Pages

Sunday 3 January, 2010

இவரைப்போல் வாழ்ந்தவரும் இல்லை!, வீழ்ந்தவரும் இல்லை!







 இவரைப் போல் வாழ்ந்தவரும் இவரைப் போல் வீழ்ந்தவரும் இல்லை என்று இன்று வரை கூறுகின்ற அளவில் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அது


எம். கே. தியாகராஜ பாகவதர். - (மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்) சுறுக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் மார்ச் 1, 1910 மாயவரத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார்  (உயர் நட்சத்திர) அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மற்றும் ஏழிசை மன்னர் என போற்றப்படும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். ஒருவர் எம்.கே. கோவிந்தராஜ பாகவதர் கர்நாடக சங்கீத வித்துவான். இன்னொருவர் எம்.கே.சண்முகம்.


1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய எம்.கே.டி சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர், அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக வலம் வந்தவை.. 1944 இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட் ஒரே இந்தியப்படம் இதுதான்.






எம்.கே.டி யின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றியப் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
  • உன்னை அல்லால்,
  • நீலகண்டா,
  • அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
  • ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
  • பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
  • மன்மத லீலையை வென்றார் உண்டோ,
 எம்.கே.டி  பாடல்களை 41/2 கட்டை  சு(ரு)தியில் பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சு(ரு)தியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.
அவரின் கர்நாடக இசை சாதகத்துக்குச் சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வை  கூறுவர்.


தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்காமான நேரச் சங்கொலி (மாவு மில் சங்கு) முழங்கியது, அந்த இடையூரைப் பொருட்படுத்தாமல் (பாடுவதை நிறுத்தாமால்), அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து (தம் கட்டி பாடுவது) அது முடியும் வரை பாடினார். மக்களின் கவனம் முழுவதும் அசையாமல் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.


ஹரிதாஸ் படத்தில் வரும் பாடலான மன்மதலீலை என்ற பாடல் சாருகேசிசாருகேசி இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு  கூறுகையில்  ""சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர் தியாகராஜ பாகவதர், என்றால் அது மிகையாகாது"" என்று வர்ணிக்கின்றார். அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் ''சாருகேசி''
எனும் பாரம்பரிய இசையில் (கிளாசிக்கல்) பாடப்பட்டது.


அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர். அனைவருக்கும் புரியும்படி எளியத் தமிழில் பாடினார்.
அன்றைய காலகட்டத்தில் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும் ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க பல செல்வந்தர்கள் மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தனர். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றிபெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.


அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர். இந்த புகழை வெகு விரைவில் அடைந்த அவருக்கு வீழ்ச்சியும் வெகு விரைவில் அவரை சந்தித்தது.


சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக ஆத்ம தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 வருடம் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைகாலத்திலேய இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு லண்டன் பிரிவியு கவுன்சிலில் பிரபல வழக்குரைஞர் எத்திராஜ் அவர்களால் இவர்கிளன் இருவருக்காக வாதாடப்பெற்று, 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு வருட சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். (ஆனால் இந்த குற்ற பாதிப்பு அவரின் செஞ்சை தொடர்ந்து வருத்தி கொண்டிருந்தது உண்மை.)


இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


சிறைக்குப்பின் பலர் படமெடுக்க முன்வந்தாலும் பாகவதர் அவற்றை ஒதுக்கித் தள்ளினார். அவரின் கஷ்ட காலத்தில் உதவாத திரைப்படத்துறையை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார். அதன் பின் சொந்தப் படங்கள் எடுத்து தோல்வியைத் தழுவினார். அதன் பின் மேடைக் கச்சேரிகளை மட்டும் பண்ணிக் கொண்டு வந்தார். அதிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறமுடியவில்லை. காரணம் கர்நாடக இசைக்கச்சேரிகள் ஒரு சாதிப் பிரிவினரின் கையிலிருந்ததை அவர் உணர்ந்திருந்தார். தெலுங்கு கீர்த்தனைகள் பாடுபவர்கள் மத்தியில் தமிழிசைப் பாடல்கள் மட்டுமே பாடுவேன் என்று கடைசிவரை நிருபித்தவரும் அவர்தான். ஆகையால் இவருக்காக சபாக்களை ஒதுக்க யாரும் முன் வரவில்லை. இவர்கள் ஒதுக்கினால் என்ன? ஒதுக்கா விட்டால் என்ன? தான் ஒரு மக்கள் கலைஞன் என்று மக்களுக்காக பாடுவதை தொடர்ந்து கொண்டிருந்தார்.


 அன்றைய காலகட்டத்தில் இவரின் கச்சேரிகளை காண மக்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறி நின்று கொண்டு கேட்டனர். அம்மாதிரி சமயத்திலே ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்த்து  உண்டு. பாகவதர் அச்சிறுவனின் குடும்பத்துக்கு பின் 5000 ரூபாய் நிதியுதவி அளித்தார். இது அன்றைய நாட்களில் மிக்பெரியத் தொகை.


ஒருமுறை திருச்சிக்கு காரில் பயணமான பொழுது இவரின் கார் புதுக்கோட்டை வழியாக தொடர் வண்டி பாதையைக் கடக்க முற்படுகையில் அளவுக்கதிமான  கூட்டம் இவரின் காரை கடக்க விடாமல் சூழ்ந்து கொண்டது. ரயில் வண்டியின் கார்ட் இதையறிந்து வண்டியை நிறுத்திவிட்டு பாகவதரை பாட வற்புறுத்தினார். பாகவதர் வேறுவழியின்றி அங்கு பாடிய பிறகு தான் தொடர் வண்டி அங்கிருந்து நகர்ந்தது. அந்தளவுக்கு இவரின் மீதும், இவர் இசையின் மீதும், மோகம் கொண்டவர்கள் இருந்தனர்.




இவரின் ரசிகராகவும் நண்பராகவும் விளங்கிய மதுரை டி.பி சொக்கலால் பீடி அதிபர் ஹரிராம் சேட் இவருக்கு மிக உயர்ந்த பாண்டாக் கார் பரிசளித்தார். இவரின் ரசிகராக வீட்டை விட்டு ஒடி வந்த கோபால்,  ரசிகரானப் பிறகு எம்.கே.டி கோபால் எனப் பெயர் மாற்றிக்கொண்டு எம்.கே.டி யின் ஆத்ம நண்பனாக மாறினார். ஒரு முறை எம் கே டி யின் வைர மோதிரம் கிணற்றில் விழுந்ததை அனைவரும் திடுக்கிட்டு நிற்கையில் அக்கிணற்றில் யாரும் எதிர்பாராத வகையில், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல்  குதித்து அம்மோதிரத்தை கண்டு பிடித்து கொடுத்தார், அது முதல் ஆத்ம ரசிகனாகவும், நண்பனாகவும் எம்.கே.டி யுடனே இருந்துவரலானார்.




பலருக்கு உதவி செய்வதில் பாகவதர் தயாள குணம் கொண்டவர். சேமிப்பு குணம் அற்றவுர். படங்களில் இருந்து ஒய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்கதட்டையே கொடுத்துதவியவர். தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்குரைஞர் எத்திராஜிக்கு ஒரு தங்கத்தட்டை அளித்து பெருமைப்படுத்தியவர். இப்படி உதவிய பாகவதர் குடும்பம் மிகப் பெரிய பொருளாதார இக்கட்டையும் சந்தித்தது.  இன்றைய பல ஜாம்பவானகள் அனைவரும் வந்து காத்திருந்த அவரது வீட்டில் வறுமைத் தாண்டவமாடியது. பாகவதரின் கடைசி காலம் மிகவும் சோகமயமானது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மருத்துவத்திற்காக கூட யாருடைய தயவையும் அவர் நாடவில்லை. பலத் திரைக்கலைஞர்கள் விழா எடுத்து நிதி திரட்டும் ஆலோசனையைக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டார்.


சிவகாமி படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். . சிந்தாமணியில் பாடிய இப்பாடலே அவர் வாழ்க்கையின் இறுதி நிலையாயிற்று.


........"""ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ"""........


என்று அவர் அப்படத்தில் பார்வையிழந்த நிலையில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.


 இறுதியில் நவம்பர் 1, 1959, ஈரல் நோயினால் பாதிப்படைந்தவராக  சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.


மிகவும் செல்வச் செழிப்புட்ன வாழ்ந்த அவரது குடும்பம் அவரது மறைவுக்குப்பின் இன்னும் மிகுந்த வறுமையை அடைந்தது. மகள் மற்றும் மகன்களையும் இழந்த அவரது மனைவி (இரண்டாவது மனைவி) தனது மூன்று பேரன்களுடன் வறுமையை சந்தித்தார். சமீபத்தில் தான் அந்த வறுமை சற்று சீரடைந்தது. அவர் வாழ்க்கை சில நல்ல திரைக்கலைஞர்களின் உதவியாலும், அரசின் உதவியாலும் சற்று சீரடைந்தது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்  ஜானகி இவர்களை வைத்து சொந்த படம் எடுத்த குடும்பம் மிகவும் தள்ளாட்டம் கண்டு 1999 இல் சற்று வறுமையிலிருந்து மீண்டது.


இன்றும் அவரின் திரைப்பாடல்களைக் கேட்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில், இவருக்கு  ரசிகர்கள் இன்றளவிலும் உள்ளனர்.. இவருக்கென தனி ரசிகர் மன்றமும் அங்கு உள்ளது, என்பது இவரின் மங்காதப் புகழுக்கு சான்று.




அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி


  1. பவளக்கொடி (1934)
  2. சாரங்கதா (1935)
  3. சத்தியசீலன் (1936)
  4. சிந்தாமணி (1937)
  5. அம்பிகாபதி (1937)
  6. திருநீலகண்டர் (1939)
  7. அசோக்குமார் (1941)
  8. சிவகவி (1943)
  9. ஹரிதாஸ் (1944)
  10. ராஜமுக்தி (1948)
  11. அமரகவி (1952)
  12. சியாமளா (1952)
  13. புதுவாழ்வு (1957)
  14. சிவகாமி (1959)


திரையில் முடிசூடா மன்னனாக வெகு விரைவிலேயே விளங்கிய ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை  வெகு விரையிலேயே வீழ்ந்தாலும், அவரின் குறைந்த சாகசங்களே இன்று அவரின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. கலைஞன் விமர்சனங்களையும் தாண்டியவன் என்பதை பலரும் இன்றளவில் மறந்துவிட்ட நிலையில், அன்றைய மௌடிகமான காலத்தில் மறந்திருந்தது பெரிய விஷயமில்லை. இல்லாவிட்டால் லட்சுமி காந்தன் என்ற விமர்சகருக்காக இந்த சீரழிவு விளைந்திருக்காது. இது நிகழ்ந்திராவிட்டால் அவரின் சாதனைகளை இந்த உலகம் இன்னும் கண்டிருக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும். இருப்பினும் இன்றும் மறவாத அவரின் ரசிகர்கள் இருக்கின்றனர், அவர்களின் வாழ்த்துக்கள் அவர்களின் குடும்பத்தாரை சீரும் சிறப்புமாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக அரசின் முயற்சியும், திரைத்துறையினரின் முயற்சியும் சேர்ந்த உதவிகள் கிடைத்திருக்கின்றது. இது அவரின் ரசிகர்களின் முயற்சியினால் மட்டுமே விளைந்திருக்கும் என நம்புவோமாக.


இது இந்த இணையதளத்தின் மூலமாக உறுதிப்படுகின்றது.
 எம்.மே.டி யின் வாழ்க்கைத் துணைவியார் பேட்டி

மேலும் விரிவான தகவலுக்கு http://www.lakshmansruthi.com/mkthyagarajabagavadhar/index.asp


பாகவதர் பாடல்கள் தரவிறக்க மற்றும் கேட்கhttp://www.lakshmansruthi.com/mkthyagarajabagavadhar/song.asp#


மற்றொரு தளம் பாகவதர் பாடல்கள் கேட்கhttp://raja1630.tripod.com/mktb/id18.html


No comments: