''நமக்கு எதிரியா இருந்தவங்க எல்லாம் ராசியா ஆகிட்டிருக்கிற நேரம். ஒங்க பங்குக்கு நீங்களும் ஒருத்தரை கூட்டிட்டு வந்துட்டீங்க'' என்று குழந்தைபோல் சிரித்தார் பெரியார்.
அது 1968-ம் வருடம்.
அதற்கு முன் 1949-ல்
பெரியாரிடமிருந்து பிரிந்து கசப்பான மோதுதல்களோடு இருந்த தி.மு.க. 1967
தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றபின் அதே 1967 தேர்தலில் பல்லும் நகமும்
தேயத் தங்களை எதிர்த்துத் தோற்கடிக்கப் பாடுபட்ட தங்கள் தலைவர் பெரியாரிடம்
வந்துசேர்ந்து சில மாதங்களே ஆன நேரமது.
காங்கிரஸ்காரர்கள்- குறிப்பாய் தலைவர் பெரியாரின் சொந்த அண்ணன் மகன் மதிப்பிற்குரிய அண்ணன் ஈ.வெ.கி.சம்பத் (இன்றைய நடுவன் அமைச்சர் இளங்கோவனின் தந்தை) போன்றவர்களே இந்த உறவைக் குறைகூறி பேசியபோது அண்ணா சொன்ன வார்த்தை
வரலாற்றுக் கனபரிபாணமும் இலக்கியச் செறிவும் மிக்கதாகும். அண்ணா சொன்னார், ''பிரிந்த தந்தையிடம் மகன் சேர்வது குணங்களில் ஒன்றே தவிர- குற்றங்களில் ஒன்றல்ல.''
அன்று விழுப்புரம் பயணியர் விடுதியில் தந்தை
பெரியாரின் முன்னால் நான், பெரியாரிடமே 'நாணயமாணவன்' என்று பெயர் வாங்கிய அவருடைய நம்பிக்கைக்குரிய
செயலாளர் ஈரோடு சுப்பையா, என் வாழ்வில் மறக்க முடியாத தொழிலதிபர்
அடைக்கலம், பெரியாரின் டிரஸ்ட்டில் உறுப்பினராய் இருந்த
மீனாட்சிசுந்தரம், பின்னர் என் வாழ்க்கை துணையாகிவிட்ட எனது பெண் நணபர் காதரின் எல்லோரும் நின்றோம். மதம் மறுப்பு, சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணத்தை நாங்கள்
இருவரும் விழுப்புரம் பொதுக்கூட்ட மேடையில் நடத்திக்கொள்ள பெரியாரிடம் சென்றோம். அவர் முன் நின்றோம்.
பெண் கிருத்துவர் நான் சட்டப்படி இந்து எனப்பட்ட பகுத்தறிவுவாதி. சுயமரியாதைத் திருமணச் சட்டம் அப்போது அமலுக்கு வந்துவிட்டது என்றாலும் அது இரண்டு இந்துக்கள் இடையேதான் நடக்கவேண்டும். சட்டச் சிக்கல்.
ஒருமுறை ஒரு இந்துவுக்கும்-கிறித்துவருக்கும்
பெரியார் தன் தலைமையில் திருமணம் முடித்து வைத்து அது சட்ட சிக்கலாகி
பாதிரிமார்கள் பெரியாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கச் செய்துவிட்டார்கள்
அதே எங்கள் திருச்சியில். இப்போது நான் இரண்டாவது. அப்போது நான் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்ட திருச்சி நகர திராவிடர் கழகத் தலைவர். என்னுடைய துணைவியார் மதப்படி கொள்கை ரீதியாய் பெரியார்
இயக்கத்தின் எதிரி.
ஆனால், இந்தக் காதலுக்கு விதை போட்டவரே ஒருவகையில் பெரியார் தான். எங்கள் காதல் பூங்காவில் பூக்கவில்லை. போராட்டக் களத்தில்தான் விதைக்கப்பட்டது.
ஆனால், இந்தக் காதலுக்கு விதை போட்டவரே ஒருவகையில் பெரியார் தான். எங்கள் காதல் பூங்காவில் பூக்கவில்லை. போராட்டக் களத்தில்தான் விதைக்கப்பட்டது.
தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போர், மாணவர்களால்
துவக்கப்பட்ட போர். வேகமான புயலாய் உருவெடுத்தது.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த
மாணவர்கள் இடையேயும் அவரவர் தலைமையில் கட்டுப்பாடுகளைத் தாண்டிய இந்தி எதிர்ப்புத்
தீ பற்றிக் கொண்டது. காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமே வரவழைக்கப்பட்டு
திருச்சியில் துப்பாக்கிச் சூடும் சாவுகளும் நிகழ்ந்தன.
மாணவர்கள் போராட்டத்தின் இந்த உக்கிரத்தை பின்னின்று
இயக்குபவர் இன்றைய முதல்வர் கலைஞர் தான் என்று கலைஞரை முகத்துக்கு எதிரிலேயே
அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார். அதன் விளைவாய் கலைஞர் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில்
அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் இந்தி ஒழிக (தமிழ் வாழ்க அல்ல) என்ற முழக்கத்தின் காரணபூதரான தலைவர் பெரியார் 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்போரை
ஆதரிக்கவில்லை. மாறாக எதிர்த்தார். காரணம் 1938-39ல் எந்த ராசகோபாலாச்சாரி கட்டாய
இந்தியை தமிழகத்தில் கொண்டுவந்து தாளமுத்து-நடராசன் இருவரின்
சாவுக்குக் காரணமாய் இருந்தாரோ-அவர்தான். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போருக்கு
ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த சுக்கிராச்சாரி.
அன்று 1965-களில் தமிழகத்திலிருந்த காமராஜர் ஆட்சியை ஒழிக்க ராசகோபாலாச்சாரி கண்டுபிடித்த
அரசியல் வியூகம்தான் 1965 இந்தி எதிர்ப்புப்போர் என்பது பெரியாரின் நிலைப்பாடு. இதை அப்படியே பேசவும் எழுதவும் செய்தார் பெரியார். இதனால் அரசியலுக்கு அப்பாற்பட்ட மாணவர்களும் பெரியாரின் பேரில் கோபம்
கொண்டார்கள்.
பெரியாரின் வேன் பழுதுபார்க்க (அவரில்லாமல்) பழுதுபார்க்கக் கொண்டுசெல்லப் பட்டபோது யாரோ அதை கல்வீசித் தாக்கினார்கள்.
கதை எங்கோ போகிறதே திசைமாறி என்று எண்ணாதீர்கள். இந்த பின்னணியில் கட்டுரையின் துவக்கத்திற்கு வாருங்கள். பெரியார் இந்தத் தாக்குதலை துணிவோடு
எதிர்கொண்டார்கள். நாகை-நன்னிலம்-கரூர் போன்ற இடங்களில் இது தி.மு.க, தி.க மோதலாய் வெடித்தது.
பெரியார் இதுபற்றிய தனது நிலையை மாணவர் இடத்தில்
தெளிவுபடுத்த எண்ணினார்.
பெரியார் மாபெரும் சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர். என்னுடைய எண்ணத்தில் அவர் இவைகள் யாவற்றையும் தாண்டி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டக்கூடிய மாபெரும் அமைப்பாளர்.
(Organiser)
அன்றைக்குத் திருச்சியில் மூன்று ஆண்கள் கல்லூரிகள, இரண்டு பெண்கள் கல்லூரிகள். இரண்டு கல்லூரிகள் கிறிஸ்துவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இரண்டு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒன்று இசுலாமியர்களுடையது.
வடகலை அய்யங்கார்கள் ஆதிக்கத்தில் இருந்த தேசியக்
கல்லூரியின் பழைய மாணவன் நான் பெரியாரின் தொண்டரான மாபெரும் புரட்சி எழுத்தாளர் குத்தூசி குருசாமி, உலகப்புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர். ராமமூர்த்தி, கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் இக்கல்லூரியின் மாணவர்களே!
கல்லூரிக் காலத்திலேயே மாணவர் இயக்கத் தொடர்புடைய
என்னை ஆண்-பெண் மாணவர்களைப் பெரியாரை சந்திக்க வைத்துப்
பின்னர் அவர்கள் மூலமே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யும் பொறுப்பை என்னிடம் தந்தார்கள்.
அன்றைக்கு மாணவ-மாணவிகள் , குழுகுழுவாய் சேர்ந்து அரட்டை அடிக்கும் இடங்கள் மேலரண் சாலை இருந்த
இந்தியா காபி அவுஸ்! (இப்போது அது வணிகவளாகங்களாக கட்டப்பட்டு விட்டன) இன்னொன்று
ஐம்பதாண்டுகளாய் மணமும் சுவையும் மாறாத 'மைக்கேல்ஸ்
ஐஸ்கிரீம்' ஸ்டால். நானும் மாணவர்கள் குழுவோடும், மாணவிகள் குழுவோடும் அவர்களுடைய உறவினர்கள்- நண்பர்கள் சக மாணவர்களோடும் சில நாட்கள் பேசினேன்.
''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்ற முழக்கம் மாணவர்களின் இதயத்துடிப்பாகிவிட்ட நேரம். இந்தி எதிர்ப்புப் போர் ராசகோபாலாச்சாரியின் சந்தர்ப்பவாதம் -என்ற எங்களுடைய அறிவுபூர்வமான வாதங்கள் எடுபடவில்லை.
''சாவிலும் தமிழ் படித்து சாகவேண்டும்
எங்கள் சாம்பலெல்லாம் தமிழ் மணந்து வேக வேண்டும்''
என்ற கவிதை வரிகள் மாணவர்கள்- தமிழ் ஆர்வலர்கள் தங்கள் தாய்-தந்தையருக்கு எழுதும் கடிதங்களில்- ஏன் காதல்
கடிதங்களில்கூட தலைப்பில் மிளிர்ந்த காலம், ஒளிர்ந்த நேரம்.
கல்லூரி மாணவர்களிடம் என்னுடைய அணுகுமுறையை அறவே மாற்றிக்கொண்டேன். மெல்லப் பொதுவான நட்பாக-பொதுச்செய்திகள்- அவர்களுக்கு விருப்பமான இலக்கியக் கலந்துரையாடல் என மாறியது. இதற்கிடையில் பேரரிறிஞர் அண்ணா மாணவர்களுக்கு வைத்த வேண்டுகோள்- அரசின் அணுகுமுறையில் மாற்றம், இந்தி எதிர்ப்புப்
போரில் வன்முறை வேகம் தணிந்தது. கடந்த இரண்டுமாத மாணவ- மாணவிகளுடனான மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் ஸ்டாலின் கலந்துரையாடலில் ஒருவர்தான்
பின்னாளில் எனது மனைவியான காதரின் ஒருநாள் அவரையும் அவருடைய தோழிகளையும் வேறு
ஒரிரு நண்பரகளையும் 'உங்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கும்- பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குமான வேறுபாடுகள் பற்றி
நேரில் பெரியாரையே கேளுங்களேன்'' என்று மீண்டும்
என் வலைக்குள் இழுத்தேன்.
முதலில் யோசித்த- பயந்த அவர்கள் பெரியாரிடம் என்னுடன் வந்தார்கள். பெரியார் வழக்கப்படி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் போதும் அவர்கள் பெற்றோர், குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தார் பரிவோடு. பிறகு எல்லோரும் கேள்விகள் கேட்கக் கேட்க பெரியார் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். நீண்ட நேரத்திற்குப் பின் மாணவ- மாணவிகள் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டார்கள். மாணவியர்நிலையில் முழுமையான மாற்றமில்லை.
பெரியார் வழக்கப்படி அவர்கள் ஒவ்வொருவரையும் கையைப் பற்றிக்கொண்டு, ''மன்னிக்க வேண்டும். ஒங்க படிக்கிற நேரத்தை வீணாக்கிப் போட்டேன். ஏதோ... என் அறிவுக்கு சரியெனப்பட்டதச் செய்யறேன். தப்புன்னு நெனைச்சா மன்னிச்சுக்குங்க... நான் ஒங்க அளவுக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கலே... என்னைக்காவது என்னோட முடிவு தப்புன்னு தெரிஞ்சா நிச்சயம் மாத்திக்கிறேன்'' என்றார் பணிவாக. மாணவர்கள் நிலை குலைந்து போனார்கள்...
பெரியார் வழக்கப்படி அவர்கள் ஒவ்வொருவரையும் கையைப் பற்றிக்கொண்டு, ''மன்னிக்க வேண்டும். ஒங்க படிக்கிற நேரத்தை வீணாக்கிப் போட்டேன். ஏதோ... என் அறிவுக்கு சரியெனப்பட்டதச் செய்யறேன். தப்புன்னு நெனைச்சா மன்னிச்சுக்குங்க... நான் ஒங்க அளவுக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கலே... என்னைக்காவது என்னோட முடிவு தப்புன்னு தெரிஞ்சா நிச்சயம் மாத்திக்கிறேன்'' என்றார் பணிவாக. மாணவர்கள் நிலை குலைந்து போனார்கள்...
...திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.க கழக வெளியீட்டாளர்) சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி1 முற்று..
தொடரும் பகுதி ...2.
இன் தலைப்பு; ''கலைஞரைக் கண்டவுடன்''
No comments:
Post a Comment