேசிய கல்லூரி மாணவர்களால் வாக்குக் கேட்காமல் தடுக்கப்பட்டார். 

     ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையே கடித்த கதையாய் திருச்சியில் பெரியார் சிலையைக் கல் வீசித் தாக்கினார்கள்.  நான் வேகமானேன்.  அப்போது திராவிடர் கழகத் தலைவர் மூத்தவர்கள்  'நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம்'  என்று என்னைத் தடுத்தார்கள்.  'உனக்குத்தான் ஆபத்து' என்றார்கள்.  காரணம் சேலத்தில் நடந்த ஊர்வலத்தில், நடந்த சம்பவங்கள் பெரிதாகி ஊரெங்கும் கண்டன ஊர்வலமாகத் தகராறுகளும் நடக்க நானே காரணம் என்பது சிலரின் கருத்து.

    இரண்டு நாட்கள் நான் பெரியாரையே பார்க்கவில்லை.  மூத்த தலைவர்கள் சொன்னதையும் கேட்கவில்லை.  'முள்ளை முள்ளாலேயே எடுக்க முடிவு செய்தேன்.  கட்சி சார்பற்ற மாணவர்களையே முழுவதுமாய் கொண்ட பெரிய ஊர்வலம் நடத்தி நடந்த செயலுக்கு மாணவர்கள் பெரியாரிடம் வருத்தம் தெரிவிக்கச் செய்வது எங்கள் திட்டம்.  திட்டம் வென்றது.  கடும் உழைப்புக்குப் பயன் கிடைத்தது.

    இன்றைக்குத் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் இருக்குமிடம் அப்போது பெரிய திடல்.  எங்கு பார்த்தாலும் மாணவர்கள்.  அப்போது பேருந்தில் சென்ற ஒருவர் ஊர்வலத்தில் வந்த மாணவர்களைப் பார்த்து ஏதோ கை நீட்டித் திட்ட மாணவர்கள் பேருந்துக்குள் ஏறி விட -கலவரம் வெடித்தது.  வழியெங்கும் கலவரம்.

    ஊர்வலம் பெரியார் மாளிகைக்குப் போயிற்று.  மாணவர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் பெரியாரே வெளியே வந்தார்.
     
    ...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!....நக்கீரன் வெளியீடு....தொடர்ச்சி பகுதி 6 ல் தொடரும்..தலைப்பு ''அய்யாவைப் பற்றி அம்மையார்''