Pages

Tuesday 8 December, 2009

போலி மருத்துவர்கள் உருவாவதற்கு அசல் மருத்துவர்களே காரணம்?








இந்த இடுகையை இங்கு இடுவதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளே. சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வாமையை காரணமாக உறவினரின் கைக்குழந்தைக்கு நடு இரவு வலிப்பு ஏற்பட்டது. நடு இரவில் 12 மணிக்குமேல் நடந்ததால் அனைவரும் பதறிப்போய் செய்வதறியது திகைத்தோம். அப்பொழுது தான் 24 மணிநேர மருத்துவமனை எங்கு பக்கத்தில் இருக்கின்றது என்பதை தேடியவுடன்.சற்று தொலைவில் இருப்பதை அறிந்து அந்த சிறு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றாம். அங்கு தூங்கி எழுந்து கலைந்த தலைமுடியுடன் வந்தவரை பார்த்ததும் இவரா?
மருத்துவர்? என்ற சந்தேகத்துடன் அவரை அணுகினோம். என்னதான் இரவு நேரத்தில் வந்திருக்கின்றோம் என்றாலும் மருத்துவருக்குரிய எதாவது அறிகுறியாவது தென்படுமே?. அது எதுவுமே அவரிடம் தெரியவில்லை. என்று மனதிற்கு தோன்றினாலும் அவரிடம் இப்பொழுது குழந்தையை காட்டுவதை தவிர வேறெந்த வழியுமில்லை. அவரும் குழந்தையின் நாடி, உடல் உஷ்ணம், எடை முதற்கொண்டு தேர்ந்த மருத்துவர் முறைகள் அனைத்தையும் சோதித்தார். அதன் பிறகு ஊசியும் போட்டார், அதன்பிறகு பொடி செய்த மருந்தையும் மூன்று வேளைக்கு கொடுக்கும்படியும், மேலும் அச்சடித்த மருந்து சீட்டில் (அதில் பல மருத்துவர்களின் பெயர்கள் இருந்தன) நாளை காலை வாங்கினால் போதுமானது என்று சில மருந்துகளின் பெயர்களையும் எழுதி கொடுத்தார். கீழே மருந்து கடையின் பெயரும் இருந்தது. அவரின் பெயர் என்ன என்று சந்தேகத்துடன் தெரிந்து கொண்டோம் அந்த பெயரும் அந்த மருந்து சீட்டில் இருந்தது. பிறகு மறுநாள் காலையில் தெரிந்த மருந்து கடையில் விசாரிக்கையில் அவர் உண்மையானவரே என்று தெரிவித்தார். ஆனால் அவர் மறைக்கின்றார் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். ஆனால் விசாரித்ததில் அவரும் போலி மருத்துவர் தான் என்பது தெரிந்தது இதை செய்ய சொல்லியிருப்பதும் அந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் தான். அதற்கு பிறகு அந்த போலி மருத்துவ நபர்கள் ரெய்டின் போது தப்பித்துவிட்டனர்.


சென்னையிலேயே பல இடங்களில் குடிசை போட்டுக் கொண்டு பல இடங்களில் 24 மணிநேர மருத்துவமனைகள் திறந்து ஏகபோக வியாபாரம் செய்து கொண்டு வருகின்றனர். கிராமத்தில் கேட்கவா வேண்டும்?. இதில் காவல் துறை அதிகாரிகளே, ஏன் அனைத்து காவலர்களும் அங்கேயே ஒசி
சிகிச்சையும் எடுத்து செல்வார்கள். சில முதிர்வடைந்த நோயாளிகள் இவர்களைத்தான் நாடுகின்றனர். இவர்களிடம் டிரிப்ஸ் ஏற்றினால் கொடுத்ததை வாங்கி செல்வார்கள். ஆனால் தேர்ந்த மருத்துவரை கூப்பிட்டால் 500 ரூபாய்க்கு தீட்டிவிடுவார். இது ஏழை நோயாளிகளுக்கு அதிகப்படியான செலவு என்பதால் அவர்களை பற்றி தெரிந்தாலும் அவர்களிடமே செல்கின்றனர். அரசு மருத்துவமனையிலும் காசு கொடுத்தால் தான் நல்ல சிகிச்சை, அதற்கு உயிர் போகின்ற காலம் வரை யாராவது ஒருத்தர் போதும் என்ற நிலையில் முதியவர்கள் இப்போலிகளை அழைக்கின்றனர்.


இது நடந்து சில நாட்களுக்கு பிறகு வழக்கறிஞரான நண்பர் ஒருவரை நீதிமன்றத்தில் சந்திக்கையில் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போலி மருத்துவர் ஒருவர் பிணை (bail) வாங்க வழக்கறிஞர்களை அணுகியபொழுது. அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "24 மணிநேர மருத்துவ மனைகள் அத்தனையிலும் பெரும்பாலும் போலி மருத்துவர்களே இருப்பார்கள், பல மருத்துவ மனைகளிலும் போலி மருத்துவர்களே அதாவது மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்களே மருத்துவர்களாக உடையணிந்து சிகிச்சைகளை அளிக்கின்றனர்". (இதை சென்னையில் பிரபல மருத்துவமனைகளில் நானே கண்டிருக்கின்றேன்.) "அது அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் அனுமதியின் பேரிலேயே நடைபெறுகின்றது." என்று கூறினார். மேலும் "போலி மருத்துவம், முறையற்ற மருத்துவம் பார்த்தே பெரிய பெரிய மருத்துவமனைகளை கட்டிவிட்டனர்". ( அவர் கூறிய மருத்துவ மனை மருத்துவர் வேறு ஒரு நாள் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தது இதை விட ஆச்சர்யம்.)



மேலும் அந்த போலி மருத்துவர் எப்படி சிக்கினார் என்று கூறுகையில் சென்னை செங்குன்றம் பகுதிகளில் மிகவும் புகழ் பெற்ற பொது சிகிச்சை மருத்துவராக (General Physician) வலம் வந்திருக்கின்றார். இந்த மருந்தாலோசனைகளை வழங்கிய மருத்துவமனை சென்னை அயன்புரத்தில் இயங்கிவந்துள்ளது. (இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றது. இது அங்கிகரீக்கப்பட்ட மருத்துவரின் மேற்பார்வையில் இயங்குகின்றது. அவர் மருத்துவமனையிலும் பல போலி மருத்துவர்கள் உள்ளனர்) அந்த போலி மருத்துவர் மேனிலை கல்வி வரைக்கும் வரைதான் பயின்றவர். மேலும் செங்குன்றம் பகுதியிலேயே மூன்று மருத்துவமனைகள் இயங்கின. இது அத்தனையும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் உதவியாளர் தலைமையில் எட்டாம் வகுப்பு வரைதான் படித்தவர் நிர்வகித்து வந்தார். அசல் மருத்துவர் கூட அப்படி சிகிச்சை தரமாட்டார்கள் அந்தளவுக்கு கூட்டம். மொத்தம் மூன்று இடங்களில் இந்த மருத்துவமனைகள் செய்ல்பட்டு வந்துள்ளது.



இத்தனைக்கும் அவர் பணிபுரிந்த (பெயில் வாங்க வந்த குற்றவாளி) மருத்துவமனையில் அவரை போலி என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. இதே செங்குன்றம் பகுதியில் இயங்கும் இதனோடு இணைந்த வேறொரு கிளை மருத்துவ மனையில் பணிபுரிந்த பெண் போலி மருத்துவர், மருத்துவர் என்ற பெயரில் சக்கைபோடு கொண்டிருந்தார். அந்த மருத்துவ மனையில் தீடீரென்று ஒரு நாள் 7 வயது சிறுவன் காய்ச்சல் என்று சிகிச்சைக்கு வந்திருக்கின்றான். அது வேறு பாதிப்பினால் வந்த காய்ச்சல் ஆனால் அந்த பெண்மருத்துவர் வழக்கமாக போடும் ஸ்டீராய்டு மருந்தையே அந்த சிறுவனுக்கு போட்டதினால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதன் பின் புகாராகி அது தமிழகம் முழுவதும் ஒரு கலக்கு கலக்கியது.. ஆனால் இன்று வரை அந்த போலி மருத்துவமும் குறையவில்லை, போலி மருத்துவர்களும் குறையவில்லை. அவர் கூறும் பொழுது போலி மருத்துவர்கள் எப்பொழுதும் ஸ்டிராய்டு மருந்தைதான் பயன்படுத்துவார்கள் அதுதான் தப்பிக்க ஒரே வழி. மக்களும் கைராசி டாக்டர் என்று அலைமோதுவார்கள். என்று கூறினார். அவர் கூறும் பொழுது அங்கிருப்பவர்கள் சிரித்து விட்டனர்.



அதன் பிறகு சிறை சென்று வந்ததும் அந்த மருத்துவ மனைப் பக்கமே செல்லவில்லை, ஆனால் முன்பு இந்த மருத்துவமனையை திறக்க வழி ஏற்படுத்திய அதே அங்கீகாரம் பெற்ற மருத்துவர் சென்னை அயன்புரத்தில் இன்னும் இருக்கின்றார். கீழே 24 மணி நேர மருத்துவமனை மேலே அவர் வீடு அவரை கூப்பிட்டு மறுபடியும் மருத்துவராக்கிவிட்டார். அவர் வேண்டாமென்று எவ்வளவு கூறியும் நான் பார்த்து கொள்கின்றேன் என்று கூறி இன்று வரை பணி புரிகின்றார் என நினைக்கின்றேன். இப்பொழுது ஒரு போலி மருத்துவர்கள் யாரால் உருவாக்கப்படுகின்றனர் என்று தெளிவாக தெரிகின்றது. நம்க்கு. தெரிந்தது இது தெரியாதது எவ்வளவோ?



இப்படித்தான் இன்றைய மருத்துவ படிப்புகள் சென்று கொண்டிருக்கின்றன, இது என்ன ஸ்டிராய்டு? என்று கேட்க தோன்றுகிறதல்லவா? இது பல அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களும் இம்மருந்தை பயன் படுத்துவது வாடிக்கையான ஒன்று தான். நாம் கைராசியான மருத்துவர்கள் இவர் என்று அடிக்கடி சொல்லிகொண்டிருப்போமே, ஒரு முறை போனவுடன் நோய் தீர்க்கும் மருத்துவரை நல்லமருத்துவர் என்று கூறுவோமே.அந்த மருத்துவர் எல்லாம் இந்த ஸ்டிராய்டு மருந்தை தான் கொடுப்பார்கள். ஸ்டிராய்டு மருந்துகள் நோய்க்கிருமிகளின் வீரியத்தை மங்கச்செய்யாமல் உடலின் வீரியத்தை அதிகரிக்க செய்து விடுகின்றது. இதனால் நோய் அப்போதைக்கு விலகுகின்றது.



நோய் என்றால் என்ன நம்முடைய செல்கள் எதிர் உயிர்களோடு எப்பொழுதும் சண்டே போட்டுக்கொண்டே இருக்கும். அது எப்பொழுது எதிர் உயிர்களிடம் தோற்கும் அளவுக்கு போகின்றதோ அன்று நம் உடல் நோய் தாக்குதலக்குண்டாகி அதை காய்ச்சலின் மூலம் வெளிப்படுத்துகின்றது. காய்ச்சல் நோய் தாக்குதலின் அறிகுறி (symptoms). அதுவே நோயல்ல. ( இதை மருத்துவ ரீதியாக தெரிந்து கொள்ளலாம், புரிவதறகாக சுலபமாக சொல்லப்பட்டது) . செல்கள் நோய் தாக்குதலுக்கு உண்டானவுடன் அது சிறிது சிறிதாக அதன் எதிர்ப்புத்தனமையை, செயல்தன்மையை இழக்கின்றது இதை சீரமைப்பதற்காகவே மருந்துகள். அந்த மருந்துகள் நோயின் வீரியத்தனைமையை குறைக்கும் அல்லது கொல்லும். இந்த செயல்பாடுகளை ஸ்டிராய்டு மருந்துகள் செய்வதில்லை. மாறாக எதிர் மறையான செயல்களையே செய்கின்றன. உதாரணத்துக்கு ஒட்டப்பந்தய வீரர் ஊக்கமருந்து சாப்பிட்டு பிடிபட்டார் என கேள்வி பட்டிருப்போம். அந்த மாதிரி செயல்களை தான் இந்த மருந்துகள் செய்கின்றன. இந்த ஊக்கமருந்து சாப்பிட்டு ஒடினால் செல்கள் அழற்சி அடையாது அதாவது சோர்வடையாது. அதனால் இன்னும் வேகமாக ஒடலாம். குதிரைக்கு, மாட்டுக்கு ரம் ஊற்றி ஒடவைப்பது மாதிரி. இதிலென்ன? வெற்றி இருக்கின்றது. இதை நோய் தாக்கத்தின் போதும் கொடுக்கின்றனர். (இல்லைன்னா நீங்கே நல்ல டாக்ட்ர் இல்லேன்னு சொல்றீங்க) உதாரணத்துக்கு ஒரு மருந்து "பெட்னிசால்" இந்த மருந்து ஒரு ஸ்டிராய்டு. இருமல்,சளி பிடித்திருந்தால் உட்கொள்வர்.



இந்த ஸ்டிராயிட் மருந்துகள் மிக அதிகமாக அனைத்து அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களும் கொடுக்கின்றனர். இது சாமான்யர்களுக்கு தெரிவதில்லை. இதனால் எழும் பக்கவிளவுகள் மிக அதிகமானவை. உடல் ஸ்டிராய்டு மருந்துக்கு பழகி விட்டால் அதை உடனே நிறுத்தவும் முடியாது அதை உடனடியாக நிறுத்தினாலும் மிக மோசமான ( அலசர்) பக்க விளைவுகள் இருக்கும். இதை பயன்படுத்தி வந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். அந்த போலி மருத்துவருக்கும் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. இதை அவரே ஒத்து கொண்டார். அதை போன்று வலிநிவாரணியாக கொடுக்கப்படும் மருந்துகளும் பெரும்பாலும் ஸ்டிராய்டுகளே. இந்த மருந்துகள் பின்னாளில் நீரழிவு நோய்க்கு கொண்டுபோய் விட்டு விடும்.


இந்த தளம் சென்று பாதிப்புகளை தெரிந்து கொள்ளவும்

ஸ்டிராய்டு மருந்தினால ஏற்படும் பாதிப்புகள்

ஸ்டிராய்டு மாத்திரைகள், ஊசிகள்

இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட மருந்துகள்


சில ஸ்டிராய்டு மாத்திரைகள்


என் உறவினர் குழந்தையை ஒரு பெண் மருத்துவரிடம் கொண்டு சென்ற பொழுது அந்த மருத்துவர் இந்த பெட்னிசால் மருந்தை கொடுத்தார். உடனே என் உறவினப் பெண் "இது ஸ்டிராய்டாயிற்றே என்று கேட்டார்".


(அவருக்கு எங்கத் தெரியபோகுது என்பது மருத்துவர்களின் எண்ணம். வெளியில் வேறு "......ரச்சிப்பார்" என்று வேறு எழுதிய சாமி படங்கள், ".......பாவம் செய்யாதீர் பாவிகளே......" என்ற வாசகங்கள்)


உடனே மருத்துவர் "இல்லை குழந்தைக்கு சளி நிறைய உள்ளது ஆகையால் ஒரு நாளைக்கு மட்டும் கொடுக்கின்றேன்", என்று கொடுத்தார். அதை ஒரு வேளை மட்டும் கொடுத்துவிட்டு தூக்கிபோட்டுவிட்டோம். அந்த பெட்னிசால் மருந்தை நானே உட்கொண்டிருக்கின்றேன் உடனே குணமாகிவிடும், உடனே போதையும் வந்துவிடும், இது மாதிரி எண்ணிலடங்கா மருந்துகள் உள்ளன. இது மாதிரி உள்ள மருந்துகளைத்தான் அந்த போலி மருத்துவ பெண்ணும் அந்த குழந்தைக்கு போட்டு ஒரு குழந்தையை கொன்றிருக்கின்றார்.அதன்பிறகே பிற மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த போலிமருத்துவரும் சிறை சென்றிருக்கிறார், என்பது தெரியவந்தது.


சில போலி டாக்டர்களின் கையெழுத்து அழகாக வேறு இருக்கும். உடனே கிருக்கினால் தான் நல்ல டாக்டர் என்று அர்த்தம் அல்ல. மருத்துவர் என்பவர் புரிகின்ற மாதிரிதான் எழுத வேண்டும். அதை நாம் கண்டு பிடித்து விடுவோம் என்பதினாலும், நாமே கடைக்கு சென்று மருந்து பெயரை சொல்லி வாங்கிவிடுவோம் என்ற காரணத்திற்காகவும், மாட்டினால் சட்ட சிக்கல் வராமல், தப்பிப்பதற்காகவும் தான் புரியாமல் எழுதுவது.


இனி மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள் இதைவிட மோசமாக இருப்பார்கள். அதற்கு அவர்கள் நடந்து கொள்ளும் முறையே அலாதியானது. ஒரு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் கையில் வெள்ளை கோட்டுடன் செல்கின்றனர் அங்கே அவருக்கு அருகிலேயே ஒரு விபத்து நடந்து ஒருவர் துடிக்கின்றார் இவர்கள் அதை கண்டு காணாதது போல் உச்சு கொட்டி விட்டு தாண்டி செல்கின்றனர். மக்கள் ஒடிவந்து தூக்கி கொண்டு சென்றனர். அவர்களை அழைத்தும் உதவிக்கு வரவில்லை. அதில் ஒருவருக்காவது முதலுதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம கூட தோன்றவில்லை. அதற்கு எதற்கு பை இருந்தும் கோட்டை கையில் தொங்கவைத்து கொண்டு போகவேண்டும்? யார் பெருமைப்பட? முதலில் இவர்கள் கற்கவேண்டியது மனிதநேயத்தை....


கோட்டை கையில் வைத்திருப்பதற்கு காரணம் அவர் ஒரு மருத்துவர் அவரை உடனே அனேவரும் அழைக்கலாம் என்ற நோக்கத்தில் தான். பெருமைக்காக அல்ல. அதற்காகத்தான் வாகனங்களில் அவர்கள் குறியீட்டை பொருத்துவது அதற்குத்தான்).


இன்னொரு கொடுமையை சொல்லவேண்டும். அதிலும் உறவினர் ஒருவர் அறுவை சிகிச்சை உதவியாளராக வெகு காலமாக பணிபுரிந்து கொண்டு வருகின்றார். அது சென்னையில் இயங்கும் மிகப்பிரபலமான குழந்தை மருத்துவத்துக்கான தனியார் மருத்துவமனை. அது ஒரு மடத்துக்கு சொந்தமானது. இந்த விசயம் வெளி உலகத்துக்கு தெரிய வாய்ப்பில்லை. அன்றையதினம் 12 வயது சிறுவனுக்கு குடலில் சிறு கட்டியை அகற்றுவதற்காக மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கத்துக்குள் நுழைந்திருக்கின்றார். வீட்டில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை? அந்த மருத்துவர் மிக டென்சனாக இருந்திருக்கிறார்.


இந்த மனநிலையிலேயே அறுவை சிகிச்சையையும் நடத்தியிருக்கின்றார். கவனக்குறைவாக அந்த கட்டியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு பதில், கட்டியின் பக்கத்தில் இருந்த ரத்த நாளத்தையும் சேர்த்து வெட்டிவிட்டார். குறுதி மருத்துவரின் முகத்தில் பீய்ச்சி அடித்திருக்கின்றது. சிறுவனின் நாடித்துடிப்பும் குறைந்து இறுதியில் அடங்கியும் போனது. மருத்துவர் கொலையை செய்து விட்டு பின்பக்க வழியாக வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் நியாப்படி இவருக்கு மரண தண்டனைதான் கொடுக்கவேண்டும். இன்னும் எத்தனை பேர்களை கொன்றாரோ?


ஆனால் மறக்காமல் ஒரு புண்ணிய காரியமும் செய்து விட்டு சென்றார். அந்த "மருத்துவத்துக்கான செலவுத்தொகையை வசூலிக்கவேண்டாம்" என்பதுதான்.. (உயிருக்கான லஞ்சமாக அவரே கட்டியிருப்பாரோ?). அவர்கள் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ஏழை மக்கள் அவர்களுக்கு உள்ளே நடக்கும் இத்தனை கொடுரங்களையும் அறியாதவர்களாக வெளியில் நின்றபடியே அழுது கொண்டிருந்தனர். இதுதான் மருத்துவர்களின் புனிதம். ஆனால் எந்த வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு அதை அனுபவித்து கொண்டு தான் வருகின்றனர்.


இன்று மருத்துவர்கள் பலர் போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் என குரல் எழுப்புகின்றனர். எந்த மருத்துவராவது தன்னுடைய சான்றிதழை பல்ர் அறிய வைத்ததுண்டா? அவர் வாங்கும் கட்டணத்திற்கும் ரசீது கிடையாது. அதே போன்று நோய் எதனால் வந்தது அதை பற்றி எதையுமே தனியார் மருத்துவர்களும் சொல்லுவதில்லை. மருத்துவம் என்பது பெரிய படிப்பாக நினைத்து கொண்டிருக்கின்றனர். இந்த மருத்துவர்கள் இல்லாதபொழுது மனித இனம் உயிர் வாழ வில்லையா? மருத்துவர்களை மக்கள் தெய்வமாக பாவிப்பது வாடிக்கை. காரணம் ஒரு உயிர் சம்பந்தபட்டிர்ருப்பிதால். ஆனால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தெய்வமாக நினைத்து கொள்கின்றனர்.


ஒரு மருத்துவர் கூறியது நான் மருத்துவமனை வைப்பதற்கு எந்த செலவும் செய்யத்தேவையில்லை. எல்லாமே மருந்து கடைக்காரர்களே ஏற்பாடு செய்து விடுவார்கள். மேற்கொண்டு விறபனை பிரதிநிதிகள் மூலம் அனைத்து மருந்துகளும் எனக்கு வந்து விடும். அது மட்டுமில்லாமல் அவர் எழுதிகொடுக்கும் மருந்துகளுக்கு எல்லாம் கமிசன் வந்துவிடும். அதே போன்று அவர் எழுதி கொடுக்கும் இடத்தில் தான் ஸ்கேன் எல்லாம் எடுக்கவேண்டும். அதற்கும் கமிசன. நாம் வெறும் படித்துவிட்டு வந்தால் மட்டும் போதும் என்று பெருமையாக கூறினார்.

 இதுமாதிரி மருத்துவர் கமிசன் வாங்குவதால் அந்த கடைக்காரர் நம்மிடம் அதிகமாக வாங்கித்தான் அதை மருத்துவரிடம் கொடுக்கின்றார். அதை மருத்துவர் நம்மிடமே வாங்கி கொள்ளலாம். போதாக்குறைக்கு வரியையும் ஒழுங்காக செலுத்துவது கிடையாது. எல்லாமே கருப்பு பணமாகத்ததான் இருக்கும்.இப்படி மருத்துவத்திற்கான எந்த சேவை நோக்கமுள்ள குணங்களும் இல்லாமல். ஒருவர் அந்த துறையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்.



இன்னும் சிலர் மருத்துவ படிப்பை படித்துவிட்டு நடிக்க வந்து விடுவார்கள். அதற்கு எதற்கு ஒரு சீட்டை வீண் செய்யவேண்டும். இதில் தான் நாட்டம் என்றால் இந்த துறையை எடுத்திருக்கலாம். இதில் ஈடுபாடு இல்லாமல் பயிற்சி காலத்திலும் சரியாக மருத்துவம் செய்திருக்க முடியாது. மற்றப்படிப்புகளுக்கு மனிதனின் உயிர் சம்பந்தப்படுவதில்லை, ஆனால் இந்த படிப்புக்கு பல மனிதர்களின் உயிர்கள் இவர்களின் பயிற்சிக்காகப் பயன்படுகின்றது. அவர்களின் உடல் தியாகத்திற்காகவாவது நல்ல மனதுடன் மருத்துவராக இருக்கலாம். இன்னும் சிலர் பாட்டுபாட வந்து விடுவார்கள். ..............50 பேரை கொன்றால் அரை வைத்தியன் ஆக முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த பழமொழி. இன்றைய நிலையில் ஒரு 500 பேரை போட்டுத் தள்ளினால் தான் அரைவைத்தியனாக முடியும் போலிருக்கு.


ஒரு மருத்துவர் தொழிலாளர் நல மருத்துவமனையில் பணி புரிகின்றார் . அவரிடம் வயிற்று கட்டிக்காக ஒரு பெண்மணி சென்றபொழுது ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்து விட்டு சில மாத்திரைகளை கொடுத்து இதை தொடர்ந்து சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றிருக்கின்றார். அதே மருத்துவரை வேறொருவர் மூலமாக கிளினிக்கில் (அவர்தான் அங்கு இருக்கின்றார் என்பதை அறியாமல்) சென்று பார்க்கும்பொழுது அவர் கூறுகின்றார் இதற்கு இந்த ஸ்கேன் எடுக்கவேண்டும், அந்த சோதனை செய்யவேண்டும்...... என்று வரிசையாக பட்டியல் போட்டுவிட்டு உடனே செய்யவில்லை என்றால் மிகவும் ஆபத்து. "சார் காலையில் தான் இ.எஸ்.ஐ (ESI) யில் அனைத்து ரிப்போர்ட்களையும் பார்த்தீர்கள், ஒன்றும் இல்லை! என்று சொன்னீர்கள். இப்பொழுது பாதிப்பு என்கிறீர்களே!" என்று விளக்கியவுடன். சிறிது நேரத்திற்கு பிறகு நினைவிற்கு வந்தவராய்  ''நானா பார்த்தேன்? என பல் இளித்துவிட்டு "எதற்கும் இன்னொருமுறை பார்த்துவிடுவது நல்லதம்மா?  என்று அந்த பெண்மணியிடம் கூறினார். ஆக அவர்களின் அநியாயமான செயலுக்கு இது ஒரு சின்ன உதாரணம் தான். இன்னும் எவ்வளவோ.....?


அரசு இவர்களையும் கிரிமினல் நடவடிக்கைக்கு உடபடுத்தினால் இந்த கொடுமைக்கெல்லாம முற்றுபுள்ளி வைக்கலாம்.அரசு மருத்தவமனை மருத்துவர்கள் தனியார் கிளிக்கின் மட்டும் முகமலர்ச்சியுடன் ஈஈஈஈ என்று பல்லிளித்து கொண்டு நேயாளிகளை வரவேற்கின்றனர். நன்றாக சோதிக்கின்றனர். அங்கே கொடுக்கின்ற 50 ரூபாய்க்காகவா? அரசு மருத்துவ மனையில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றது. இங்கேயும் தான் மக்கள் கொடுக்கின்றனர் வரியாக. இது பணம் இல்லையா?


அரசு மருத்தவர்களை தனியார் கிளினிக் வைத்து நடத்த அரசு அனுமதிக்க கூடாது. சேவை மனப்பான்மையுடன் வருபவர்களுக்கே அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். அந்த கல்விக்கும் அதன்படியே முன்னுரிமை வழங்க வேண்டும். தங்களுடைய கல்வி மக்களுடைய சேவைக்குத்தானன்றி, சும்மா பீய்த்தி கொள்வதற்கு அல்ல என்பதை இவர்கள் உணர வைக்கவேண்டும். பெரும்பாலான மருத்துவர்களிடம் ஒரு வெளிப்படைத்தன்மை எனபதே கிடையாது. நேர்மை தவறும் மருத்துவர்களை கிரிமினல் நடவடிக்கையின் பேரில் கைது செய்து சிறை தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த கல்வியையும் யார் கண்டுபிடித்தது மனிதன் தானே. வானத்துல இருந்து யாராவது வந்து சொல்லிகொடுத்துவிட்டு போனார்களா?


இவைகள் களையப்படும் வரை இந்த போலி மருத்துவர்கள் உருவாகி கொண்டே இருப்பார்கள். வல்லரசு என்றால் மருத்துவம், கல்வி இவையிரண்டும் ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அப்பொழுது தான் இந்தியா வல்லரசு ஆக முடியும் இல்லையென்றால்.................


மருத்துவர்கள் தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் கண்டால் எப்படி துடிப்பீர்களோ? அதை மாதிரி சிகிச்சையை அனவருக்கும் தர முயலுங்கள். நீங்கள் சாதரண மக்களுக்கு செய்யும் சிகிச்சையை உங்கள் மகனுக்கும், மகளுக்கும் செய்யவேண்டும் என்று நினைத்து செய்யுங்கள்.......அது போதும்.

No comments: