Pages

Tuesday 23 March, 2010

மனித உயிர்களோடு விளையாடும் காலாவதியான மருந்துகள்

.

சென்னை : காலாவதியான மாத்திரைகளை விற்று வந்த மோசடி கும்பல் போலீசில் சிக்கியது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த கும்பலை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. காலாவதியான மாத்திரைகளை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் இன்று கோட்டையில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரைகளை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு அவை கெட்டுப் போய்விடும். இப்படி கெட்டுப்போன, காலாவதியான மாத்திரைகள் பல கடைகளில் விற்கப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசாருடன் இணைந்து மருந்து கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் காலாவதியான மாத்திரைகள் எப்படி கடைகளுக்கு மீண்டும் விற்பனைக்கு வருகின்றன என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கொடுங்கையூரில் குப்பைகள் கொட்டும் இடம் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளில் காலாவதியான மருந்துகளும் இருக்கும். இதனை அந்த பகுதியில் வசித்து வரும் ரவி, அவரது மனைவி சுனிதா ராணி ஆகியோர் ஆட்களை வைத்து சேகரித்துள்ளனர். அவற்றை சேகரித்து தருபவர்களுக்கு கிலோவுக்கு ரூ.150 கொடுத்துள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீசார் அவர்களை விசாரித்தனர். அப்போது சுனிதா ராணி மட்டும் போலீசில் சிக்கினார். ரவி தலைமறைவாகிவிட்டார்.

பிடிபட்ட சுதாராணியிடம் நடத்திய விசாரணையில், குப்பைமேட்டில் கிடக் கும் காலாவதியான மாத்திரைகளை வாங்கி கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் விற்றுவிடுவோம் என்று கூறினார். உடன் கோயம்பேட் டில் சம்பந்தப்பட்ட இடத்தை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட காலாவதியான மருந்துகள் பெட்டி பெட்டியாக சிக்கின. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்து களை போலீசார் கைப்பற்றி னர். உடன் குடோனில் வேலை பார்த்த கிருபாகரன்(30), ராமகிருஷ்ணன்(35), விஜயகுமார்(34), கோவிந்தன்(29), ஜெகதாம்மா(30), தர்மராஜன்(50) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சுனிதா ராணியையும் கைது செய்தனர்.

குடோன் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் தலைமறைவாகிவிட்டார். இவர் சென்னை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவராக உள்ளார். இது தொடர்பாக எழும்பூர் சஞ்சய் குமார், முத்தமிழ் நகர் ரவி, சூளைமேடு வெங்கடேசன், பாஸ்கரன், பிரதீப், ஜோட்டியா, சேகர் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குப்பைமேடு மட்டுமல்லாமல் மருந்துகளை விற்கும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகளை, இந்த மோசடி கும்பல் தங்கள் கையில் போட்டுக்கொண்டு, காலாவதியான மாத்திரைகளை குறைந்த விலை கொடுத்து வாங்கியுள்ளது. பின்னர் அவற்றை கோயம்பேடு குடோனுக்கு கொண்டு சென்று, கெமிக்கல் மூலமாக அதில் உள்ள தாயாரிப்பு தேதி, காலாவதி தேதிகளை அழித்துவிட்டு, புதிதாக வேறு தேதிகளை போட்டுள்ளனர். பின்னர் இந்த மாத்திரைகளை கம்பெனிகள் தயாரித்து தந்த மாத்திரைகளைப் போல நாடுமுழுவதும் விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

காலாவதி மருந்துகள் பிடிபட்டது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜிடம் கேட்ட போது, ‘‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காலாவதியான மாத்திரைகளை விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. காலாவதி மருந்துகளை விற்பது நிரூபிக்கப்பட்டால், ரூ. 10 லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனையும் கிடைக்கும். காலாவதியான மருந்துகளை எப்படி கண்டுபிடிப்பது, பொது மக்களுக்கு எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இப்போதுள்ள பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடக்கிறது. காலாவதி மருந்து குறித்து தகவல் தர ஹெல்ப்லைன் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இது மனிதாபிமானம்
காலாவதி மருந்து விற்ற மீனாட்சி சுந்தரம் தலைமறைவாகிவிட்டார். மேலும் சிலர் சிக்குவார்கள் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசார் கோயம்பேடு குடோனில் காலாவதி மருந்துகளை பிடித்த தகவல் கிடைத்ததும், அது என்ன மருந்து என்பதை தெரிந்து கொண்ட திருவாரூர் மருந்து வியாபாரிகள் அவற்றை மக்களுக்கு விற்பதை நிறுத்திவிட்டனர். இந்த மருந்துகளை சாப்பிட்டு மக்கள் பாதிப்படைய கூடாது என்று இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளனர்.

......தினகரன் 22.03.2010

கூடுதல் தகவல்....
காலாவதியான மருந்து விற்பனையாளர்களை தண்டிக்க சட்டம் அமல்.....ஆயுள் தண்டனை,

தப்பிச்சென்ற காலாவதியான மருந்து விற்பனையாளர்களை பிடிக்க 5 தனிப்படை.....நீதிமன்றம் முன்ஜாமின் மறுப்பு (சென்னை செசன்ஸ் நீதிமன்றம்)

குறிப்பாக தாய்மார்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக அடிக்கடி மருந்துகள் வாங்குபவர்கள் அவர்கள் தான். எந்த கேள்வியும் கேட்காமல்.

போலி மருந்து, காலாவதியான மருந்துகள் பற்றி உடனடியான புகாருக்கு தொலைபேசி 044 24338421.

முக்கிய குறிப்பு எந்த மருந்து வாங்கினாலும் ரசீது வாங்க மறக்காதீர். இல்லையென்றால் மருந்தே வாங்காதீர். அவர்கள் அதற்குரிய உள்ளூர் வரிகளை ரசீது கொடுக்கமலேயே வாங்கி விடுகின்றனர். ஆனால் ரசீது கொடுப்பதில்லை. நாமும் கேட்பதில்லை. படித்தவர்கள் மத்தியிலேயே இந்த விழிப்புணர்வு இல்லை. 

(பயந்தது போல் நடந்துவிட்டது எத்தனை பேர்களின் உயிரைக்கொன்றார்களோ? எவ்வளவு காலம்....இதை தொடர்ந்திருப்பார்கள்....இந்த மனிதன் சென்னை மாவட்ட மருந்து விறபனையாளர் சங்கத் தலைவர் வேறு...கொஞ்சம் அசந்தால் நம்ம உயிர் நம்முடையது இல்லை)

No comments: