Pages

Thursday 11 November, 2010

டுமீல்!..டுமீல்!...டுமீல்!...டுமீல்!...டுமீல்!

''சட்டத்தை கையில் எடுத்து குற்றவாளிகளை போலீஸ் சுட்டுத்தள்ளுவது மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல் என்ற சமூக ஆர்வலர்களின் குரலில் என்ன நியாயம் இருக்கிறதோ...


''சபாஷ் கோவை போலீஸ்! விரைவு நீதிமன்றம் வெச்சு அதிக பட்ச தண்டனையை மிகச்சீக்கிரம் வாங்கிக்கொடுப்போம்னு சொன்ன வார்த்தையை மிகச்சீக்கிரம் காப்பாத்திட்டாங்க போலீஸின் விரைவு நீதிமன்றம் கொடுத்த என்கவுன்டர் தீர்ப்பு நூற்றுக்கு நூறு சரி’’ என்று கொதிப்பு தணிந்தவர்களாக கோவை மக்கள் பெருமூச்சு விடுவதும் மறுக்க முடியாத உண்மை.

கடந்த சனிக்கிழமை மோகன் (எ) ராஜ் (எ) மோகன கிருஷ்ணனையும் அவனுடைய கொலைகார கூட்டாளி மனோகரனையும் ஆண்மை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கூப்பிட்டு வந்தபோதே, அவர்களைத் தாக்கித் தள்ளும் ஆவேசத்தோடு திரண்டு இருந்தார்கள் மக்கள். ‘’உன்பாடு என்பாடு’ என்றுதான் அவர்களை மீட்டுச்சென்றது போலீஸ். அடையாள அணிவகுப்பின்போது குழந்தைகள் முஸ்கன் மற்றும் ரித்திக் ஆகியோரின் பாட்டி மிகச்சரியாக மோகன கிருஷ்ணனை ‘இவன்தான் வண்டி ஓட்டிவந்தவன்’ என்று அடையாளம் காட்டிவிட, அப்போதே போலீஸ் ஒரு ‘முடிவு’ எடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.


கோர்ட் அனுமதியுடன் விசாரணைக்கு கூட்டி வந்திருந்த குற்றவாளிகளை வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிப்பதாகத்தான் திட்டம் என்ன நடந்ததோ?...’’ குற்றம் நடந்த இடங்களையும் பாதையையும் உறுதிப்படுத்துவதற்காக மோகன கிருஷ்ணனை பொள்ளாச்சி நோக்கி வேனில் கொண்டு சென்றது போலஸ். செவ்வாயன்று அதிகலை சுமார் ஐந்தரை மணி அளவில், ஓடும் வண்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு...முரண்டு பிடித்து...எஸ.ஐ முத்துமாலையின் இடுப்பில் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவரையும் மற்றொரு எஸ்ஐ-யான் ஜோதியையும் சுட்டு, தப்பிச் செல்லப் பார்த்தான் அவன். உடனிருந்த போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டார்கள்’’ என்று என்கவுன்டர்’ பற்றி விவரிக்கப்படுகிறது.

கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் வழியில் உள்வாங்கியிருக்கும் போத்தனூர் குப்பைக் கிடங்கு ஏரியாவில் இதெல்லாம் அரங்கேறியதாகவும் கூறுகிறார்கள். ‘’சுடப்பட்ட ‘சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கையிலும் வயிற்றிலுமாக காயம் பட்டதாகச் சொல்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

செத்தவனின் உடலைப்பார்ப்பதற்காக ஆஸ்பத்திரி மார்ச்சுவரி நோக்கி கூட்டம் திரள ஆரம்பித்தது. ஆர்வத்தோடு சடலத்தை மொபைலில் படம் பிடித்துக்க்கொண்டார்கள் பலர். மேகனகிருஷ்ணனின் வலது கண்ணை துளைத்துக்கொண்டு ஒரு தோட்டாவும், அதற்கு மேல் நெற்றியை பொத்தல் போட்டு மற்றொரு தோட்டாவும் சீறியிருந்தன. கால்களிலும் ரத்த காயத்தை நம்மால் பார்க்க முடிந்தது.

‘மற்றொரு குற்றவாளியான மனோகரன் இன்னொரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் எங்கள் பாதுகாப்பில்தான் இருக்கிறான் என்று கோவை கமிஷனர் சைலேந்திரபாபு தகவல் வெளியிட ‘’அவனையும் விசாரணைக்குத்தானே சிறையிலிருந்து கூட்டிட்டு வந்தாங்க? போலீஸ் துப்பாக்கியை பறிச்சு அவனும் தப்பிக்கப்பார்க்கலையா? என்று பொதுஜனம் பேசிக்கொண்டபோது...இவர்கள் குரலில் ஏக்கம், கோபம், கிண்டல் எல்லாமே சரிவிகிதமாக இருந்தது.

டெயில் பீஸ்;இத்தனைக்கும் நடுவே ‘மோகன்ராஜ் கதை இத்தனை சீக்கிரத்தில் முடிந்து போனதற்குப் பின்னால், வேறு சில பர்சனல் ரகசியங்களும் அமுங்கிப் போனதா?’ என்ற கேள்வியும் காவல்துறை வட்டாரத்தில் கிசுகிசுப்பாக எழுகிறது.

...எஸ்.சக்தி
....14.11.2010 வரை செய்திக்கான ஜூனியர் விகடன்....

Tuesday 13 April, 2010

பெரியார் வழியில் அடுத்த தமிழ் எழுத்துச் சீரமைப்பு



(தமிழ் எழுத்துச் சீரமைப்பு பற்றி முனைவர் வா.செ குழந்தைசாமி அவர்கள் தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தில் காணொளி காட்சி மூலம் தெளிவு படுத்தியவைகளை.......இங்கே பதியப்பட்டுள்ளது.)





தமிழ் எழுத்துச் சீரமைப்பு






தமிழர்கள் ஒரு மொழியினர் பல நாட்டினர் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர் தங்கள் அடையளத்தை காக்கவேண்டும்.



சிறுபான்மை மக்கள் தங்கள் அடையாளத்தை காக்கவேண்டும். தமிழர்களுக்கு நாடு அடையாளம் அன்று, மதம் அடையாளம் அன்று, அவர்கட்கு இருக்கும் ஒரே அடையாளம் தமிழ் மொழிதான். அவர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்கவேண்டும்.



தமிழ் மொழியின் 247 எழுத்துக்களைக் கற்க 107 குறியீடுகள் தற்பொழுது தேவைப்படுகின்றன.



ஆனால் ஒரு எழுத்துக்கூட குறையாது 247 எழுத்துகளையும் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும்.



இந்த மாற்றம் தான் தந்தை பெரியார் அவர்கள் முன் வைக்கும் தமிழ் எழுத்துச் சீரமைப்பின் குறிக்கோள்.



பெரியார் அவர்கள் முன்வைத்த தமிழ் எழுத்துச் சீரமைப்பு முழுவடிவம் பெற அடுத்த கட்டம், தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியாக வரவேண்டிய சீரமைப்பு. நாம் வாழ்வது கல்வியுகம் கல்வியறிவுதான் இன்றைய வளம்.



பண்டைகாலத்தில் நூற்றுக்கு இரண்டொருவரே கல்விகற்றனர். இன்று அனைவருக்கும் கல்வியென்பது, கல்வி கற்பது முக்கியமான குறிக்கோளாகும்.



பண்டைக்காலத்தில் கல்வியென்பதே மொழிக்கல்வியாகத்தான் இருந்தது. கல்வியென்பது பெரும்பாலும் மொழிக்கல்வியாக இருந்ததாலும் மிக மிகச் சிலரே கல்வி கற்றதாலும், மொழியைக்கற்பது அதிக நேரத்தைச் செலவிடுவது மொத்தத்தில் அன்று பெரிய சமுதாய இழப்பாக இருக்கவில்லை. இன்று பல துறைகளை கற்பதற்கு கல்வி ஒரு கருவி. நாம் நம் முன்னோர்கள் போன்று மொழியை கற்பதற்கு மட்டும் அதிக நேரத்தை செலவிடமுடியாது. எனவே மொழியைக்கற்பது எளிதாக்கப்படவேண்டும். இது ஒரு சமுதாயத் தேவை.



கல்வியின் முதற் கட்டம் எழுதப்படிக்கத் தெரியவேண்டும். முதலில் எழுத்துகளை கற்கவேண்டும். எழுத்துகள் எளிதாக இருப்பது கற்பதை ஊக்குவிக்கும். படிக்கத் தெரிந்தால் கல்வியில் ஆர்வம் எழும்.



தமிழர்கள் இன்று உலகம் தழுவி வாழும் மக்கள். தமிழ் நாட்டின் எல்லைகள் முன்பு வடவேங்கடம், தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம் என்ற நிலையில் இருந்தன. இன்று இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லைகள் கடந்து பூமிப்பந்திடை அமைந்த நாடு பலவினும், அதாவது 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம் எந்தவொரு இடத்திற்கும் ஒரு அடையளம் வேண்டும்.



தமிழர்களுக்கு மதம் அடையாளமல்ல, சாதி ஓர் அடையாளமல்ல நாடும் அடையாளமல்ல. தமிழர்களுக்கு தமிழ் மொழி ஒன்றுதான் அடையாளம். தமிழர்கள் எங்கிருந்தாலும் தங்கள அடையாளத்தை காத்துக்கொள்ள தமிழ் கற்க வேண்டும்.



தமிழகத்தில் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களும் தமிழ் கற்கவேண்டும். உலகத் தமிழ் குடும்பங்களும் தமிழ் கற்கவேண்டும்.



தமிழச்சாதிக்கு ஒரு வேண்டுகோள் தமிழர்களின் 20 சதவிகிதம் பேர் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். 75 மில்லியன் தமிழர்களில் ஏறத்தாழ 15 மில்லியன் தமிழர்கள் தமிழக எல்லைகட்கு வெளியே வாழ்கிறார்கள். தமிழர்கள் பலநாட்டினர், பல மதத்தினர், ஆனால் எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர்.



இன்றையத் தகவல் தொழில்நுடப உலகில் பெரும்பான்மையினரின் ஆக்கம் ஒரு சக்திவாய்ந்த திரவம் போன்றது. அதில் சிறுபான்மையினர் கரைந்து, கலந்து தமது அடையாளத்தை இழந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது. தமிழர்கள் தங்கள் தனித்தன்மையைக் காக்க, அடையாளத்தை நிலைப்படுத்த தமிழர்க்கு இருக்கும் ஒரேக்கவசம் தமிழ் மொழிதான்.



உலகத்தமிழினம் தமிழ் மரபோடு, தமிழ் பாரம்பரியத்தோடு தொடர்பு அராது வாழவேண்டும். தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ் கற்க வேண்டும். அவர்கள் தமிழில் பரிச்சயம் வேண்டும். நாம் இதுவரை கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டுமானால் உலகத் தமிழினம் தமிழ் கற்பது இன்றியமையாதது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகள் தவிர, மற்ற நாடுகளில் தமிழ் கற்பது ஒரு பொருளாதார தேவையல்ல., அரசியல் தேவையுமல்ல. நாம் கூறியிருப்பது போல் தமிழை கற்பது கடினமாக இருந்தால் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர மற்ற நாடுகளில் இளந்தலைமுறையினர் தமிழ் கற்க முன்வரமாட்டார்கள்.  

150 முதல் ஏறத்தாழ் 200 ஆண்டுகட்குள் பிஜி, பிரையோனியா, மொரிஷியஸ் போன்ற பலநாடுகட்கு சென்ற தமிழர்கள் தமிழை மறந்துவிட்டார்கள். இப்பொழுது இளந்தலைமுறைக்கு தமிழ் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்டிரேலியா போன்று அண்மைத் தலைமுறைகள் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறை தமிழை இழந்து வருகிறது. இவர்கள் தமிழ் கற்க தமிழர்களாய் வாழ தமிழ் கற்பதை இயன்றவரை எளிதாக்க வேண்டும். அதற்கு முதற்படியாக தமிழ் எழுத்துகள் கற்பதை எளிதாக்கவேண்டும்.



தமிழகத்தில் ஆண்டுதோறும் பதினைந்து இலட்சம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதற் கட்டமாக தமிழ் எழுத்துகளை கற்கவேண்டும். எனவே பதினைந்து இலட்சம் குழந்தைகள் தமிழ் எழுத்துகளை கற்பதை எளிதாக்குவது மாபெறும் கல்விப்பணியாகும். மாபெறும் சமூதாயச் சேவையாகும். தமிழிலுள்ள 247 எழுத்துகளை கற்பதற்கு இன்று குழந்தைகள் 107 குறியீடுகளை கற்கிறார்கள். 247 எழுத்துகளை ஒரெழுத்துகூட குறையாமல் எழுதுவதற்கு 39 குறியீடுகள் போதும். இதைச் செய்வது பெரியார் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அவசியமான கட்டம். இங்கு நாம் பரிந்துரைப்பது தமிழ் வரிவடிவத்தில் சீர்மையை, விரைமையை, கற்பதில் விரைவை ஏற்படுத்தும் மாற்றமாகும். உண்மையிலேயே மிகச்சிறிய மாற்றம். நாம் இந்த கருத்துரையை பரிந்துரைப்பது தமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை குறிப்பிட வரிவடிவம் அல்லது எழுத்து அல்லது குறியீடு, ஆகிய சொற்களில் ஏதாவது ஒன்றை வேறுபாடின்றி ஒரு பொருள் பல சொல் என்ற வகையில் பயன்படுத்துகிறோம்.



‘’மாறாத பொருள் எதுவும் வளர்வதில்லை’’ இது டார்வினின் தத்துவம். காலத்துக்கேற்ப எளிமை, சீர்மை, விரைவு கருதி மாற்றங்கள் நாம் விரிம்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்வில் இடம்பெற்றுவருகின்றன. ஒருமொழிக்கு ஒலி நிரந்தரமானது. எழுத்துகள் எனபவை ஒலிகளுக்கு நாம் உருவாக்கும் குறியீடுகள் மாறக்கூடியவை.



கிமு மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் வரிவடிவம் அதாவது எழுத்துகள் மாறியே வந்திருக்கின்றன.



தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ஒலி எழுத்துகளை இரு பெரும் பிரிவுகளாகப்பார்க்கலாம்.

1, முதன்மை எழுத்துகள்

2. சார்பு எழுத்துகள்



அவை பின்வருமாறு



முதன்மை எழுத்துகள்

உயிர் எழுத்துகள் 12

மெய் எழுத்துகள் 18

ஆய்த எழுத்துகள் 1

---------------------

மொத்த முதன்மை எ.ழுத்துகள் 31

---------------------



சார்பு எழுத்துகள்



உயிர் மெய் எழுத்துகள் 216





மொத்த தமிழ் ஒலி எழுத்துகள் 247 (முதன்மை எழுத்துகள் + உயிர்மெய் எழுத்துகள்)



ஐரோப்பிய மொழிகளிலும், இந்திய ஆசிய மொழிகளிலும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமே உள்ளன. இந்திய மொழிகளில் மட்டும் தான் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமின்றி உயிர்மெய் எழுத்துகள் என்ற தனி வரிவடிவம் கொண்ட எ.ழுத்துகள் இருக்கிறது. அதனால் எழுத்துகளின் எண்ணிக்கை அதிமாகிவிட்டது.



தமிழில் உள்ள 216 உயிர் மெய் எழுத்துகள் எளிமை, சீர்மை, விரைவு என்ற மூன்று நிலைகளிலும் பயணம் செய்து எவ்வாறு இனிவரும் காலத்திற்கு ஏற்ப அமைப்பை பெறலாம் என்பதை எடுத்துக்கூறுவதே நாம் பரிந்துரைக்கும் எழுத்துச் சீர்மையின் நோக்கமாகும்.



தமிழ் எழுத்துகளை கற்பதற்கு இப்பொழுது தேவைப்படும் குறியீடுகள் 107 அவை பின்வருமாறு.....



முதன்மை எழுத்துகள்



உயிர் எழுத்துகள்

அ முதல் ஔ வரையுள்ள உயிர் எழுத்துகள். இவற்றில் ஔ கூட்டெழுத்து எனவே பனிரெண்டு ஒலிகளுக்கு தேவைப்படும் குறியீடுகள் பதினொன்று.



மெய் எழுத்துகள்

க முதல் ன வரை பதினெட்டு இவற்றுடன் ஒரு புள்ளி . ஆக 19 குறியீடுகள். ஆயுத எழுத்து ஒன்று. மொத்த குறியீடுகள் முப்பத்தி ஒன்று.



சார்பு எழுத்துகள்

அதாவது உயிர் மெய் எழுத்துகள் தமிழில் உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவத்தில் ஒரு சீர்மை இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. சில வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் உள்ளது.



தமிழில் அகரமெய் தவிர்த்த ஏழு வரிசைகளில் தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன. இந்த எட்டு வரிசைக்குத் தேவைப்படும் புதியக்குறியீடுகள்...

ஆகாரக் குறியீடு (‘’கால் எழுத்து’’)

எகரக்குறியீடு (‘’ஒற்றைக்கொம்பு’’)

ஏகாரக்குறியீடு (‘’இரட்டைக் கொம்பு’’)

ஐகாரக்குறியீடு (‘’இரட்டை சுழி’’)



ஆக நான்கு மட்டுமே!

தமிழில் அகர மெய்தவிர்த்த ஏழு வரிசைகளுக்கு தனித்தனி வரிவடிவம் இல்லை. பொதுவான குறியீடுகளே உள்ளன.



அகரம் ‘க’ முதல் ‘ன’ வரை

ஆகாரம் ‘கா’ முதல் ‘னா’ வரை (ஆகாரக் குறியீடு கால் எழுத்து)

எகரம் ‘கெ’ முதல் ‘னெ’ வரை (எகரக் குறியீடு ஒற்றைக் கொம்பு)

ஏகாரம் ‘கே’ முதல் ‘னே’ வரை (ஏகாரக் குறியீடு இரட்டைக்கொம்பு)

ஐகாரம் ‘கை’ முதல் ‘னை’ வரை (ஜகாரக்குறியீடு)

ஒகரம் ‘கொ’ முதல் ‘னொ’ ஒரை (ஒகரக் குறியீடு (எகரக்குறியீடு + ஆகாரக் குறியீடு))

ஓகாரம் ‘கோ’ முதல் ‘னோ’ வரை (ஓகாரக்குறியீடு (ஏகாரக்குறியீடு+ஆகாரக்குறியீடு))

ஔகாரம் ‘கௌ’ முதல் ‘னௌ’ வரை (ஔகாரக்குறியீடு (எகரக்குறியீடு+ வரிவடிவம்)

ஆக எட்டுவரிசைகளான 147 எழுத்துகளுக்கு நான்கு குறியீடுகள் போதும். (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஜகாரம்)



தனித்தனி வரிவடிவம் தமிழ் எழுத்துகளுக்கு இருப்பதெல்லாம் நான்கு வரிசைகளுக்கு மட்டும் தான் அது..

இகரம் ‘கி’ முதல் ‘னி’ வரை

ஈகாரம் ‘கீ’ முதல் ‘னீ’ வரை

உகாரம் ‘கு’ முதல் ‘னு’ வரை

ஊகாரம் ‘கூ’ முதல் ‘னூ’ வரை



ஆக இந்த நான்கு வரிசைகளுக்கு தேவைப்படும் எழுத்துகள் 72

இநனோடு சேர்த்து மொத்த குறியீடுகள் 107.



தற்பொழுது உள்ள வழக்கில் 247 தமிழ் எழுத்துக்கள் கற்பதற்கு 107 வரிவடிவங்கள் தேவைப்படுகின்றது..



தமிழில் உயிர் மெய் எழுத்துகள் 216



அதில் உயிர் மெய் இகர, ஈகார, உகர, ஊகார நான்கு வரிசைகள் தவிர மீதமுள்ள 8 வரிசைகளில் உள்ள 144 எழுத்துகளுக்குத் தேவைப்படும் குறியீடுகள் 4. (ஆகாரம், ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, ஐகாரம்)



இதைப்போலவே இகர, ஈகார, உகர, ஊகார உயிர் மெய் வரிசைகட்கு உயிர்மைக்குறியீடுகளைப் பயன்படுத்தினால் 4 உயிர்மெய்குறியூடுகள் போதும். இதனால் 68 வரிவடிவங்கள் குறையும்.

எடுத்து வைத்த உத்தியைச்செய்லபடுத்த 4 புதிதாக நான்கு உயிர் மெய் குறியீடுகள் தேவை. நாம் பயன்படுத்தக்கவைகளாக ஒரு பரவலான கருத்துக்கணிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இவற்றின் உயிர் மெய்குறியீடுகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.





இதனால்,

உயிர் எழுத்திற்கும் ஆயுதத்திறகும் 12 குறியீடுகள்

உயிர் மெய் அகரத்திற்கு 18 குறியீடுகள் மற்றும்

உயிர்மெய் குறியீடுகள் ஒரு புள்ளியுடன் சேர்த்து 9 ஆக மொத்தம் 39 குறியீடுகள் மட்டும் போதும்.



நாம் விளக்கும் இந்த மாற்றங்கள் ஏற்றுகொள்ளப்பட்டால்

30 முதன்மை எழுத்துகள் 9 உயிர் மெய் குறியீடுகள் ஆக 39 வரிவடிவங்களை கற்றாலே போதுமானது. இவற்றில் 4 நான்கு உயிர் மெய் குறியீடுகள் மட்டும் தான் புதியவை.. இவற்றை கற்பது மிகவும் எளிது.



நாம் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு குறியீடுகள் ஒரு கருத்துகணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவை. இவை தமிழ் வடிவத்தோடு இயைந்து வருவதோடு தேவைப்பட்டால் வேண்டிய அளவு மாற்றப்படலாம். கொடுத்திருப்பது முடிந்த முடிவு அல்ல. முக்கியமாகத் தேவைப்படுவது உயிர்மெய் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகட்கும் மற்ற வரிசைகளைப்போலவே (ஆகார, எகர,ஏகார, ஐகார குறியீடுகளை பயன்படுத்தும்) குறியீடுகளைப் பயன்படுத்தலாம் என்ற கொள்கையினை ஏற்பது தான்.



தமிழில் உள்ள 247 எழுத்துக்களை எழுதுவதற்கு ஒரு எழுத்துக்கூட குறையாமல் எழுதுவதற்கு இந்த 30 குறியீடுகள் போதும். நாம் முன்வைத்த சீர்திருத்தத்தை ஏற்று 39 எழுத்துகளை கற்றபின் தமிழ் கணக்கை குழந்தைகள் எழுதுவது எவ்வளவு எளிது என்பதை படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது....





தமிழ் வரிவடிவத்தை கற்பதும் தொடர்ந்து தமிழ் மொழியைகற்பதும் எளிதாக்கப்படும், ஊக்குவிக்கப்படும்.....

உலகத் தமிழர்கள் தமிழ் மொழியோடு, தமிழ் இலக்கிய உலகோடு தொடர்பறாது வாழ பெரிதும் உதவும்.



ஒரு மொழிக்கு உண்மையான வலிமை என்பது இலக்கணம், இலக்கியம் என்பதை விட பேசும் மக்களின் எண்ணிக்கை தான். அந்த எண்ணிக்கையை காப்பதற்கு முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம், எந்த விலையும் கொடுக்கலாம்.



பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம் எளியது, சிறியது, இயற்கையானது. மண்ணில் இருக்கும் தமிழ் வானில் பறக்க இறக்கை கொடுப்பது போன்றது. நாம் எடுத்து வைத்த ஒரு எளிய, சிறிய மாற்றத்தின் மூலம் குழந்தைகள் கற்க வேண்டிய எழுத்து வடிவங்கள் அதாவது குறியீடுகள் 107 இலிருந்து 39 தாக குறைகின்றன.



இது போன்ற மாற்றம் தமிழ் மொழிக்கு புதியது அல்ல. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி காலந்தோறும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் மாறியே வந்திருக்கிறது. ஒலி நிரந்தரமானது. வரிவடிவம் மாறக்கூடியது.



18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் செய்த மாற்றங்கள் எகரத்திறகும் ஒகரத்திற்கும் இருந்த புள்ளிகளை நீக்கிவிட்டு எகரத்தில் ஒரு சிறு கோடு சேர்ப்பதன் மூலம் ஏகாரமாகவும், ஒகரத்திற்கு சுழிப்பதின் மூலம் ஒகாரமாகவும் அவர் உருவாக்கினார். பனை ஏடுகளில் புள்ளி வைக்கும் சிரமத்தை தவிர்க்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம்.



சென்ற நூற்றாண்டில் பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு (படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல்) உயிர் மெய் ஆகார வரிசைகளில் மூன்று எழுத்துகளையும், உயிர் மெய் ஐகார வரிசைகளில் நான்கு எழுத்துகளையும் சீர்மையை கொண்டு வந்தது. இந்த மாற்றங்களினால் தமிழ் வரிவடிவம் ஒழுங்கு பெற்றதேயன்றி தமிழுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாம் பரிந்துரைக்கும் சீரமைப்பில் உயிர் மெய் இகர, ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர, ஊகார வரிசைகளிலும் தனித்தனி எழுத்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக உயிர் மெய் இகர ஈகார வரிசைகளிலும், உயிர் மெய் உகர ஊகார வரிசைகளிலும் மற்ற உயிர் மெய் வரிசைகளைப்போலவே உயிர் குறியீடுகளை பயன்படுத்துவதை பரிந்துரைத்திருக்கிறோம் இதனால் இந்த நான்கு வரிசைகளிலும் ஒரு சீர்மை யூனிபார்மட்டி வருகிறது. 72 வரிவடிவங்களை கற்பதற்கு பதிலாக நான்கு குறியீடுகளை கற்கவேண்டியிருப்பதால் கற்பது எளிதாகிறது. கற்பதில் விரைவு இடம் பெறுகிறது. 


இப்படிபற்ற மாற்றத்தை நாம் தான் முதன் முதலில் செய்ய சொல்லுகிறோம் என்பதில்லை. நமது முன்னோர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் சான்றுகள் பின்வருமாறு....

நமது முன்னோர்கள் உயிர் மெய் இகரத்திற்கு குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை படத்திலுள்ள வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.



உயிர்மெய் ஊகாரத்திறக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை வேள்விக்குடி செப்பேட்டில் பார்க்கலாம்.



உயிர்மெய் ஐகாரத்திற்கு குறியீட்டை தமிழக அரசு செய்த சீர்திருத்திற்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை பள்ளன் கோவில் செப்பேட்டில் காணலாம்.



உயிர்மெய் எழுத்துகளன்றி உயிர் எழுத்துக்கு கூட உயிர் குறியீட்டை பயன் படுத்தியிருப்பதை காணலாம்.



கிரந்த எழுத்துக்களுக்கும் இது போன்ற உயிர் மெய்க் குறியீடுகளை பயன்படுத்துகிறோம்.



இகர, உகர வரிசைகளில் உயிர் மெய் எழுத்துகளுக்கு உயிர் மெய் குறியீடுகளை நமது முன்னோர்கள் பயன்படுத்தியிருப்பதை செப்பேடுகளில் கண்டோம். என்வே எவ்வித தயக்கமுமின்றி இந்த நான்கு வரிசைகட்கும் சீரமைக்க உயிர் மெய்குறியீடுகளை பயன்படுத்தலாம் என்பது இயல்பாகவே தோன்றும் சீரமைப்பாகும்.



இதில் புரட்சிகரமான அம்சம் ஏதுமில்லை. இதனால் ஏற்படும் நன்மை தான் புரட்சிகரமானது. இதில் கற்பனை செய்யப்படும் அளவில் தமிழுக்கு ஏற்படும் இ.ழப்பு என்று ஏதுமில்லை.



டார்வினின் தத்துவம் வலியது வெல்லும் என்பதன்று. சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உயிர் வெல்லும் மாற மறுப்பது மறையும் என்பது தான்.



நாம் இங்கு எடுத்து வைத்திருக்கும் மாற்றம் நடைமுறைப்படுத்தபட்டால் பெரியார் அவர்கள் எடுத்துவைத்த தமிழ் எழுத்து சீரமைப்பு முழுமை பெறும்.



நாம் கூறும் மாற்றம் மிகவும் எளியது. அளவில் சிறியது ஆலின் விதை போன்றது. அதன் பயன் உண்மையிலேயே ஆல் போன்றது.



தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம்



யாதும் ஊரே யாவரும் கேளிர்  
என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பாடிய கவிஞன் கணியன் பூங்குன்றன் ஒரு தீர்க்கதரிசி. இன்று நாம் குளோபல் வில்லேஜ் அதாவது குவலயக்கிராமம் என்று பேசுகிறோம். உலகு தழுவி வாழும் தமிழினம் இன்று அந்த குவலயக்கிராமத்தில்... குவலயக்குடும்பமாக... குளோபல் பேமிலியாக உருவாகியிருக்கிறது. தமிழர்களை உலகம் இன்று ஒரு மாகாணத்தில் வாழும் மக்களாக பார்க்கவில்லை. பொதுவாக உலகுத் தழுவி வாழும் மக்களாக, குறிப்பாக தெற்கு ஆசிய மக்களாக பார்க்கிறார்கள்.



இந்திய மொழிகளில் வங்கமும் உருதும் அணைடை நாடுகளில் ஆட்சி மொழிகள். அவற்றை விடுத்து மற்ற மொழிகளை மட்டும் நாம் இந்திய மொழிகள் என்று குறிப்பிடுவோம்.



சீன வானொலி 42 மொழிகளில் ஒளிபரப்புகிறது. அவற்றுள் இந்திய மொழிகள் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மட்டும் தான். காரணம் தமிழ் தெற்கு ஆசிய மொழி. சௌத் ஏசியன் லேங்குவேஜ் என கருதப்படுகிறது. உண்மையில் இன்று அது உலக குடிமக்களின் மொழி.

பிபிசி வானொலி உலகு அறிந்தது. அது 32 மொழிகளில் ஒளிபரப்புகிறது. பிபிசி வானொலியும் இந்தாய மொழிகளில் இந்தி தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் தான் ஒளிபரப்பு செய்கிறது. முதலில் கூறிய அதே காரணங்களுக்காகத்தான்.



அண்மைக்காலம் வரை யூனஸ்கோ நிறுவனம் கூரியர் என்ற மாத இதழை 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிட்டு வந்தது. அதில் இடம் பெற்ற இந்திய மொழிகள் இந்தியும் தமிழும் தான்.



இன்று தமிழகத்தில் சில தொலைக்காட்சிகள் உங்கத் தமிழர் செய்திகள் என்ற செய்தி ஒளிபரப்புச் செய்கின்றன. சில தினசரி பத்திரகைகள் வாரம் ஒருமுறையாவது உலகத் தமிழர் செய்திகள் என்று வாரம் ஒருமுறையாவது செய்திகள் வெளியிடுகின்றன. இவையனைத்தும் தொடர வேண்டுமானால், வலிமைப்படவேண்டுமானால், விரிவடைய வேண்டுமானால், உலகத் தமிழ் மக்கள் தமிழோடு, தமிழ் மரபோடு தொடர்பு உடையவர்களாக வாழ.வேண்டும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உலகத் தமிழர்கள் தமிழ் கற்க உதவுகிறது. எழுத்து சீர்திருத்தம் தமிழ் கற்க பெரியளவில் எளிதாக்கும். குறிப்பாக உலகத்தமிழர்கள் தமிழ் கற்பதை எளிதாக்கும். அவர்கள் தமிழ் கற்பது தமிழ் இனத்தின் எதிர்காலத்திறகு வளம் சேர்க்கும், வலிமை சேர்க்கும்.



சங்க்காலக் கவிஞன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடினான். தற்காலத் தமிழர் புவனமும் மானுடர்க்கு பொது என்று வாழ்கிறார்கள்.



தமிழர்கள்

ஒரு மொழியினர்,

பல நாட்டினர்,

எல்லா நட்டிலும் சிறுபான்மையர்.

தமிழர்கட்கு தாங்கள் இன்று பன்னாட்டுச் சிறுபான்மையர் என்ற பார்வை வேண்டும். விழிப்புணர்வு வேண்டும்.



புவனமும் மானுடர்க்கு பொதுவெனும் தமிழச்சாதி ஒரு குவலயக்குடும்பம்.



ஒரு மொழிக்கு உண்மையான வலிமை

இலக்கணம் இலக்கியம் என்பதை விட

பேசும் மக்களின் எண்ணிக்கைதான்.

அந்த எண்ணிக்கையை காப்பதற்கு

முறையான வழியில் எந்த மாற்றமும் செய்யலாம்.

எந்த விலையும் கொடுக்கலாம்.



பெரியார் வழியில் நாம் சொல்லும் மாற்றம்

எளியது, சிறியது, இயற்கையானது.

மண்ணில் நடக்கும் தமிழ் வானில் பறக்க

இறக்கை கொடுப்பது போன்றது.


.........முனைவர் வா.செ.குழந்தைசாமி

Thursday 1 April, 2010

பெண்ணுரிமைச் சட்டங்கள்-2











இயல்புப் பாதுகாவலர்;

இந்து மதத்தைச் சேர்ந்த இளவருக்கே, அல்லது அவருடைய சொத்துக்கோ, இயல்புப் பாதுகாவலர் என்பவர்.

திருமணமாகாத பெண்ணாக இருந்தால், தந்தை இயல்புப் பாதுகாவலர் ஆவார்.

ஐந்து வயது நிறைவடையாத பெண் இளவரைப் பொறுத்த வரை சாதாரணமாக, தாயின் பொறுப்பில்தான் அத்தகைய பெண் இளவர் இருந்தாக வேண்டும்.

முறைதவறிப் பிறந்த திருமணமாகாத பெண்ணாக இருந்தால், அவருடைய கணவர் இயல்புப் பாதுகாவலராவர்.

தந்தை உயிரோடு இருக்கும்போது, தாயார் இயல்புப் பாதுகாவலராக இயங்க முடியுமா?

இளவரையும் இளவரின் சொத்துக்களையும் பாதுகாப்பதில் அக்கறைக் கொள்ளாது இருந்தால், இளவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தந்தை முற்றிலும் பாராமுகமாக இருந்தால், தாய், தந்தையர் இடையே ஏற்படும் உடன்பாடு காரணமாக, தாயாரின்  முழுப்பொறுப்பில் இளவர் விடப்படுவாரானால்,
1. தாயாரும் இளவரும் வசிக்கும் இடத்தைவிட்டு  தந்நை சொலைவில் இருப்பதன் காரணமாகவோ, அல்லது
2. உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ, தகுதியிழந்து விட்டதின் காரணமாகவோ,
3. தந்தை இளவர் நலத்தில் அக்கறை கொள்ள இயலாதிருப்பாரானால்,

மேற்கண்ட சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி (AIR 1999 SC 1149) தந்தை உயிருடன் இருக்கும்போதே, தாயார் இயல்புப் பாதுகாவலராக இயங்க முடியும்.

இச்சட்டம்-
சமயத்தால் இந்துவாக இருப்போருக்கப் பொருந்தும், வீரசைவர், லிங்காயத் அல்லது ஆரிய சமாஜம், பிரார்த்தனா, சமாஜம், பிரம்மோ சமாஜத்தை பின்பற்றுகிறவர் உள்ளடங்கலாக, இந்து சமயத்தச் சார்ந்தவர்களுக்குப் பொருந்தும், புத்த மதத்தையோ, அல்லது சீக்கிய மதத்தையோ சார்ந்தவர்கள் மற்றும், முஸ்லீம், கிருத்துவ, பார்சி மற்றும் யூத மதத்தைச் சாராதவர், இச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் குடியிருந்தால், அத்தகையவருக்கும் பொருந்தும்.


இயல்புப் பாதுவாலருடைய அதிகாரங்கள்;
1. இந்து மதத்தைச் சார்ந்த இளவருடைய இயல்புப் பாதுகாவலர், அந்த இளவரின் நன்மைக்காக அவசிநமான, நியாயமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் பெற்றிருப்பார். இளவரின் சொத்தைப் பெற்றுத்தருவதற்கும், பாதுகாப்பதற்கும், அதே போன்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அதிகாரம் பெற்றிருப்பார். ஆனால், இளவரைக் கட்டுப்படுத்தும் வகையில் உடன்பாடு எதுவும் செய்ய அதிகாரம் பெற்றிருக்கமாட்டார்.

2. இயல்புப் பாதுகாவலர், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி, இளவருக்குரிய சொத்தை அடைமானம் வைக்கவோ, விற்கவோ, தானம் செந்நவோ, உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. 5 வருட காலத்திற்கு அதிகமாக சொத்தை குத்தகைக்கு விடுதல் கூடாது. கெண் இளவர், 18 வயது பூர்த்தியடைந்த பின்பு, மேலும் ஒரு வருடத்திற்கும் கூடுதலாக குத்தகைக்கு விடுதல் ஆகாது.

3. மேற்கூறிய உட்பிரிவு (1) மற்றும் (2)க்கு முரணாக ஏதேனும் அசையாச்சொத்தை இயல்புப் பாதுகாவலர் விற்றால், அந்த விற்பனையை செல்லத்தகாததாக ஆக்கலலாம், பெண் இளவரோ, அல்லது அவரின்கீழ் உரிமை உரிமை கோருபவரோ, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

4. பெண் இளவருக்கு அவசியம் என்றாலொழிய, பயனளிக்ககூடியதென எளிதில் தெரிந்தாலொழிய, நீதிமன்றம், உட்பிரிவு (2)ல் கூறப்பட்ட காரியங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

உயில் வழிப் பாதுகாவலர் மற்றும் அவருடைய அதிகாரங்கள்;
 ஒரு இந்து சமயத்தைச் சார்ந்த தந்தை, தன்னுடைய சட்டப்பூர்வமான பெண் இளவர் குழந்தைகளுக்கு, அல்லது அவர்களது சொத்துக்களுக்கு உயிலின் மூலம் ஒரு பாதுகாவலரை நியமிக்க முடியும். அப்பாதுகாவலர், உயில் வழிப் பாதுகாவலர் எனப்படுவார்.தந்தை இறந்து, தாய் உயிருடன் இருந்தால், உயில்வழிப்பாதுகாவலர் நியமனம் செல்லாது. ஏனெனில் தாய் இரண்டாவது இயல்பு பாதுகாவலர் ஆவார். தந்தை எந்த உயில் சாசனமும் எழுதாமல் இறந்துவிடாடல், தாய் உயில் மூலம் பாதுகாவலரை நியமிக்க முடியும். தாயும் உயில்வழிப்பாதுகாவலரை நியமிக்காமல் இறந்துவிட்டால் தந்தை எழுதிவைத்த உயில்வழிப் பாதுகாவலர் நியமனம், இயக்கம் பெறும்.

இயல் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்து விதவைப்பெண் ஒருவள் இளவருக்காகவோ, அல்லது அவரின் சொத்துக்களுக்காகவோ அல்லது இரண்டிற்காகவோ, பாதுகாவலரை நியமிக்க முடியும். அதே போன்று, இயல்புப் பாதுகாவலராக இயங்க, தந்தை தகுதி இழந்தவராயின், இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்துத் தாய் ஒருவள், மேற்கண்ட நோக்கங்களுக்கு, உயில் வழிப் பாதுகாவலரை இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்து தாய் ஒருவள் மேற்கண்ட நோக்கங்களுக்கு உயில்வழிப் பாதுகாவலரை நியமிக்க முடியும். முறைதவறிப்பிறந்த இளவர் குழந்தைகளுக்கு, இயல்புப் பாதுகாவலராக இயங்க உரிமை பெற்ற இந்துப் பெண் ஒருவள், இந்த இளவர்களுக்கோ, அல்லது அவரின் சோத்துக்கோ, அல்லது இரண்டுக்குமோ, உயில் வழிப் பாதுகாவலரை நியமிக்கமுடியும்.

அவ்வாறு உயில் சாசனம் மூலம் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், இளவரின் தந்தையோ, அல்லது தாயோ இறந்தபிறகு, இளவர் குழந்தைகளுக்குச் சட்டப்படியான பாதுகாவலராக, உயில் மற்றும் சட்டப்படியான அனைத்து அதிகாரங்களையும் பெற்று இயங்க முடியும்.

அவ்வாறு உயில் சாசனம் மூலம் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், இளவரின் தந்தையோ, அல்லது தாயோ இறந்தபிறகு இளவர் குழந்தைகளுக்குச் சட்டப்படியான பாதுகாவலராக, உயில் வழி மற்றும் சட்டப்படியான அனைத்து அதிகாரங்களையும் பெற்று இயங்க முடியும்.

அந்த இளவர் பெண்ணின் பாதுகாவலருடைய அதிகாரங்கள், அப்பெண்ணுக்குத் திருமணம் ஆனதும் அற்றுப்போகும்.
ஒரு இளவர் மற்றொரு இளவருக்கோ, அல்லது அவருடைய சொத்திற்கோ, பாதுகாவலராக இருக்க முடியாது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, எவரும் நடைமுறையில் மெய்யான பாதுகாவலர் என்ற அடிப்படையில், இந்து இளவருடைய சொத்திற்கோ, அல்லது இளவலருக்கோ, பாதுகாவலராக இயங்க இயலாது.


நீதிமன்றத்தின் அதிகாரங்கள்;

கூட்டு குடும்பச் சொத்தில் இந்து இளவருக்குப் பங்கு இருந்து, அக்கூட்டுக் குடும்பச் சொத்தை, அக்கூட்டுக் குடும்பத்தின் தலைவர் பாரமரித்து வரும் பட்சத்தில், அக்கூட்டுக் குடும்பச் சொத்தில்  இளவருக்கு உண்டான பிரிவினையாகாத பங்கின்மூதி, இளவலின் பாதுகாவலர் எந்தவித உரிமையும் கொண்டாட முடியாது. ஆனால் உயர்நீதிமன்றம், அத்தகைய பிரிவினையாகாத பங்கிற்குக் கூட பாதுகாவலரை நியமிக்கும் அதிகாரம் பெற்றிருக்கும்.

நீதிமன்றும், ஒரு நபரை, இந்து இளவருடைய பாதுகாவலர், என்று அறிவிக்க, அல்லது நியமிக்க வேண்டுமெனில், அந்த இளவரின் நலன் மட்டுமே அதற்கு அடிப்படையாக இருக்கவேண்டும்.

இளவர் ஒருவரைப் பொறுத்து செய்யப்படும் பாதுகாவலர் நியமனம், அந்த இளவரின் நலனுக்கு உக்ந்ததல்ல, என்று நீதிமன்றம் கருதினால், சட்டத்தின் வகைமுறைகளின்படி, தானே பாதுகாவலராக இருக்க வேண்டும், என்று யாரும் உரிமை கோர முடியாது.


......தொடரும்.....பெண்ணுரிமைச் சட்டங்கள்-3

Tuesday 30 March, 2010

பெண்ணுரிமைச் சட்டங்கள்-1





மக்களுக்கு தேவையான சட்டங்கள் பற்றி மக்கள் பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதால் பலர் அறியாமையினால் பல இன்னல்களுக்கு ஆளாவதும் தொடர்வதும் வாடிக்கையாகி உள்ளதை நாம் அறியாமல் இல்லை. பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன பாதுகாப்புகள் உள்ளது என்பது பெண்கள் பலருக்கும் தெரிவதில்லை. சட்டம் படித்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாமும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. சட்டங்கள் முதன் முதலில் ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்டது தான். காலப்போக்கில் அந்தந்த நிலப்பரப்பில் வாழும் குழுக்களால் சீர்செய்யப்பட்டு சட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் படியே சட்டக்கல்வியும் மனித சமூகத்தால் சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான்.

அனைவரும் நமக்கு என்னென்ன சட்டங்கள் நமக்கு பாதுகாப்பாக உள்ளன் என்பதை அறிந்தாலே நமக்கு ஒரு கூடுதல் பலம் கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்படும். நம்மை எதிர்கொள்கின்றவர்களும் சிறிது அச்சத்துடனே எதிர்கொள்வர். ஏன் காவல் நிலையங்களை அணுகுவதற்கு கூட சில அத்தியாவச சட்டங்கள் தெரிந்திருக்குமேயானல் அவை நமக்கு கூடுதல் பலம். (பலருக்கு காவல் நிலையத்தில் எப்படி புகார் மனு எழுத வேண்டும், என்பதெல்லாம் தெரியாது, இது எதிராளிக்கு சாதகமாக போய்விடும்) 

சட்டங்கள் நமக்கு பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றன என்பதை அறியாமலே பலர் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படி இன்னல்களுக்கு ஆளாகிறவர்கள் கூட சட்டங்களை அறியாததினால் நமக்கு விதித்தது அவ்வளவு தான் என்று விதியின் பேரில் வாழ்க்கை நடத்துவபவர்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

மனிதன் எப்போழுதும் நிம்மதியான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவான். ஒரு சிறு இடர்பாடுகளை கூட மனித மனம் விரும்புவதில்லை. ஆனால் அது சாத்தியமில்லை எந்த கட்டத்திலும் அவனை இடர்பாடுகள்  தொடர்ந்து சந்திக்க முயற்சி செய்து கொண்டே இருக்கும். அப்பொழுது நமக்கு இந்த சட்ட அறிவு சமயத்தில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வழக்குரைஞரை சந்திக்கும் பொழுது கூட நமக்கு சட்டங்கள் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. தவிர ஒரு நபரின், சாமான்யரின், நடுநிலையான, விருப்பு வெறுப்பற்ற (பக்க சார்பற்ற) கருத்துக்கள், பேச்சுக்களே சட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு நம்மை  நாமே உணர்ந்து கொள்ளலாம், நம்மை இன்னும் மேன்மை படுத்திக்கொள்ளலாம்.

தவிர சட்டங்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவே வகுக்கப்பட்டுள்ளன ஆகையால் அவற்றை தெரிந்து கொள்வதில் நமக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் என்ற நோக்கோடு இந்த பெண்களுக்கான சட்டத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் என்பது நாம் அறியாமலில்லை, பெண் கேலி வதையிலிருந்து (ஈவ் டீஸ்), திருமணம், மாமியார், மாமானார், மருமகள், கணவன், மாமனார், நாத்தனார்...போன்றவர்களால் ஏற்படும் இன்னல்கள், வரதட்சணையால் ஏற்படும் கொடுமைகள், ....அதனால் வெடிக்கும் ஸ்டவ்கள்...தற்கொலைகள், பாலியல் கொடுமைகள்...இன்னும் சமூகத்தில் இவையெல்லாம் மலிவாகத் தொடர்வது தான்.


ஆணுக்கும் இது தேவையான ஒன்று தான். பெண் என்ற பாலினத்தோடு ஆணும் சம்பந்தப்பட்டிருப்பதால், நம் தந்தை ஆண் தானே.  நம் உடன் பிறந்த  சகோதரன் ஆண் தானே. பெண் பாதிக்கப்படும்பொழுது பல நேரங்களில் ஆண் பாலினமான தந்தைக்கே (உடன்பிறப்புக்கும்) பல விஷயங்கள் தெரியாமல் திண்டாடுவதையும் கண்டிருக்கிறோம். ''வேண்டாம்மா விட்டு விடு நமக்கேன் வம்பு'' என்று  வலிய வருகின்ற இன்னல்களையும் தாங்கி கொண்டு செல்கின்ற அப்பாக்களையும், உடன் பிறப்புக்களையும் காணமலில்லை. 

கணவனும் ஆண்தான் அவரும் இதை போன்றதோரு நிலையை சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றிருப்பார். மனைவி வேலை பார்க்கின்ற அலுலகங்களில் உயர் அதிகாரிகளால் ஏற்படும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அனைத்தையும் தெரிந்தும் வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்காக பொறுத்துக் கொள்ளச் சொல்லுகின்ற கணவன்மார்களும் உண்டு. ஆகையால் இது அனைவருக்கும் பொதுவானதொரு சட்டத்தொடர் தான். இப்படி இன்னல்கள் தொடர்வதால் பெண்கள் இனி பொறுத்து கொள்ளத்தேவையில்லை ''இதோ இருக்கிறது சட்டம்''  ''துணிந்து எழுங்கள்'' என்று சொல்லுவது தான் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள். இந்திய பெண்ணுரிமைச்சட்டங்கள். அதை அறிந்து கொள்வதில் பெருமை கொள்வோம்......

குழந்தை திருமணத் தடைச் சட்டம்

ஒரு குழந்தை எனபது என்றால் 18 வயது முடிவடையாத ஒரு பெண்ணைக் குறிக்கும். திருமணம் செய்து கொள்ளும் இரு தரப்பினரில் ஒருவர் குழந்தையாக இருந்தால் அதாவது பெண் என்றால் 18 வயது முடிவடையாதவராக இருந்தால், அது குழந்தைத் திருமணம் என்று பொருள்படும்.


ஆணுக்கென்ன தண்டனை?

18 வயதிற்கு மேற்பட்டு 21 வயதிற்குட்பட்ட ஒர் ஆண், குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அவருக்குப் பதினைந்து நாட்கள் வரை நீட்டிக்கக் கூடிய வெறுங்காவல் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் நீட்டிக்கக் கூடிய அபராதமோ அல்லது இரண்டையுமோ நீதிமன்றம் தண்டனையாக விதித்தாக வேண்டும்.

21 வயதிற்கு மேற்பட்ட ஒர் ஆண் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு 3 மாதம் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டணையும் மற்றும் அபராதமும் வித்தித்உ தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. குழந்தைத் திருமணத்தை நடத்துபவருக்கும், செயல்படுத்துவபவருக்கும், இயக்குபவருக்கும் தண்டனை உண்டு. 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும், மற்றும் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணம் அல்ல என்று தான் நம்புவதற்குக் காரணம் இருந்தது, என்று மெய்ப்பித்தால் தான், இந்த தண்டனையிலிருந்து தப்ப முடியும்.

இளையர் ஒருவர் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரின் பெற்றோர்களோ, அல்லது சட்டப்படியோ, அல்லது சட்டத்துக்கு முரணாகவோ, அந்த இளையரை பொறுப்பில் வைத்திருக்கும் காப்பாளரோ, அந்த செயலில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது அத்தகைய திருமணம் நடப்பத்ற்கு அனுமதித்திருந்தாலோ அல்லது அசட்டை காரணமாக திருமணம் நடப்பதை தடுக்க தவறியிருந்தாலோ, அந்த நபர் 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

ஆனால் பெண் எவருக்கும் சிறைத்ண்டனை விதிக்கப்படக்கூடாது. இந்த சட்டப்பிரிவின் நோக்கங்களைப் பொறுத்தமட்டில், ஒரு இளையர் குழந்தை திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரை (மைனர்) பொறுப்பில் வைத்திருக்கும் நபர் அதற்கு மாறான நிலை மெய்ப்பிக்கப்படும் வரை, தம் அசடைட காரணமாக, திருமணம் நடைபெறுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்றுதான் அனுமானிக்கவேண்டும்.

குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் பிடி ஆணையின்றி கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

சட்ட விளக்கம்; 1973 ஆம் ஆண்டின்  குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, அந்தச் சட்டத்தின் 42 வது பிரிவு மற்றும் பிடி ஆணையின்றி கைது செய்தல் போன்றவைகளைத் தவிர்த்து, இதர பொருள்களின் நோக்கங்களுக்காகவும், மற்றும் அந்த  குற்றங்களை புலன் விசாரணை செய்வதற்கும், பிடி ஆணையின்றி (வித்தவுட் வாரண்ட்) கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

நீதிமன்ற ஆள்வரை (ஜூரிக்ஸ்டிக்சன்)

பெருநகர நடுவர் நீதிமன்றம் அல்லது நீதித்துறை முதல் வகுப்பு நடுவர் நீதிமன்றம், ஆகியவைதாம் குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும், விசாரணை செய்யவும் அதிகாரம் பெற்றவை அகும்.

எந்த நீதிமன்றமும், குழந்தை திருமணச் சட்டத்தில் குறிப்பிட்ட குற்றம் எதுவும், அந்தக் குற்றம் புரியப்பட்ட நாளிலிருந்து ஒராண்டு முடிந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாகாது.

 குழந்தைத் திருமணம் நடக்க இருப்பதைத் தடை செய்ய வழி என்ன?
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புறம்பாக, குழந்தைத் திருமடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்லது நடைபெற உள்ளது., என்பதை ஒரு நீதிமன்றம் ஒரு முறையீட்டின் பேரிலோ, அல்லது அதன்முன் வைக்கப்பட்ட தகவல் அடிப்படையிலோ, அதற்கு திருப்தியளிக்கும் வகையில் முடிவிற்கு வருமானால், அந்த குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளை பிறப்பிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை தடை செய்து ஏவுகட்டளை  (இன்ஜங்ஷன்) பிறப்பிக்கும் முன், எதிர்தரப்பினருக்கு அறிவிப்புக் கொடுத்து, ஏவுகட்டளை ஏன் பிறப்பிக்க கூடாது, என்பதற்கு தகுந்த காரணம் காட்ட சந்தர்ப்பம் ஒன்று அளிக்கப்பட்டாக வேண்டும்.


அந்த ஏவுகட்டளை உத்தரவை, நீதிமன்றம், தானாகவோ, அல்லது பாதிக்கப்பட்ட நபரின் முறையீட்டின்பேரிலோ, நீக்கி விடலாம், அல்லது மாற்றலாம்.


குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளைப் பிறப்பிக்கப்பட்ட நபர், அந்த நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்ப்படியாது செயல்பட்டால், 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தண்டனை, அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம், அல்லது இரண்டாலும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். ஆனால் பெண் எவருக்கும் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படலாகாது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கான தண்டனையில் குற்றம் செய்தவர் பெண் என்றால், அவருக்கு தனிச் சலுகை உள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (3) மற்றும் (4)ன் கீழ் குழந்தைத் திருமணம் செய்து கொள்ளும் 18 வயதுக்கு மற்றும் 21 வயதுக்கு மற்றும் மேற்பட்ட ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (6) கீழ், இளையர் ஒருவருக்கு குழந்தைத் திருமணம் செய்பவர், அவர் பெற்றோராக இருந்தாலும், பாதுகாவலராக இருந்தாலும், தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தத் தண்டையில், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டணையும் உண்டு. ஆனால், அந்தப் பிரிவில், குற்றம் புரிந்த ஒரு பெண்ணை, சிறைத் தணைடனை விதித்துத் தண்டிக்க முடியாது.

குழந்தைத்திருமணத் தடைச்சட்டம் பிரிவு (12)ன்  கீழ், நிதிமன்றம் பிறப்பித்த ஏவுகட்டளைக்குப் பணியாமல் செயல்பட்டவருக்கு, 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தடண்டணையும் விதிக்கப்படலாம். ஆனால், அத்தகைய குற்றம் புரிந்தவர் பெண் என்றால், அவருக்குச் சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளிக்க முடியாது.


18 வயது நிறைவடையாத பெண் இளவர் (மைனர்) ஆவார்.

18 வயது பூர்த்தியடையாத பெண் இளவரையோ, அல்லது அவருடைய சொத்தையோ, அல்லது இரண்டையுமோ, தன் பாதுகாப்பில் கொண்டிருப்பவர் பாதுகாவலர் ஆவார். பாதுகாவலர்களில், இயல்புப் பாதுகாவலர், இளையவருடைய தாயோ, தந்தையோ எழுதி வைத்த உயில் சாசனப்படி நியமிக்கப்பட்டவர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர், சட்டப்படி அதிகாரம் கொண்ட எந்த நபரும், பாதுகாவலர் என்ற சொற்றொடரில் அடங்குவர். 

....தொடரும்....பெண்ணுரிமைச் சட்டங்கள்-2

Monday 29 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-17






தமிழ்த் திருமணம் இணைப்பு (7)


குழந்தை பிறந்த வீடு தூய்மைசெய் நிகச்சி


1. கிழக்கு நோக்கி, முன்னவனார், கலசம் அமைக்க, பழம் முதலியவை படைக்க.
2. திருமணத்துக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுக. தேங்காய் உடைத்து, ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
3. தாயும் சேயும் விழுந்து வணங்குக/மங்கை விழுந்து வணங்குக.
4. அவர்கள் மீது கலச நீர் தெளிக்க, பருக அளிக்க, திருநீறு குங்குமம் அளிக்க.
5. வீடு முழுவதும் கலச நீர் தெளிக்க.


தூய்மைசெய் நிகழ்ச்சி முற்றிற்று

குற்றம்


(இறுதியாக சுயமாரியாதை திருமணத்தைப்பற்றியும், திருமணங்களில் நடைபெறுகின்ற குற்றங்களை பற்றியும் பெரியார் கூறியவற்றில் சில....பேராசிரியர் நன்னன்)

குடும்ப கட்டுப்பாடு என்னும் கருத்தைப் பெரியார் எடுத்துரைத்த காலத்தில் எல்லாரும் நாணிக் கூசி, அஞ்சி, முகஞ்சுளித்தனர்.ஆனால், பின் எல்லாரும் விரும்பி, ஏற்று, மகிழும் திட்டமாக அது மாறிவிடவில்லையா? அவர் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முன் சென்று சிந்திப்பவர். ஆதலால், அவரைத் தொடரந்து சென்று சிந்திப்பது பலருக்கும் அரியதாக இருக்க கூடும்.

திருமணம், மனைவி, கணவன், மக்கள் என்று சிலவற்றை உண்டாக்கி கொண்டுவிட்டால் அவற்றின் எதிர்கால வாழ்வுக்காக சொத்து சேர்க்கவேண்டும் என்னும் வேட்கை வளர்ந்து எதை செய்தேனும் அதை செய்வது என்னும் நிலைக்கு பலர் வந்து சேரந்து விடுகின்றனர். அந்நிலை அது இது என்றில்லாமல் எல்லா ஒழுக்க கேடுகளையும் தோற்றுவித்துவிடுகிறது. வறிநவன், பொருள் குறைவாக உடையவன் மட்டும்தான் இந்நிலைக்கு வருகிறான் என்றில்லாமல் பெருஞ்செல்வர்களும், அரசர் போன்ற வாழ்வுடையோரும் இந்திலைக்கே வருகின்றனர். இப்படிப்பட்ட அமைப்பை வைத்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் பொது நலன் நாட்டு நலன், உலக நலன் என்பன பற்றிய உண்மையான வேட்கையும், எண்ணமும், முயற்சிகளும் நிலைக்கும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொது உணர்ச்சி எப்படித் தோன்றும்? எப்படி வாழும்? எப்படி வாரும்? அவரவரும் தத்தம் குடும்ப நலனைத்தானே இயல்பாகவும், சிறப்பாகவும் நாட வேண்டிவர்களாக இருப்பார்கள்? இப்போது நிலவும் பொது நலன்கூட அங்குமிங்குமாக ஒரு சிலர் பொது நல நாட்டமுடையோராய் விதி விலக்காக இருப்பதாற்றான் என்றறிய வேண்டும்.

எப்படி மனிதன், மனிதனை அடிமை கொள்ளுவதை தவறு, சட்டப்படி குற்றமான பாரியம் என்று ஆக்கியிருக்கின்றோமோ அதே போல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கி கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்யவேண்டும்.

திருமணம் என்னும் முறையும் அதன் வழிப்பட்ட குடும்பம், சொத்து ஆகியவையும் மனித சமுதாயத்தின் உரிமை, வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றுக்கு தடைகளாக உள்ளன என்பதை பொதுவாக எடுத்துக் கூறுவதோடு சிறப்பாக பெண் விடுதலை, சமத்துவம், உரிமை ஆகியவற்றுக்கு திருமண மறுப்பு இன்றியமையாததென்றும் எடுத்தியம்பியுள்ளார்.

மண்ணின் அழுத்தத்தாலும் கால முதிர்ச்சியாலும் விளையும் பொன் போன்ற கனிப் பொருள்களைப் போல் பகுத்தறிவு தந்தை பெரியாரின் முக்கால் நூற்றாண்டு கால அறிவு, ஆராய்யச்சி, கனிவான சிந்தனை போன்றவற்றின் விளைவாக தம் முற்றி முதிர்ந்த பருவத்தில் தோன்றிய இந்தப் புரட்சி அறிவுக் கனியைப் பக்குவப்பட்ட அறிஞர்கள் மேலும் தொடர்ந்து எண்ணிப் பார்க்க கடமைப்பட்டவர்கள் எனக் கூறி ஈற்றுப் பகுதியாம் இதனை நிறைவு செய்வதன் வாயிலாக இந்நூலையும் முடிக்கிறோம்.


இதுவரை தமிழர் திருமணங்கள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் மற்றும் தமிழர் இல்லங்களில் பல்வேறு சடங்குகளுக்கான தமிழ் மந்திரங்களையும் அதை தமிழர்களை வடமொழி கலக்காமல் பார்ப்பன புரோகிதம் என்ற பெயரில் ஆபாசங்கள் இல்லாமல் நடத்த நம்மாள் முடியும் என்பதனையும். இச்சடங்குகளே வேண்டாம் என்பவர்கள் பெரியார் கண்டறிந்த சுயமரியாதை திருமணங்களை கொண்டு தாமே அவரவர் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்பதனையும் அறிந்தோம். மேலும் சுயமரியாதை திருமணங்கள் மிகவும் சிக்கனமானது. சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டது. இதனால் திருமணத்தின் மூலம் செய்யப்படும் பணவிரயம், காலவிரயம் தடுக்கப்படுகிறது.

இதில் எது சிறந்ததோ (தமிழ் மந்திரத் திருமணங்கள் அல்லது சுயமரியாதை திருமணங்கள்) அதையே தமிழர்கள் பினபற்றி கொள்ளலாம் என்பது தெளிவாகிறது. இதற்கு புரோகிதர் தேவையில்லை தவிர அத்தனை மந்திரங்களும் நமக்கு புரிகின்றது. இல்லறத்தின் மேன்மையும் விளங்குகிறது.மணமகனின் கண்முன்னேயே, அவன் மணமுடிக்கப்போகும் மணமகளை ஆபாசமாக வர்ணிக்கும் பார்ப்பன புரோகிதர்களின் எண்ணம் தவிடு பொடியாகிறது. அந்த எண்ண்ம் முற்றிலும் தடுக்கப்படுகிறது.


தமிழர்களின் எல்லா இல்லச் சடங்குகளையும் தமிழிலேயே நடத்திக்கொள்ளலாம். மந்திரம் என்பது ஒரு வாழ்த்து தான். (எந்த மாயாஜாலமும் உருவாவதில்லை.)

இதனால் தேவையற்ற மணமுறிவுகள் நீதிமன்றத்தின் மூலம் முடித்துக் கொள்வது தடுக்கப்படுகிறது. இவையனைத்தும் புரிதலினால் மட்டுமே சாத்தியம். எதையும் தெளிந்து செய்வது மனிதனின் இயல்பாக இருக்கவேண்டும். இது தமிழர்கள் எப்போதும் பின்பற்றி வந்த ஒன்று தன். இடையில் ஆரியப்பார்ப்பனர்களின் தலையீட்டால் வஞ்சகமாக இந்த சமஸ்கிருத மந்திரங்கள் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கோடு புகுத்தப்பட்டது. அவற்றைக் களைவோம் தமிழர்களாக வாழ்வோம். திராவிட கலாச்சாரத்தை காப்போம். இதுவரை பலத் தளங்களிலும் விவாதிக்கப்பட்டாலும் இதை பார்ப்பனர்கள் எதிர்த்தே வந்திருக்கின்றனர். ஆனால் ஒருவரும் சமஸ்கிருதங்களில் ஆபாசமில்லை என்று அரிதியிட்டு அவர்களால் கூறமுடியவில்லை. மாறாக சமஸ்கிருதம் மேன்மையானது அதை போன்ற ஒலி வேறெதிலும் வருவதில்லை  என்று பூசிமழுகின்றனர். அவர்களுக்கே பொருள் தொரியவில்லை நமக்கெதற்கு? அவர்களுக்கு தெரிந்தாலும் நமக்குத் தேவையில்லை? நமக்குத் தான் அதன் பொருள் தெரிந்துவிட்டதே!  

எமது தாய் மொழித் தமிழைவிடவா? சமஸ்கிருதம் மேன்மையானது. ஆயிரம் இருந்தாலும் என் தாய் மொழியே எமக்கு உயர்ந்தது என்று கூறும் தமிழர்களிடம் இவர்கள் பாச்சா பலிக்கவில்லை.  அவரவர்களுக்கு அவர்கள் தாய்மொழி உயர்ந்தது. 

இதுகாரும் பார்ப்பன புரோகிதர்களால் சொல்லப்பட்டு வந்த சமஸ்கிருத ஆபாச மந்திரங்கள் வேண்டாம் என்று இன்று வரை ஒரு பார்ப்பனரும் மறுத்து கூறவேயில்லை. மாறாக சமஸ்கிருதத்தின் தொன்மையை பற்றி அளந்து கொண்டிருக்கின்றனர். (அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.)  இந்த இணையக்காலத்திலும் அவர்கள் இந்த ஆரிய வெறியுடனேயே வாழ்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.  ஆரியத்தை எதிர்ப்போம் திராவிடத்தை காப்போம்.

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும் தொடர் முற்றும்

Sunday 28 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-16








தமிழ்த்திருமணம் இணைப்பு (6)

எழுத்து அறிவித்தல் விழா




1. மேற்கு நோக்கி, மஞ்சள் பிள்ளையார், கலசம் அமைக்க பழம் முதலியன படைக்க.
2. பிள்ளைக்கு நீராட்டிப் புத்தாடை உடுத்திச் சின்னங்கள் அணிந்து, எதிரே, கிழக்கு நோக்கி அமரச்செய்க.
3. மன்னவனார் வழிபாடு செய்விக்க, திருமண மந்திரங்கள் உடன், விநாயகர் அகவல் ஓதி, ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
4. கலைமகள் வழிபாடு ஆற்றுவிக்க ‘’ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்’’ என்னும் பாடல் குமரகுருபரரின் சகலகலா வல்லி மாலை, ‘புத்துகத்து உள்உறை மாதே’ என்று தொடங்கும் சரசுவதி சிந்தனை ஆகியவை ஓதி, தேங்காய் உடைத்து ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
5. கலச நீரைப் பிள்ளைக்கு மூன்று மூற் உள்ளங்கையில் விட்டுப் பருகச் செய்க. தலைமீது தெளிக்க, புத்தகங்கள் பலகை, அரிசித் தட்டு மீதும் தெளிக்க.
6. அரிசித்தட்டில், பிள்ளையின் வலச்சுட்டு விரலால் ‘அ, ஆ’ பன்னிரெண்டு, ‘க், ஞ்’ பதினெட்டு, ‘A,B,C, இருபத்தாறு, ‘க, உங, ‘1,2,3 பதினொன்று வரை எழுதச்செய்க. தலைப்பில் ‘உ’ ‘ஓம்’ எழுதித் துவங்குக.
7. பத்தகம், பலகைகளைப் பெற்றோரிடமும் ஆசிரியர் இடமும் மற்ற பெரியவர்களிடமும் தந்து, பிள்ளையை விழுந்து வணங்கச் செய்து பிள்ளையிடம் தரச் செய்க. ஒவ்வொருவரும் மஞ்சள், அரிசி தூவி வாழ்த்துக.


எழுத்தறிவித்தல் விழா நிறைவுற்றது.
தாலி


(தாலி பற்றி பெரியார்....பேராசிரியர் நன்னன்)

மூட நம்பிக்கையையோ, குருட்டுப் பழக்கத்தையோ, ஆன்றி அவையிரட்னையுமோ காரடமாகக் கொண்டு பிற்காலத்தில் ஏற்பட்டதுதான் திருமணத்தில் கணவன் மனைவிக்குத் தாலிகட்டும் வழக்கம். பண்டைத்தமிழகத்தில் வீரர்கள் தாம் கொண்டு வந்த புலிப்பல்லால் தாலி செய்து தம் குழந்தைக்கு அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், சிலப்பதிகாரக் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டியதாகத் தெரியவில்லை. பார்ப்பான் வந்து மறை வழி நடத்திய அத்திருமணத்தில் தீ வந்துவிட்டது; ஆனால், தாலி மட்டும் அப்போது வந்ததாகச் சொல்லப்படவில்லை. ஆகவே, மிகப் பிற்காலத்தில் வந்து புகந்த அப்பழக்கம் இன்று பல பெண்களால் தம் உயிரினும் மேலானதாக கருதப்படும் தகைமையை அவர்களுக்கு தந்துள்ளது. அதை ஒரு பெரும் பேறாகவும் பாக்கியமாகவும் கருதும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிட்டது. அது பற்றிய பெரியாரின் கருத்துகள் ஒரு சிலவற்றை மட்டுமேனும் இச்சிறு பகுதியில் தெரிந்து கொள்வோமா?

மாட்டுச் சந்தையில் தாம் வாங்கிய மாட்டின் மீது தமக்குள்ள உரிமையைக் காட்ட வாங்கியவர் அம்மாட்டுக்குத் தாம் வாங்கிச் செனைற புதிய கயிற்றைக் கட்டிப் பிடிப்பது போல் ஓர் ஆண் தான் தனக்கு உரியவளாக ஆக்கிக் கொண்ட பெண்ணுக்கு அதன் அடையாளமாக கட்டுவதுதான் இத்தால். மற்றும் தாம் வளர்க்கும் விலங்குகளுக்கு நகராட்சி வில்லையைக் கட்டுவது கோல் தாலி கட்டி அப்பெண்ணைத் தன் முரட்டுத் தன்மையால் அடிமை கொள்ளும் சின்னமே அத்தால். பெண்களுக்கு சுயமரியாதையும், அடிமைத் தளையை அறுத்துக் கொண்டு விடுதலை பெறும் வேட்கையும், பகுத்தறிவும் ஏற்பட்டால் இப்பழக்கம் நிலைக்காது என்று பெரியார் கூறுவார்.
ஆணின் அடிமையே பெண் என்பதன் அடையாளமாக கட்டப்படும் அத்தாலி சீர்திருத்த திருமணம் செய்து கொள்பவர்கள் பலராலும் கை விட முடியாத வலிமை கொண்டதாக உள்ளது. சுயமரியாதை திருமணங்கள் பலவற்றுள் பார்ப்பார்,அவர் கூறும் மந்திரங்கள், அவர் செய்யும் சடங்குகள், நல்ல நேரம், சோதிடம், இகுனம் போன்ற பற்பலவும் கைவிடப்பட்டிருக்கும். ஆனால், தாலி ம்ட்டும் கைவிடப்பட முடியாததாக இருக்கும். முழுப் பகுத்தறிவு பெற்ற இரு குடும்பங்கள் உறவு கொள்ளும் திருமணங்களில் மட்டுமே தாலியும் இல்லா முழு சுயமரியாதை திருமணங்கள் நடைபெறுகின்றன. மதம், கடவுள், ஆன்மா, விதி போன்ற பலவற்றையும் விட்டவர்கள் சிலர்கூட சாதியை விடத் தயங்குவது போல் பலமூடப் பழக்கங்களை விட்டவர்களும் தாலியைவிடத் தயங்குகிறார்கள். அத்தகைய அச்சத்தை அத்தாலி ஏற்படுத்தியுள்ளது.

தாலியை பெண்களுக்கு மட்டும் ஆண்கள் கட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும். தநாலி கட்டியவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும், தாலி அடிமைச் சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண் பெண் இருவரும் சம அந்தஸ்த்துள்ளவர்கள் என்பதற்கு இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருவருக்கும் தாலி இல்லாமலிருக்கவேண்டும்.

மன்பதையியல் உயர் உச்சப் பகுத்தறிவு மன்ற நீதியரசு தலைவராயிருந்து தந்தை பெரியார் வழங்கியுள்ள இத்தீர்ப்பு ஆழ்ந்து நோக்கி, அமைதி குன்றாமல் எண்ணி, நடுநிலை பிறழாது நின்று ஆய்ந்து, துணிவாகவும், மன்பதை இயலுக்கு மாசு நேராமலும் வழங்கப்பட்ட தீர்ப்பாக துலங்க காண்கிறோம்.




.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -17

Saturday 27 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-15







தமிழ்த்திருமணம் (5)

புதுமனை புகு விழா


1. விடியல் 5-00 மணி போல, நல்ல நேரத்தில், தெரு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டி, இரு குத்து விளக்குகள் ஏற்றி வைக்க.
2. பூசைக்குரிய பொருள்களைத் தட்டுகள், பிறவற்றில் அங்கே வைத்துக் கொள்க. (பால் காய்ச்சுவதற்குத் தேவையான பால் உள்பட) வீட்டுப் பிள்ளையாரை மணையுடன் வீற்றிருக்கச் செய்க.
3. வீட்டுக்கு உரியவரும், அவர் மனைவியாரும் நீராடி சின்னங்கள் அணிந்து வாயிலில் நிற்க.
4. பசுவும் கன்றும் அங்கு வரச்செய்து அவற்றின் நெற்றியை நீர் கொண்டு துலக்கி, மஞ்சள் குங்குமம் இடுக. உடலிலும் அங்ஙனம் செய்க கழுத்தில் பூச்சுற்றுக. கற்பூரம் காட்டுக, பழம் அளிக்க.
5. பசுவும் கன்றும் நுழையும்போதே, முன்னே குத்து விளக்குகளையும்
பூசைப் பொருள்களையும் உள்ளே கொண்டு சென்று பூசை செய்யவேண்டிய இடத்தில் வைக்க. வீட்டுக்குரிய இருவரும் உடன் செல்க.
6. விழாச் சேலை வேட்டி வழங்குதற்குரியவர் வழங்குக.
7. இரு வாழை இலைகள் நடுவில் அரிசி பெய்து கலசம் நிறுவுக, மஞ்சள் பிள்ளையார் அமைக்க.
8. வீட்டுக்குரிய இருவரும் புத்தாடை உடுத்திக்கொண்டு கிழக்கு நோக்கிக் கலசத்திற்கு எதிரே அமர்க. திருமணச் சடங்குக்கு உரிய மந்திரங்களை ஓதி வழிபடுக.
9. திருமண அழல் ஓம்பல் மந்திரங்கள் ஓதி, ஓமம் வளர்த்துக. ஓமப் பொட்டு இடுக.
10. கலசநீரை இருவர் மீதும் தெளிக்க. பின் வீடு முழுவதும் தெளித்துக் கொண்டே சென்று அ.ல் ஓம்பிய நெருப்பை சமையல் அறைழில் புது அடுப்பில் இடுக. பால் காய்ச்சுக.
11. கலச நீரை இருவர் மீதும், வீட்டைச்சுற்றியும் தெளிக்க.
12. கணவன் மனைவியர் இருவரும் காய்ச்சிய பாலை அனைவருக்கும் வழங்கித் தாமும் உட்கொண்டு கிழக்கு நோக்கி நிற்க.
13. ஆசிரியர் பின்வரும் மந்திரங்களை ஓதி வாழ்த்துக;


அ. ‘களித்துக் கலந்த்தோர் காதல் கசிவோடு, காவிரி வாய்க் குளித்து தொழுது, முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்துப் பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே’

ஆ. ‘அன்பர் அங்கிருப்ப, நம்பர் அருளினால், அளகை வேந்தன்
தன்பெருநிதியம் தூர்த்துத் தரணிமேல் நெருங்க, எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும், பொருவில் பல்வளனும் பொங்க
மன்பெருஞ் செல்வம் ஆக்கி, வைத்தனன், மனையில் நீட

இ. இல்லத்தில் சென்று புக்கார், இருநிதிக் குவைகள் ஆரந்த
செல்வத்தைக் கண்டு, நின்று திருமனையாரை நோக்கி,
‘வில் ஒத்த நுதலாய்! இந்த விளைவிலம் என்கொல்?’ என்ன
‘அல ஒத்த கண்டன், எம்மான், அருள்தர வந்தது!’ என்றார்.

ஈ.’பரந்த நிதியின் பரப்பெல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி ‘மற்று இவையும்
உரம் தங்கிய வெம்கரி, பரிசுகள், முதலாம், ‘உயிருள்ள தனமும்,
புரந்த அரசும், கொள்ளும்!’ என மொழிந்தார்,பொறையர் புரவலனார்


14. புதுமனை புகும் கணவன் மனைவியர் இருவரும் அவையினரை விழுந்து வணங்கிக் கொள்க.
15. அவையினர் மஞ்சள் அரிசி சொரிந்து வாழ்த்துக.

பின்வரும் மந்திரம் ஓதி.
நன்மை பெருக அருள் நெறியே வந்து, அணைந்து, நல்லூரில்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து, எழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பு அதனை, முடிக்கின்றோம்’ என்று அவர் தம்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினன், சிவபெருமான்.’


16. அனைவரும் மகிழ்ச்சியில் மலருதல்;
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள,
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாக, குணம் ஒரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே யாக.
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லை இல் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

-சேக்கிழார்

புதுமனை புகுவிழா நிகழ்ச்சி முற்றிற்று
மூட நம்பிக்கை

மனிதன் பகுத்தறிவோடு பிறந்தும் இல்லறத்தை ஏற்றுக் கொள்வதால், கவலையோடேயே சாகிறான். பகுத்தறிவுள்ள மனிதன் எதற்காக்கஃ கவலைக்கு ஆளாக வேண்டும். மனிதனுக்கு கவலை இல்லை என்றால் நீண்ட நாள்கள் வாழ்வான்; நோயற்று வாழ்வான்; மற்ற மனிதருடன் அன்பாக நடந்து கொள்வான். மடமைக்கு அனுகூலமான முறையில் நிகழ்ச்சிகளை அமைத்து அதில் புகத்தி விட்டதால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறான்.




.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -16