Pages

Sunday 31 January, 2010

முதலிடத்துக்குப் போராடிய முதல் நடிக மன்னர்!








முதல் நடிக மன்னர்  (ஆக்ஷன் கிங்) பி.யூ. சின்னப்பாவை பற்றித்தான்.... இந்த பதிவு...


புதுக்கோட்டை உலகநாத சின்னப்பா என்ற முழுப்பெயர் கொண்டவரும் பி.யூ. சின்னப்பா என்று அனைவராலும், திரையுலகத்தினரும் இவரை அன்போடு அழைப்பார்கள். 1940 களில் கொடிகட்டி பறந்த கதாநாயகர்கள் இருவர். அதில் ஒருவர் எம்.கே.டி. இன்னொருவர் பி.யூ.சின்னப்பா. எம்.கே.டி தமது ரசிகர்களின் நெஞ்சில் முதலிடத்தில் இருந்தார் என்றால் பி.யூ. சின்னப்பா இரண்டாமிடத்தில் இருந்தார் என்றால் அது மிகையாகாது.

அக்காலத் திரைப்பட வசனங்களில் புரட்சி......

இத்தனைக்கும் தியாகராஜ பாகவதர் படத்திற்கு வசனம் எழுதிய இளங்கோவன் தான் சின்னப்பாவிற்கும் வசனம் எழுதினார். என்ன? வசன கர்த்தாவை இவ்வளவு முக்கியமாக கூறுகிறோம் என்றால். அன்றைய காலகட்டத்தில் இதையெல்லாம் மக்கள் அதிகம் பார்த்தனர். இளங்கோவன் ஒரு சுயமரியதைக்காரர் என்றாலும் திரையுலகில் அவருக்கு தனி செல்வாக்கு பெற்றவராகத்தான் விளங்கினார். கார் வைத்திருந்த வசனகர்த்தாவும் இவர்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் வருவதற்கு முன்பு வரை இவா ஊதினா! அவா வருவா!போன்ற சாதி சாயல் கொண்ட வசனங்கள் அதிகளவில் இடம்பிடித்திருந்தன.


அதற்கு முன் அன்றிருந்த கதநாயகர்கள் பட்டியலையும் வைத்துக்கொள்ளலாம், தவறில்லை..
முதல் இடம் எம்.கே.தியாகராஜ பாகவதர்
இரண்டாம் இடம் பி.யூ. சின்னப்பா
முன்றாம் இடம் எம.கே.ராதா (சந்திரலேகா புகழ்)
நான்காம் இடம் டி.ஆர்.மகாலிங்கம்


அன்றையக் காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் தான் அதிக போட்டி. எம்.கே.டி இவரைப்போல சண்டைக்காட்சிகளில் ஈடுபடவில்லை என்றாலும் பெண் ரசிகைகளின் மனதில் அதிகம் குடிகொண்டிருந்தவர் எம்,கே,டி. ஆனால் பி.யூ.சின்னப்பா பாடுவதில் மட்டுமின்றி, வாட்பயிற்சி, சிலம்பம், குத்துசண்டை, மல்யுத்தம், சுருள் பட்டா..... போன்ற அனைத்து உடற்பயிற்சி சம்பந்தமான கலைகளில் பயிற்சி பெற்றவராக இருந்ததினால், இவர் திரையுலகில் சகலகலா வல்லவராக வலம் வந்தார். ஆண் ரசிகர்களின் குறிப்பாக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இருப்பினும் அவரால் எம்.கே.டி யை பின்னுக்கு தள்ளி கடைசிவரை முதலிடத்தை பெற முடியவில்லை. ஆனால் அதற்கான முயற்சியை மும்முரமாக மேற்கொண்டார் என்பது மட்டும் உண்மை. பி.யூ சின்னப்பாவின் நடிப்பு முறையைத்தான் பின்னாளில் கொடிகட்டி பறந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும் பின்பற்றினார் திரையுலகில் நம்பப்படும் தகவல்.


அவரின் போராட்டத்தை பார்ப்பதற்கு முன் அவரின் பூர்வீகத்தை பார்ப்போம்!


சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும்.சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி ஏதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். கல்வியில் நாட்டமில்லாததால் நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய சின்னப்பா, பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். சாரீரம் நன்றாக உள்ளவர்களுக்கே நாடக கம்பெனிகளில் மவுசு.

சிறுவர்களாக நாடக கம்பெனியில் சேர்ந்தவர்கள் இளைஞனாக மாறும்பொழுது மகரக்கட்டு எனப்படும் குரல் வளை ஒடியும் அப்பொழுது அந்த நாடக்கம்பெனியால் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். வேலையிழப்பும், பெரும்பாலும் நிகழும். அதற்கு பின் வாயப்புக்காக வேறு கம்பெனிகளை தேடி அலைந்தாலும் வாய்ப்புக் கிடைக்காது. அது அந்தக்கால நாடக கம்பெனிகள் கையாண்ட தொழில் முறை யுக்திகள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்....இன்றைய  சினிமாவிலும் சில யுக்திகள் கையாளப்படுகின்றன, இதை அறியாமல் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை இழந்தவர்களை நாம் காணுவது போல அன்றும் இந்த நிலை இருந்தது...


இதை உணராமல் நடிப்பவர்களின் வாய்ப்பு காலப்போக்கில் குறையும் அவர்களிடைய செல்வாக்கு, ஊதியம் அனைத்தும் குறைய ஆரம்பிக்கும் இறுதியில் கம்பெனியை விட்டே ஒருநாள் துரத்தி அடித்துவிடுவார்கள். இதை முன்பே உணர்ந்தவர்கள் வேறு வேறு கம்பெனிக்குத் தாவி தங்களை நிலை நிறுத்திக் கொள்வார்கள். அப்படித்தான் பி.யூ. சின்னப்பாவும் தன்னை (நாடக கம்பெனித் தாவி) நிலை நிறுத்திக் கொண்டார். இல்லையேல் அவர் இந்தளவுக்கு புகழ்பெற்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது.


நாடக கம்பெனியில் (ஒரிஜினல் பாய்ஸ்) இருக்கும் பொழுதே முறையாக சங்கீதமும், குஸ்தி, வாட் போர், மல்யுத்தம் போன்றக் கலைகளை பயின்று கொண்டார். அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் பெயர் மாற்றிக்கொண்டு போட்டியிட்டதாகவும் வரலாறு உண்டு. மக்களிடையேயும் திடீரென தோன்றி பல போட்டிகளில் பங்கு பெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார்.

உடம்பு பூராவும் பிரம்பு வளையங்களை மாட்டிக் கொண்டு தீ பந்தங்கள் சொருகிய கம்புகளை கையில் ஏந்தி, சண்டை போடுவது ஒரு ஆபத்தான விளையாட்டல்லவா? இந்த விளையாட்டை சின்னப்பா புதுக்கோட்டையில் அன்றைய நீதிபதி ஸ்ரீ ரகுநாதய்யர் முன்னிலையில் செய்து காட்டி, சிறப்பு பரிசுகளை சின்னப்பா பெற்றிருக்கிறார்.

வெயிட் லிப்டிங் அதாவது கனமான குண்டுகளைத் தூக்குவது. இதிலும் சின்னப்பா பயிற்சி எடுத்துக் கொண்டார். இது சம்பந்தமான போட்டியில் 150 பவுண்டு வரையில் தூக்குபவர்களுக்கெல்லாமே ஒரு வெள்ளி மெடல் பரிசு வழங்கப்படுவது வழக்கமாம். சின்னப்பாவே 190 பவுண்டு வரையில் தூக்கி விசேஷப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

சினிமாவில் சேர்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன் சின்னப்பா புளியம்பட்டிக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும், பல ஊர்களில் எம்.ஆர். ஜானகியுடன் நிறைய நாடகங்களில் நடித்து விட்டு இந்தியா திரும்பினார்.


சந்திரகாந்தா நாடகத்தில் சின்னப்பா பிரபலமாக விளங்கி வந்ததை அறிந்த ஜூபிடர் பிக்சர்ஸார் சின்னப்பாவை தங்கள் தயாரித்த சந்திரகாந்தா படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். சந்திரகாந்தா படத்தில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய சின்னப்பாவின் நடிப்பும், பாட்டும், சிறப்பாக அமைந்திருந்தன.

சந்திரகாந்தா படம் 1936ல் வெளிவந்தது (சவுக்கடி சந்திரகாந்தா) இப்படத்தில் அவரது பெயர் சின்னசாமி என்றே வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகே சின்னசாமி என்ற பெயர் சின்னப்பா வாக மாறியது. இதுவே அவரது முதல் படமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.. (இதற்கு முன்பும் நடித்திருப்பார்....தகவல்கள் சரிவர கிடைக்கவில்லை)

பிறகு சின்னப்பா பஞ்சாப் கேசரி, ராஜ மோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார். இப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது. எனவே கொஞ்ச காலம் படங்களில் நடிக்காமலிருக்க வேண்டியதாயிற்று. முதலில் தொண்டை தகராறு செய்தது. பிறகு அவருக்கு படத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைக்காமற் போனது. இவையேல்லாம் அவரது மனதைக் கலக்கி விட்டன. இதன் விளைவாக அவர் கடுமையான வைராக்கிய விரதங்களைத் தொடங்கினாராம். சுமார் நாற்பது நாள் அவர் சரியான அன்ன ஆகாரமின்றி மௌன விரதத்தை கடைபிடித்து வந்தாராம். அதனால் அவர் உடம்பு மிகவும் இளைத்துப் போயிற்றாம். இருப்பினும் சின்ன சின்ன வாயப்புகளே அவரைத் தேடி வந்தன. தன்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கி புதுக்கோட்டைக்கே திரும்பி விட்டார். புதுக்கோட்டையில் துறவரம் பூணும் நிலைக்கும் சென்று விட்டார் சின்னப்பா. இதை உணர்ந்தவர் போல் உதவியவர் தான் மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம்.

தொழிலின்றி இருக்கும் நடிகர்களுக்கு துணிந்து சந்தர்ப்பம் அளிப்பதிலும், புதிது புதிதாய் நடிகர்களைப் படங்களில் புகுத்துவதிலும் சாதனை படைத்தவர் டி.ஆர்.சுந்தரம், ஆகவே வேலையின்றி இருந்து வந்த சின்னப்பாவைத் தேடிப்பிடித்து தம் உத்தமபுத்திரன் படத்தில் அவருக்கு கதாநாயகன் வேடத்தை அளித்தார்.

1940ல் வெளிவந்த உத்தமபுத்திரன் படம் சூப்பர்ஹிட் ஆகியது. சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பு ரசிகர்களை அசர வைத்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடலும், சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை படைத்தது. அந்த வருட சினிமா பட தேர்தலில் உத்தமபுத்திரன் முதல் இடத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து அன்றைய சினிமா உலகில் சின்னப்பா சூப்பர் ஆக்டர் ஆக திகழ்ந்தார்.

உத்தம்புத்திரன் படத்தின் மூலம் உயர்நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்ந்த பி.யூ. சின்னப்பா செல்வத்திலும் உயர்ந்த இடத்திற்கு வந்தார். புதுக்கோட்டையில் வீடுகளாக வாங்கி குவித்தார். இவரின் செல்வாக்கை கண்டு, ''எங்கே புதுக்கோட்டை நகரமே பி.யூ  சின்னப்பாவுக்கே ஆகிவிடுமோ'' என்று அஞ்சிய புதுக்கோட்டை மன்னர் பி.யூ.சின்னப்பா இனி புது வீடுகளே புதுக்கோட்டையில் வாங்க்கூடாது என்று அவசர சட்டமே பிறப்பித்தார் என்றால் அவரது செல்வாக்கு எவ்வளவு உயர்ந்திருந்தது என அறியலாம்.

(குறிப்பு; பின்னாளில் ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டிருந்தது  இப்படித்தான்..... ""புதுக்கோட்டை நகரத்தையே ஆக்கிரமித்த சின்னப்பாவின் செல்வாக்கு எப்படி அழிந்ததோ....?"" அவர் மனைவி சகுந்தலா அந்திம காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டபட்டதையும்,  வறுமையில் வாடியதையும், அவர் மனைவி சகுந்தலாவின் கண்ணீர் மல்க பேட்டி அளித்ததையும் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தது....)

அதன் பின்னர் தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன், மனோண்மணி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றுள் மனோண்மணியில் தான் சின்னப்பா அதிகம் பாராட்டுதல் பெற்றார்.

இந்த கால கட்டங்களில் தான் ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர் ரசிகர்களும், நடிக மன்னர் பி.யூ.சின்னப்பா ரசிகர்களும் (ஆக்ஷன் கிங்) ஆங்காங்கே மோதி கொண்டனர். சில இடத்தில் அடிதடியும் நடந்து உள்ளது.

அக்காலத்திலேயே ரசிகர்கள் இருவேராகப் பிரிந்து செயல்படும் முறை இருந்தது. கட் அவுட், பேனர் வைக்கும் முறை என்றாலும் சரி, திரைப்படத்தில் தன் நாயகர் தோன்றும் போது சூடம் காட்டுவதென்றாலும் சரி இந்த அரைவைக்காட்டுத்தனங்கள்  எல்லாம் அன்றிலிருந்தே ஆரம்பித்து தொடர்ந்து வந்தவைகள் தான்.  ரசிகர்களிடையை கைலப்பும் அவ்வப்பொழுது படம் வெளியாகும் பொழுது தொடர்ந்தது.ஆனால் இதற்கு காரணிகளாக விளங்கிய நாயகர்கள் தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கி கொண்டிருந்தனர் என்பது மட்டும் உண்மை.

பி.யூ. சின்னப்பாவின் குரல் வளம் பற்றி.......


1944 இல் வெளியான ஜெகதலப்பிரதாபன்... தாயைப் பணிவேன்...நமக்கினிப் பயமிது கல்யாணி ராகம்.... பாட்டும் நானே பாவமும் நானே என்ற திருவிளையாடல் பாடலும்  கல்யாணி ராகத்தில் பாடப்பட்டது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் திருவிளையாடல் படத்தில் டி.எம்.செளந்திரராஜன் சிவாஜிக்காக பாடியது. அதில் சிவாஜி வீணை வாசிப்பவராக, மிருதங்கம் வாசிப்பவராக என ஐந்து வேடங்களில் டிரிக் ஷாட் மூலம் தோன்றி பாடல் போட்டிக்காக வந்த பானப்பத்திரரை (டி.எஸ் பாலைய்யா) ஊரை விட்டே ஒடச்செய்த ராகம்  (கதைப்படிதான்)...  ஆனால் ஜெகதலப்பிராதபனில் பி.யூ.சின்னப்பா 5 வேடங்களில் தோன்றி இந்த ராகத்தில் சொந்தக்குரலில் பாடி அனைவரையும்  அன்றே அதாவது 1944 லேயே அசத்தினார் என்று இசை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தமிழ் நாட்டின் தவ நடிக பூபதியாக விளங்கியவர் பி.யூ. சின்னப்பா, இசையை விட நடிப்புக்கு முன்னுரிமை என்பதால் இது வந்தது.... எம்.கே.டி யை ஏழிசை மன்னர் என்று புகழ்ந்தாலும், பியூ சின்னாப்பாவைத்தான் நடிப்பிற்கான உதாரணமாக காட்டினார்கள் என்று பி.யூ. சின்னப்பாவின் பரம ரசிகரான மருதக்குமாரன், பழம்பெரும் பத்திரிகையாளர், (சினிமா எக்ஸ்பிரஸ், தென்றல் திரை பணியாற்றியவர்) கூறுகின்றார்.  மேலும் எம்.கே.டி  பாகவதற்கு நடிப்புத்திறமை குறைவுதான் இது அவருக்கும் தெரியும், ஆனால் நடிப்பு, பாட்டு இரண்டிலும் அசத்தியவர் பி.யூ.சின்னப்பா.

பி.யூ சின்னப்பா, எம்,கே.டி இருவருக்குமுள்ள வேறுபாடுகள்.....

எம்.கே.டி யின் பாடல்களில் கர்நாடக சங்கீத சமாச்சாரங்கள் அதிகமிருக்கும் ஆனால் பாவம் இருக்காது, இது எம்.கே.டி யின் பாடல்களில் உள்ள முக்கிய குறைபாடாக கூறுகிறார்... பி.யூ சின்னப்பாவிடம் பாவம் அதிகமுண்டு, வசனங்களை உணர்ச்சிபூர்வமாக, தெள்ளத்தெளிவாக பேசுவதில் வல்லவர், என்று அவரின் ரசிகரும், ஹரிக்கதா கலைஞருமான கல்யாணபுர சந்தானம் இவ்வாறு கூறுகிறார்....

''அவருடைய குரல் கணீரென்று ஒலிக்கக்கூடிய (Metallic Voice) அளவில் ரத்தினக்குமார் என்ற படத்தில் பாடியிருப்பது போல்  எம்.கே.டி யால் பாட முடியாது என்றும் கூறுகின்றார். அது சோக ராகமாக  (Pathos) இருந்தாலும் அதற்குரிய பாவங்களுடன் அமைந்திருந்தது''.






''கிருஷ்ணபக்தியில் கதாகாலட்சேபம் செய்யும் காட்சியில் செங்கமலம் என்ற தாசியை வர்ணிப்பு செய்யும் காட்சி மிகவும் பிரசித்திபெற்றது. அதில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.  அதுவும் மிகவும் காமுகன், வில்லன் மாதிரியான பாத்திரம் தான் அப்போழுதெல்லாம் இம்மாதிரி பாத்திரங்களில் ஒரு கதாநாயகன் துணிந்து நடிக்க முன் வரமாட்டார்கள். ஆனால் பி.யூ. சின்னப்பா துணிந்து நடித்து காட்டினார். அப்படத்தில் வரும் பாட்டுக்கள் மட்டும் பிரசித்திபெற்றவை, குறிப்பாக கதாகாலட்சேப பாட்டுக்கள் மிக புகழ்பெற்றவை''.....''கிட்டதட்ட ஒரு வருடம் ஒடிய படம்.''.... என்று  மருதக்குமாரன் குறிப்பிடுகிறார்....

''கண்ணகியில் .....சந்திரோதயம் இதிலே..... காணுவதும் செந்தாமரை முகமே...... இந்த காட்சியிலும் சின்னப்பாவின் நடிப்பு அபாரமானது''..... என்று மருதக்குமாரன் குறிப்பிடுகிறார்.

ஒரு முறை இசை விமர்சகர் வாமணன்  அவரது நண்பர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியுடன்  (சங்கீத வித்துவான்) பேசிக்கொண்டிருக்கையில்  .'' எப்படிபட்ட சங்கதிகள் போடுகின்றான் இந்த மனுசன்'' ..... ''சங்கீதத்தில் பயம் என்பதே துளிகூட கிடையாதா''..... ''இவனுக்கு''.... என்று தன்னிடம்  கிருஷ்ணமூர்த்தி கூறியதாக வாமணன் பெருமையாக கூறுகிறார்....

1940 இல் வந்த உத்தம்புத்திரன் படம் இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. அதில் இவருக்கு இரட்டை வேடம் (டுயல் ரோல்-dual role). அதுதான் முதன் முதலில் வந்த டுயல் ரோல் படம் என்பதால் அது என்ன என்பதை அறிவதற்காகவே மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கி படையெடுத்தது.

பிருதிவிராஜனில் பிருதிவிக்கும், சம்யுத்தைக்கும் ஏற்பட்ட கதைப்படியான காதல்,  அவ்வேடத்தில் நடித்த சின்னப்பா, ஏ.சகுந்தலா இவர்களிடையே நிஜக்காதலாய் முடிந்தது. இருவரும் தம்பதிகளாயினர்.

சின்னப்பா ஏ.சகுந்தலாவை 05.07.1944.ந் தேதி அன்று சட்டப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

சின்னப்பாவின் வளர்ச்சி......

சின்னப்பா ஆர்யமாலா படத்தின் மூலம் நிறைய புகழை பெற்றார். பிறகு வந்த கண்ணகி படம் சின்னப்பாவை பாக்ஸ் ஆபீஸ் கதாநாயகனாக ஆக்கியது.
கண்ணகிக்குப் பிறகு சின்னப்பா குபேரகுசேலர், ஹரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், மஹா மாயா ஆகிய மூன்று படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன. மஹாமாயா சுமாரான படமாய் இருந்தது. ஆனால் சின்னப்பாவை பொருத்தவரையில் நடிப்பில் படத்திற்குப் படம் அசத்தி வந்திருந்தார்.

சின்னப்பாவின் பாட்டுகள் இசைத்தட்டுகளில் வெளிவந்து நல்ல விற்பனையாகியது. வனொலியில் ஒரே ஒரு தடவை ( 1938ம் வருடம்) பாடியிருக்கிறார். ஆனால், அவர்கள் அப்போது அளித்த சன்மானம், சின்னப்பாவுக்கு போதவில்லை.  இதற்காக ஏற்பட்ட செலவை விடக் குறைவாயிருந்ததால் வானொலி விஷயத்தில் அவர் அக்கறையே கொள்ளாமல் விட்டு விட்டார்.

சின்னப்பா நடித்து வெளிவந்த மற்ற படங்கள் பங்கஜவல்லி, துளசி ஜலந்தா, விகடயோகி, கிருஷ்ணபக்தி முதலியவையாகும். கிருஷ்ணபக்தி அவருக்கு நிறைய புகழை வாங்கி தந்தது.

மங்கையர்கரசி யில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்று மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இதுவும் ஒரு சூப்பர் ஹிட் படமாக சின்னப்பாவுக்கு அமைந்தது.



இவ்வளவு பெருமைகளையும் பாரட்டுகளையும் சுமந்த சின்னப்பா முதலிடத்திற்கு உயர்ந்தாரா? என்றால் இல்லை? அதற்கு தடையாக இருந்தது அவரது குணங்களும் சில பழக்கவழக்கங்களும் தான். திரைப்பட நடிகர்கள் பற்றிய பத்திரிகையாளர்கள் விமர்சனத்தை பாகவதரைப் போல் அல்லாமல் மிகச்சாதாரணமாக எடுத்துக் கொண்ட சின்னப்பா திரையுலகத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து போவதென்பது குறிப்பாக தொழில் சார்ந்தவர்களிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அவர்களை பொருத்தவரை பொருத்தவரை இவர் ஒரு  முன்கோபி. எதிராளியை சற்றும் யோசிக்காமல் கை நீட்டிவிடுவார். '' என் பாட்டுக்காகத்தான் கண்ணகி ஒடியது'' என்று பாடலாசிரியர் பாபநாசன் சிவன் ஒரு படப்பில் பேசிக்கொண்டிக்க, அதைக் கேட்ட சின்னப்பா சீறிப்பாய்ந்து சிவனை புரட்டியெடுத்திருக்கிறார். அதைப்போலவே ''சின்னப்பா ஒரு குடிகாரர்'' (தற்பொழுதய உயர் நட்சத்திரத்தையும் ஒருவர் கூறியிருக்கிறார், அவரும் நகைச்சுவை பெண் திரைக்கலைஞர் தான், அதனால் பெரும் சர்ச்சை விளைந்தது,  இதை பார்த்து தான் கூறினாரோ?) என்ற ரீதியில் உடுமலை நாராயணகவி பேசிவிட சின்னப்பா அவரை ஒட ஒட விரட்டியடித்திருக்கிறார்.


அதிகாலையிலேயே படப்பிடிப்பு தளத்துக்கு சின்னப்பா வந்துவிடுவார். தளத்தில் அவருக்கென்று இரண்டு வறுத்து வைத்த கோழி கூடவே மதுபாட்டில்களும் வைத்துவிடுவார்கள், எல்லாம் தயாரிப்பாளர்கள் செலவுதான். இதையெல்லாம் காலி செய்து விட்டு, பின் படப்பிடிப்பு மைதானத்தில் சிலம்பம் சுத்தி விட்டு மேக்கப் போட்டு  தளத்திற்குள் நுழைவது இவரது வழக்கம். காலையிலேயே மது அருந்தியதால் ஏற்படும் வாடையால் கூட ஜோடியாக நடிக்கும் நடிகைகளுக்கு குமட்டி கொண்டு வருமாம்.... (இப்போதும் இருக்கிறார்கள்....) இவைகளெல்லாம் சின்னப்பாவின் செல்வாக்கை குறைக்கவே செய்தது.... என்னதான் திறமை இருந்தாலும், சின்னப்பாவின் முரட்டுத்தனமும், போதைப்பழுக்கமும் பத்திரிகை மூலம் வெளித்தெரிய ஆரம்பிக்க ரசிகர்களும் வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தனர். ஆகையால் சின்னாப்பா பின்தங்கியே இருந்தார். இறக்கும் வரை அவருக்கு இரண்டாவது இடமே நிலைத்தது.


இதற்கு நேர்மாறாக பாகவதர் இருந்தார். எவ்வளவு பூகம்ப பிரச்சினைகள் வந்தாலும் நிதானமாகப் பதுங்கி பாயும் தன்மை கொண்டவர். எல்லோருக்கும் இனியவராக விளங்கினார். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய நிலைப்பாடு  (இமேஜ்) சரியும் செயல்களை செய்ததில்லை. (இமேஜ்...... லட்சுமி காந்தனை பிடிக்காமல் போனதோ?) ஆகையால் ரசிகர்கள் மட்டுமில்லாது, படவுலகத்தினரின் மத்தியிலும் செல்வாக்கு பெற்றிருந்தார்.

தமிழ் திரையுலகில் முதன் முதலில் நடிக மன்னன் என புகழப்பட்ட சின்னப்பா 23/09/1951 ம் ஆண்டு இரவு 9.45 மணிக்கு தனது முப்பத்தி ஐந்தாவது வயதில் காலமானார்.

சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசி படங்கள் வன சுந்தரி, ரத்னகுமார், சுதர்ஸன் ஆகும். சுதர்ஸன் என்ற படம சின்னப்பா மறைவுக்கு பிறகு தான் வெளிவந்தது. இந்தப்படம் தான் சின்னப்பாவின் கடைசிபடமாகும்.

அவரது மகன்.........

சின்னப்பாவுக்கு ஒரே மகன் அவர் பெயர் பி.யு.சி.ராஜபகதூர் ஆகும்.
ராஜபகதூர் கோயில் புறா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
கோயில் புறா படம் அவருக்கு எந்த பெயரையும் வாங்கித் தரவில்லை. இதை தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, கரகாட்டக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.
சினிமாவில் ராஜபகதூர் வளர்ந்து வந்த நேரத்தில் அவரும் காலமானார். (இவரைப்பற்றிய தகவல்கள் சரிவர கிடைக்கவில்லை)


சின்னப்பா 27 க்கும் மேறபட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், சின்னப்பாவின் பல படங்கள் சேமித்து வைக்காததின் விளைவாக பல படங்கள் அழிந்துவிட்டன. பாடல்களும் சரியாக சேமித்து வைக்கப்படவில்லை. இவைகளை சேகரித்து, சேமித்து வைப்பதினால் இவரின் தமிழிசைப் பாடல்களை எதிர்வரும் காலத்தினர் அனைவரும் நுகரும் வாய்ப்பு கிட்டும். அரசு இவைகளில் அக்கறை காட்ட வேண்டும்.


மேலும் சுவாரசியமான தகவலுக்காக.....http://www.lakshmansruthi.com/legends/puc.asp 



ஆதாரம்; லஷ்மண் சுருதி இணையதளம், பிபிசி தமிழோசை பாட்டொன்று கேட்டேன்,
நூல் ஆதாரம்; தமிழ் திரையுலக சாதனைப்படங்கள்....பாலபாரதி

Saturday 30 January, 2010

பேசும் கலை வளர்ப்போம் -19


  





பேசும் கலை வளர்ப்போம் -19

    இப்போது வயது நாற்பத்தி ஆறு.தோற்றம் வயதைத் தெரிவிக்காது என்றாலும் நன்கு முதிர்ச்சி பெற்ற கருத்துக்களை மேடைகளில் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் குனிந்து வளைந்த, ஆனால் யாருக்கும் வளையாத கொள்கைகளை அள்ளித் தருகிறார். கறுப்புச்சட்டை மேனியை அலங்கரிக்கிறது. கையிலே சொற்பொழிவக்கான குறிப்புகள். அருகேயுள்ள மேஜையிலே அன்றைய பேச்சுக்கான ஆதாரங்களை எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பான பெரிய பெரிய புத்தகங்கள். 'இங்கேதான் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது, மிக மிக முக்கியமானது'' என்ற சொற்றொடர் அடிக்கடி பேச்சிடையே வந்து கொண்டிருக்கிறது. மணிக்கணக்கில் பேசுகிறார் யார் இவர்?

     வேறு யாருமல்ல; தனது பத்தாவது வயதிலேயே திராவிடர் இயக்க மேடைகளில் பேச ஆரம்பித்தவர் இன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்-விடுதலை நாளிதழின் ஆசிரியர் - வீரமணி அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்.

     பத்து வயது முதற்கொண்டே பெரியாருடன் பணிபுரிந்து கொண்டு-பள்ளியிலும் பயின்று-கல்லூரியிலும் பட்டம்பெற்று- திராவிடர் கழகத்தின் ஓய்வறியாத் தொண்டராகவும் விளங்கிய வீரமணி, இளந்தளிர்ப பருவத்திலே மேடையிலே பேசுகிற வியப்புமிகு நிகழ்ச்சியைக் காணப் பெருங்கூட்டம் திரளும்.

    பெரியாரின் தலைமையை ஏற்றுக்கொண்டோம் என்பது மட்டுமல்லாமல்-அவருடனேயே இருந்து-அவருடனேயே சுற்றுப் பயண நிகழ்ச்சிகளுக்குச் சென்று - அவரது குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு ஏடுகளின் அலுவலகங்களில் பணிபுரிந்து-அவரது கொள்கைகளை எழுத்து வாயிலாகவும், பேச்சின் மூலமும் மக்களிடம் பரப்பிய பல தலைவர்கள் உண்டு.

     அவர்கள், கால வேறுபாட்டால் பல இயக்கங்களுக்குச் சென்றிருகக்கூடும். ஆனாலும் அவர்கள் தலைவர்களாக, பேச்சாளர்களாக, எழுத்தாளராக மதிக்கப்பட்டதற்கும்-மதிக்கப்படுவதற்கும்- பெரியாரிடம் பெற்ற பயிற்சியே காரணம் என்பதை அவர்களும் மறந்ததில்லை! மறைத்ததுமில்லை!

     அதைப்போலவே பெரியாரைத் தலைவராக கொண்ட பேரறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; அவருடன் உரையாடி - அவருடன் நீண்ட சுற்றுப் பயணங்களில் கலந்துகொண்டு-அவரைப் பிரியாமல் இருந்தே பயிற்சி பெற்றுப் பல்வேறு ஆற்றல் பெற்றவர்களும் உண்டு!

    பெரியார் - அண்ணா-இருவரிடமும் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பு பெற்று அவர்கள் வகுத்த இலட்சியங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களும் உண்டு! அவர்கள், தாங்கள் பெற்ற அந்த பெரும் பேற்றுக்காக பெருமைப்படக்கூடியவர்கள்! அந்தக் குழுவினரில் எனக்கும் ஒரு இடம் இருந்தது என்று என்னைப்போலி எண்ணி மகிழக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

   மிக இளம் வயதிலேயே சிறுவர் சிறுமியர் மேடைகளில் பேசுவது இன்றைக்கு எல்லாக் கட்சிக்கூட்டங்களிலும்; ஏன், சமயநெறிகூட்டங்களில் கூடக்காணுகிற நிகழ்ச்சியாகிவிட்டது.

     ஆனால், பல சிறுவர், சிறுமியர்-ஏதோ தாங்கள் பெற்றோர் ஆசைக்காக-உற்றார் உறவினர் விருப்பத்திற்காக-அல்லது அந்தச்சிறுவர்களே அதை ஒரு 'மேனியா'வாக எடுத்துக்கொண்டு மேடைகளில் யாரையோ தாக்கியோ,புகழ்ந்தோ பேசிவிட்டு கைத்தட்டலைப்பெற்றுவிட எண்ணுகிறார்களேதவிர, தங்களுஉடைய கல்விப் பயிற்சியை வளர்த்துக்கொள்ளவும், தெளிவாகத்தெரிந்து கொள்ளவும் முனைந்திட வேண்டுமென்று அவாக்கொண்டிருப்பவர்களாகத் தெரியவில்லை.

     அத்தகைய சிறுவர்கள், அல்லது சிறுமியர்-நண்பர் வீரமணி எப்படித் தனது இளம் வயதில் இடைவிடாது உழைத்து-கல்வியில் அக்கறை காட்டி - தலைவரிடம் விசுவாசமாக இருந்து-அதே போலக் கொள்கையிலும் உறுதியாக விளங்கிடுகிறார் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்திடவேண்டும்.

     பெரியாரின் அண்ணன் மகனார் தோழர் ஈ.வெ.கி. சம்பத், இளம்வயதிலேயே அண்ணாவுடன் நெருங்கிப் பழகி-'சொல்லின் செல்வர்'என்ற சிறப்புபெறுகிற அளவுக்குப் பேச்சாளராக விளங்கினார். கொள்கையில் நிலைத்த நெஞ்சமில்லாத காரணத்தால் அவரது அரிய ஆற்றலைத் தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இயற்கை, அவரை முழு வாழ்வு வாழ விடாமல் நம்மிடமிருந்து பறித்துகொண்டுவிட்டது. திராவிடர் இயக்கம், தமிழ் தேசியக்கட்சி, காங்கிரஸ் என்று கட்சி மாற்றங்கள் அவருக்கு ஏற்பட்ட போதிலும் வீறுகொண்ட விரிவுரையாளராகத் திகழ்ந்தார்.

   அவரை எதிர்த்து தி.மு. கழகச் சார்பில் 1962-ல் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாஞ்சிலார் என்னும் நாஞ்சில் கி. மனோகரன் அவர்கள், அவருக்கு ஈடுகொடுக்கும் சொல்வல்லாராகத் திகழ்ந்தவர்- இப்போது மினவெட்டுப் போன்ற மிடுக்கான பேச்சுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிற அவர், தனது இளம்பிராயத்திலேயே மேடைகளில் முழங்கிடத் தொடங்கியவர்தான்!

     மிக இளம் பருவம் எனக் கூற முடியாவிட்டாலும் கட்டிளம் காளையாக மேடையேறிக் கனல் தெறிக்கும் சொற்களால் மக்களைக் கவர்ந்து கடினமான விஷயங்களையும் பெர்யார் பாணியில் மிக விரிவாக எடுத்துரைத்து 'வாலிப் பெரியார்' என்றே அழைக்கப்பட்ட வசீகரமிகு பேச்சழகர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்கள், மறைந்துவிட்டார் எனினும் அவரது எழுத்து, பேச்சு ஆகிய தொண்டுகளை மறந்திட இயலுமோ!

    பெரியார், அண்ணா இருவரின் அணுக்கத் தொண்டராகவும், எனக்கு உறுதுணையாகவும், இருந்த என.வி. நடராசனார் கொள்கைப்பிடிப்புடன் அழுத்தம் திருத்தமாக அனல்பொழியுமாறு ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசி, மக்களின் அன்பைப் பெற்றவரன்றோ!

    'பேசும் கலை வளர்ப்போம்' என்ற இந்தக் கட்டுரைத் தொடர் வாயிலாக, எளிய நடையில் பல இனிய நிகழ்ச்சிகளையும்-இதயத்தை தொடும் நிகழ்ச்சிகளையும் - பல்வேறு துறைகளிலும் இயக்கத்திலும் உள்ள திறமை வாய்ந்த பேச்சாளர்களைப் பற்றியும் எப்படிப்பேச வேண்டும், பேசக்கூடாது என்பன போன்ற கருத்துக்களையும்- என்னால் இயன்ற அளவு எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

     பேசும் கலையில் சிறந்து விளங்கிட விழைந்திடுவோர்க்கு இந்தக் கட்டுரைத் தொடரும் ஓரளவு பயன்படுமேயானால், நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.

- கலைஞர் மு. கருணாநிதி

----முற்றும்----

பேசும் கலை வளர்ப்போம் தொடர் இத்துடன் முற்றுபெற்றது. பேசும் கலையில் பயிற்சி பெறுவதற்கு இத்தொடர் பயன்படுமேயானால் அதுவே இப்பதிவின் வெற்றியாகும். மீண்டும் வேறொரு பேச்சாளரின் தொடரோடு சந்திக்கிறேன். ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது;
நன்றி
வணக்கம்.
நம்பி.

Friday 29 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 18










     பேசும் கலை வளர்ப்போம் -18

(Mannerism)  மேனரிசம் எனப்படும் தனிப் பாங்கு அல்லது தனிப்பாணி, பேச்சாளர்களையும் ஆக்ரமித்துக் கொள்வதுண்டு. பேசும்போது அவர்களையறியாமலேயே தனிப்பாங்கான அங்கச் செய்கைகள்-தவிர்க்கவொண்ணாத பழக்கவழக்கங்கள் தொடங்கி; பின்னர் அவைகளேஅந்தப் பேச்சாளர்களுக்குரிய தனித்த தன்மைகளாக ஆகிவிடுகின்றன.

     சிலர் மேடையில் நின்று ஆடாமல் அசையாமல் அருவிபோல் கருத்துக்களை உதிர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

    அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, வலப்புறமும் இடப்புறமுமாக உடலைத் திருப்புவார். கைகள் லேசாக உயரும், தாழும்! பொடிபோடும் வழக்கம் அவருக்கு உண்டு. சட்டையின் பக்கவாட்டுப் பையில் ஒருகை நுழைந்திருக்கும். அவரது பேச்சின் சுவையில் திளைத்த மக்கள் கையொலி செய்து ஆரவாரம் புரியும்போது, சட்டைப்பையிலுள்ள பொடி டப்பாவிலிருக்கும் பொடியை யாருக்கும் தெரியாமல் மூக்கில் திணித்துக் கொண்டு மேல்துண்டினால் ஏதோ வியர்வை துடைப்பது போலத் துடைத்துக் கொண்டே தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பார்.

     தந்தை பெரியார் அவர்கள், வயது முதிர்ந்த காலத்தில் உட்கார்ந்து கொண்டேதான் பேசுவார்! அவர் நின்று கொண்டு பேசிய காலத்தில் அவருடன் கூட்டங்களுக்குச் சென்றவர்களில் நானும் ஒருவன். சந்தன வண்ணம் அல்லது காப்பிகலர், சில நேரங்களில் வெண்மையும் மஞ்சளும் கலந்தது-இப்படிப்பட்ட சால்வையால் உடலைப் போர்த்தியிருப்பார். பேசும்போது அந்தச் சால்வையை இழுத்து இழுத்துப் போர்த்திக் கொள்வார்.

     நெடிய உருவமும் நிமிர்ந்த நோக்கும் கொண்ட தளபதி அழகிரிசாமி, போர்க்களத்தில் எதிரியின் மீது ஓங்கப்படும் வாளினைப் போலத் தன் கையை வீசி வீசிப் பேசுவதும், அதற்கேற்ப சொற்கள் விழுவதும் மக்களை உணர்ச்சியில் மிதக்க வைக்கும்.

     சற்றுப் பெருத்த மேனியும், பெரிய மீசையும், உரத்த குரலும் கொண்ட ஜீவா அவர்கள் பேசும்போது மேடை அதிரும். அங்க நெளிவுகளில் மிகுந்த வேகம் இருக்கும். உடலை அதிகமாக ஆட்டிக் கொண்டு பேசும்போதுதான் அவருக்கு வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்து விழும்.

    அடிக்கடி கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக்கொள்வதும், கொத்து மீசையை ஒதுக்கிவிட்டுக் கொள்வதும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யின் பேச்சு சூடு பிடித்துவிட்டது என்பதைக் காட்டும் அடையாளங்களாகும்.

    அருள்பாலிப்பதைப் போல கையை மக்கள் பக்கம் அடிக்கடி காட்டிகொண்டே, வாதத்தை வரிசைப் படுத்தி அடுக்கிக் காட்டும் திறமையை ராஜாஜி பெற்றிருந்தார்.

     குதிகாலை உயர்த்தி, தோள்களைக் குலுக்கிக் கொண்டு கடல்மடைத் திறந்தாற்போல் பேசிக்கொண்டிருக்கும்போதே சில சொற்களைத் திடீரெனச் சன்னக்குரலில் இழுத்துப் பேசி மக்களின் வரவேற்பைப் பெறுவது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் தனிப் பாணியாகும்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்றவுடன் தலையை நிமிர்த்தியவாறு-ஒருமுறைக் கூடத் தாழ்த்தாமல்- வானநோக்கிக் கைகளை உயர்த்தியவாறு சொல்மாரிபொழிவது பேராசிரியர் அன்பழகன் அவர்களிடம் காணக்கூடிய தனிப்பாங்கு எனலாம்.

     இப்படி ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏற்பட்டுவிட்ட செயற்கைப் பாணிகளை அவர்களே முயன்றாலும் விடமுடியாத நிலை!

    நாம் பேசும்போது ஏதாவது ஒரு அங்கச் செய்கை அல்லது அங்கசேட்டை இருக்கவேண்டுமென்று அப்படியொரு பயிற்சியை எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. சிலருக்கு அங்கச் சேட்டைகள், அவர்களது பேச்சையே மக்கள் கவனிக்காத அளவுக்கு இடையூறாக அமைந்து விடுவதும் உண்டு.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று தலையைச் சொரிந்துகொண்டே பேசுவார்கள். கழுத்திலோ, இடுப்பிலோ விரல்களை வைத்து அழுக்கைத் திரட்டிக் கொண்டே பேசுவார்கள். திரட்டிய அழுக்கை, உருண்டையாக உருட்டி மூக்கிலை முகர்ந்து பிறகு கீழே போடுவார்கள். இத்தனையும் பேசிக் கொண்டிருக்கும்போதே நடக்கும்.

     இதுபோன்ற பாணிகளையோ, அங்கச்செய்கைகளையோ பேச்சாளர்கள், மறந்தும் கற்றுக்கொண்டுவிடக்கூடாது.

    கூடுமானவரையில் மேடையில் அதிக ஆட்டமின்றி அங்கச் சேட்டைகளை மட்டுப்படுத்திக்கொண்டு பேசுவதே நலம்.

    வார்த்தைகளைக் குதப்புவது-- கடித்துத் துப்புவது--  இவை, கேட்போர் செவிகளில் நாராசமாக விழும்.

    'போராட்டக்காரர்களைப் போலீசார் அடித்து விரட்டினார்கள்' என்பதைச் சில பேச்சாளர்கள் அழுத்தம் திருத்தமாகவும், ஆத்திர உணர்வோடும் சொல்வதாக எண்ணிக் கொண்டு-''போராட்டக்காரர்களைப் போலீசார் அட்டித்து விரட்டினார்கள்'' என்று வார்த்தைகளைக் கடித்து உதறுவார்கள். அந்தப் பேச்சும் ரசிக்கத்தக்கதாக இருக்காது.

    வேற்றுமொழிச் சொற்களையும் வேதபுராணங்களையும் பயன்படுத்தி உபன்யாசங்கள் செய்து வந்த மடாதிபதிகளின் மத்தியிலே நல்ல தமிழிலும், நயம்பட இலக்கியங்களிலும் மேற்கோள் காட்டி- காலத்திற்கும் சமயத்திற்கும் ஏற்ப மேடைப் பேச்சில் திறமை காட்டியவர்களில் குன்றக்குடி அடிகளார் ஒருவர்.

    தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கெனவும் இலக்கிய மறுமலர்ச்சிக்கெனவும் தமிழர் உரிமைக்கெனவும் சமய நெறிகளைப் பரப்பிடவும், மேடை முழக்கம் செய்தபோது சில முக்கியமான சொற்களை மூன்றுமுறை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

   தமிழர் நெறி பரப்பிடும் தொண்டிலும் இந்தி ஆதிக்க எதிர்ப்பிலும் ஈடுபட்ட மறைமலை அடிகளார், தனது சொற்பொழிவில் தனித்தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துவார்.

     அடலேறுத் தோற்றங்க்கொண்டவரும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் அயராது ஈடுபட்டவருமான நாவலர் சோமசுந்தர பாரதியாரின் சொற்பொழிவில் அடிக்கடி ''அட சனியனே'' என்று கடிந்துகொள்ளும் வார்த்தை வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

    எத்தனையோ-எண்ணற்ற கூட்டங்களில் சொற்பெருக்காற்றியிருந்தும்கூட இன்னமும் கையில் சிறு குறிப்புகளை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொண்டு அவற்றின் துணையோடு -மக்களைக் கவருகின்ற பேச்சாளராக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விளங்குகிறார்.

   பார்வைக்குப் பரமசாது போலத் தோற்றமளித்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், சீற்றங்கொண்டு பேசத் தொடங்கினால் சிம்ம கர்ச்சனையாகத்தானிருக்கும்.

     சிறுசிறு குட்டிக்கதைகளைச் சொல்லியே மக்களைச் சிரிக்க வைப்பார் சின்ன அண்ணாமலை.

     நல்ல எழுத்தாளராக இருந்து மறைந்த தமிழ்வாணனும் கூட்டத்தினரைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறமை படைத்தவர்.

     அடிக்கடி கூட்டங்களில் பேசுகிற பழக்கமில்லாவிட்டாலும் எழுத்தாளர் ஜெயகாந்தனைப் போன்ற சிலர், தங்கள் பேச்சில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் குழுமியிருப்போரிடையே ஒரு கலகலப்பை ஏற்படுத்திவிடுவர். தேர்ந்தெடுத்த, தெளிந்த சொற்களைக் கொண்டு கருத்துக்களை வழ்ங்கிய காயிதே மில்லத் அவர்களும், அவருடன் நெருங்கியிருந்து பயின்று தேனினுமினிய உரையாற்றும் அபதுல் சமது அவர்களும் சொற்பொழிவு மேடையில் புகழ்மிக்க இடத்தைப் பெற்றவர்கள்.

     இப்படிப் பல துறையைச் சேர்ந்தவர்களும் எப்படிப் பேசினார்கள்-எப்படிப் பேசுகிறார்கள்-என்பதைப் பேச்சாளர்களாக ஒளிவிட வேண்டுமென்று விரும்புகிறவர்கள், உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.

- கலைஞர் மு. கருணாநிதி

......இன்னும் வரும்.....19

Thursday 28 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 17








  பேசும் கலை வளர்ப்போம் -17

   மேடையில் நின்று பேசும்போது அந்தக்கூட்டத்தில் குழுமியிருப்போரில் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதத்திற்குமேல் தன்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொற்பொழிவாளர் மறந்துவிடக்கூடாது.

    பேசுவதற்கு அழைக்கப்பட்டவுடன் ஒலிபெருக்கியின் முன்னால் வந்து நின்றுகொண்டு வேட்டியைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் சிலர்.

    வாயில் அதுவரையில் குழப்பிக் கொண்டிருந்த வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்புவார்கள் சிலர்.

   இருமிக் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்காமலே நிற்பார்கள் சிலர். ஒலிப்பெருக்கி அமைப்பாளரிடம்  அந்தக் கருவியைச் சரியாக வைக்குமாறு கூறிக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவார்கள் சிலர் அந்தச் சொற்கள் ஒலிபெருக்கி வழியாகக் கூட்டத்தினர் காதுகளிலே விழுந்து-கூட்டத்தினர் பேச்சாளர் மீது ஒருவிதமான அதிருப்தியை உருவாக்கிக் கொள்ள வழிவகுப்பதும் உண்டு!

    சில பேச்சாளர்கள், மாலைக்காகக் காத்துக் கொண்டிருந்து, மாலை கழுத்தில் போடப்படுகிற நேரத்திலே புகைப்படக்காரர் படம் எடுக்கிறாரா என்பதிலே ஆர்வங்காட்டி, எடுத்த எடுப்பிலேயே ம்க்களின் கேலிக்குரியவராக ஆகிவிடுவார்கள்.

     ஒலிபெருக்கியின் முன்னால் நின்று கொண்டிருக்கும் பேச்சாளர் தனது பேச்சை முடிக்கும் வரையில் அந்த மேடைக்குரிய மரியாதையையும்-பேச்சுக் கலைக்குரிய மதிப்பையும் பாதுகாக்கவும், போற்றிடவும் கடமைப்பட்டவராவார்.

    பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் யாராவது ஓரிரு சிறுவர்கள், சிறுமியர்கள் எழுந்து செல்வதற்கு முயன்றிடக்கூடும். பேசுகிறவர், அதைக் கவனிக்காதது போலப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, ''ஏய்! யாரது உட்காரு! இந்தாப்பா! அந்த சனியன்களை விரட்டு!'' இப்படி ஏதாவது ஆத்திரத்தில் கூறிவிட்டால்-அந்தப் பேச்சாளரின் தரம் மிகவும் தாழ்ந்துவிடும்.

    நான் மேடையேறி பேசிய தொடக்கக் காலத்தில்  ஆதிதிராவிடர் காலனிகளில் நிறையக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.ஒருமுறை இரவு பத்து மணிக்கு ஒரு காலனியில் நானும் ஷம்சுதீன் என்ற நண்பர் ஒருவரும் பேசுவதற்காகச் சென்றிருந்தோம். இருநூறு பேர் அளவுக்குக் கூடியிருந்தனர். ஷம்சுதீன் என்னைவிட மூத்தவர்! என்னைவிட அரசியல் அனுபவம் கொண்டவருங்கூட! திருவாரூர் நாலுகால் மண்டபத்திற்கருகில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில்தான் அந்தக் கூட்டம்! ஷம்சுதீன் பேசத் தொடங்கினார். கூட்டத்தில் எதிரே ஒரு வயதானவர் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார். பேச்சுக்களை சுவைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

     ஆனால், அந்தப் பெரியவருக்கு இருமல் தொல்லை! அடிக்கடி இருமிக் கொண்டிருந்தார். .அவர் இருமுவதால் தனது பேச்சுக்கு இடையூறு ஏற்படுவதை ஷம்சுதீன் அவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. இரண்டு மூன்றுமுறை அந்தப்பெரியவரைப் பார்த்து 'சூ! சும்மா கிட!' என்று அவர் சீறினார். பாவம்,அந்தப் பெரியவரால் இருமலை நிறுத்தவும் முடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியேறவும் இல்லை.

    மீண்டும் ஒருமுறை அந்தக் கிழவர் இருமியதுதான் தாமதம்; ஷம்சுதீன் திடீரென மேஜை மீது இருந்த சூடான தேநீரை எடுத்து அந்தக் கிழவரின் தலையில் கொட்டிவிட்டார்.

     அந்த நிகழ்ச்சி, கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே-நானும் மற்ற நண்பர்களும் அனைவரையும் அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.

   பேச்சாளர்கள், எத்தகைய இடையூறுகளுக்கிடையிலேயும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தாங்கள் எடுத்துச் சொல்லவேண்டிய கருத்துக்களிலேயே நாட்டம் செலுத்திட வேண்டும். அதே சமயத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறவர்க்ளும், மேடையிலும், மேடையைச் சுற்றிலும் தொண்டர்கள் வாயிலாக ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான முன்னேற்பாடுகளைக் கவனித்திட வேடண்டும்.

    மக்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிற பேச்சாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது, அவர்களை வைத்துக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பேச்சாளர்கள் தங்கள் பேச்சை நீட்டிக் கொண்டே போனால் மக்கள் பொறுமையிழந்து விடுவார்.

     மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்கள், பதவிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு தென்னாற்காடு மாவட்டத்தில் தேவபாண்டலம் என்னும் ஊரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார். எங்களுடன் இன்னொரு பேச்சாளரும் அழைக்கப்பட்டிருந்தார். அந்தப் பேச்சாளர் இயக்கத்தில் நீண்ட காலத் தொடர்புடையவர். நாங்கள் மரியாதை செலுத்தக்கூடிய இடத்திலே இருந்தவர். ஆனால் பேச்சின் மூலம் மக்களை ஈர்க்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் அல்லர்!.

    பெருங்கூட்டம் வெள்ளமெனத் திரண்டிருந்தது. ஊரே விழாக்காலம் கொண்டிருந்தது, திரு. கோவிந்தசாமி அவர்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் பேசி முடித்தார்.அடுத்து, நான் முதலில் குறிப்பிட்டவர் பேச எழுந்தார். பேசினார்-பேசினார்-பேசிக்கொண்டே இருந்தார்.

   கூட்டத்தினர் பொறுமையிழந்துவிட்டனர். எனக்குப் பேசுவதற்கு வாய்ப்பு அளிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துவிட்டது.போலும்!

     கூட்டத்தின் நடுப்பகுதியில் இருந்து முண்டாசு கட்டிய ஒருவர் எழுந்தார். கைகளைக் கூப்பியவாறு மேடையை நோக்கி உரத்த கூரலில் பேசினார்.

    ''அய்யா! பெரியவங்களே! நாங்க பதினெட்டு மைலிலேயிருந்து அவரு பேச்சைக் கேக்கறதுக்காக வந்திருக்கிறோம். கொஞ்சம் நீங்க உக்காருரீங்களா?'

     அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கூட்டத்தினர் அந்த முண்டாசுக்காரரின் கோரிக்கையை வரவேற்றுக் கையொலி செய்தனர். பேசிக் கொண்டிருந்தவருக்கு கோபம் வந்துவிட்டது.

    'அப்படியாடா அப்பா! இதோ உட்காருகிறேன்!'என்று சட்டென நாற்காலியில் அமர்ந்து விட்டார். அத்துடன் விடவில்லை. அவர் என்னை நோக்கி, 'கருணாநிதி! நீ இந்தக் கூட்டத்திலே பேசக்கூடாது! ஒரே வரியிலே முடிச்சிடு. அப்பத்தான் இந்தப் பசங்களுக்கு புத்திவரும்' என்று வற்புறுத்திச் சொன்னார்.

   நான் பேச எழுந்தேன். என்னுடைய தொடக்க உரையில் சுமார் பதினைந்து நிமிடம் அவருடைய பெருமைகளைப் பற்றியே பேசினேன். யாருடைய பெருமைகளை? அந்த முண்டாசுக்காரரால் உட்கார வைக்கப்பட்ட பேச்சாளரின் பெருமைகளை! இவரைப் போன்றவர்கள் பேச்சாளரின் ஆற்றிய பணிகளால்தான் நாங்கள் எல்லாம் இன்றைக்கு அறிமுகமாகியிருக்கிறோம். என்று உருக்கமாக உரை நிகழ்த்தினேன். அவர் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் ஒளிவிட்டதைக் கண்ட பிறகே, அவரைவிட்டுவிட்டு அரசியல் கருத்துக்களைப் பேச ஆரம்பித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் பேசிமுடித்தேன்.

     ஒருவரிக்கு மேல் பேசக்கூடாது என்று ஆணையிட்டவரே. 'இன்று உன் பேச்சு பிரமாதம்' என்று என்னைப் பாராட்டினார்.

  எனவே, தம்முடன் ஒரே மேடையில் பேச வருகின்ற தம்முடைய சகாக்களின் மனமும் நோகாமல்-அவர்களையும் அரவணைத்துக் கொண்டு-சொற்பொழிவை அமைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஓரளவு வளர்ந்துவிட்ட பேச்சாளர்களுக்குக் கட்டாயம் இருந்திட வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


.....இன்னும் வரும்.....18

Wednesday 27 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 16







  பேசும் கலை வளர்ப்போம் -16

எத்தனை நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டினாலும், எப்படியெல்லாம் பல பேச்சாளர்கள் புகழ்க் கொடி நாட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துரைத்தாலும்- பேச்சாளர்களாக வளருகிறவர்கள். அவரவர்களுக்கென ஒரு தனிப் பாணியை அமைத்துக் கொண்டே வளருகின்றனர்.

     அவரக்ளுடைய மேடைப் பேச்சின் வெற்றிக்கு ஓரளவு பயன்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது!

     இந்தச் சிறிய தொடர் கட்டுரையை எழுதத் தொடங்கியவுடனேயே, ஆர்வமிகுதியால் அருமை நண்பர் கணியூர் பரூக் என்பார் பேச்சுக்கலை குறித்துப் பல்வேறு வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து எழுதி எனக்கு அனுப்பி வைத்தார்.

     அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    ' நீங்கள் கூட்டத்தில் எதைப் பேசவேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே எழுதி ஆஸ்திரேலியாவுக்கு உங்கள் சொந்தச் செலவில் தந்தி கொடுப்பதாகக் கருதிக் கொள்ளுங்கள். சொல் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுப்பதாக இருந்தால், அவசியமில்லாத சொற்களை நீக்கி விடுவீர்கள் இல்லையா? மீதியுள்ள அவசியமான சொற்களே நீங்கள் பேசத் தகுதி பெற்ற சொற்கள்.'--------------''ஸ்மீட்''


     'ஆழ்ந்த கருத்து வளம் இல்லாதவர்களே பேச்சை வீணாக வளர்த்திக்கொண்டே போவர்'-----------''மாண்டஸ்கியூ''


     'பேச்சுக் கலையில் நோக்கம் உண்மையை எடுத்துக் கூறுவது மட்டுமல்ல-மக்களை இணங்க வைப்பதும் முக்கிய நோக்கமாகும்'-----------''மெக்காலே''


     'மேடைப் பேச்சில் எதிரிகளை இழித்துக் கேவலமாகவும் தரக் குறைவகாவும் புகார் கூறிப் பேசாதே! சிறிய விஷயத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்காதே.'------------''டிஸ்ரேலி''


     'கோழிமுட்டையின் மீது சதா அடைகாத்துக் கொண்டிருப்பதுபோல, நீ பேச எடுத்துக் கொண்ட விஷயத்தைப்பற்றி சதா சிந்தித்துக்கொண்டேயிருந்தால், கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவதுபோல, புதிய கருத்துக்கள் துள்ளிவரும்.''----------------''பிரெளன்''


     மெருகோடும் கச்சிதமாகவும் பேசவேண்டுமென்று விரும்புகிறவர்கள், சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்கவேண்டும். நூல்களையும் உயர்ந்தோர் கருத்துக்களையும் நிறையப் படிக்க் வேண்டும். முடியாவிட்டால் மேடையில் பேசாதிருப்பது நலம்.'-----------''செஸ்டர்பீல்டு''


     'அருமையாகப் பேசும் சொலல் வல்லோன் உண்மையைப் பேசாவிட்டால் அவனைக் காட்டிலும் மோசமான மனிதன் இருக்க முடியாது'.-------''கார்லைல்''


     'புலியின் சீற்றத்தையும் புஜபலமிக்க வீரனின் சினத்தையும் தணிக்கக்கூடிய சிறப்பியல்பும் பேச்சுக் கலைக்கு இருக்கவேண்டும்.'------''ஷெல்லி''


     'உணர்ச்சி பாவமே சொற்சுவைக்கு ஆதாரம், எதுவும் தெரியாதவனின் கண்களைக் காட்டிலும், காதுகள் மிகவும் கூர்மையானவை!'------''ஷேக்ஸ்பியர்''


     நாவண்மையின் சிறப்பு குறித்து நண்பர் ஏ. சுவாமிநாதன் என்பவர் சில பொன்மொழிகளைத் தொகுத்து அனுப்பியுள்ளார். அவை வருமாறு;


     'நாவானது மூன்று அங்குல நீளமுடையது, எனினும் ஆறு அடி உயர மனிதனையும் கொல்லக் கூடியது'.-------ஜப்பானியப் பழமொழி


     'பெண்ணின் வாள், அவளுடைய நாவே, அதைத் துருப்பிடிக்கும்படி அவள் விடுவதில்லை.'----------சீனப் பழமொழி


     'உன் நாவைக் காப்பாற்று! உன் நண்பணைக் காப்பாற்றுவாய்'----இந்தியப் பொன்மொழி


     'மனிதன் தன் நாவினால் பிடிபடுகிறான்.'-----ருசியப் பொன்மொழி


     'நாவில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்குகிறது.'------------அல்பேனியப் பொன்மொழி


     அறிஞர் பெருமக்களின் கருத்துகள், பல்வேறு நாட்டுப் பொன்மொழிகள்- நாவன்மையின் பெருமையையும் அதனை எவ்வளவு முறையாகப் பயன்படுத்த வேண்டுமென்பதையும் வலியுறுத்தி கூறியிருக்கின்றன.


''''சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
கொல்லுஞ் செயல் இன்மை அறிந்து''''


வேறொரு சொல்லால் நமது சொல்லை வெல்ல முடியாது என்பதை அறிந்து- அப்படி ஆய்ந்து அறிந்து தேர்ந்த சொல்லைக் கொண்டுதான் நமது கருத்தை விரித்துரைக்க வேண்டுமென்று வள்ளுவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.


அதனால்தான் ''''நாவலம் என்னும் நலனுடைமை'''' என்று போற்றுகிறார்; நாவன்மையெனப்படும் நலம் ஒருவகைச் சொல்லாகும் என்று புகழ்கிறார்.


- கலைஞர் மு. கருணாநிதி


.......இன்னும் வரும்....17



Tuesday 26 January, 2010

பேசும் கலை வளர்ப்போம் -15


     

பேசும் கலை வளர்ப்போம் -15

இரவு பொதுக் கூட்டத்திலே ஆயிரக்கணக்கான மக்களிடையே முழக்கம். காலையில் ரயிலடிக்கோ அல்லது பேருந்து நிலைத்துக்கோ அந்தப் பேச்சாளர் வழியனுப்பி வைக்கப்பட அழைத்துச் செல்லப்படுவார். அவர் விரல்களின் இடுக்கில் சிகரெட்! வாய் வழி மூக்கு வழியே புகை மண்டலம்! முதல்நாள் பொதுக்கூட்டத்தில் பார்த்துக் களித்துப் பாராட்டியவர்களில் ஒருசிலர் அந்த இடங்களில் இருந்து பேச்சாளரைக் காண நேர்ந்தால் அவர் மீதுள்ள மரியாதையும் மதிப்பும் சிறிது குறைய்த்தான் செய்யும்.

     நாலு பேருக்கு மத்தியில் சிகரெட் விஷயத்தில் கூட எவ்வளவு கட்டுப்பாடு வேண்டும் என்று கூறுகிறபோது-மற்ற விஷயங்களைப்பற்றி விவரிக்கத் தேவையில்லை.

     இந்த ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளே போதுமென நம்புகிறேன். தான் ஈடுபாடு கொண்டுள்ள இயக்கத்திற்காக-தான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைக்காக சில பழக்கவழக்கங்களைத் தியாகம் செய்ய வேண்டியதுதான் என்ற முனைப்பும் உறுதியும் அந்த இயக்கத்தின் பேச்சாளர்களுக்கு மிகமிகத் தேவை.

     எந்த ஒரு கட்சியிலும், அல்லது பெருங்குழுவிலும் பேச்சாளர்களுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. தொண்டர்குழாம் அவர்களைச் சுற்றியிருக்கும். அந்தத் தொண்டர்கள் அமைத்துத் தருகிற மேடையிலேதான் நாம் பேச்சாளராக  ஒளிவிடுகிறோம் என்ற உணர்வு பேச்சாளர்களுக்கு இருந்திடவேண்டும்.

    பேச்சாளர்கள், ஒரு இயக்கத்தின் அல்லது பெருங்குழுவின் எஜமானர்களாகத் தங்களை எண்ணிக்கொண்டு வேலைக்காரர்களைப் போலக் கருதி நடத்தக்கூடாது. தோழமை உணர்ச்சி பெருக்கெடுத்திடல் வேண்டும்.

     தொண்டன் உண்டியல் குலுக்கி, ஒரு காசு இரு காசு என சேர்த்து பேச்சாளருக்கு வழிச் செலவுக்குப் பணம் அனுப்பி, விளம்பரச் சுவரொட்டியடித்து இரவு பகல் கண் விழித்து அவன் கையாலேயே பசை தடவி அவைகளை ஒட்டி, கம்பங்களிலும் மரங்களிலும் ஆபத்தை மறந்து ஏறித் தோரணங்கட்டி, மேடைபோட்டு, ஒலிபெருக்கி அமைத்து இறுதியாகப் பேச்சாளர் வரவில்லை என்ற செய்தி கேட்டால் எப்படிச்சோர்ந்து போவான் என்பது, தொண்டர்களாக இருந்து இயக்கம் வளர உழைத்தவர்களுக்கும்-உழைப்பவர்களுக்கும்தான் தெரியும். அத்தகைய ஏமாற்றங்களைப் பேச்சாளர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு தருவது கூடாது. 

தவிர்க்கமுடாயாத-எதிர்பாராத-நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்வது கூடாது.

    என் தந்தை இறந்து எரியூட்டல் நடந்த அன்று மாலை தஞ்சை மாவட்டத்தில் திருவாஞ்சியம் என்னும் ஊரில் ஒத்துக்கொண்டிருந்த கூட்டத்திற்குத் தவறாமல் சென்று வந்தேன்.

     முதல் மனைவி பத்மா, மரணப்படுக்கையில் கடைசி மூச்சு இழையோடக் கண் மூடிக் கிடந்தபோது, ஒப்புக் கொண்டிருந்த புதுக்கோட்டை கூட்டத்திற்குச் சென்றுவிட்டு இரவோடு இரவாக ஒரு லாரியில் ஏறி திருவாரூர் வந்து சேர்ந்தேன்; அவள் என்னைப் பிரிந்து நீங்காத்துயில் கொண்டுவிட்டாள் என்ற செய்தியைக் கேட்க!

     இப்படிப் பல நிகழ்ச்சிகள் என் பொது வாழ்க்கையில்!

     பெரியாரிடம் கற்ற பாடங்களில் இந்தக் கடமை தவறா பயிற்சியும் ஒன்று!

     கடுகுபோல் ஒரு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து நிகழ்ச்சகளை ரத்து செய்துவிடுகிற பேச்சாளர்களை இன்று காணும்போது, என்னைப் பற்றிச் சில குறிப்புகளைச் சொல்ல நேர்ந்தது.

    பேச்சாளர்களைக் கூட்டத்திற்கு அழைக்கிறவர்கள் சிலரும், கூட்டம் முடிந்தபிறகு அவர்களைத் திண்டாடித் தெருவிலே நிற்குமாறு விட்டுச் செல்லுகிற நிகழ்ச்சிகளும் இல்லாமல் இல்லை.

    எல்லாக் கட்சிகளிலுமே ஊடுருவியுள்ள இந்தக் குறைபாடுகளைப் பேச்சாளர்களும் கூட்ட அமைப்பாளர்களும் நீக்கிக் கொள்ளவேடண்டும்.

    மேலவைத் தலைவராக விளங்கிய அண்ணன் சி.பி.சிற்றரசு, சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி, தன்மான இயக்கத் தளகர்த்தர் அண்ணன் அழகிரிசாமி ஆகியோர்-கூட்டத்தில் தங்கள் பேச்சை முடிக்கும்போது; மேடையில் இருக்கும் கட்சியின் செயலாளரது கைகளைக் கெட்டியாகப் பிடித்தவாறே-மக்களைப் பார்த்து-'இவ்வளவு நேரம் சொன்னவற்றை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! என்று கேட்டுக் கொண்டே மேடையிலிருந்து இறங்குவோம் என்று அவர்களே பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன். இல்லாவிட்டால் திரும்பி ஊருக்குச் செல்ல வழிச் செலவுப் பணத்திற்கு என்ன செய்வது? யாரைத் தேடுவது? அதனால்தான் செயலாளர் கைகளை அன்போடும் பாசத்தோடும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேச்சை முடிப்பார்களாம்.!

    ;இதோ இந்தத் தம்பியிருக்காரே; உங்க ஊர் செயலாளர்-தங்கக் கம்பி! நல்ல உழைப்பாளி. இவருடன் நீங்கள் ஒத்துழைத்து இந்த ஊரை நமது கட்சிக் கோட்டையாக்க வேண்டும்.

    இவ்வாறு செயலாளரை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுபோல, ஆளை விடாமல் கூட்டம் முடிந்ததும் வழிச் செலவுக்கு வாங்கிக் கொண்டு ஊர் திரும்பிட எத்தகைய தந்திரம் கையாள வேண்டியிருந்திருக்கிறது! அதுவும் அந்தக் கால்த்தில் பெரும் புகழ் பெற்ற அந்தப் பேச்சாளர்களுக்கே சில இடங்களில் அப்படிப்பட்ட ஒரு நிலை!

- கலைஞர் மு. கருணாநிதி


.....இன்னும் வரும்.....16

Monday 25 January, 2010

பேசும் கலை வளர்ப்போம் -14



 

பேசும் கலை வளர்ப்போம் -14


   இலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை எல்லையற்றும் இருக்கின்ற காலகட்டத்திலே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அரசியல் பேச்சாளர்களில் ஒரு சிலரே இலக்கியப் பேச்சாளர்களாகவும் திகழ்ந்திடக் காண்கிறோம்.

     இதிகாசங்களையும் புராணங்களையும் இன்றுள்ள உலகியலுக்கும் பொருந்தும் வண்ணம் இடையிடையே இலக்கிய அரசியல் சுவை கலந்து வழங்குகின்ற கதாகாலட்சேபப் பண்டிதர்களும்கூட இருக்கிறார்கள்.

     ஆடாமல் அசையாமல் அங்கம் சற்றுக் குலுங்கிட லாவகமாக நாலாப்புறமும் திரும்பியவாறு கடல் மடைதிறந்தாற்போலத் தமிழ்ச் சொற்களைக் கொண்டு புராணக் கதைகளைப் பல மணி நேரம் சலிப்புத் தட்டாமல் மன்றங்களில் கூறுகிற ஆற்றல் வாய்ந்தவர்களில் கிருபானந்தவாரியார் ஒருவர்.

    அங்க அசைவுகளும் முகபாவ மாற்றங்களும், வார்த்தைகளிலும் குரலிலும் திடீர் ஏற்ற இறக்கங்களும் இருக்குமெனினும் கவர்ச்சியாக இதிகாசக் கதைகளையும் இலக்கியங்களையும் நீண்ட நேரம் எடுத்துரைக்கக் கூடியவர்களில் ஒருவராகப் புலவர் கீரன் விளங்குகிறார்.

     புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்துப் பற்றிய சிறப்புக் கூறுகளைப் பல நாட்கள் தொடர்ந்து உரையாற்றித் தமிழ் கற்றோர் நெஞ்சங்களில் நண்பர் சிலம்பொலி செல்லப்பன் இனிப்பு பெருக்கெடுக்கச் செய்தார்.

     சிலப்பதிகாரத்தைப் பல நாட்கள் மன்றத்தினர் களித்திடுமளவுக்கு விமர்சித்து வெற்றி கண்டார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.

     கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அண்ண்ன் ஜீவானந்தம்; எரிமலை போன்ற அரசியல் பேச்சாளர் என்பது மட்டுமல்ல- கம்பனின் கவிநயம் பற்றிச்சில மணிநேரம் சுவைப்படச் சொற்பெருக்காற்றக்கூடியவராகவும் இருந்தார்.

     கம்பராமாயணம் பற்றி எழுந்த சர்ச்சையில் பெரும் புலவர்களான நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும்-சேதுப்பிள்ளையுடனும் சொற்போர் நிகழ்த்தியபோது அறிஞர் அண்ணா அவர்களின் இலக்கியப் புலமை எப்படி ஒளிவிட்டது என்பதை நாடறியும்.

     அரசியல் பேச்சாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. ஆனால், அவர்களில் இலக்கியமுணர்ந்தோர் எண்ணிக்கை, மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. வரலாறுகளையாவது ஆழமாகப் படித்திருக்கிறார்களா? அந்தத் தொகையினரும் குறைவே! பல பேச்சாளர்கள் மாற்றுக் கட்சியினரைத் தரக் குறைவாகத் திட்டிப் பேசவே மட்டும் தங்களைப் பாழாக்கிக் கொண்டு மேடையேறிவிடுகின்றனர்.

     கடுமையாக-காரசாரமாகப் பேசுவது என்பது வேறு! தரக்குறைவாக-ஆபாசமாக-அருவருக்கத்தக்க முறையில் பேசுவது என்பது வேறு!

     கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலை ஒரு பேச்சாளருக்கு ஏற்படக்கூடும். மாற்றுக்கட்சி மேடையில் பேசிய ஒருவர் ஏதாவது அவதூறு ஒன்றைப் பரப்பிவிட்டு அதை நிருபிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல்; அப்படிப் பிறர் மீது வேண்டுமென்ற திட்டமிட்டுப் புழுதிவாரித் தூற்றுவதையே தனது தொழிலாக் கொண்டிருக்கக்கூடும். அதனால் பாதிக்கப்படக்கூடிய ஒரு பேச்சாளர் அல்லது அந்தப் பேச்சாளர் சார்ந்துள்ள அரசியல் கட்சி மேடையில் அதற்குப் பதில் அளிக்கும்போது கடுமையான கண்டனம் தவிர்க்க முடியாததாகிவிடக்கூடும்.

     ஒருமணி நேரப் பேச்சில் அப்படிக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பது ஓரிரு வினாடிகளே இருக்கவேண்டுமே தவிர, முழுப் பேச்சும் கடுஞ்சொற்களின் கோர்வை ஆகிவிடுமேயானால் ஒருக்கணம் மின்வெட்டுப்போலப் பளிச்சிட்டுத்ததெறித்த அந்தக் கடுஞ்சொல்லுக்குரிய மதிப்பு இல்லாமல் போய்விடக்கூடும்.    

     அரசியல் மேடைகளில் கடுஞ்சொற்கள் இருதரப்பிலிருந்தும் கனணகளாகக் கிளம்பலாம். அதற்காகப்பேச்சு முழுமையுமே கடுஞ்சொற் களஞ்சியமாகவும்-ஆபாசக் குட்டையாகவும் அமைந்திடுமேயானால்; விரைவில் அந்தப் பேச்சாளர்களும் இருக்குமிடந் தெரியாமல் போய்விடுவர்; அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் சிறப்பு குன்றிச் செயலிழந்து நின்றுவிடும்.

    மேடையில் மக்களின் பிரச்சனைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எடுத்து வைக்க வேண்டும். அவ்வப்போது எழுகின்ற விவாதத்திற்குரிய விஷயங்களை அவரவர் கட்சிக் கண்ணோட்டத்திற்கேற்ப மக்களிடம் விளக்கிட வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிக்கொள்கைகளுக்கும் தனது கட்சிக் கொள்கைகளுக்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும், உடன்பாடுகள் பற்றியும் வாதங்களை அடுக்கிடவேண்டும். நாட்டில் பற்றி எரிகிற ஒரு முக்கியமான பிரச்சனையை தனது கட்சி எவ்வாறு அணுகுகிறது என்பதைத் தெளிவாக மக்களிடம் கூறவேண்டும்.

     இவ்வளவையும் விட்டுவிட்டு, மேடையில் ஏறியதும் தனது கட்சித் தலைவனுக்கு ஒரு பகுதி நேரம் பாராட்டு-மறுபகுதி நேரம் மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு ஆபாச அர்ச்சனை-என்ற நிலையில் பேச்சாளர் தனது சொற்பொழிவை அமைத்துக்கொண்டால்; கூட்டத்தில் மேடைக்கருகே இருக்கிற தனது கட்சிக்காரர்களின் கைத்தட்டலை மட்டுமே பெறமுடியும். பொதுவான மக்களின் பாராட்டு அந்தப பேச்சுக்குக் கிடைக்காது.

    'வசவு' ஒன்றையே தனது பேச்சுப் பாணியாக ஆக்கிக் கொண்டவர்களில் பல பேர், அடிக்கடி அரசியல் கட்சிகள் பலவற்றுக்குத் தாவுகிறவர்களாகவும் இருந்திடக் காண்கிறோம். கொள்கை, இலட்சியம். எந்த அடிப்படையும் இல்லாத சந்தர்ப்பவாதிகள் அவர்கள்! பேச்சால் மட்டுமே பிழைப்பு நட்த்துகிறவர்கள். அவர்கள் கட்சி மேடையானாலும்-அல்லது எந்தப் பொது நிகழ்ச்சியானாலும்-சுற்றுச் சூழல் பற்றிக் கவலை கொள்ளாமல், தரக்குறைவான, ஆபாசமான, மிகத் தீவிரவாதிகளைப் போலக் கடுமையான வார்த்தைகளை வாரியிறைப்பர்.

     சில நாட்கள் கழித்துப் பார்த்தால், அதே பேச்சாளர் வேறு மேடையில்-வேறு கட்சியில்! அதன்பிறகு சில வாரங்கள் சென்றுபார்த்தால், அதே பேச்சாளர், இன்னொரு கட்சியில்-இன்னொரு மேடையில்! இப்படியே அவர்கள் பல கட்சிகளுக்குப் பாய்ந்து மக்களின் மதிப்பீட்டில் மிகக் கேவலமாகத் தேய்ந்து போய்விடுகிறார்கள்.

     நடைமுறைகள்-கொள்கை மாறுபாடுகள்-இவை காரணமாகக் கட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கும்; எங்கே சென்றால் வசதியும் பிழைப்பும் தொய்வின்றிக் கிடைக்கும் என்று திட்டமிட்டுச் செயல்படுவதற்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்துள்ள மக்கள்; அத்தகைய பேச்சாளர்களுக்கு அல்லது எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத்தான் தருகிறார்கள்.

     நல்ல கெட்டியான அடித்தளத்தில் கட்டப்படும் மாளிகையைப் போலவே, அழுத்தமான குறிக்கோளுடன் பேச்சாளர்களும் தங்கள் பொதுவாழ்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.


     எந்த ஒரு அரசியல் கட்சியின் பேச்சாளராக இருந்தாலும்-அவர் தனது பேச்சின் வாயிலாகத் தனது கட்சிக்கு வலிவு தேட முனைவது போலவே  தனது செயல்முறைகள் வாயிலாகவும் வலிவு தேடவேண்டும்.

     நான் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி! திருவாரூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உருக்கமும் உணர்ச்சியும் பொங்கிட ஒரு பெரியவர் முழங்கினர். மக்கள் எழுச்சியுடன் அவர் பேச்சைக் கேட்டனர். மறுநாள் அதிகாலையில் நான் நண்பர்களுடன் திருவாரூர் ஓடம் போக்கி ஆற்று மணலில் நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே மணலில் ஒரு மனித உருவம் ஆடை குலைந்த நிலையில் படுத்திருந்தது. அருகே சென்று பார்த்தோம். முதல் நாள் இரவு முழங்கிய அதே மனிதர் தான். நன்றாக குடித்துவிட்டு ஆற்று மணலில் உருண்டு கிடக்கிறார். அந்தக் காட்சியைப் பார்க்கிறவர்கள் அவரை மட்டுமல்ல; அவர் எந்தக் கட்சிக்காகப்பேச வந்தாரோ-அந்தக் கட்சியையும் கடுகளாவாவது மதிர்ப்பார்களா?

- கலைஞர் மு. கருணாநிதி


....இன்னும் வரும்...15

   

Sunday 24 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 13









 பேசும் கலை வளர்ப்போம்- 13


    தனக்கு என்ன விஷயங்கள் எல்லாம் தெரியும் என்பதை மேடையில் வீற்றிருக்கும் மற்ற பேச்சாளர்களுக்கு அல்லது தலைவர்களுக்கு உணர்த்துகிற பேச்சாக மட்டும் அமையாமல், எதிரே வீற்றிருக்கிற நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பயன்படுகிற பேச்சாக அமையவேண்டுமென்பதில் ஒருபேச்சாளருக்கு மிகுந்த கவனம் தேவை. தனக்கும் அல்லது தன்னைப்போல் நிறைய நூல்களைப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய செய்திகளையோ, குறிப்புகளையோ-மக்களுக்கும் தெரியவைக்க வேண்டுமென்றால் அதற்கேற்றவாறு இடமும்-இடத்திற்கு ஏற்றவாறு எடுத்துக் கொண்ட பொருளும் இருந்திடவேண்டும்.

     மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்திப் பேச வேண்டிய கூட்டம் என்று வைத்துக் கொள்வோம். அரசியல் சட்டப்படி எத்தனை அதிகாரங்கள் மத்திய அரசுப்பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் மாநில அரசுப் பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் பொதுப் பட்டியலில்-என்ற விவரங்களையும்; அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி மத்திய அரசு, ஒரு மாநில ஆட்சியைக் கலைக்க முடியும் என்பதையும்-அரசியல் சட்டம் தொகுத்த அறிஞர்களில் ஒருவரான அம்பேத்கார் அவர்களே வேண்டுமெனக் கருத்தறிவித்ததையும்-மாநில சுயாட்சி பற்றி இராசமன்னர் குழுவினர் ஆராய்ந்து அளித்த அறிக்கையினையும்-அதைத் தி.மு.க. ஆட்சிக்க காலத்தில் பரிசீலித்து சட்டமன்றத்திலேயே மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றியதையும்-மாநிலங்கள் சுயாட்சித் தனமையுடன் திகழவேண்டுமென்று பண்டித நேரு அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டதையும்-ஆதாரங்களுடன்-தேதிகளுடன் எடுத்துச் சொல்ல விரும்புகிற ஒரு பேச்சாளர்; அவர் சென்னையில் ஒரு மேடையில் நின்று பேசுகிறார் என்றாலும் கூட-சென்னையில் எந்தப் பகுதி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்.

     மாநில சுயாட்சி பற்றி மைலாப்பூர் மாங்கொல்லையிலோ-அண்ணாநகர் சாந்தி காலனியிலோ-அடுக்கிக் காட்டுகிற ஆதாரங்களை புரசை வெள்ளாளர் தெருவிலே வாரி வழங்குகிற புள்ளி விவரங்களை-சென்னையில் எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத்துவது என்பது இயலாது.

     மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெறவேண்டுமென்பதற்கு அந்தப் பகுதி மக்களுக்கு எதைச் சொன்னால் மனதில் பதியுமோ; 'ஆமாம்-நியாயந்தானே!' என்று சொல்லத் தோன்றுமோ அதைச் சொல்லவேண்டும்.

     தனக்குத் தெரிந்ததைப் பேசவேண்டும்; தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசிவிடக் கூடாது.

     சில பேச்சாளர்கள் தங்களுக்குத் தெரியாததைப் பேசத்தொடங்கி இடறி விழுவார்கள். அதாவது பணத்தாலோ-அல்லது பதவியாலோ செருக்குற்றிருப்பவர்கள், தப்பித் தவறிப் பேச்சாளராகவும் இருந்தால் அதனால் விளையக் கூடிய வேதனை இது! 

     ஒருவர், ஒரு முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருப்பவர், முக்கியமானவர்கள் நிரம்பிய ஒரு அவையில் பேசினார். தமிழகத்தில் வெள்ளம், புயல் ஏற்பட்டு பல பகுதிகள் சேதமுற்றது பற்றி விவாதம் நடந்தது. அந்த முக்கியாமானவர் பேசும்போது சொன்னார், 'என்னுடைய சிறு வயதில் சென்னையில் பெரு வெள்ளத்தை நேரில் பார்த்தேன்' என்று அத்துடன் நிறுத்தவில்லை. 'எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்.அப்போதுதான் சென்னயில் எம்டன் குண்டு விழுந்த நேரம். பெரிய மழை பெய்து ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொண்டு சென்னை நகரமே மூழ்கிவிடும் போலிருந்தது' என்று விவரித்தார். ஒரு பெரியவர் குறுக்கிட்டு, 'எம்டன் குண்டு விழுந்தது 1914-ஆம் ஆண்டில் அல்லவா?' என்றார்!'உங்களுக்குத் தெரியாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஏழு வயதுச் சிறுவன்' என்றார் திட்டவட்டமாக அந்த முக்கியமானவர்!

     பெரும் பதவியில் இருப்பவராயிற்றே; அதனால் குறுக்கிட்ட பெரியவர் அடங்கிவிட்டார்.

    உண்மை என்ன தெரியுமோ? எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர்! ஜெர்மானியக் கப்பல்! முதல் உலக யுத்தத்தின்போது 1914-ல் சென்னையில் அந்தக் கப்பலில் இருந்து குண்டு வீசப்பட்டது. அந்த நிகழ்ச்சியைக் கல்வெட்டில் குறித்து இன்னமும் சென்னை உயர்நீதிமன்றச் சுற்றடைப்புக்குள் வைத்திருக்கிறார்கள். அந்தக் கூண்டு விழுந்தபோது தனக்கு ஏழு வயது என்று கூறியவர்; பிறந்த ஆண்டு 1917 ஆகும்.

    பதவியிலிருப்பவர் உளறியதாயிற்றே! என்ன செய்யமுடியும்-எப்படியோ தந்திரமாக அந்தப் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு செய்துவிட்டார்கள்.

     என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மருத்துவக் கல்லூரி 'மாணவர் பேரவை'க்கு அழைப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு சென்று இலக்கியமோ-நாட்டு நிலையோ-இப்படி ஏதாவது பொதுவான பொருள்கள் பற்றிப் பேசினால்தான் வரவேற்பு இருக்க முடியும். எல்லாம் தெரிந்தவன் என்று என்னைக் காட்டிக் கொள்ள முனைந்து; இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை எப்படிச் செய்ய வேண்டும்-விபத்தில் தலையில் காயமுற்று மயங்கிய நிலையில் இருப்பவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்- என்றெல்லாம் என்க்குத் தெரியாத விஷயங்களில் அதிமேதாவி போலத் தலையிட்டு உரையாற்றினால்; விளைவு எப்படியிருக்கும்?

     இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது தமிழ் நாட்டில் அரைகுறையாக மதுவிலக்குக் கொள்கை அமுலாகிக் கொண்டிருக்கிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு எல்லோருக்கும் 'மது பர்மிட்'தரப்படுகிறது. இச்சமயத்தில்தான், காஞ்சிபுரம் அரசினர் விழா ஒன்றில் ந்மது முதலமைச்சர் எம.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஒரு செய்தியை வெளியிடுகிறார்.

     'இரண்டு நாளைக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு தொலைபேசிச்செய்தி வந்தது. ஒருவன் குடித்துவிட்ட காரணத்தால் கைதாகியிருக்கிறான்.அவனை ஜாமீனில் எடுக்க ஒருவர் வந்திருப்பதாகச்சொன்னார்கள். குடித்தவனை ஜாமீனில் எடுக்க வந்தால் அவனையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டேன். அதுதான் இந்த ராமச்சந்திரன்.'

     செய்தியே பொய்யாக இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு முதலமைச்சருக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வரமுடியாது. அப்படியே ;போன்' வந்தாலும் ஜாமீன் எடுக்க வந்த காரணத்திற்காக கைது செய்யமுடியாது! சட்டமும் தெரியாமல் மக்களைக் கவர்ந்திட பேசப்பட்ட தவறான பேச்சாகும் அது!

     தெளிவாகத் தனக்குத் தெரியாத எதையும் பேசுவதால் இத்தகைய சங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.


- கலைஞர் மு. கருணாநிதி


-....இன்னும் வரும்....14

Saturday 23 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 12






பேசும் கலை வளர்ப்போம்- 12



     மக்களுக்குத் தெரியவேண்டியதைப் பேசுதல்.
     மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்.
     தனக்குத் தெரிந்ததைப் பேசுதல்.
     தனக்குத் தெரியாததைப் பேசுதல்.

     இப்படிச் சிலவகைகாளாகப் பேச்சுக்களைப் பிரித்துக் கொள்ளலாம். வரலாற்றுச் சொற்பொழிவு, விஞ்ஞானச் சொற்பொழிவு, இலக்கிய சொற்பொழிவு, பொருளாதாரச் சொற்பொழிவு, இவ்வாறு தனித் தனியான சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலும் கருத்தரங்குகளிலேயே எடுபடும். அதற்கு ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான நூலறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் அரங்கின்றி வட்டாடுவதுபோல ஆகிவிடுமென வள்ளுவர் கூறியது பொருத்தமாகிவிடும். நிரம்பிய நூலின்றி அவைக்களம் புகுதல் கூடாது என்று திருக்குறள் திட்டவட்டமாகக் கூறுகிறது.

     கருத்தரங்குகளில் மட்டுமே கூறவேண்டிய கருத்துக்களை, அந்த அரங்குகளை விட்டுப் பாமர மக்களிடமும் மெல்ல மெல்லக் கொண்டு செல்லவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்திவிட்டு, அதனைத்தான் பேச எடுத்துக் கொண்ட பொருளுக்குத் துணையாக இணைப்பது, பாலில் தேன் கலப்பதுபோல இருக்கவேண்டும்.

     ''ஏழை எளியோர், தொழிலாளர் ஆகிய இயலாதோர் வர்க்கத்தைக் கசக்கிப் பிழிந்த ஜார் மன்னனின் கதி என்னவாயிற்று? சோவியத் மண்ணில் பாட்டாளிக் கொடியைப் பறக்கவிட்ட லெனின், அதற்கென எவ்வளவு போராடினான்? உலகப் பெரும் போரில் இட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் தாக்குதலில் இருந்து இங்கிலாந்தைக் காத்திட்ட சர்ச்சில், அடுத்து வந்த தேர்தலில் பிரதமராக முடியாமல் அவரது கட்சி தோற்கடிக்கப்பட்டது.-''

     இப்படி சொற்பொழிவுக்குத் தக்கவாறு பொருத்தமான இடங்களில் தயிர்சோற்றுக்கு ஊறுகாய்போல வரலாற்றுக் குறிப்புக்களைப் பயன்படுத்தலாம். பொதுக் கூட்டப்பேச்சு முழுதும் வரலாற்றுக் குறிப்புக்களாகவே இருந்தால் மக்களைக் கவர்ந்து பாராட்டுப் பெறமுடியாது.

     அதியமான், நூறாண்டு வாழ்வளிக்கக் கூடிய நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற இலக்கியச் செய்தியைக்கூறுவதின் மூலம், அந்த மன்னன் தமிழின்பால் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி அந்த தாய்த் தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் நமது கடமையன்றோ என்பதை நெஞ்சில் பதிய வைக்கலாம்.

     சந்திரமண்டலத்தில் மனிதன் காலடிவைத்துத் திரும்பி வருகிற விஞ்ஞான உலகில் வாழுகிற நாம்; இன்னமும் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தைச்சுற்றுகிறோம். இது அறியாமையல்லவோ? எனக் கேட்பதற்கு விஞ்ஞானப் புதுமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

     பொருளாதாரம் பேசுகிறேன் என்று காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (கேபிடல்) என்ற நூலைப் பக்கம் பக்கமாகப் பொதுமக்கள் முன்னால் விவரித்துக் கொண்டிருந்தால்; இறுதியில் மேடையில் ஒலிபெருக்கியாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். மார்க்ஸ் பிரித்துக் காட்டியுள்ள வர்க்க பேதங்களை உணர்த்தி, தொழிலாளர் வர்க்கம் உலகாளவேண்டுமென்ற உணர்ச்சியை உருவாக்க மட்டுமே பொதுக்கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினையை விளக்க வேண்டும்.

    'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான். அவன் காணத்தகுந்தது வறுமையா? பூணத்தகுந்தது பொறுமையா'?-புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடலில் எவ்வளவு பெரிய கேள்வி எழுகிறது'! 'காலுக்குச் செருப்புமில்லை-கால் வயிற்றுக் கூழுமில்லை; வீணுக்குழைத்தோமடா என் தோழா!' என்ற ஜீவாவின் பாட்டில் எத்துணை உருக்கமும் உணர்ச்சியும் பீறிட்டெழுகிறது!

    தொடர்புடைய ஒரு பேச்சில் இடையிடையே இது போன்றவைகளைக் கையாள்வதின் வாயிலாக மக்களைப் பேச்சாளர், தமது பக்கம் இழுத்துத் தனது கொள்கைகளை அவர்கள் இதயத்தில் ஏற்றிட முடியும். மக்களுக்குத் தெரிய வேண்டியவைகளை இந்த முறையில் அளவோடு பேசவேண்டும்.

     அடுத்தது, மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்!
     நீண்டகாலமாக ஒரு ஊரில் பள்ளிக் கூடமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆற்றைக் கடக்க மக்கள் ஒரு பால வசதியின்றிக் கஷ்டப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.,உணவு தானிய உற்பத்தியாளர்களான உழவர் பெருங்குடியினர் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியான விலையின்றித் துயருறுவதாக வைத்துக் கொள்வோம்.

     இவை போன்ற, மக்களுக்குத் தெரிந்திருக்கிற-மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கிற பிரச்சனைகள் எவையென்பதை அந்த ஊர்க கூட்டத்திற்குச் சென்றவுடன் கூட்ட அமைப்பாளர்களிடம் கேட்டுத் தெரித்து கொண்டு பேச்சினிடையே அவைகளையும் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினால் பேச்சாளருடன் கூட்டத்தில் குழுமியுள்ள அந்தப் பகுதி மக்களும் ஒன்றிவிடுவார்கள்.

    அதைப் போலவே அந்தப்பகுதியில் நீண்ட காலமாக இருந்த தேவைகள் நிறைவு செய்யப்பட்டிருக்குமானால் அவற்றையும்  குறிப்பிடும்போது, பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொண்டு பேச்சாளரின் கருத்துக்களோடு தங்களையும்  இணைத்துக் கொண்டு ரசிப்பார்கள்.

     சில பேச்சாளர்கள், தமக்குத் தெரிந்ததையெல்லாம் கூட்டத்தில் பேச விரும்புவார்கள். மக்களுக்குத் தெரியாததாக இருந்தால் அப்படித் தமக்குத் தெரிந்ததைப் பேசுவதில் தவறில்லை! தெரியாததற்கும் , என்னதான் பேசினாலும் புரியாததற்கும் மிகப் பெரும் வேறுபாடு உண்டு!

     ஒரு குக்கிராமத்துக்குப் பொதுக்கூட்டம், மேடையில் ஒரு பட்டதாரி பேசுகிறார். தலைமை ஏற்றிருப்பவர் ஒரு பட்டதாரி . அடுத்துப் பேச இருப்பவர் ஒரு பட்டதாரி. எதிரே குக்கிராமத்துக்கு மக்கள்.

    'பெரியோர்களே! ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் குத்தியபோது; நீயுமா புரூட்டஸ் என்றான் சீசர்! கிரேக்கத்து நீதிமன்றம் சாக்ரடீசுக்கு விஷக் கோப்பையைப் பரிசாகக் கொடுத்தது! ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இங்கிலாந்தில் மாதக் கணக்கில்-ஆண்டுக் கணக்கில் நடைபெறுகின்றன. ஆபிரகாம் லிங்கன் ஒரு தியேட்டரில்தான் சுடப்பட்டார்.'

     இப்படிப் பேசினால், அது மேடையில் உள்ள மற்ற பட்டதாரி  பேச்சாளர்களுக்குத்தான் புரியும்! எதிரேயுள்ள மக்களுக்கு சீசர், புரூட்டஸ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களே புரியாது.!

- கலைஞர் மு. கருணாநிதி 

இன்னும் வரும் -13